ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம்3 அத்தியாயம் 33
இவ்விதம் கபிலருடைய உபதேசத்தைக் கேட்ட தேவஹுதி அஞ்ஞானம் நீங்கியவளாய் கபிலரைத் துதித்தாள்.
" தங்கள் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மாவாலும் பார்க்கப்படாத சிருஷ்டியின் முதல் காரணமாகிய தாங்கள் சகல உலகத்தையும் தன் உந்தியுள் வைத்தவர். அப்படிப்பட்டவர் என் வயிற்றில் எவ்விதம் தோன்றினீர் என்பது ஆச்சரியம்.
ஆனாலும் ஒரு சிறு குழந்தை வடிவில் ஆலிலை மீது இந்த பிரபஞ்சங்களை வயிற்றில் அடக்கி கால் கட்டைவிரலை வாயில் வைத்துத் தோன்றின மாயத்தின் முன் இது ஒன்றுமேயில்லை அல்லவா?
துஷ்டநிக்ர்ஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றிற்காக வராஹரூபம் போன்ற பல சரீரங்களை எடுத்துக்கொள்கிறீர்களே அது போன்ற இதுவும் ஒன்று என்று அறிகிறேன்.எவருடைய நாமஸ்மரணம், கதாஸ்ரவணம், முதலியவற்றாலும், சாஷ்டாங்கமாக வணங்குவதாலும், ஒருமுறையாவது தியானிப்பதாலும் சண்டாளனும் பூஜிக்கத்தகுந்தவன் ஆகிறானோ அவரை நேரில் காணும் பாக்கியம் ஏற்பட்டால் அதன் மகிமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!
நான் வேதங்களின் சாரமானவரும், பரப்ரம்மமும், பரமபுருஷனும், ஒருமுகப்பட்ட மனதால் தியானிக்கத் தகுந்தவரும், கபிலராக வந்த விஷ்ணுவும் ஆன தங்களை வணங்குகிறேன்."
கபிலர் கூறினார்.
"தாயே நான் கூறிய இந்த மார்க்கம் அனுஷ்டிப்பதற்கு எளியது. அதில் நிலை பெற்று சீக்கிரமே நீ முக்திநிலை அடையப் போகிறாய். "
மைத்ரேயர் கூறினார்.
இவாறு தேவஹூதிக்கு ஆத்மா மார்க்கத்தைக் காட்டிவிட்டு கபிலர் அவள் அனுமதி பெற்று அவ்விடம் நீங்கினார். தேவஹூதியும் அவரால் உபதேசிக்கப்பட்ட யோகத்தை அனுசரித்து சரஸ்வதி நதிக்கரையில் இருந்த அந்த ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஆழ்ந்தாள்.
முதலில் கணவனைப் பிரிந்து புத்திரனால் மனம் தேறியிருந்த தேவஹூதி புத்திரனும் சென்றபின் சிலகாலம் வ்யாகுலத்தில் ஆழ்ந்தாலும் நாளடைவில் மனம் தேறி ஜீவபாவம் நீங்கி க்லேசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த நிலை எய்தினாள். இவ்வாறு நாளடைவில் நிரந்தர சமாதியில் நிலைத்து பகவானுடைய பாதத்தை அடைந்தாள்.
அவள் எந்த இடத்தில் சித்தி அடைந்தாளோ அது சித்திபதம் என்ற பெயருடன் ஒரு புண்யக்ஷேத்திரமாயிற்று.
கபிலர் தாயிடம் இருந்து அனுமதி பெற்று வடகிழக்கு திசை நோக்கிச்சென்றார். சித்தர் சாரணர் கந்தர்வர் முனிவர்கள் அப்சர கணங்கள் முதலியவர்களால் துதிக்கப்பட்டு சமுத்ரராஜனால் இடமளிக்கப்பெற்று மூவுலகையும் காப்பதற்காக இன்னும் யோகநிஷ்டையில் இருக்கிறார்.
எவன் ஆத்மயோகமாகிய இந்த கபிலோபதேசத்தை ச்ரத்தையுடன் கேட்கின்றானோ அல்லது பிறருக்கு அன்புடன் கூறுகின்றானோ அவன் பகவானிடம் நிலைத்த புத்தியுள்ளவனாக ஆகி பகவானை அடைகிறான் என்று கூறி மைத்ரேயர் கபிலாவதாரத்தை முடிக்கிறார்.
ராமாயணத்தில் ஸகரனுடைய குமாரர்கள் யாகக்குதிரையைத் தேடி பாதாளத்திற்கு வந்த போது அங்கு கபிலர் அருகில் அதைக் கண்டு கபிலரைத் திருடன் என்றெண்ணி அவமதித்து அவர் சாபத்திற்காளாகி சாம்பலானார்கள். பின்னர் ஸகரனின் பேரனான அம்சுமான் அங்கு வந்து அவரை வணங்கி தன் பித்ருக்களுக்கு நற்கதி கிடைக்குமாறு செய்கிறான்.
No comments:
Post a Comment