பஜகோவிந்தம் ஸ்லோகம் 23
நித்யநாதர் கூறிய ச்லோகம்.
ரத்யா கர்பட விரசித கந்த:
புண்யா புண்ய விவர்ஜித பந்த:
யோகி யோக நியோஜித சித்தோ−
ரமதே பாலோன்மத்தவதேவ!
(22)
கந்தை துணியில் இவன் காணுவான் சுகமே;
சிந்தையிலே நலம், தீமையும் அறியான்;
பித்தனோ, சிறு பிள்ளையோ போல் இவன்−
சித்தமே மகிழ்ந்து, இறைவனில் கலப்பான்!(22)
ரத்யா கர்பட விரசித கந்த:- வீதியில் எறிந்த துணியே உடை ஆக
புண்யா புண்ய விவர்ஜித பந்த:-புண்யம் பாபம் இவற்றைப் பற்றி கவலை இன்றி ( பற்று அகன்றதால் )
யோக நியோஜித சித்தோ—அவனுடைய சிந்தை பிரம்மத்தில் லயிப்பதால்
யோகீ- யோகியானவன்
பாலோன்மத்தவதேவ! – ஒரு அறிவில்லாத பாலனைப் போலவோ அல்லது உன்மத்தனைப் போலவோ காணப்படுகிறான்,
ரமதே – எப்போதும் மகிழ்வுடன் இருக்கிறான்.
முற்றும் துறந்து ஆனால் இந்த உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருப்பவர் ஓர் அறிவிலியாகவோ அல்லது பைத்தியமாகவோ உலகத்தாரால் எண்ணப்படுபவர். ஏனென்றால் அவருக்கு உலகவிஷயங்களில் ஈடுபாடு இல்லாததால் சம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும் சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாதவர். .
ஒருவர் நடத்தையோ பேச்சோ புரியவில்லை என்றால் அவரை மூடன் என்றோ பைத்தியம் என்றோ ஒதுக்கி விடுவதுதானே உலக வழக்கு.
ரிஷபதேவர் தன் ராஜ்ஜியத்தை விட்டு விட்டு ஒரு உன்மதத்னைப்போல் நாடெங்கும் சஞ்சரித்தார். அவர் பெருமையை உணர்ந்தவர் வணங்கினர். அறியாதவர் கற்களால் அடித்தனர். அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.
ஜடபரதர் பிறவியிலேயே பிரம்மஞானி. அவர் ஒரு மூடராக எல்லோராலும் அவமதிக்கப்பட்டார். நம் காலத்திலேயே வாழ்ந்த யோகிராம் சுரத் குமாரும் இதற்கு ஒரு உதாரணம்.
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை கீதையில் கண்ணன் தெளிவாகக் கூறி இருக்கிறான்.
யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாகர்தி பூதானி ஸா நிசா பச்யதோ முனே: (ப.கீ.2.69)
எல்லோரும் எப்போது இரவு என்று எண்ணி உறங்குகிறார்களோ, அப்போது யோகி விழித்துக்கொண்டிருக்கிறான். அதாவது பரம்பொருளில் நாட்டம் இல்லாது நாம் உறங்குகிறோம். எல்லோரும் எப்போது விழித்திருக்கிறர்களொஅ அது யோகிக்கு இரவாகிறது . அதாவது இந்த உலகவிஷயங்களில் அவனுக்கு உணர்வில்லை.
இந்த உலகப்பற்றை ஒழிப்பது எப்படி? இது அடுத்த ஸ்லோகத்தில்
No comments:
Post a Comment