உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
*தல எண்: 07*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*🏜முல்லைவன நாதர் கோவில், தென்திருமுல்லைவாசல்.*
__________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள இத்தலம் ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*🌙இறைவன்:* முல்லைவன நாதர், யூதிகாபரமேஸ்வரர், முல்லைவனேஸ்வரர்.
*🔱இறைவி:* கோதையம்மை, சத்யானந்த சௌந்தரி.
*🌴தல விருட்சம்:* முல்லை.
*🌊தல தீர்த்தம்:* சக்கர தீர்த்தம்.
*🔍ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*📖தேவாரம் பாடியவர்கள்:*
சம்பந்தர். இரண்டாவது திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.
*🛣இருப்பிடம்:*
சீர்காழியில் இருந்து பதினான்கு கி. மி. தொலைவில் வங்கக் கடலோரம் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது.
சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.
*🔍பெயர்க் காரணம்:*
சோழ மன்னன் குதிரையை வனத்தில் செலுத்திய போது, குதிரையின் கால்களை முல்லைக் கொடிகள் சூழச் சுற்றி இறுக்கிக் கொண்டன.
குதிரையின் கால்களைச் சுற்றிய முல்லைக் கொடிகளை மன்னன் வெட்டவும், கொடி தலைகள் யாவும் இரத்தச் சிதறல்களாக சிவந்து ஆனது.
கொடிகளைக் கிளர்த்திப் பார்க்கும் போது, வெட்டுப்பட்ட இரத்த வடுவோடு லிங்கத் திருமேனி வெளிப்பட்டது. ஆக, முல்லை வாசல் ஆனது.
*📮அஞ்சல் முகவரி:*
அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவில்,
திருமுல்லைவாசல்,
திருமுல்லைவாசல் அஞ்சல்,
வழி சீர்காழி.
சீர்காழி வட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம்.
PIN - 609 113
*🌸ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.
ஆலய அர்ச்சகர்.
ஆத்மநாத குருக்கள்,
தொடர்பு எண்: *94863 39538*
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன.
இவற்றை வேறுபடுத்தித் தெரிந்து கொள்ள, தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலத்தை *வடதிருமுல்லைவாயில் என்றும்,* காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலத்தை *தென்திருமுல்லைவாசல்* என்றும் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றன
*🏜கோயில் அமைப்பு:*
இத்தலத்திற்கு முதன் முறையாக இப்போதுதான் வருகிறோம்.
இவ்வாலயத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்தது... இராஜகோபுரமில்லை என்று.
ஒரு முகப்பு நுழைவு வாயில் மட்டுமே இருந்தது.
நேராக முகப்பு வாயிலைக் கடந்தோம்.
நேராக பலிபீடம் இருக்க, இதனருகாக நின்று இமைகள்மூட தியானித்துக் கொண்டோம்.
எம்மில்லுள்ள ஆணவமலங்கள் அனைத்தும் ஒழியவேண்டிக் கொண்டு, மேலும் ஆணவமலம் எம்முள் தோன்றாதிருக்கும் மனத்தை அருளுமாறு விண்ணப்பித்து நகர்ந்தோம்.
அடுத்திருந்த கொடிமரத்தருகே எண்சாண் கிடையாக விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.
பின்பு, நந்தி மண்டபத்தைக்கு வந்து, நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஆலயத்துக்கு பிரவேசித்து இறைவனைக் காண அனுமதிக்க வேண்டிக் வணங்கிப் பின் தொடர்ந்தோம்.
ஆலயத்துள் ஒரு பிராகாரம் மட்டுமே இருந்தது.
ஈசனைக் காணும் ஆவலில் சந்நிதிக்கு வேகமெடுத்தோம். இறைவன் முல்லைவனநாதர் சுமார் மூன்றரை அடி உயரத்துடன் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
சிறப்பான அலங்கார பூமாலைகளுடன் காணக் கிடைத்தார் முல்லைவனநாதர். அர்ச்சகர் ஆராதித்த தீபராதணையை, சிரமேற் கைகளை உயர்த்தி வணங்கிக் கொண்டோம்.
