Thursday, August 16, 2018

Ganga and parvati

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
__________________________________
*🌊கங்கையும், 🔱பார்வதியும்.*
__________________________________
கங்கையும் நங்கையும்
கங்காதேவியானவள் கடுமையான வேகத்துடன் உலகை அழிப்பதுபோல் பாய்ந்து வந்தாள்.

புவனாதிபதியான சிவபெருமான், இவளது சீற்றத்தைக் கண்டு தடுத்துத் தனது திருச்சடையில் ஏற்றார்.

இதனால் கங்காதரன் எனப்பட்டார்.

கங்கை வந்த வேகம் என்ன?

அவளை அநாயாசமாகத் தடுத்த லாவகம் என்ன?

இதை திருஞான சம்பந்தர் எப்படி விவரித்திருக்கிறார் பாருங்கள்.

*கடுத்து வரும் கங்கை தன்னைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதுஆய் உறையுமிடம் விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று இராமற்காய்ப் புடைத்தவனைப் பொருது அழித்தான் புள்ளிருக்கு வேளூரே*
என்றிருக்கிறார்.

அதாவது, கங்கையைத் தடுத்தபோது அவரது சடைமுடி ஒன்று கூட அசையவில்லை என்று கூறுகிறார்.

இதனால், கங்கையைச் சிரத்தில் ஏற்றத்தைக் கண்ட உமாதேவி, சுவாமியிடம் ஊடல் கொண்டாளாம்.

அவளது கோபத்தைத் தீர்க்கவேண்டிய ஈசன், சடையில் இருப்பது கங்கை நதி என்றும், உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கே தாம் அவ்வாறு தடுத்து தலையில் அதனை ஏற்றதாகவும் சொல்லி அவளை சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார் ஈசன்.

இப்பதிகப் பாடல், சம்பந்தரின் திருப்புள்ளிருக்கு வேளூர் தல பதிகத்தின் பதினோறு பாடல்களில் பத்தாவது பாடலில் அமைத்து பாடியிருக்கிறார்.

இதையே அப்பர் பெருமானும் இன்னும் ஒரு படி மேலே உயர்வாக இக்காட்சியினை
விவரிக்கிறார்.

கங்கையைப் பற்றி சுவாமி விளக்கமளித்தாலும், இதனால் அம்பிகை சமாதானம் அடைந்தவளாகக் காணப்படவில்லை.

ஈசன்தான் ஆடல், பாடல் எல்லாவற்றிலும் வல்லவர் ஆயிற்றே!, கான ந்ருத்த சங்கரர் என்ற ஒரு பெயரும் ஈசனுக்கு உண்டு அல்லவா?.

கானத்தால் உமையை சமாதானப் படுத்த முயலுகிறார் ஈசன். அதுவும் சாம கானம பாடி அவளது ஊடலைத் தீர்க்க விழைகிறார்.

உடனே அந்த கானத்திற்கேற்ப கூடவே ஆடவும் செய்திருக்கிறாராம்.

இப்படியான அருமையான வருணனையை, அப்பர்பெருமான் திருவதிகை வீரட்டானத் திருப்பதிகத்தில் ஒரு பாடல் மூலம் உரைத்து, நமது சிந்தையை மகிழ்வித்திருக்கிறார்.

*பாடல்:*
"""""""""""""""""
*சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்கவேண்டிப் பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே ஆடினார் கெடிலவேலி அதிகை வீரட்டனாரே.* என்று பிடியிருக்கிறார்.

இந்த ஈசன் ஈஸ்வரியின் ஊடல் காட்சி, பல சோழர்கால ஆலயங்களிலும், கருவறைச் சுவற்றிலும் சிற்ப வடிவில் காணப் படுவதை அனைவரும் காணப்பெற்றிருப்போம்.

இக்காட்சியினை, கங்கா விசர்ஜன மூர்த்தி எனப் பெயரிட்டு அழைக்கிறோம்.

பேரளத்திற்கு அருகில் உள்ள திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் அற்புத வடிவில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் வடிவழகு காட்சியை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

நீங்களும் ஒரு முறை பாருங்கள். எத்தனை முறை இக்காட்சியினை எத்தனை முறை கண்டாலும், நம் மனதில் உள்ள கவலைகள் கரைந்துருகி போய்விடும்.

கோபம் கொண்ட அம்பிகையின்
முகவாயை ஈசன் பற்றித் தன்னை நோக்கித் திருப்ப முயல்கிறார்.

இச்சிற்பத்தை ஒருபுறம் நின்று பார்த்தால், அம்பிகையின் முகத்தில் ஊடலால் வந்த கோபம் தெரியும்.

மறுபுறம் நின்று பார்த்தால், ஊடல் தீர்ந்தவளாகவும் காட்சி தெரியும்.

இத்தெய்வீகக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

நேரில் சென்று தரிசித்துக் காணப் பெற முயலுங்கள்.

No comments:

Post a Comment