Tuesday, December 11, 2018

Srimad Bhagavatam skanda 5 adhyaya 20-23 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5 அத்தியாயம்2௦-23

அத்தியாயம் 2௦-23
ஜம்புத்வீபம் உப்புக்கடலால் சூழப்பட்டுள்ளது. ப்லக்ஷத்வீபம் அதற்குப் பின்னால் உள்ளது. 
ப்ரியவ்ரதருடைய குமாரராகிய இத்மஜிஹ்வர் தனது ப்லக்ஷ த்வீபத்தை ஏழு வர்ஷங்களாகப் பிரித்து அந்த வர்ஷங்களின் பெயராலேயே விளங்கிய தன் புத்திரர்களிடம் ஒப்படைத்து விட்டு ஆத்ம யோகத்தில் ஆழ்ந்தார்.

ப்ளக்ஷத்வீபத்தில் உள்ள நான்கு ஜாதி ஜனங்கள் ஆயிரம் வருஷம் ஆயுள் உள்ளவர்களாகவும் தேவர்களைப் போல் பார்வையால் பிரஜோத்பத்தி செய்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சூர்ய பகவானை மூன்று வேதங்களால் பூஜிக்கின்றனர்.

வானுலகிற்கும் பூவுலகிற்கும் மத்தியில் அண்டகோளத்தின் (Cosmic shell) மத்தியாக சூரியன் விளங்குகிறார். சூர்யனுக்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி 25 கோடி யோசனை ஆகும். இதுவே சூரியனுக்கும் வானுலகிற்கும் உள்ள தூரம்.

குயவனுடைய சக்கரம் சுற்றும்போது அதன்மேலுள்ள அதனுடன் சுற்றும் எறும்பு முதலியவற்றின் சலனம் வேறாக இருப்பதைப்போல மேருவையும் துருவத்தையும் பிரதக்ஷிணமாகச் சுற்றும் காலச்சக்கரத்துடன் சுற்றும் சூரியன் முதலிய கிரகங்களின் சலனம் வேறாக இருக்கிறது.

சுக்கிரன் சூரியனுக்கு முந்தியும் பிந்தியும் சமமாகவும் சீக்கிரமாகவும் மெதுவாகவும் சமமாகவும் உள்ள கதியில் செல்லுகிறான். மழையை உண்டுபண்ணும் கிரகம்.

சுக்கிரனுக்கு அப்பால் இரண்டு லக்ஷம் யோசனை தூரத்தில் சந்திரனுடைய புதல்வனான புதன் காணப்படுகிறான். பெரும்பாலும் நன்மை பயப்பவனாகவே இருக்கிறான். ஆனாலும் சூரியனை விட்டு விலகும்போது காற்றிலடிபட்ட மேகத்தாலும் மழையின்மையாலும் பயம் ஏற்படும்.

அதற்கும் அப்பால் இரண்டுலக்ஷம் யோசனை தூரத்தில் காணப்படும் செவ்வாய் வக்கிரமாக இல்லாதபோது ஒவ்வொரு ராசியிலும் மும்மூன்று பக்ஷங்கள் இருந்துகொண்டு பன்னிரண்டு ராசிகளில் சஞ்சரிக்கிறான். பெரும்பாலும் அமங்கலத்தைச்செய்யும் கிரகமாகக் கருதப்படுகிறான்.

அதற்கும் அப்பால் இரண்டு லக்ஷம் யோசனை தூரத்தில் குரு பகவான் வக்கிரமாக செல்லாதபோது ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருஷம் தங்கிச்செல்லுகிறார். பெரும்பாலும் நன்மை பயப்பவர்.

அதற்கும் அப்பால் இரண்டு லக்ஷம் யோசனை தூரத்தில் காணப்படும் சனைஸ்சரர் ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் தாமதிக்கின்றவராய் பெரும்பாலும் எல்லோருக்கும் அமைதியின்மையை உண்டாக்குகிறவர்.

அதற்கும் அப்பால் பதினொரு லக்ஷம் யோஜனைதூரத்தில் சப்தரிஷிமண்டலம். உலகங்களுக்கு நன்மையை வளர்ப்பவர்களாய் சப்த ரிஷிகள் பகவான் மகாவிஷ்ணுவின் பரமபதத்தை பிரதட்சிணம் செய்கின்றனர்.

அதற்கப்பால் பதின்மூன்று லக்ஷம் யோசனை தூரத்தில் விஷ்ணுபதம் என்கிற த்ருவமண்டலம் உள்ளது. இது மஹா பாகவதரான துருவரின் இருப்பிடம். கிரகங்கள் நக்ஷத்திரங்கள் முதலிய ஒளிகணங்கள் அனைத்திற்கும் இந்த துருவஸ்தானமே அச்சு போல பகவானால் அமைக்கப்பட்டதாக விளங்குகிறது.

கிரகங்களையும் நக்ஷத்திரங்களையும் கொண்ட இந்த பகவான் விஷ்ணுவின் சர்வ தேவதா மயமான ரூபம் முக்காலத்திலும் போற்றுவோர்க்கு பாவத்தைப் போக்குகிறது

  

No comments:

Post a Comment