தீபாராதணைக்குப் பின் அர்ச்சகர் கொடுத்த வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு, அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டோம்.
பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததாலும், அவசரம் காணாது பொறுமையுடன் கண்குளிர தரிசிக்கும் பாக்கியம் பெற்று வெளிவந்தோம்.
இவ்விறைவனை, மாணிலாமணி ஈஸ்வரா என்றும், யூதிகா பரமேஸ்வரா என்றும் பெயர்களைக் கூறிக்கொண்டு பக்தர்கள் வணங்கியதை பார்க்க கேட்டோம்.
உள் பிராகரத்தில் வலம் செல்கையில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக தரிசித்து வணங்கிக் கொண்டோம்.
தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக மிக அழகாக நேர்த்தியாக இருந்தது. ஆனந்தம் மேலிட வணங்கிக் கொண்டோம்.
அக்னி திசையிலிருக்கும் பிரம்ம தீர்த்தத்தை வணங்கி, அத்தீர்த்தத்திலே மூழ்கியெழுந்து வழிபட்ட சந்திரன், தனக்கிருந்த நோயை போக்கிக் கொண்ட தலம் இது.
பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள நினைத்த அம்மை, இங்கிருக்கும் முல்லைவன நாதரை நினைந்து அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவான ஸ்தானத்தில் இருந்து, அம்மனுக்கு அம்மந்திரவுபதேசத்தை உபதேசித்தார்.
ஆகவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருந்து அருள்கிறாரா.
உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசத்தை பெற்றுக் கொண்ட இடம் இதுவானதால், இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது.
சூரியகிரகணம், சந்திர கிரகணம், அமாவாசை போன்ற காலங்களில் இங்கு வந்து அமர்ந்து மனதார பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது உண்மை.
*💦காசித் தீர்த்தம்:*
இத்தலத்தில் வாயு திசையில் ஒரு கிணறு ஒன்று இருக்கிறது என்றும், அதில் கங்கா நித்தியவாசம் செய்கிறாள் என்றும், எனவே அதைப் பார்த்து தரிசித்து வணங்கி வாருங்கள் என்று, இத்தலத்திற்குப் புறப்படும் முன், நம் இல்லத்தின் அருகிருந்தோர் கூறினர்.
அதுபோலவே நாமும் அக்கிணற்று அருகில் சென்றோம். *கங்கா சரணம் கங்கா சரணம்* என சுற்றி வணங்கினோம்.
அப்போது எங்களுக்குப் பின்னால் ஆலயத் தொழுகை செய்து வந்தவர்களில் ஒருவர், எங்களை சாடையாக கேலி பேசியது புரிந்தது.
கங்காவாவது, இங்கிருப்பதாவாவது, இதெல்லாம் பொய்யான ஒழுக்க வணக்கம். நிறைய அடியார்கள் இப்படித்தான் நம்மை கெடுக்கிறார்கள் என்று கூறியது நம் காதில் நுழைந்தது.
ஆலயத் தொழுகைக்கு வந்திருந்தவர்களே இப்படி கூறினால் நாம் இதை என்னவென்று சொல்வது. மனதுக்கு வேதனையாய் இருந்தது.
அவர்களுக்குப் பதில்கூற நாங்கள் வாய் வாயிலைக் திறக்கவில்லை. காரணம் அந்தக் குழுவினர் பொழுதுபோக்குக்காக சுற்றி வருபவர்கள் போல இருந்தார்கள். பக்தியின் பாங்கு கொஞ்சமும் அவர்களிடம் இருந்ததாய் தெரியவில்லை.
இவர்களைப் போன்றவர்களுக்காக இங்கே ஒன்றைக் குறிப்பிட நினைக்கிறேன்.
இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?, எனக் கூறுபவர்களுக்கு.....................
இப்படித்தான் பதஞ்சலி முனிவரும் அவரோடு சில ரிஷிகளும் திருக்கொளிப்புத்தூர் எனப்படும் அவினாசி தலத்திற்கு வந்திருந்தனர்.
பதஞ்சலி முனிவர், உடனிருந்த இருந்த முனிவர்களிடம் இது காசித்தீர்த்தம் ஆராதித்துக்கோங்க!" என்றார்.
