Wednesday, June 27, 2018

Adaikala pathu - Desikan

சுவாமி தேசிகன்: அடைக்கலப்பத்து - J.K. SIVAN

நான் ஒரு காகம்.

அழகு தமிழிலும் ஆழ்ந்த பக்தி தோய்ந்த சமஸ்க்ரிதத்திலும் இணையாக அற்புத பக்தி ஸ்தோத்திரங்களை இயற்றியவர்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்கள் வெகு வெகு சிலரே. அவர்களில் பிரதானமாக ஜொலிப்பவர்`களில் ஒருவர் தான் சுவாமி தேசிகன்.

பத்து பாசுரங்களை கொண்ட ஒரு சிறிய தொகுப்பு தான் சரணாகதி எனும் அவருடைய 'அடைக்கல பத்து''

''அப்பா வரதராஜா , அடியேனுக்கு நினது சரணாரவிந்தத்தில் அளிப்பாயா முக்தி'' என அவர் காஞ்சி வரதராஜனை வேண்டும் ஸ்தோத்திரங்கள் அவை. சமஸ்க்ரிதத்தில் அதே போல் 'ந்யாஸ தசகம் '' சரணாகதி யை அற்புதமாக விவரிக்கும் ஸ்லோகங்கள்.

தனது பாட்டு வேண்டுமானால் அதற்கு இவ்வளவு காசு என்று நிர்ணயித்து அதை பெற்று, தான் எழுதும் தகர டப்பா கவிதைகளை எங்கோ குளுகுளு என்று ஒரு ஐந்து நக்ஷத்ர குளிர் அறையில் குடித்துக்கொண்டே எழுதும் கவிஞர்களின் கவிதைகளையே படித்து பழக்கப்பட்ட நமக்கு கண்ணெதிரில் இருக்கும் விலையில்லா மாணிக்கங்கள் தெரிவதில்லை. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து தூசி தட்டி அளிப்பது எனது தணியாத தாகம். சைவ வைணவ பேதமற்ற முயற்சி. இது இனியும் தொடர ஸ்ரீ கிருஷ்ணன் அருளட்டும்.

ஆச்சார்யர்கள் தாம் உபதேசித்ததை, நல்லொழுக்கத்தை, பக்தியோடு வாழ்ந்து காட்டியவர்கள். தர்ம ஞாய சிந்தனையோடு எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். நடமாடும் தெய்வங்கள்.

பக்தியால் மோக்ஷம் பெற வழி காட்டியவர்கள். ஞானமும் பக்தியும் இரு கண்கள் என விளங்கியவர்கள். விளக்குபவர்கள். அவனருளால் அவன் தாள் பற்ற சொல்லிக்கொடுப்பவர்கள்.

யோகமார்க்கம் முக்தி அளிக்கும் என்பதை பதஞ்சலியின் யோக சூத்ரங்கள் அஷ்டாங்க யோகத்தை பற்றி விவரிப்பதையும் அறியலாம்.

योग: चित्त-वृत्ति निरोध: yogah citta-vṛtti-nirodhaḥ — பதஞ்சலி யோக சூத்ரம் 1.2

எண்ணம் அலை அலையாய் ஓயாமல் மனதை அலைக்கழிப்பதை முதலில் நிறுத்து. அது தான் யோகம் என்று உணர்த்தும் ஸ்லோகம். த்யானத்தில் மனது நிலைத்து விட்டால் அதன் ஓட்டம் நின்றுவிடும். வேறு எதுவுமே மனதில் இடம் பெறாது. யோகத்தை எட்டு அங்கங்களாக பிரித்திருக்கிறார்கள் யோகிகள். இந்த அஷ்ட அங்கங்களை அடையாளம் கட்டி பெயரும் வைத்திருக்கிறார்கள். பதஞ்சலி அவற்றை யமம், (நெருங்காமல் இருப்பது) நியமம் :(கடைப்பிடிப்பது) ஆசனம்: (உடல் தோற்றங்கள்) பிராணாயாமம்: ஸ்வாச கட்டுப்பாடு) ப்ரத்யாஹாரம் : (புலன்களை அடக்குவது) தாரணம்: (மனத்தை ஒருநிலைப்படுத்துவது), த்யானம் : (மனதை இறை சிந்தனையில் ஈடுபடுத்துவது ) கடைசியாக சமாதி: (தன்னை இழந்த ஆத்ம சங்கமம்). இதெல்லாம் நம்மால் முடியுமா என்றால் முடியாது என்று சொல்லமாட்டேன். முயன்றால் ஒருவேளை முடியலாம். பலருக்கு முடிந்திருக்கும்போது நமக்கு முடியாமல் போய்விடுமா?

சரணாகதி அடைய வழி என்ன? சில உபாயங்களை உபநிஷத்துகள் மஹான்கள் உபதேசங்கள் சொல்கிறதே !

