Thursday, August 2, 2018

Hunger of Agni - Story from Mahabharata

ஐந்தாம் வேதம் J.K. SIVAN

44 அக்னியின் கோர பசி

''வைசம்பாயனரே , அப்புறம் அக்னி என்ன செய்தான்? அவனால் காண்டவ வானத்தை எரிக்க முடிந்ததா, கிருஷ்ணனிடம் சென்றானே, அவர் உதவினாரா? அர்ஜுனன் எவ்வாறு அக்னிக்கு உதவ முடிந்தது? --- ஜனமேஜயன் கேள்வி மேல் கேள்வியாக எழுப்ப வைசம்பாயனர் ''சொல்கிறேன் அப்பா, பொறுமையாக கேள் என்று தொடர்கிறார்:

கிருஷ்ணன் அர்ஜுனனோடு அருகில் இருந்த நேரம் அது. அக்னி விஷயம் எல்லாம் கக்கினான். என்னிடம் ஆயுதம் அஸ்திரம் இருந்தாலும் பலம் பொருந்திய வில் தங்களிடம் தான் உள்ளது. தாங்கள் மட்டுமே என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் ''என்று வேண்டினான்.

நீ வருணனையும் சில ஆயுதங்கள் எனக்காக கேட்டுப் பெறுவாய் என்று அக்னி சொல்ல, வருணனையும் பணிகிறேன் அர்ஜுனன். வருணனும் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த தனுசுவை அளிக்க அது அக்னிக்கு உதவுவதற்காக அர்ஜுனனை வந்தடைகிறது. இந்த ஈடு இணையற்ற வில் ''காண்டீபம்'' என்ற பெயர் கொண்டு அர்ஜுனனுக்கு பெரும் புகழ் தந்தது. அக்னி கிருஷ்ணனுக்கு ஒரு கதாயுதம் அளிக்கிறான். அதுவே கௌமோதகி.

அர்ஜுனன் அக்னியிடம் ''இனி நீ காண்டவ வனத்தை உன் சக்தியால் விழுங்கு. உனக்கு உதவ நாங்கள் இருவரும் இருக்கிறோம் என்றதால் காண்டவ வனத்தை நாலா பக்கமும் அக்னி சூழ்ந்து கொண்டான்.. காண்டவ வனத்தின் தீய சக்திகள் வெளியேற முயற்சித்தபோது அர்ஜுனனின் கணைகள் அவற்றை அழித்தன.

தக்ஷகன் மற்றும் அந்த வனத்தில் வசித்த நாகங்கள் இந்திரனை அணுகி அக்னி பிரவேசத்தை தடுக்க வேண்டியதால் இந்திரன் கருமேகங்களை அனுப்பி தீயை அணைக்க மழை பொழியச் செய்தான். அர்ஜுனனின் அஸ்த்ரங்கள் அக்னியின் வேகத்தை அதிகரிக்க மழை பூமியை அடையுமுன்பே ஆவியாக மேலேயே சென்றுவிட்டது. காற்று மேகங்களை விரட்டியது. காண்டவ வனம் மேலும் அக்னியால் அழிந்து கொண்டே வந்தது.

இந்திரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட சகல தேவதைகளும் அர்ஜுனனை எதிர்த்தும் அக்னியின் காண்டவ வன கபளீகரத்தை தடுக்க முடியவில்லை. இந்திரன் மேலும் உபரி சக்திகளை பிரயோகிக்க கிருஷ்ணன் தனது கௌமோதகியை வீச அது காண்டவ வன ராக்ஷசர்களையும் நாகர்களையும் காக்க அனுப்பிய இந்திரனின் சக்தி ஆயுதங்களையும் முறியடித்து விட்டு திரும்பியது. தக்ஷகன் அக்னியின் எண்ணத்தை அறிந்து முன்பே தப்பி குருக்ஷேத்ரம் சென்று விட்டான்.

பதினைந்து நாட்கள் தொடர்ந்து அக்னி தனது பசி தீர காண்டவ வனத்தை தீக்கிரையாக்கினான்.

இதற்கிடையில் ஒரு உப கதை சொல்கிறேன்.

மந்தபாலன் என்கிற ரிஷி தனது பித்ருக்களை சந்திக்க செல்லும்போது தடை செய்யப் பட்டார். ''பித்ருக்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் அவசியம். நீயோ பிரம்மச்சாரி உனக்கு அந்த அதிகாரம் இல்லையே'' என்று தேவர்கள் தடை செய்ய, திருமணம் செய்து கொண்டு புத்திர சந்தானம் ஏற்பட சீக்ரமான வழி பக்ஷி வர்க்கமாக மாறுவதே என்று அவர் காண்டவ வனத்தில் ஒரு மரத்தில் வசித்த சாரங்க பட்சியாகி, மணந்து, சில குஞ்சுகள் பிறந்து அவர் பித்ருக்களை சந்தித்து ஆசி பெற்ற சமயத்தில் தான், அக்னி காண்டவவனத்தை முழுதும் கபளீகரம் பண்ணினான். தாய்ப் பறவை பறந்து தப்ப முடிந்தாலும் ரெக்கை முளைக்காத குஞ்சுகளை எப்படிக் காப்பாற்றுவது. மந்தபாலன் ரிஷி அக்னியைப் பிரார்த்திக்க ''உன் குடும்பத்தை தீ அணுகாது'' என்று அக்னி வாக்குக் கொடுத்தான். அதன் படி சாரங்க பட்சிகள் மட்டும் தப்பின.

இந்திரனும் அர்ஜுனன் வீரத்தை மெச்சுகிறான். உனக்கு என் சிறந்த ஆயுதங்களை பரிசளிக்கப்போகிறேன். அதற்கு தக்க காலம் வரும். நீ பரமேஸ்வரனையே மகிழ்வித்தவன் அர்ஜுனா, அவரிடமிருந்தே பாசுபதம் பெரும் பாக்கியம் பெற்றவன். இந்திரனின் ஆசியையையும் முழுமையாக பெறுகிறான் அர்ஜுனன். இந்திரனின் அம்சம் அல்லவா அவன்!

Image may contain: sky, cloud, outdoor and nature


No comments:

Post a Comment