அதற்கு உடனிருந்த முனிவர்கள், இந்தக் கிணற்றைப் போய் கங்கை என்று கூறுகிறீர்களே! என்றார்.
அதற்கு பதஞ்சலி முனிவர் புன்முறுவலுவுடன்....., காசியில் இருக்கும் விஸ்வநாதலிங்க வேர் ஒன்று தென் கோடியான இங்கு வரை நீண்டு கிளர்த்து, இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறதல்லவா!"
"ஆமாம்! என்றார்கள் முனிவர்கள்.
இந்த வேரே நமக்கு அவிநாசி லிங்கமாக நமக்கு கிடைத்ததுதானே!"
காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி இவரென்பதால், இவரை *வாராணசிக் கொழுந்து'* என்றுதானே அழைக்கிறோம்.
அதுபோலத்தான் இந்தக் கிணறும், *"காசிக் கிணறு'* ஆகும் என்றார் பதஞ்சலி.
ஆனாலும் சக முனிவர்களுக்கும் இதில் முழு நம்பிக்கை ஏற்படவில்லை.
நம்பிக்கை ஏற்படாத மனதுடன் இருந்த முனிவர்களின் மனதை உணர்ந்த பதஞ்சலியார், உடனே தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து அவினாசிக் காசித் தீர்த்தக் கிணற்றில் தூக்கிப் போட்டார்.
பிறகு, முனிவர்களைப் பார்த்து, கண்டத்தை இன்னொருநாள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, போகலாம் வாருங்கள் என்று முனிவர்களை அழைத்துக் கொண்டு தலயாத்திரை செய்ய புறப்பட்டுப் போனார்கள்.
பதஞ்சலியும், முனிவர்கள் பலரும் பல மாதங்கள், பற்பல கோயில்களுக்குச் சென்று, தரிசித்துக் கொண்டே வந்து கடைசியில் வாராணசி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள்.
அங்கே கங்கையில் நீராட ஆற்றில் இறங்கினார்கள்.
நீராடிய அந்தச் சமயத்தில் புண்ணிய நதியான கங்காவானவள், தன் அலைக்கரங்களால் பதஞ்சலியின் தண்டத்தை இழுத்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது.
இதைப் பார்த்த பதஞ்சலியுடன் கூடயிருந்த முனிவர்கள் ஆச்சரியபுருவ வளைவுடன், வியப்பால் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வணங்கினார்கள்.
அதாவது அவினாசியில் வணங்க மறுத்த கைகள், இங்கே தன்னாலாகவே தொழுதன.
காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார்கள்.
முனிவர்கள் மனது கங்கா பிரவாகம் ஆகியதுடன், அவர்களுடைய கண்களும் ஆனந்த கங்கை வழியத் தொடங்கியது.
இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் இருப்பது போல,...........
எண்ணில்லா தீர்த்தங்கள், நிலைகள், நிறைய நம் ஆலயங்களில் பேருண்மையாக விளங்கி அருளிக்கொண்டு இருக்கிறது.
இது மட்டுமா? வன்னிமரமும் கிணறும் மதுரைக்கு பெயர்ந்து வந்து சாட்சி சொல்லவில்லையா?
இன்று நாம் மதுரைக்கு போகும்போது இதைக் கண்டு வணங்கி வருகிறோமே!....சிவ.. சிவ.. திருச்சிற்றம்பலம்.
இதை மதியாது பேசும் நாவு'களை..........., நாம் சபிக்க விரும்பவில்லை.
*தல அருமை:*
முதலாம் கிள்ளி வளவன் என்ற சோழ மன்னன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான்.
நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனை கூறினார்கள்.
இதன்படி இத்தலத்தற்கு வந்த மன்னன், அருகிலுள்ள கடலில், நோய் தீருவதற்காக தன் பரிவாரங்களுடன் நீராட வந்தான்.
அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது.
அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, ஓரிடத்தில் கீழேயிருந்த சுயம்புவான லிங்கத் திருமேனி மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகி ஒழுயது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன் ஏதோ ஒரு ஜந்துவின் உயிரை வெட்டி விட்டோமோ என பயந்து பார்க்க,.......
