Monday, January 21, 2019

Mattress and pillow-Periyavaa

கோரைப்பாய்....

பகலில் தூங்கக்கூடாது என்று பெரியவா பிறருக்கு மட்டும் உபதேஸித்ததில்லை; தானும் எத்தனை மைல்கள் நடந்தாலும் ஸரி, இடுப்பொடிய மணிக்கணக்கில் பக்தர்களுக்கு தர்ஶனம், தீர்த்தம் குடுக்க அமர்ந்திருந்தாலும் ஸரி, பகலில் உறங்க மாட்டார்.

அப்படியே என்றைக்காவது படுத்துக் கொண்டால், அது மிகவும் அபூர்வமாக நடக்கும் நிகழ்ச்சி! மிகவும் வயஸான பின், உபவாஸம் அதிகமானபோது, உடலில் சற்று அஸதி உண்டானால் மத்யானம் சற்று படுத்துக் கொள்வது, தவிர்க்க முடியாததாக இருந்தது. அதுவும் கோரைப்பாயில்தான் படுத்துக் கொள்வார்.

ஸாதாரணமாக பெரியவா படுத்துக் கொண்டிருக்கும்போது யாராவது தர்ஶனம் பண்ண வந்தால், அவரை நமஸ்கரிக்கக் கூடாது என்பது நியதி!

பெரியவாளுடைய ஶரீரம் மிகவும் ம்ருதுவாக இருக்கும். எனவே இந்தக் கோரைப்பாயில் அவர் படுத்துக் கொண்டு எழுந்தால், அவருடைய முதுகில் வரிவரியாக பாயின் impression இருக்கும்.

ஒருமுறை ஒரு பக்தர் பெரியவாளுடைய முதுகில் இந்த கோரைப்பாயின் impression-ஐ பார்த்துவிட்டார் !

"பெரியவா ஏன் இந்த மொரட்டுப் பாய்-ல படுத்துக்கணும்? நல்ல எலவம்பஞ்சு மெத்தைல படுத்துக்கக் கூடாதா?..."

ரொம்ப வேதனைப் பட்டார்.

யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக கடைக்குப் போனார், நல்ல உஸத்தியான இலவம்பஞ்சில் ஒரு மெத்தை தலைகாணி வாங்கிக் கொண்டு நேராக பெரியவாளிடம் வந்தார்.

மனஸில் ஒரே படபடப்பு!

"பெரியவா இதுல படுத்துண்டு பாக்கணும்....'டேய்! நீ... குடுத்த மெத்தையில், தலாணியும் ரொம்ப ஸுகமா இருக்குடா'...ன்னு சொல்லணும்" என்று ஒரே தாபம்!

எந்த பக்தருக்கும் உள்ள ஆசைதான்!

பெரியவா முன்னால் மெத்தையும், தலைகாணியும் வைக்கப்பட்டன.

"என்னது? யாருக்கு?" என்பது போல் ஒரு பார்வை...

பக்கத்திலிருந்த பாரிஷதர், பக்தரின் உதவிக்கு வந்தார்....

"பெரியவாளுக்காக மெத்தை வாங்கிண்டு வந்திருக்கார்..! கோரைப் பாய்-ல பெரியவா படுத்துண்டா அவருக்கு ரொம்ப மனஸு உறுத்தித்தாம்!..."

சத்தமாக கூறினார்.

குழந்தையை வருடுவது போல், மெத்தையை தன் திருக்கரங்களால் தடவிப் பார்த்தார்......

"ரொம்ப வழவழன்னு இருக்கே!..."

"ஆமா பெரியவா....வெல்வெட் துணி போட்டு தெச்சிருக்கு..."

பெரியவாளுடைய சில வினாடி மௌனம், பக்தருக்கு பல யுகங்கள் போல இருந்தது.

"பீஷ்மருக்காக அர்ஜுனன் ஒரு படுக்கை தயார் பண்ணினான்.... என்ன படுக்கை தெரியுமோ?"

"அம்புப்படுக்கை"

"அதுதான் அவருக்கு ஸுகம்...மா இருந்துது..! தேவலோகப் படுக்கை வேணுன்னு பீஷ்மர் கேட்ருந்தா... தேவேந்த்ரனே ஒரு படுக்கையை அனுப்பியிருப்பான்...!"

சுற்றி பார்வையை சுழல விட்டார்.......

கரெக்டாக, 'டாண்'ணு மணியடிச்ச மாதிரி, யாராவது அங்கே ஆஜர் ஆகித்தான் தீருவார்கள்!

ஒரு வயஸான மனிதர் அங்கே வந்து நின்றார்.

"அதோ.....அங்க நிக்கறாரே! பாவம். ரொம்ப வ்ருத்தர்!...எம்பது வயஸுக்கு மேல....! வெவஸாயி...! வாங்கின கடனைக் கூட அடைக்க முடியலியாம்...! ராத்ரி தூக்கமே வர மாட்டேங்கறதாம்....! இந்த மெத்தை, தலாணியை அவர்ட்ட குடு... கூடவே ரெண்டு போர்வையும் வாங்கிக் குடு! பாவம்.... கொஞ்சநாளாவது நிம்மதியா தூங்கட்டும்.."

"அப்போ....பெரியவாளுக்கு?...."

"எனக்கு கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு!.... எலவம்பஞ்சு உறுத்தும்! அதுல படுத்தா எனக்கு தூக்கம் வராது. கோரைப்பாயை தவிர மிச்சதெல்லாம் 'கோரமான' பாய்!..."

( பெரியவாளோட இந்த மாதிரி dialogue எல்லாம் மனஸை லேஸாக்கிவிடும்)

பக்தருக்கு இப்போது எந்த ஏமாற்றமும் இல்லை. இலவம்பஞ்சு மெத்தையும், மெத்து மெத்து தலைகாணியும் அந்த விவஸாயியின் கண்களில் நன்றிக் கண்ணீரை வரவழைத்தன!

எளிமையான எளிமையை பகட்டாக மாற்ற முடியுமா என்ன? பரமஹம்ஸருக்கு படுக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த காஸு முள்ளைப் போல் குத்தியது; நமக்கோ பீரோ சாவி படுக்கைக்கு அடியில் இருந்தால்தான் தூக்கமே வரும்! எளிமையான வாழ்வின் ஸுகம் அனுபவித்தாலே புரியும்.

No comments:

Post a Comment