நாரத பக்தி சூத்ரம் - 9
சூத்ரம் 9
தஸ்மின் அனன்யதா தத்விரோதிஷு உதாஸீனதா ச
முன் சூத்திரத்தில் சொன்ன துறவுஎன்பதில்இறைவனிடத்தில்கருத்தொருமித்த பக்தியும், அனன்யதா, அதற்கிடையூறான தத் விரோதிஷு, எல்லாவற்றையும் உதாசீனப்படுத்துதலும் உதாசீனதா, அடங்கும்.
உண்மையான பக்தன் உலக இச்சைகளில் நாட்டம் கொள்வதில்லை. ஏனென்றால் அவன் இதயம் முழுதும் இறைவனே நிறைந்துள்ளான். மற்றவை எதையும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை.
விருப்பு வெறுப்பு அற்றநிலை.
கீதையில் பகவான் எந்த விதமான பக்தன் தனக்கு பிரியமானவன என்று சொல்கிறார்.
ஸம: சத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோ:
சீதோஷ்ண ஸுகதுக்கேஷு சம: சங்க விவர்ஜித:
துல்யநிந்தாச்துதிர் மௌநீ ஸந்துஷ்டோ யேனகேனசித்
'எவன் விரோதி நண்பன் என்ற பாகுபாடின்றி , கௌரவம் அவமானம் இரண்டையும் பொருட்படுத்தாது வெப்பம் குளிர் இவைகளை சமமாக பாவித்து மௌனமாகவும் திருப்தியுடனும் இருக்கிறானோ அந்த பக்தன் எனக்கு பிரியமானவன். '
சங்கரர் பஜகோவிந்தத்தில் , யல்லபதே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேன வினோதய சித்தம் பஜ கோவிந்தம்,'என்கிறார்.
இதன் பொருள்,
உன் கர்மபலனாக எது வந்தாலும் நிறைவுடன் ஏற்றுக்கொண்டு கோவிந்தனை துதி.
மேலும் ஓர் அருமையான சித்திரம் பஜகோவிந்தத்தில் காண்கிறோம்.
ஸுரமந்திரதருமூல நிவாஸ: சய்யா பூதலம் அஜினம் வாஸ;
சர்வபரிக்ரஹபோகத்யாக: கஸ்ய சுகம் கரோதி விராக:
எல்லபற்றுகளையும் விட்டவன் எப்படி இருப்பான்? கோவில் வாசலில் உள்ள மரத்தடியில் வாசம், தரையில் படுக்கை உடுப்போ மரவுரி. இதற்கு மேல் சுகம் எது என்கிறார்.
திருவள்ளுவர் 'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை,' ஆண்டும் அஹ்தொப்பதில்,' ஒன்றும் வேண்டாமை என்பது பெரும் செல்வம் அதற்கு ஈடு இணை இல்லை என்கிறார்.
இதற்கு உதாரணம் நம் நாட்டிலும் பிற நாட்டிலும் கூட பல கூறலாம். நம் காலத்தில் வாழ்ந்த யோகிராம் சுரத்குமார் , ரமணர் முதலியோர்.
ஒரு சமயம் மாவீரன் அலெக்சாண்டர் டயோஜீனஸ் என்ற முற்றும் துறந்த மகானைப்பற்றி கேள்வியுற்று அவரைப் பார்க்கச் சென்றானாம். அங்கு அந்த மகான் ஒரு துருப்பிடித்த தொட்டியில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் "நீ சூரியவெளிச்சத்தை மறைத்துக்கொண்டு நிற்கிறாய். சற்று அகன்றால் போதும்". என்றாராம்.
இதுவே ஆசை அற்ற நிலைக்கு உதாரணம்
No comments:
Post a Comment