Thursday, May 31, 2018

How many lies I tell - Oh! Krishna!

Courtesy:Smt.Padma Gopal

(உனக்காக, எல்லாம் உனக்காக...)

என்னென்று சொல்வேனடா,
ஏதென்று சொல்வேனடா,
உன்னோடு ஓடி வர,
ஓராயிரம் பொய் சொல்கிறேனடா!

நீரைச் சாய்த்து விட்டு,
நீர் நேற்றே தீர்ந்ததென்கிறேன்;
சோறைச் சமைத்திடவே,
சுத்த தீர்த்தம் வேணுமென்கிறேன்!

யமுனைக்கு வந்திடவே,
நமுட்டு வேலையெல்லாம்−
நான் செய்கிறேன்!
யாரும் அறியா வண்ணம்−
யாதவா, உனக்காய் இது செய்கிறேன்!

ஏனடி தாமதமே என்றால்,
போன வழி பழுதென்கிறேன்;
வீணானது பாதி நீரும்,
வழியல் மாடு மறித்ததென்கிறேன்!

குங்குமம் கலைந்ததுமேன், உன்−
கைவளை உடைந்ததுமேன் என
குடைந்து வினவுகிறாள் அன்னை; ஒரு
குறுகுறுப்பாய் எனைப் பார்க்கிறாள்!

கரையின் பாசத்திலே, நான்
கவிழ்ந்து வீழ்ந்தேன் என்றேன்;
அது தான், காரணமோ,
ஐயோ, என் கண்ணே, அடி
ஏதுமில்லையே என்றாள்!

கண்ணிலே அடிபட்டு, நான்−
காதலில் வீழ்ந்ததையே
கன்னி, சொல்லாமல் மறைத்தேனடா!
கண்ணா, அது உனக்கும் தெரியுமோடா??




No comments:

Post a Comment