Wednesday, April 11, 2018

Manickavasagar and his miracles

Courtesy:Sri.J.K.SIVAN

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள் 6 - J.K. SIVAN

சிதம்பரத்தில் ஒரு விவாதம்

என் தந்தையே ஈசனே, என் மேல் இவ்வளவு நேசமா. அதற்கு நான் செய்த கைம்மாறு உனக்கு என்னால் முடிந்தவரை நான் அளித்த துயரமா. இந்த பாபத்தை எங்கே சென்று தொலைப்பேன் என் தெய்வமே? மனமுறுகிய மணிவாசகர் சிதம்பரம் நோக்கி நடந்தார். வழியெல்லாம் பல ஊர்கள். எங்கெல்லாம் சிவன் ஆலயம் உண்டோ அங்கெல்லாம் சென்று கண்ணார பெருமானை நேரில் காண துடித்தார். காணாமல் அங்கிருந்து நகரவில்லை. சிவன் மனமுவந்து காட்சி அளித்தார். மணிவாசகர் மனமகிழ்ந்து தரிசித்தார். பதிகங்கள் பாடினார்.

உத்தரகோசமங்கையில் மணிவாசகர் பரமேஸ்வரனை காணாமல் நெகிழ்ந்து கண்ணீர் உகுத்தார். ஒருவாறு சிதம்பரம் அடைந்தார். ஆஹா இங்கே தானே எண்ணற்ற சிவனடியார் நடந்து வந்து சபேசனைக் கண்ட இடம் என தரையில் அவ்வடியார்கள் திருவடி பட்ட மண்ணில் உருண்டார். முத்தமிட்டார். ஆலயத்தை ஒட்டிய நந்தவனத்தில் அமர்ந்தார். இங்கே தான் நமக்கு அவர் அளித்த மா பெரும் பரிசான திருவாசகம் உருவாகியது.

தில்லை வாழ் மக்கள் திருவாசகத்தை மணிவாசர் இயற்றி பாடியதைக்கேட்டு ஆனந்தித்தனர்.

பொன்னம்பலவா பல்லாண்டு வாழ்க என்று ஒரு ஈழத்து துறவி அடிக்கடி சொல்வார். அவர் சொல்வது ஈழ அரசனுக்கு புரியவில்லை. அவன் புத்த மதத்தினன் .துறவியை வரவழைத்தான். அரசன் முன்னே அமர்ந்த துறவி வழக்கம்போல் பொன்னம்பலவா பல்லாண்டு வாழ்க என்கிறார்.

''இதற்கென்ன அத்தம் என்று சொல்லுங்கள்?'' என வினவினான் அரசன்.

''அரசே, சோழநாட்டில் மிக புனிதமான இடம் பொற்சபை. அந்த ஊர் சிதம்பரம். அருவமான சிவன் நடராஜனாக, சபாபதியாக காலைத்தூக்கி நின்றாடுகிறான். உலகம் அவனது ஆனந்த நடனத்தில் உய்கிறது. உயிர்கள் வாழ்கிறது. மாயையிலிருந்து ஜீவனை ரக்ஷிப்பதே அந்த நடராஜனின் நடனம் தான். அங்கே சிவஞான கங்கை என்று புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடியதால் தான் மனுவின் மகன் ஹிரண்யவர்மன் தனது சரும தொழு நோய் நீங்கப் பெற்றான். இந்த புனித தடாகத்தில் நீராடி நடேசனை வழிபட்டோர் சகல பாபங்களும் நீங்கப் பெறுவார்கள். பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவார்கள்.'' என்கிறார் துறவி.

அருகிலே அரசனின் குரு, ஒரு புத்த பிக்ஷு இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் இடைமறித்து ''அரசே, இது பேத்தல். நமது புத்தரை அன்றி வேறு ஒரு பகவான் இருக்கமுடியுமா. இவர் ஏதோ கனவு கண்டு பேசுகிறார். நானே நேராக சிதம்பரம் செல்கிறேன். அங்கிருக்கும் சிவனடியார்களை, சைவ பண்டிதர்களை வாதத்தில் வென்று அவர்கள் எல்லோரையுமே பௌத்தர்களாக மாற்றிவிடுகிறேன். சிதம்பர ஆலயத்தை பௌத்த விஹாரமாக மாற்றிவிடுகிறேன்'' என்கிறார் வீராவேசமாக.

