Thursday, August 16, 2018

Snake hole block-Periyavaa

ஈஶ்வரோ ரக்ஷது!... 

மஹாராஷ்ட்ராவில் ஓரு பாழடைந்த மண்டபத்தில் பெரியவா தங்கியிருந்தார். ஒருநாள் பெரியவா முற்றிலும் அந்தர்முகமாக ஜபயோகத்திலிருந்தபோது, ஒரு பெரிய கருநாகம் அவருக்கு பின் பாங்காக குடை பிடித்துகொண்டிருந்தது…!

இன்று இதை படிக்கும் நாம், ஆஹா! பன்னகபூஷணா! பரமேஶ்வரா! அனந்தஸயனா! நமோ நாராயணா!…நாகம் குடை பிடிக்க லிங்கமூர்த்தியாக, ஸ்ரீமன் நாராயணனாக பெரியவா தர்ஶனம் தந்திருக்கிறார்..! என்று ஸந்தோஷப்படலாம். 

ஆஹா! நமக்கு அப்படி அவரைப் பார்க்க பாக்யம் இல்லியே! என்று ஏங்கவும் ஏங்கலாம்.

ஆனால், அந்த க்ஷணத்தில் கன்னங்கரேலென்று, பளபளவென மின்னும் கண்களோடு, பெருஸ்ஸாக தன் படத்தை விரித்துக் கொண்டு, "ஸுப்பராயன்" பெரியவா தலைக்கு மேல் நிற்பதை நேரில் கண்ட பாரிஷதர்களுக்கும் ஒரே குலை நடுக்கம்தான்!

தாங்கள் ஒரு சின்ன அதிர்வை உண்டாக்கினால் கூட, கொடிய விஷநாகம் குருநாதனை தீண்டிவிடக்கூடுமே என்பதால் அலமாந்து போய் நின்றனர்!

"ஈஶ்வரோ ரக்ஷது! அவரை அவரே ரக்ஷது"

பெரியவாளிடமே மானஸீகமாக ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டு நின்றனர்.

நல்ல காலமாக கொஞ்ச நேரம் அப்படியே படமெடுத்தாடி விட்டு, அந்தப் பாம்பு இறங்கி, அங்கிருந்த ஒரு த்வாரத்தின் வழியாக போய் விட்டது.

பெரியவா ஜபம் முடிந்து எழுந்ததுதான் தாமதம்! பாரிஷதர், அந்த த்வாரத்தை அடைக்க முற்பட்டார்.

" இரு! இரு!…. என்ன பண்ற?"….

" நல்லவேளை! பெரியவா….! ஒரு பெரிய்ய நாகப்பாம்பு ! இத்தன நேரம் ஒங்க பின்னாடி தலைக்கு மேல ஜோரா படமெடுத்து ஆடிண்டிருந்துது…! பயங்கரமா இருந்துது பெரியவா! அது இந்த பொந்துக்குள்ளதான் போச்சு..! அதான் இனிமே வராம…."

அவரை முடிக்க விடாமல் பெரியவா சொன்னார்…

"அதுக்காக? ரொம்ப நன்னாருக்கே! பாரு..! நாம என்னமோ நேத்திக்கு வந்தோம். நாளைக்கே இங்கேர்ந்து போய்டுவோம். நாம வரதுக்கு முன்னாடியும், பின்னாடியும் இந்த எடம்... என்னென்னவோ ஜீவராஸிகளுக்கு வாஸஸ்தலமா இருந்துது…! இனிமேயும் இருக்கப்போறது!.....

.......நடுவாந்த்தரத்துல நாம அதுகள் எடத்துல வந்து பூந்துண்டது போறாதுன்னு… இது வேறயா?......

......நம்மாத்துக்குள்ள வந்து வழிப்போக்கா பூந்துண்டவன், நாமல்லாம்… உள்ள வரப்படாதுன்னு கதவை அடைச்சா எப்டி இருக்கும்? பொந்தை அடைக்கறதெல்லாம் ஒண்ணும் பண்ணாதீங்கோ!"

பரமேஶ்வரனோட கழுத்திலிருந்த பாம்பு, 'கருடா ஸௌக்யமா?' என்று கேட்ட மாதிரி, பெரியவாளின் ஸன்னதியிலிருந்த பாம்பு கூட, பாரிஷதர்களை குஶலப்ரஶ்னம் பண்ண முடியும்.
அது போன த்வாரத்தை அடைப்பதை தடுத்துவிட்டார்.

"நமக்கு அது ஒரு ஹிம்ஸையும் பண்ணாதபோதே, "இனிமே பண்ணும்"ன்னு இப்பவே நாமளாவே…. நெனச்சுண்டு, அதுகளை ஹிம்ஸை பண்ணினா என்ன ந்யாயம்?"

நாமாக இருந்தால் அந்தப் பாம்பை தேடிக் கண்டுபிடிச்சு, அதுக்கு ஸமாதியே கட்டியிருப்போம்.

ஆனா பெரியவா.? ….

ஆப்ரஹ்மகீடஜனனி!

ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி 🙏

No comments:

Post a Comment