Thursday, January 3, 2019

Srimad Bhagavatam skanda adhyaya 9 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - அத்தியாயம் 9

விஸ்வரூபனுக்கு மூன்று தலைகள். சோமபானம் செய்ய ஒன்று, ஸுராபானம் செய்ய ஒன்று, அன்னத்தை புசிப்பது ஒன்று. அவனுடைய பிதாவான தவஷ்டா அதிதியின் புதல்வராகையால் தேவர்களுக்கு உறவினர். ஆனால் அவர் மனைவி ரசனா அசுரகுலம்.

விஸ்வரூபன் யாகம் செய்யும்போது தன் பித்ருக்களான தேவர்களுக்கு வெளிப்படையாக ஹவிஸ்ஸைக் கொடுத்தான். ஆயினும் அவன் தன் தாயிடம் உள்ள விசுவாசத்தினால் ரகசியமாக அசுரர்களுக்கும் ஹவிஸ்ஸை அளித்தான். இதை உணர்ந்த தேவேந்திரன் அசுரர்களிடம் உள்ள பயத்தால் அவனுடைய கபடத்தினால் கோபம் கொண்டு அவன் தலைகளை வெட்டினான்.

புத்திரனை இழந்த த்வஷ்டா அதன் பின் இந்திரனைக் கொல்லும் சத்துருவை உண்டாக்க "இந்த்ரஸ்சத்ருவே வ்ருத்தியடைவாய் விரைவில் இந்திரனைக் கொல்வாயாக," என்று ஹோமம் செய்தான். ஆனால் அவன் மந்திரத்தை தவறாக உச்சரித்ததன் விளைவாக இந்திரனுக்கு இவன் சத்துரு என்பதற்கு பதில் இந்திரன் இவனுடைய சத்துரு என்ற பொருள் ஏற்பட்டது.

அதன் பின் த்வஷ்டாவின் மானச புத்திரனாகிய வ்ருத்ராசுரன் தக்ஷிணாக்னியில் இருந்து எழுந்தான். பயங்கரமாக இருந்த அவனைப் பார்த்து எல்லோரும் பயந்தோடினர். தேவர்கள் அவனை தங்கள் ஆயுதங்களால் தாக்கினர். ஆனால் அவன் அவ்வளவையும் விழுங்கிவிட்டான். தேவர்கள் தங்கள் வீர்யத்தை இழந்து மகாவிஷ்ணுவைச் சரணம் அடைந்தார்கள்.

பகவான் அவர்களிடம் "ரிஷிஸ்ரேஷ்டரான ததீசி முனிவரை அடைந்து வித்தையாலும் வ்ரதத்தாலும் தவத்தாலும் வைரம் பாய்ந்துள்ள அவருடைய உடலை யாசியுங்கள். அஸ்வினி தேவ்ரக்ளால் யாசிக்கப்பட்ட அவர் தன் தேகத்தைக் கொடுத்து விடுவார். பிறகு அவர் எலும்புகளைக் கொண்டு விஸ்வகர்மா சிறந்த வஜ்ராயுதத்தை செய்து கொடுப்பார். அதனால் தேவேந்திரனாகிய நீ எனது சக்தியுடன் கூடி வ்ருத்ராசுரனைக் கொல்வாய்." என்றுரைத்தார்.

No comments:

Post a Comment