நேராக புத்த பிக்ஷு தில்லை செல்கிறார். ஈழநாட்டு அரசனும் உடன் செல்கிறான். அவனுக்கு ஒரு ஊமைப் பெண். அவளும் கூடவே போகிறாள். புத்த பிக்ஷு சைவர்களோடு வாதிட வருகிறார் என்னும் செயதி சோழ ராஜாவுக்கு சென்று அவன் சிதம்பரத்தில் சைவ பௌத்த மத விவாதம் நடைபெற ஏற்பாடு செயகிறான்.

முக்கியமான இந்த மத விவாதத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள் சைவ தீக்ஷிதர்களும் பண்டிதர்களும் கல்விமான்களும் நடராஜா எங்களுக்கு இந்த விவாதத்தில் பூரண வெற்றி கிட்டி புத்த சமயம் இங்கே பரவாமல் தடுக்க நீ அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

அவர்கள் தலைவன் கனவில் அன்று தில்லை சபேசன் தோன்றி ''கையில் வெண்ணை இருக்க நெய்க்கு என்ன பஞ்சம் . வாதவூரர் இருக்கிறாரே. அவரையல்லவா நீங்கள் அழைத்து பௌத்தர்களோடு விவாதம் செய்விக்க வேண்டும். ''என்கிறான் உடனே சிதம்பர தீட்சிதர்கள் பண்டிதர்கள் வாதவூரரை நேரில் கண்டு விஷயம் சொல்ல ''ஆஹா என் பரமேஸ்வரன் அவ்வாறு ஆணையிட்டால் அதை நான் சிரமேற்கொண்டு ஏற்று உடனே சிதம்பரம் வருகிறேனே ''என்று வந்துவிட்டார்.
மறுநாள் சூரியன் உதயமானான். விடியற்காலையிலேயே மணிவாசகர் நடராஜனை தரிசித்தார். விவாத மேடைக்கு வந்தார்.


மணிவாசகர் பற்றி சில வாசகங்கள் 7 J.K. SIVAN

பேசாமடந்தை பேசினாள்

சோழ மன்னன் ஏற்பாடு செய்த சிதம்பர ஆலய சபாமண்டபத்தில் எள் விழுந்தால் எண்ணை ஆகியிருக்கும். அவ்வளவு கூட்டம். மிகப்பிரபலமான கற்றறிந்த புத்த பிக்ஷு ஈழத்திலிருந்து வாதாட வந்திருக்கிறார். அவரை எதிர்த்து சைவ மதத்தைப் பற்றி எடுத்துச்சொல்ல வாதில் வெல்ல பாண்டியனின் மந்திரியாக இருந்த வாதவூரர். அவர் தோற்றால் இந்த சிதம்பரம் ஒரு புத்த விஹாரமாகப்போகிறது. நடராஜா, நீ எங்களுக்கு வேண்டுமே.

''என் நடராஜனை எதிர்த்து பேசும் இவர்கள் முகத்தைக்கூட நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு திரையை இடையில் போடுங்கள். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டாலே போதும்'' என்று கண்டிஷன் போட்டார் மணிவாசகர்.

பௌத்த பிக்ஷு எடுத்துரைத்தவற்றை நிராகரித்து சைவ ஆச்சார ஆகம நூல்கள் என்ன சொல்கிறது என்பதை புட்டு புட்டு வைத்தார் மணிவாசகர். அவரது சைவ கோட்பாடுகளின் மஹத்வத்தை, தத்துவத்தை, புத்த பிக்ஷுவால் எதிர்த்து தங்களது வாதத்தை நிரூபிக்க முடியவில்லை. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு தான் சமாளித்தார்கள். சபையோர் கவனம் முழுதும் முற்றிலுமாக மணிவாசகாரின் சொல் திறமை மிளிர்ந்தது.

மணிவாசகர் ''நடராஜா, ஈஸா, நீயே எனக்கு மேலும் சக்தியை, திறனைக்கொடு. வேரோடு இந்த வினையை அழிக்கவேண்டும். நடராஜனின் அருளால் வாக்தேவியான சரஸ்வதி பௌத்தர்களை பேசமுடியாமல் செய்டுவிடவே, தடுமாறினார்கள் . திக்குமுக்காடினார்கள். பிக்ஷு தங்களது தோல்வியைசபையோர்கள் முன்னே ஒப்புக்கொண்டார்.

சோழன் மணிவாசகரின் அருமை பெருமையை அறிந்துகொண்டான். விருந்தினனாக வந்த ஈழ அரசனும் மணிவாசகரின் அறிவாற்றலில் அடிமையானான் .

