அஷ்டபதி 2௦
கண்ணன் வந்து பிரியமாகப் பேசிய பின்னும் ராதை தயங்குகிறாள். பிறகு கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான். அப்போது சகி ராதையை அங்கு செல்லும்படி கூறுகிறாள்.
1.விரசித சாடு வசன ரசனம் சரணே ரசித ப்ரணிபாதம்
ஸம்ப்ரதி மஞ்சுள வஞ்சுள ஸீமனி கேளிசயனம் அனுயாதம்
விரசித சாடு வசன ரசனம்- உன்னிடம் சாதுர்யமாகப் பேசி
சரணே ரசித ப்ரணிபாதம்- உன் பாதங்களை வணங்கி
ஸம்ப்ரதி- இப்போது
மஞ்சுள வஞ்சுள ஸீமனி-அழகான கொடிவீட்டின் சமீபம்
கேளிசயனம் - மஞ்சத்திற்கு
அனுயாதம்-சென்ற
முக்தே மதுமதனம் அனுகதம் அனுஸர ராதிகே
( த்ருவபதம்)
அனுகதம் – உனக்கு அனுகூலனான
மதுமதனம் –கண்ணனை
முக்தே ராதிகே –அப்பாவியான ராதையே
அனுஸர- பின் தொடர்ந்து செல்.
2.கனஜகன ஸ்தன பார பரே தரமந்தர சரணவிஹாரம்
முகரிதமணிமஞ்ஜீரம் உபைஹி விதேஹி மராள நிகாரம்(முக்தே)
கனஜகன ஸ்தன பார பரே-ஸ்தனம் இடுப்பு இவைகளின் பாரத்தால்
தரமந்தர சரணவிஹாரம்- கால்கள் மெதுவாக நடக்க
மராளநிகாரம் – அன்னம் போல்
விதேஹி- செல்.
முகரிதமணிமஞ்ஜீரம்- உன் பாதங்களின் சலங்கை சப்திக்க
உபைஹி- செல்வாயாக.
3. ச்ருணு ரமணீயதரம் தருணீஜனமோஹன மதுபவிலாபம் .
குஸும சராஸன சாஸன வந்தினி பிகநிகரே பஜ பாவம் (முக்தே )
ரமணீயதரம்- அழகான
தருணீஜனமோஹன – பெண்களை மயக்குகிற
மதுபவிலாபம்- வண்டின் ரீங்காரத்தை ( கண்ணனின் அதரமாகிற தேனை உண்டு எழும் குழல் நாதம்)
ச்ருணு- கேள்
குஸுமசராசன – மன்மதனின்
சாஸன வந்தினி – கட்டளைபோல் பாடும்
பிகநிகரே – குயில்கள் குரலில்
பஜ பாவம் – ஆனந்திப்பாயாக.
4. அனிலதரள கிஸலய நிகரேண கரேண லதாநிகுரம்பம்
பிரேரணம் இவ கரபோரு கரோதி கதிம் பிரதி முஞ்ச விலம்பம் (முக்தே)
கரபோரு- யானைதுதிக்கையைப்போல் துடை உள்ளவளே
லதாநிகுரம்பம் –கொடிகள் எல்லாம்
அனிலதரள கிஸலய நிகரேண- காற்றில் அசையும் தளிர்களாகிய
கரேண- கைகளால்
ப்ரேரணம் கரோதி இவ – உன்னை வரவேற்பதுபோல் உள்ளன.
கதிம் பிரதி – நீ செல்வதற்கு
விளம்பம் முஞ்ச- தாமதம் செய்யாதே.
கரபோரு- அழகிய பெண்களின் துடைகள் யானைத்துதிக்கையைப்போல் அல்லது வாழைத்தண்டுபோல் இருக்கும் என்பது சாமுத்ரிகா லக்ஷணம்.
இந்த இடத்தில் காளிதாசனின் கவியழகைக் காண்போமா?
காளிதாசன் பார்வதியின் அழகை வர்ணிக்கிறான் குமாரசம்பவத்தில்.
