Friday, March 15, 2019

Poothana samharam in tamil

கிருஷ்ணன் J K SIVAN 
ஸ்ரீமத் பாகவதம்

அவன் ஒரு அதிசயம்

கிருஷ்ணனின் பால லீலைகளை சொல்லி மாளாது. ஆயிரம் நாக்கு படைத்த ஆதிசேஷன் கூட அதை சொல்ல திணறவேண்டும். ஒவ்வொரு சம்பவமும் அலாதி. அதில் ஒரு ரகசிய செய்தி புதைந்திருக்கும். பகவான் நம்மருகே இருக்கிறான் என்பதை உணர்த்தும். நம்மை நாம் புரிந்துகொண்டால் கிருஷ்ணனை நம்மில் உணரலாம். 
பூதனையை நினைவிருக்கிறதா? கம்சனின் ராட்சச கூட்டத்தில் ஒரு சக்தி வாய்ந்த அரக்கி. '' பூதனா, உன்னைத்தான் நான் பொருத்தமானவள் என்று கருதினேன். நீ எப்படி செய்வாய் என்பது உன் திட்டம். கிருஷ்ணன் என்ற சிறுவன் உன்னால் மரணமடையவேண்டும். வெற்றிகரமாக இதை முடித்து என்னை வந்து சந்திக்கிறாயா?''

'' இது எனக்கு ஒரு கொசுவை நசுக்கும் வேலை '' என்று விரல்களை சொடுக்கினாள் பூதனை. 
'' ஹாஹா என்று சிரித்தான் கம்சன், '' பூதனா சென்று வா கிருஷ்ணனை கொன்று வா'' என்று அனுப்பினான். மதுராவிலிருந்து கிளம்பிய போதனா கிருஷ்ணனை பற்றிய செயதிகளை சேகரித்தாள். யமுனை ஆற்றை கடந்து கோகுலம் சென்றாள் . இப்போது அவள் ஒரு அரக்கி அல்ல. மிக அழகான ஒரு இளம் பெண். தாய். கிருஷ்ணன் வீட்டை அடைந்தாள். அங்கே நடந்ததை அந்த ஊரில் இரு கோபியர்கள்
மறுநாள் காலை யமுனை ஆற்றங்கரையில் பேசுவதிலிருந்து தெரிந்து கொள்வோம்.

''அடியே விசாலாக்ஷி இந்த ஆச்சர்யத்தை கேள்விபட்டியோ?
''எதை சொல்றே நீ சத்யா, , நம்ப யசோதை வீட்டில் நேற்று நடந்ததைபத்தி தானே?
"வேறே என்ன விஷயம் இருக்கு பேச??
"ஆமாம். கேள்விபட்டதும் நானும் ஓடினேன் அவ வீட்டுக்கு. ஒரே கூட்டம். முண்டியடிச்சு உள்ளே போய் 
யசோதையை கேட்டேன் அழுதுண்டே சொன்னாள்.
''என்ன நடந்ததாம்?''
''யாரோ ஒரு சின்ன அழகான பெண் காலையில் வந்தாளாம். வாசலில் யசோதா ஏதோ வேலையாக இருந்தாளாம். 
'' அம்மா, உங்க வீட்டு குழந்தை கிருஷ்ணன் ரொம்ப அழகாக இருப்பானாமே நான் பார்க்கலாமா?'' என்று அந்த பெண் கேட்டதாலே, இந்த அசடு யசோதா குழந்தை கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு வந்து அவள் கையிலே தந்திருக்கிறது. அந்த பெண் வீட்டில் நுழைந்து சப்பளிக்க உட்கார்ந்து கொண்டு மடியிலே கிருஷ்ணனைப் போட்டுக்கொண்டு போட்டு கொஞ்சியிருக்கிறாள். ''அம்மா நானும் ஒரு தாய். இந்த குழந்தைக்கு பால் குடுக்க ஆசையா இருக்குன்னு கெஞ்சியிருக்கா'' பாவம் யசோதை அதை நம்பி சரின்னு தலையாட்டியிருக்கிறாள்.
''அப்புறம்?'' 
''விழுப்புரம். என்ன அவசரம்? கதையா சொல்றேன் இப்போ''
''சரி சரி நீயே சொல்லு'' 
''என்ன ஆச்சோ தெரியல்லை. 
''ஆ என்று ஒரு சப்தம் இடியோசை மாதிரி கேட்டது. குழந்தை அவள் மார்பகத்தில் வாய் வச்சு பால் குடிக்க முயற்சித்தபோதே அந்த பெண் அலறிண்டே அப்படியே சாஞ்சுட்டாளாம். அந்த பெண்ணை காணோம். அவள் இருந்த இடத்திலே ஒரு பெரிய ராக்ஷசி கோரமாக செத்து கிடந்தாளாம். குழந்தை கிருஷ்ணன் அவள் மேலே ஏறி விளையாடிக்கொண்டிருந்ததை பாத்துட்டு நந்தகோபனும் மற்ற கோபர்களும் ஓடி வந்து குழந்தையை அப்புறபடுத்திவிட்டு அந்த ராக்ஷசி யாருன்னு கண்டுபிடிச்சிருக்கிறார்கள். அவள் மதுராவிலிருந்து வந்தவள் என்று தெரிந்தது. அப்பறம் அவளை தூக்கிகொண்டு போய் ஊருக்கு வெளியே எரிச்சாளாம். '' 
'' அந்த ராக்ஷஸி யாராம்?''
''பூதனை என்று பேராம். குழந்தை கிருஷ்ணனை கொல்ல வந்திருக்கலாம் என்று சொல்றா. அவள் மார்பகத்தில் கொடிய விஷம் இருந்ததாம். ஏதோ யசோதை பண்ணின புண்யம் கடவுள் குழந்தை கிருஷ்ணனை காப்பாத்தியிருக்கார். இல்லேன்னா குழந்தைக்கல்லவோ ஆபத்து ஏற்பட்டிருக்கும்.''
''ஐயோ. குழந்தை இப்போ எப்படி இருக்கு?''
''அந்த கரிகுண்டன் எப்போதும்போல சிரிச்சுண்டே தான் இருக்கான் எல்லாரையும் பார்த்து மயக்கறான்.
யசோதை கையை பிடிச்சுண்டு தூக்கு என்கிறான் 
''என்னமோ போடி அந்த பயலை பத்தி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சேதி வந்துண்டே இருக்கு.
''சரியா சொன்னே. கிருஷ்ணன் ஒரு அதிசய குழந்தை தான் சந்தேகமில்லை''.

தன்னைக் கொல்ல வந்த பூதனைக்கும் தன்னை விஷப்பால் ஊட்ட வந்தாலும் தாயாக வந்த ஒரு காரணத்தால் மோக்ஷம் கொடுத்தான் கிருஷ்ணன்...எவ்வளவு பாபம் செய்தவனையும் தன்னை நாடியவனை பரிசுத்தமாக்கும் தன்மை கொண்டவர் பரமாத்மா.

  

No comments:

Post a Comment