''ஐயா மணிவாசகரே , உங்கள் பக்தி, ஞானத்தால் எனது ஆசான், குருவான, புத்த பிக்ஷுவையும் அவருடன் வந்திருந்த பண்டிதர்களையும் வாதத்தில் வென்று ஊமையாக்கினீர்கள். எனக்கு ஒரு குறை. பேசியவர்களை பேசமுடியாமல் ஊமையாக்கினீர்களே. ஊமையாகவே பிறந்த என் மகளை பேசவைத்து அருள்வீர்களா? என்று கண்ணீர் மல்க ஈழ அரசன் கெஞ்சினான். அதற்கு பிரதியுபகாரமாக நானும், என் ஈழநாட்டு மக்கள் அனைவரும் சைவமதத்தை பின்பற்றி சிவனின் பக்தர்களாவோம்.'' என்றான் அந்த அரசன்.

''சிதம்பரேசா, சர்வேசா, இன்னுமொரு திருவிளையாடல் நிகழ்த்து. நாங்கள் கண்டு களிக்கிறோம். பேசாமடந்தையை பேசும் கிளியாக்கு'' என்று மணிவாசகர் நடராஜனை வேண்டினார்.

''ஈழமன்னா உன் பெண்ணை இங்கே அழைத்து வரச்சொல்''
அந்த பெண் நாணிக் கோணி அச்சத்தோடு தலைகுனிந்து மணிவாசகரை வணங்கி எதிரே அமர்ந்தது.
''பெண்ணே, நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்கிறாயா?''
''............'' ஊமைப் பெண் எப்படி பதில் சொல்லும். மிரள மிரள அவரைப் பார்த்து விழித்தது.
''என் கேள்விகளுக்கு அல்ல, உங்கள் ஆச்சார்யர், புத்தபிக்ஷு கேள்விகள் கேட்கட்டும் அதற்கே பதில் சொல் ''
புத்த பிக்ஷு தன்னைக் கேட்ட கேள்விகளை மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்டார் மணிவாசகர். மணிவாசகர் சொன்ன பதிலையே அந்த ஊமைப்பெண் கணீரென்ற குரலில் உரைத்தது. சபை ஆஹா ஓஹோ என்று கரக்கம்பமும் சிரக்கம்பமும் (கைதட்டி, தலை அசைத்து) வியந்தது. ஈழ அரசன் தனது ஊமைப்பெண் பேசியதில் ஆகாசத்தில் பறந்தான்.

ஒட்டு மொத்தமாக ஈழ அரசனும் அனைவரும் சைவ மதம் தழுவினார்கள். சைவ சித்தாந்தம், கோட்பாடுகளை மனமார ஏற்றுக் கொண்டார்கள். சிவ பக்தர்கள் ஆனார்கள். ஈழத்தில் தமிழும் சைவமும் காலூன்ற மணிவாசகரின் பங்கும் தில்லை நடராஜன் அருளும் அதிகம்.

நடராஜனுக்கு ஒரு ஆசை. அது என்ன?
தொடரும்



மணிவாசகர் பற்றி சிலவாசகங்கள் 
J.K. SIVAN

8. ''நீ சொல் நானே எழுதுகிறேன்''

''வாத வூரரே, நீங்கள் என் வார்த்தையை தட்டாமல் மீண்டும் எனக்கு அறிவுரை தந்து இந்த நாட்டை உங்கள் வழியில் ஆள்வதற்கு அருள் புரியவேண்டும் குருதேவா என்றான் பாண்டியன்''

''இல்லை மன்னா. என் வழியை பெருந்துறை ஈசன் தீர்மானித்துவிட்டபின் அவன் அடிமையான எனக்கு பல சிவஸ்தலங்களை சென்று தரிசித்து அவனைப் போற்றி வாயார மனமார பாடுவதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை' -- மணிவாசகர்.

திருச்சிற்றம்பலம் என்று சிதம்பரத்துக்கு ஒரு அருமையான பேர்.

நடராஜருக்கு மணிவாசகரின் பக்திச்சுவை கலந்த தேனான தமிழ் பிடிக்குமே. மணிவாசகனை அழைத்து தன்
முன் அவன் வாயால் பாட வைத்து ரசித்து கேட்டு அவனுக்கு முக்தி அளிக்கவேண்டும்'' என்று நடராஜனுக்கு தோன்றியது.

ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா?

வாசல் கதைவை யார் தட்டுகிறார்கள் என்று பார்த்த மணிவாசகர் முன் ஒரு வயதான பிராமணர். சிவ பக்தர் என்பது அவர் அணிந்த விபூதி பூச்சு, ருத்திராக்ஷம், உணர்த்தியது. மணிவாச

''வாருங்கள் உள்ளே. கைகால் அலம்பிக்கொண்டு அமர்ந்து மணிவாசகர் அளித்த தீர்த்தம் அருந்தி சுற்றுமுற்றும் பார்த்தார் பிராமணர்.