லிங்கத் திருமேனியிலிருந்து ரத்தம் ஒழுகி வழிந்ததைக் காண நேர்ந்தது.
இறைவன் திருமேனியை தன் வாள் வெட்டுப்பட்டதால், மன்னன் தன் தவறை உணர்ந்து, தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ள முயல்கையில் இறைவன் ரிஷபாரூடராய்க் காட்சி தந்தார்.
லிங்கத்தில், வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இவ்வாலயத்துக்கு செல்லும் போது, அத்தழும்பை நீங்கள் காணப்பெற முடியும்.
திருமுல்லைவாசல் ஒரு கடற்கரைத் தலம்.
இது உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.
*சம்பந்தர் தேவாரம்:*
01🔔துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரனூர்
களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கும் மதுவின்
தெளி மண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾விடத்தினை விரும்பி உண்டு அதனால் கருமை நிறம் பெற்ற கண்டத்தினனும், நடனமாடும் ஒளி பொருந்திய வடிவினனும் பேரொளிப் பிழம்பாய் உம்பர் உலகத்தைக் கடந்த உமைபங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், களிப்புத்தரும் சோலையை அடுத்துள்ள வயல்களில் மலர்ந்த தாமரைகளில் தங்கிய மதுவின் தெளிவை வயிறார உண்டு சிறை வண்டுகள் பாடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலம் ஆகும்.
02.🔔பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழு முத்து அலைக் கொள் திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன் அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப் படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும் சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமாகும்.
03.🔔வாராத நாடன் வருவார் தம் வில்லின் உருமெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற் பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும். இவ்வுடல் மெலியுமாறு உருகி வழிபடில் ஆராத இன்பம் அருள்பவன். அகலாத அன்புடையவன். அத்தகைய அரன் அருள் செய்ய எழுந்தருளியுள்ள ஊர், நீங்கா ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப் பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
04.🔔ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய்
அன்று இன்றொடு என்றும் அறிவு ஆனவர்க்கும் அறியாமை நின்ற அரனூர்
குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமிச்
சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு. புருடதத்துவம் இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய் நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள் ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும் கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
05.🔔கொம்பன்ன மின்னின் இடையாள் ஒர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன ஒண்கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும் இடையினளும் ஆகிய உமையம்மையை ஓரு கூற்றாகக் கொண்டவன். நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம்மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர் ஆடும் அரங்குகளும், அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம்பொன்னின் அழகைத்தரும் மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
06.🔔ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன்
ஆனேறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறியாடு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய உமையம்மையின் கருநிற ஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி, அழகு தரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணி கலனாகப் பூண்டவன். அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும் குயிலும் வாழும் சோலைகளையும், தேனைப் பொருந்திய வண்டுகளைக் கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
07.🔔நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடும் மேனி அரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின் வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும் கையன். அனல் போன்ற மேனியன். அவ் அரனது ஊர், மேகங்கள் தங்கும் உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
08.🔔வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடிபத்தும் இற்று நெரிய
உரை வந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்து வந்து செறிதேறலாடு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾கயிலை மலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும், உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனியனாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர், மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும் பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள் ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
09.🔔மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர் துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾திருமேனிமேல் நீண்டு ஓடிவிளையாடலைப் பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும் தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில் அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல் வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
10.🔔பனைமல்கு திண்கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரியச்
சினைமல்கு புன்னை திகழ் வாசம் நாறு திருமுல்லைவாயில் இதுவே.
🙏🏾பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன் திருவடியை நினையாத சமணர் தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன். அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள் ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
11.🔔அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார்
திணி கொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லைவாயில் இதன் மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே.
🙏🏾அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள்செய்த எந்தையாவர், பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை வாயிலாகிய இத்தலத்தின் மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில் தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப் பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருக்கலிகாமூர்.*
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment