Monday, November 12, 2018

Narada bhakti sutra in tamil part8

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

நாரத பக்தி சூத்ரம் 8

சூத்ரம் 8
நிரோதஸ்து லோக வேத வ்யாபாரநாச:

நிரோதம் அல்லது துறவு என்பது லோகாயதமான செயல்களையும் வைதீக செயல்களையும் துறப்பதாகும்.

சென்ற சூத்திரத்தில் நிரோத என்ற சொல் பக்தியின் இயல்பாகச் சொல்லப்பட்டது. இதற்கு என்ன பொருள் என்பதை இந்த சூத்திரம் விளக்குகிறது.

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் எல்லா செயல்களையும் துறப்பது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் நாம் செய்யும் செயல்கள் உலகாயதமாகவோ அல்லது வைதீகமாகவோதான் உள்ளன. செயல் புரியாமல் இருப்பது முடியாதது 
என்று பகவான் கீதையில் கூறுகிறார்.

'ந கஸ்சித் க்ஷணமபி சாது திஷ்டதி அகர்மகருத் ' செயல் புரியாமல் ஒருவரும் ஒரு க்ஷணம் கூட இருக்க முடியாது என்பது இதன் பொருள். 
உடலால் செயல் புரியாவிட்டாலும் மனம் புத்தி இவற்றால் செயல் புரிந்து கொண்டுதான் இருப்போம்.
அதனால் பக்தி நெறியில் செயல்களை துறப்பது என்றால் என்ன?
.எல்லாசெயல்களையும் பகவானுடைய கைங்கர்யமாகவே செய்வது. அதாவது பக்தியோகமும் கர்மயோகமும் சேர்ந்ததுதான் இங்கு சொல்லப்பட்ட நிரோதம் அல்லது துறவாகும்.

முற்றும் துறந்த முனிவர்களும் வைதிக கர்மங்களாகிய யாகம் முதல்யவர்ரை செய்து வந்தார்கள். ஆனால் அது லோக க்ஷேமத்திற்காக செய்யப்பட்டதே தவிர சுய லாபத்திற்காக அல்ல.

சங்கரர் கனகதார ஸ்தோத்ரம் பாடி தங்க நெல்லிக்கனியை கொட்டச்செய்தது, தேசிகர் ஏழை பிரம்மசாரிக்காக தங்க நாணயங்கள் வரவழைத்தது இதெல்லாம் உதாரணங்கள்.

கண்ணன சொல்கிறான், "எனக்கு செயலால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை ஆனாலும் நான் சதா செயல் புரிந்துகொண்டிருக்கிறேன் இல்லையேல் இந்த உலகம் அஸ்தமித்துவிடும்." என்று.. ' என் இசை நின்றால அடங்கும் உலகே,' என்பதைப்போல.

யத் கரோஷி யத் அச்னாஸி யஜ்ஜூஹோஷி ததாஸி யத் 
யத் தபஸ்யஸி கௌந்தேயதத் குருஷ்வ மதர்பணம் (ப.கீ.9.27
செய்வது உண்பது, ஹோமம் செய்வது, தானம் செய்வது, தவம் செய்வது ஆகிய எல்லா செயல்களையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு என்று கண்ணன் சொல்கிறான். இதுதான் நிஜமான துறவாகும். 
பிறகு எல்லாம் அவனே என்ற ஞானம் உண்டாகிறது. இவ்விதம் ஞானயோகம் பக்தியோகம் கர்ம யோகம் மூன்றும் ஒன்றாகிறது.


No comments:

Post a Comment