''ஐயா தாங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், நான் உங்களுக்கு எப்படி உதவட்டும்?'' என்றார் மணிவாசகர்

''நீங்கள் தானே வாதவூரர் என்பவர். பாண்டிய ராஜாவின் மந்திரி, சிவபக்தர்''

''ஆமாம். ஒருகாலத்தில். ''

''எனக்கு நீங்கள் பாடும் திருவாசகம் எனும் பாடல்கள் ரொம்ப பிடித்தது.யார் யாரோ அதைக்கேட்டவர்கள் மூலம் அறிந்ததும், நேரிலேயே உங்களை வந்து சந்தித்து உங்கள் வாயினால் அதை கேட்கவேண்டும் என்ற எண்ணம் இன்று தான் பூர்த்தியாயிற்று. நீங்கள் அதைப் பாட பட சொல்ல சொல்ல அதை எழுதி வைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவோடு வந்திருக்கிறேன்.இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுபட இதைவிட சிறந்த ஒரு பாராயண புத்தகம் இருக்கமுடியாதே''

அவர் ஒரு சாதாரண அந்தணர் இல்லை என்று மணிவாசகர் உணர்ந்தவர் ஓஹோ இதுவும் நடராஜனின் திருவிளையாடலோ என்று அதிசயித்தார்.

''சுவாமி. நான் திருவாசகம் பாடுகிறேன். நீங்கள் எழுதிக் கொள்ளுங்கள்''. 
பாடல்கள் கடல்மடையென வெளிவந்தது. ஓலைச்சுவடிகள் நிரம்பின. பிராமணர் அதி வேகமாக அவற்றை சுவடிகளில் பொறித்தார்.

''வாதவூரரே , திருச்சிற்றம்பலத்தான் மீது திருவெம்பாவை பாடிய நீங்கள் அவன் மீது ஒரு கோவையார் பாடுங்கள் அதுவும் வேண்டும். எல்லோருக்கும் பிடிக்கும்.''

''ஆஹா தங்கள் கட்டளை''.

மணிவாசர்கரின் செய்யுள்கள் ஓலை ஏறின.

ஓலைகளை சுருளாக்கி சுற்றி சிதம்பரேசன் ஆலயத்தில் சிற்சபையின் பஞ்சாக்ஷர படிகளில் வைக்கப்பட்டன. 
''பரமேஸ்வரா, என் மனம் கனிந்து, திறந்து, உன் மீது பாடியவைகளை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்'' என்று கண்மூடி வேண்டிய மணிவாசகர் கண் திறந்து பிராமணர் எங்கே என்று தேடினால் அங்கே யாருமில்லையே.

அவர் எங்கே போனார் என்று தேடினார் மணிவாசகர். எங்கும் தென்படவில்லை. யாரைக் கேட்டாலும் அப்படி ஒருவரைப் பார்க்கவே இல்லையே என்கிறார்கள்.
தில்லை அம்பல நடராஜனின் பூஜை செய்யும் தீட்சிதர்கள் ''யார் இங்கே ஏதோ ஓலைச்சுவடிகள் ' வைத்தது என்று பிரித்து பார்க்கிறார்கள்.

படித்தால் அற்புத திருவாசகம், திருக்கோவையார் பதிகங்கள். முடிவில் '' 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்'' என்று கையெழுத்திட்டு பெயர் பொறித்திருந்தது.

ஆலயத்தில் கூட்டம் சேர்ந்தது. அனைவரும் அதிசயித்தார்கள். என்ன நடந்தது இங்கே. அதன் பொருள் என்ன நீங்கள் தான் உரைக்க வேண்டும் என்று அவர்கள் மணிவாசகரை வேண்ட அவர் அமைதியாக எல்லோரையும் பார்த்தவாறு

''என் ஈசன் நடராசன் திட்டம். எல்லாம் அவன் செயல் அவன் அருள். அதன் அர்த்தமே இது தான் வாருங்கள் என்று அவர்களை திருச்சிற்றம்பல நடராஜன் சந்நிதி அழைத்துச் சென்ற வாதவூரார் ''பொருள் இதுவே'' என அவனைக் காட்டி தானும் அவன் திருவடிகளை அடைந்து மறைந்தார்.

முடிந்த போதெல்லாம், மெதுவாக மணிவாசகரின் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்ற தெய்வீக நூல்கள் என உணர்ந்து படியுங்கள். அர்த்தம் உணர்ந்து ஆனந்தியுங்கள். அடுத்தவர்களுக்கும் சொல்லுங்கள். 
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்"
(CONCLUDED)


No comments:

Post a Comment