Tuesday, June 5, 2018

Kurai onrum illai - mukkuur

குறையொன்றுமில்லை

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் - முதல் பாகம்
(மீள் பதிவு)

நரசிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் என்று ஒன்று உண்டு. முப்பத்திரண்டு அஷ்ரங்கள். ஒவ்வொரு அஷ்ரமும் ஒரு பிரும்ம வித்தையை நமக்கு உபதேசம் பண்ணக்கூடியது. ஆகவே 32 பிரும்ம வித்தைகளாலும் ஆராதிக்கப்படுகிறவர் நரசிம்ஹர் என்று கொள்ளலாம்.

ஏதாவது ஒரு பிரும்ம வித்தையை நம்மால் கற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியுமா? என்றால், ஒன்றைக் கூட நம்மால் அனுஷ்டிக்க முடியாது.

ஆனால், நரசிம்ஹனைப் பார்த்து ஸ்ரீநரசிம்ஹாய நம: என்று ஒரு புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை செய்ய முடியும்! அந்த நரசிம்ஹனை தியானம் பண்ண முடியும். அப்படி தியானம் பண்ணிவிட்டால் எல்லா பிரும்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும். அத்தனை பிரும்ம வித்தைகளின் நிலைக்களன் அந்தப் பரமாத்மா தான்.

பூர்வ காலத்திலேயே ஜான சுருதி என்றொருவன் இருந்தான். வாரிவாரி வழங்கும் வள்ளன்மை மிக்கவன். எல்லோருக்கும் வாரிவாரிக் கொடுப்பான். தானம், தைரியம் போன்ற குணங்கள் இயல்பாக அமையனும். அவனுக்கு அது அமைந்திருந்தது.

ஏழு அடுக்கு உப்பரிகையிலே ஜான சுருதி படுத்துக் கொண்டிருந்தான். இரவு நேரம்.... இரண்டு பரதேசிகள் அவனுக்கு உபதேசிக்க எண்ணினார்கள்.

வானத்தில் ஒரு ஹம்ஸ கூட்டம் (அன்னப் பறவை) பறந்து போய்க்கொண்டிருந்தது. தாங்களும் ஹம்ஸப் பறவைகளாக மாறி, கூட்டத்துடன் பறந்தனர். ஜான சுருதி படுத்திருந்த இடத்துக்கு நேர்மேலே வந்தபோது, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள்.

ஒரு பறவை சொன்னது: "மந்தமான பார்வையுடைய நண்பா! கீழே படுத்திருப்பவனைப் பார்த்தாயா? இவன் எப்பேர்ப்பட்டவன் என்று உனக்குத் தெரியுமா?"

மற்றது பதில் பேசியது: இவனொன்றும் அப்படி உயர்ந்தவன் இல்லை. ரைக்குவரைக் காட்டிலும் இவன் எப்படி உயர்ந்தவனாக முடியும்?"

உரையாடல் தொடர்ந்தது.

"அது யார் ரைக்குவர்?

உனக்கு ரைக்குவரைத் தெரியாதா? நான் காட்டுகிறேன், வா .."

படுத்திருந்த ஜான சுருதி எழுந்து விட்டான். தன்னைக் காட்டிலும் உயர்ந்தரைக்குவரைத் தெரிந்து கொள்ள அவனுக்குப் போருக்க முடியாத ஆவல்.

தான் ஏழு அடுக்கு உப்பரிகையில் படுத்திருந்தால் ரைக்குவர் பதினாலு அடுக்கிலே படுத்திருக்க வேண்டும் என்று எண்ணி, ஆட்களைக் கொண்டு நகரம் தோறும் தேடச் செய்தான். ஒரு நகரத்திலும் அவர் அகப்படவில்லை. பிறகு கிராமம், குக்கிராமம் என்று தேடி, ஒரு வழியாக ரைக்குவரைக் கண்டு பிடித்தார்கள் .

எங்கே?

மிகச் சிறியதொரு குக்கிராமத்தில், ஒரு சேரியில் இருந்தார் ரைக்குவர். அங்கே ஒரு கட்டை வண்டி இருந்தது. அதிலே முதுகைத் தேய்த்தபடி நின்றார்! அவர் உடல் முழுவதும்புளுத்து நெளியும் புண்கள்!
ஜான சுருதியினால் நம்ப முடியவில்லை. இவரைத் தவிர வேறு ரைக்குவர் கிடையாது என்றதும், இரண்டு யானைகள் மீது தங்கத் தாம்பாளத்தில் பட்டு, பீதாம்பரம், செல்வம் என்று குவித்து எடுத்து வருகிறான். அத்தனையையும் அவர் முன் சமர்ப்பித்து அனுக்கிரஹம் பண்ணப் பிரார்த்திக்கிறான்.

"ஒரு புழுவுக்குச் சமம்" என்று தம் உடம்பிலிருக்கும் ஒரு புழுவைக் காட்டிச் சொல்கிறார் ரைக்குவர். உன் நிலைக்கு இதெல்லாம் உயர்வாகத் தெரிகிறது. நான் இருக்கும் நிலைக்கு நீயும் வந்தால், என்னைப் போல்தான் நீயும் இவற்றைப் பார்ப்பாய்" என்றார்.

"இவ்வளவு செல்வத்தையும் புழுவாய் நினைக்கும் ஒரு நிலை இருக்கிறதா? என்று வியக்கிறான் ஜான சுருதி.

"ஏன் இல்லை?"

"அப்படியானால், அதை அடைய நான் என்ன பண்ண வேண்டும்?"

இப்படிக் கேட்ட ஜான சுருதியிடம் ரைக்குவர் யாரை உபாசிக்கச் சொல்லி உபதேசம் பண்ணினார் என்றால்... நரசிம்ஹனையே உபாசிக்கும்படி உபதேசித்தார்! அவனும் அவர் சொல்படி நரசிம்ஹனை உபாசித்து மோக்ஷத்தை அடைந்தான்.

ஆக, யார் தன்னை உபாசிக்கிறார்களோ அவர்களுக்குப் பலனைக் கொடுக்கக் கூடியவன் நரசிம்ஹன்.

"அடித்த கை - பிடித்த பெருமாள்" என்று பெயர் அவனுக்கு!

"எங்கடா"? என்று அடித்துக் கூப்பிட்டால், "இதோ" என்று வந்து நம் கையைப் பிடித்துக் கொள்வான். வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா!

No comments:

Post a Comment