Friday, September 21, 2018

Bharatiyar poem Q&A

பாரதியிடம் சில கேள்விகள். 

 பதில்கள் பாரதியின் வரிகளில் இருந்து. 

வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

*நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.*

No comments:

Post a Comment