நாகேந்தர ஹஸ்தா: த்வசி கர்கசத்வாத் ஏகாந்தசைத்யாத் கதலீவிசேஷா:
லப்த்வாபி லோகே பரிணாஹி ரூபம் ஜாதா: ததூர்வோ: உபமான பாஹ்யா:
யானைத்துதிக்கைகளின் தோல் மிகவும் கடினமானதாலும் வாழைத் தண்டுகள் மிகவும் குளிர்ந்து இருப்பதாலும் இரண்டும் உலகில் உவமைகளாககக் கூறப்பட்ட போதிலும் பார்வதியின் விஷயத்தில் ஒவ்வாததாகின்றன. அதாவது அவள் சௌந்த்ர்யத்திற்கு ஈடே இல்லை என்று கூறுகிறான்.,
5.ஸ்புரிதம் அனங்க தரங்க வசாதிவ சூசிதஹரிபரிரம்பம்
ப்ருச்ச மனோஹர ஹாரவிமலஜலதாரம் அமும் குசகும்பம் (முக்தே)
சூசிதஹரிபரிரம்பம்- ஹரியின் ஆலிங்கனத்தை நினைவுபடுத்தும்
அனங்க தரங்க வசாத் இவ – மன்மத வேகத்தால் துடிக்கும்
மனோஹர ஹாரவிமலஜலதாரம்- அழகிய ஜலதாரைகள் போன்ற முத்துமாலைகளை தாங்கி நிற்கும்'
அமும் குசகும்பம் –இந்த உன் குசகலசங்களைக் கேள் (உன் உள்ளகிடக்கையை சொல்லும்)
6. அதிகதம் அகிலஸகீபி: இதம் தவ வபுரபி ரதிரணஸஜ்ஜம்
சண்டி ரஸித ரசனாரவடிண்டிமம் அபிஸர ஸரஸம் அலஜ்ஜம் (முக்தே)
சண்டி- பிடிவாதக்காரியே
அகிலஸகீபி: உன் எல்லா தோழிமார்களுக்கும்
இதம் தவ வபு: - இந்த உன் உடல்
ரதிரணஸஜ்ஜம் – கூடலுக்கு தயாராக இருக்கிறது என்று
அதிகதம் – தெரிந்ததே
ரஸித ரசனாரவடிண்டிமம்- உன் காற்சிலம்பு உன் வரவைத் தெரிவிக்கும் பறை போல் ஒலிக்க
அலஜ்ஜம்- நாணத்தை விட்டு
ஸரஸம்- காதலுடன்
அபிஸர – செல்வாயாக
7. ஸ்மர சர ஸுபக நகேன கரேண ஸகீம் அவலப்ய ஸலீலம்
சலவலயக்வணிதை: அவபோதய ஹரிம் அபி நிகதித சீலம் (முக்தே )
ஸகீம் – தோழியாகிற என்னை
ஸ்மர சர ஸுபக நகே – மன்மதபாணம் போல் அழகிய நகம் பொருந்திய
கரேண – கரத்தால்
அவலப்ய – பிடித்துக்கொண்டு
ஸலீலம் – நளினமாக
சலவலயக்வணிதை:- உன் வளைகளின் ஒலியால்
நிகதிதசீலம் – உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
ஹரிம் அபி- ஹரிக்கும்
அவபோதய –உன் வரவைத் தெரியப்படுத்து
8. ஸ்ரீ ஜெயதேவ பணிதம் அதரீக்ருத ஹாரம் உதாஸித வாமம்
ஹரிவிநிஹிதமனஸாம் அதிதிஷ்டது கண்டதடீம் அவிராமம்
ஸ்ரீ ஜெயதேவ பணிதம்- ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதம்
அதரீக்ருத ஹாரம்- ஒரு மாலையினும் மேம்பட்டதாய்
உதாஸித வாமம்- பெண்ணாசையை அகற்றுவதாய்
ஹரிவிநிஹிதமனஸாம்- ஹரியினிடத்தில் ஒன்றுபட்ட மனம் உடையோரின்
கண்டதடீம் –கண்டத்தில்( மாலையைப்போல் )
அவிராமம்- எப்போதும்
அதிதிஷ்டது – வசிக்கட்டும்
நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்ட பக்தர்களால் பாடப்படுவதால்( கண்ட தேசத்தில் இருந்து எழுவதால்) இந்த கீதகோவிந்தம் சிறந்த மாலையைப்போல் உள்ளது.
கண்ணன பூதனையிடம் ஸ்தன்ய பானம் செய்ததை நினைத்தால் மீண்டும் இந்த உலகில் தாயிடம் பால் குடிக்கும்படி நேராது. ( பிறவி இருக்காது) அவன் உரலில் கட்டுண்டதை நினைத்தால் நம் கட்டுக்கள் அவிழும்.( சம்சார பந்தம் விடுபடும்) அவன் செய்த கோபியர் லீலையை நினைந்தால் காம இச்சை விலகும்.
நியாய சாஸ்திரத்தில் தத்க்ரது நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்னவென்றால் எதை நினைக்கிறோமோ அதே போல ஆகிவிடுவோம் என்பது. வேதாந்த தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார் . அந்த நியாயம் பகவான் விஷயத்தில் பயன்படாது வெட்கத்தால் ஆரண்யத்தில் ஒளிந்து கொண்டு விட்டது என்று. ஆரண்யகம் என்றால் உபநிஷத் . அங்கு இந்த நியாயம் சொல்லப்படுகிறது. கண்ணன் விஷயத்தில் அது அவனுடைய செய்கைகளுக்கு நேர் மாறான பலனைக் கொடுப்பதால் அது ஆரண்யத்தில் ஒளிந்துகொண்டு விட்டது என்கிறார்
No comments:
Post a Comment