நாராயண உபநிஷத் ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தை விடாமல் உச்சரி என்கிறது. '' AUM iti Atamanam yunjita (Narayana Upanishad 147.8)

கத்ய த்ரயம் எனும் தனது உபதேசத்தில் ஸ்ரீ ராமானுஜ ஆசார்யர் த்வய மந்திரம் சரியான வழி என்கிறார். 
Sriman Narayana charanau Saranam prapadye Srimathe Narayanaya Namah

''என்னப்பனே , ஸ்ரீமந் நாராயணா, உன் திருவடிகளே சரணம் என கெட்டியாக பிடித்துக்கொண்டு என்னை அர்ப்பணித்தேன். நான் இனி நானில்லை. தயையே உருவான தாய் ஸ்ரீ லட்சுமி தேவி சமேத ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளை சரணடைவதே எனது ஒரே லக்ஷியம்'' என்கிறார். வெங்கடேச பிரபத்தி இதை அற்புதமாக சொல்கிறது.

சரணாகதி லக்ஷணமாக ஐந்து அங்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அனுகூல்ய சங்கல்பம், பிரதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம்,கோப்த்ரிவ வாரணம், கார்ப்பண்யம் எனும் இவற்றை மற்றொரு சந்தர்ப்பத்தில் விவரமாக சொல்கிறேன். இவற்றோடு இணைந்தது தான் ''அங்கி'' எனப்படும் ஆத்மநிக்ஷேபம், சரணாகதி. வாயினால் வெறுமனே சரணாகதி அடைந்தேன் என்றால் போதாது. மேற்கண்ட குணங்களும் சேர்ந்திருக்கவேண்டும். அப்போது தான் நிறைவேறும். விபீஷண சரணாகதி படித்தவர்கள் அறிந்தவர்கள் இதை உணரலாம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த பின்னணியில் சுவாமி தேசிகனின் அடைக்கல பத்து படித்து அறிந்துகொள்ளும்போது ஆனந்தமாக அதை ரசித்து புரிந்து கொள்ள உதவும்.

விசிஷ்டாத்வைத தத்துவத்தில் முக்கியமான ஒரு அம்சம் சரணாகதி அடைவது. அதை பின்பற்றுவோர் அத்தியாவசியமாக செய்து கொள்வது பர நியாசம், பர சமர்ப்பணம், பிரபத்தி எனும் சரணாகதி. இவையோடு நமது கர்ம பலனெனும் கனிகளை ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம்.

காஞ்சிபுரத்தில் வராஜராஜன் ஹஸ்த கிரியில், (அத்தி கிரி எனும் குன்றின் மீது ) வீற்றிருந்து மோக்ஷ மளிப்பவராக அருள்பாலிக்கிறார் என்பார்கள். 
ஸ்ரீ சுவாமி தேசிகனின் அற்புதமான ''அடைக்கல பத்து'' இனி தொடர்வோம்:

''பத்தி முதலாம் மவதில், பதி எனக்கு கூடாமல்,
எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்,
முத்திதரு நகர் ஏழில் முக்கியமாம் கச்சி தனில்,
அத்திகிரி அருளாளற்கு, அடைக்கலம் நான் புகுந்தேனே ||1||

Patthi mudhalaam mavathil, pathi yenakku koodamal,
Yethisayum uzhandru odi ilaithu vizhum kakam pol,
Mukthi tharum nagar ezhil mukkiyamaam kachi thanil,
Athigiri arul aalarkku, adaikkalam naan pugundhene ||1||

நான் என்ன செய்வேன். என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே. பக்தி அவ்வளவு எளிது அல்ல. எங்கு சென்று அமைதியாக அமர்ந்தாலும், இடம் தான் அமைதியாக இருக்கிறதே தவிர மனம் அமைதியுறவில்லையே. எண்ணற்ற எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே. நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ வெவ்வேறு என்ன, எட்டு திசைகளிலுமே மாற்றி மாற்றி பறந்து களைப்புற்று,நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம். முத்தி தரும் சப்த க்ஷேத்திரங்களில் தலை சிறந்ததாக அத்திகிரி எனும் காஞ்சிபுர வாசனான ஸ்ரீ வரதராஜா , உன் திருவடிகளே சரணம் என்று முதல் பாசுரத்திலேயே அற்புதமாக பாடுகிறார் சுவாமி தேசிகன்.

கொஞ்சம் ஊன்றி உள்ளர்த்தம் தேடுபவர்களுக்கு ஒரு குறிப்பு கிடைக்கும். இந்திரன் மகன் காகாசுரன் சீதையை துன்புறுத்தியதால் ஸ்ரீ ராமன் அவனை நோக்கி எறிந்த ஒரு சிறு புல் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறி அவன் உயிர் குடிக்க, துரத்துகிறது. எங்கெங்கோ சுற்றி அலைந்த காகாசுரன் கடைசியில் ஸ்ரீ ராமன் பாதத்தையே கதி என அடைந்து மன்னிப்பு கேட்கிறான் என்பதை தான் சுவாமி தேசிகன் தன்னை சரணடைந்த காகம் என்று சொல்கிறார் என்று விளங்கும்.

சுவாமி தேசிகனை மேலும் வணங்கி கேட்போம்:

No automatic alt text available.

No comments:

Post a Comment