ஆதித்ய ஹ்ருதயம் - ஒரு புதிய கண்ணோட்டம்
ஆதித்ய ஹ்ருதயம் ராமனுக்கு ராவணனை சீக்கிரம் வதம் செய்யும் பொருட்டுஅகஸ்தியரால் உபதேசிக்கப் பட்டது. சூர்ய வம்சத்தின் தோன்றலான ராமன் தன் குலத்தின் தேவதையான சூரியனை உபாசிப்பது என்பது முறையானதே. ஆனாலும் இங்கு அகஸ்தியர் சூரியனின் நாமங்களை சொல்வதைப் பார்த்தால் அது ஆதி புருஷனான் நாராயணனைக் குறித்து சொல்லப்படுவதாகத் தோன்றுகிறது.
ராவணனை வதம் செய்யத்தாமதம் ஆகவே சிந்தையில் ஆழ்ந்த ராமனுக்குத் தன் நிஜ ஸ்வரூபத்தை உணர்த்தவே சொன்னாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் சான்று உள்ளதா என்று பார்ப்போம்.
கீதையில் பகவான் ஆதித்யானாம் அஹம் விஷ்ணு: என்று கூறுகிறார். இந்த காலகட்டத்தில் எல்லா தேவர்களும் சூரியன் உள்பட (சூர்யன் மிதமான உஷ்ணத்தையே இலங்கையில் செலுத்துவானாம்) ராவணனுக்கு அடங்கினவராகவே இருந்தார்கள்.
ஆகவே ஸர்வ தேவாத்மகோ ஹி ஏஷ: , எல்லா தேவ்ர்களுக்கும் ஆத்மாவானவன் போன்ற பல சொற்கள் பரமாத்மாவைப் பற்றியதாகவே காண்கின்றன.. அது தவிர இந்த ஸ்தோத்திரத்தில் உள்ள பல நாமங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காணப்படுகின்றன.
இதற்கெல்லாம் மேலாக சாந்தோக்ய உபநிஷத்தில்,' ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே ஹிரண்யச்மச்ரு, ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வம் ஏவ ஸுவர்ண:,' இதன் பொருள், ஆதித்ய மண்டலத்தில் ஒரு பொன் மயமான புருஷன் காணப்படுகிறான். பொன் மயமான தாடி, பொன்மயமான கேசம் , நகநுனி வரை எல்லாம் தங்க மயம்.
மேலும் உபநிஷத் சொல்கிறது, 'தஸ்ய கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' மலர்ந்த தாமரைக் கண்கள் அது பிரம்மமே என்று கூறுகிறது.. நாராயணனே பரப்ரம்மம் என்பதை ஒட்டி ராமானுஜர் கப்யாஸம் என்ற சொல்லுக்கு கம் பிபதி இதி கபி: , நீரைக்குடிப்பவன் அதாவது சூரியன் ( சூரியனால் நீர் ஆவியாவதால்) கபினா, அந்த சூரியனால் ஆஸம் – மலர்ந்த, புண்டரீகம், தாமரை , ஏவம்- இப்படிப்பட்ட அக்ஷிணீ, கண்களுடையவன் என்று நாராயணனையே சூர்ய மண்டலத்தின் உள்ளே இருப்பவனாகக் காண்கிறார்.
அதனால் சூர்யனை குறிக்கும் சொற்கள் நாராயணனையே குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா. அதன்படி நான் கூறியிருக்கும் விளக்கம் சம்பிரதாயத்தை ஒட்டியே தவிர வேறானதல்ல என்று கூறி என் பதிவைத் தொடர்கிறேன்.
கூடுதலாக என்னைப் பொறுத்தவரை பொன் மயமான தாடி , கேசம், நகநுனியிலிருந்து எல்லாம் பொன் மயமான புருஷன் நரசிம்ஹனாகவே தோன்றுகிறான். நான் இந்த ஸ்லோகத்தை சொல்லும் போதெல்லாம் அவனையே த்யானிக்கிறேன்.
கீழ் கண்டவாறு உள்ள சூர்ய மண்டல த்யானஸ்லோகம் மேற்கூறியதை வலிவுறுத்துகிறது.
த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி
நாராயண: ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: I
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி
ஹாரீ ஹிரண்யவபு: த்ருத சங்க சக்ர: II
சூரிய மண்டலத்தில் உறைபவர்; தாமரை மலரில் எழுந்தருள்பவர்; கேயூரம், மகர குண்டலங்கள், கிரீடம், மாலை போன்றவை தரித்தவர்; பொன்னிறத் திருமேனி படைத்தவர்; சங்கு சக்கரங்களைத் தாங்கியவர். அந்த சூரிய நாராயணரை எப்போதும் தியானிப்போம்.)
இனி ஸ்தோத்ரத்தை நாளை பார்க்கலாம்.
ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ர்ஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதை: ச ஸமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:
தத: அந்த சமயம்
யுத்த பரிச்ராந்தம்- யுத்தத்தில் களைப்படைந்தவன் போல
ஸமரே சிந்தயா ஸ்திதம் –யுத்த பூமியில் சிந்தனை வசப்பட்டு
யுத்தாய ஸமுபஸ்திதம்-யுத்தத்திற்கு தயாராக வந்து நிற்கும்
ராவணம் ச –ராவணனையும்
அக்ரதோ த்ர்ஷ்ட்வா- எதிரில் பார்த்து நிற்கும்
ராமம் – ராமனை
ரணம் த்ரஷ்டும் – அந்த யுத்தத்தை பார்ப்பதற்கு
தைவதை: ச –தேவர்களுடன் கூட
ஸமாகம்ய – சேர்ந்து
அப்யாகத:- வந்த
அகஸ்த்யோ பகவான் ரிஷி:-அகஸ்த்திய மகரிஷி
உபாகம்ய – அடைந்து
அப்ரவீத்- கூறினார்
ராம ராம மஹாபாஹோ ஸ்ருணு குஹ்யம் ஸனாதனம்
யேன ஸர்வான் அரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி
ராமராம – ராமா
மஹாபாஹோ- சிறந்த வீரனே
யேன- எதனால்
ஸர்வான் அரீன் – எல்லா எதிரிகளையும்
ஸமரே- யுத்தத்தில்
விஜயிஷ்யஸி- வெற்றி கொள்வாயோ
குஹ்யம் – ரகசியமானதும்
ஸனாதனம் – தொன்மையானதும் ஆன அதை
ச்ருணு-கேள்
இந்த இடத்தில் ரகசியமானது தொன்மையானது என்ற சொற்கள் பரம்பொருளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள இடம் இருக்கிறது.' சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன்,'( தைத்திரீய உப. 2.1.1.) என்ற உபநிஷத் வாக்கியப்படி பரம்பொருள் இதயமாகிற குகைக்குள்ளும் பரந்த ஆகாயத்தின் பின்னும் இருக்கிறது என்று பொருள்.
நாராயணனாகிய பரம்பொருள் அந்தர்யாமியாகவும் சர்வவ்யாபியாகவும் இருக்கிறது என்பதுதான் இந்த வாக்கியத்தின் பொருள். அதனால் அதை விட ரஹஸ்யமானதோ தொன்மையானதோ வேறெதுவும் இருக்க முடியாது., அதனால் ராமனுக்கு அவன் நிஜ ஸ்வரூபத்தை உணர்த்தி மனக்குழப்பத்திலிருந்து விடுவிப்பதுதான் இங்கே முக்கிய நோக்கமாக இருக்க முடியும். ராமாயணத்தில் அங்கங்கே இது மாதிரி நினைவூட்டலைப் பார்க்கிறோம்.அடுத்த ஸ்லோகத்தின் வார்த்தைகள் இதை உறுதிப் படுத்துகின்றன.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ருவினாசனம்
ஜயாவஹம் ஜபேத் நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
ஆதித்யஹ்ருதயம் புண்யம் – இந்த ஆதித்த்ய ஹ்ருதயம் என்பது புண்ணியமானது
ஸர்வசத்ருவினாசனம் – எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது.
ஜயாவஹம்- வெற்றியைக் கொடுக்கக்கூடியது
அக்ஷய்யம் – அழிவில்லாதது
பரமம் சிவம் – மிகவும் புனிதமானது.
ஜபேத் நித்யம் – என்றும் ஜபிக்க வேண்டியது.
இதில் ஆதித்ய ஹ்ருதயம் என்பது சூரியனின் ஆத்மாவான உபநிஷத்தில் கூறியுள்ள பரமபுருஷனையே குறிப்பிடுவதாக எடுத்துக்கொண்டால் , புண்யம், சர்வ சத்ரு விநாசனம், ஜயாவஹம், அக்ஷய்யம், பரமம், சிவம் என்ற அடைமொழிகள் பொருந்துகின்றன. ஏனென்றால் சூரியனுக்கு ஆதியும் அந்தமும் உண்டு அல்லவா. பிரம்ம சிருஷ்டியினால் வந்தது சூரியன் மகாப்ரளயத்திற்குப் பிறகு மறுபடி சிருஷ்டி தொடங்கும் வரை சூரியன் உள்பட இந்த பிரபஞ்சமே இல்லை.
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாபப்ரணாசனம்
சிந்தாசோகப்ரசமனம் ஆயுர்வர்தனம் உத்தமம்
ஸர்வ மங்கள மாங்கல்யம்- எல்லா மங்களத்துக்கும்
ஸர்வ பாபப்ரணாசனம் இருப்பிடம்- எல்லாபாபங்களையும் போக்கும் வல்லமைகொண்டது
சிந்தாசோகப்ரசமனம் – கவலை சோகம் இவைகளை நீக்குவது
ஆயுர்வர்தனம்- ஆயுளை நீடிப்பது
உத்தமம்- மேலானது.
இதில் சர்வமங்ககள மாங்கல்யம் என்ற சொல் விஷ்ணு சஹஸ்ர நாம ஆரம்பத்தில் சொல்லப்படும் 'பவித்ரானாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் என்றதை ஒட்டி இருக்கிறது.
ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுரநமஸ்கிருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்
ரச்மிமந்தம் –கிரணங்களுடன் கூடியவனை
ஸமுத்யந்தம் – உதிக்கின்ற
தேவாஸுரநமஸ்கிருதம்- தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுகின்றவனை
விவஸ்வந்தம் – ஒளி பொருந்தியவனை( விவஸ் என்றால் கிரணம் அதனால் சூரியனுக்கு விவஸ்வான் என்று பெயர்,
பாஸ்கரம் – தேஜோமயமானவனை
புவனேஸ்வரம் – உலக நாயகனை
பூஜயஸ்வ- பூஜிப்பாயாக.
புவனேஸ்வரம் என்ற சொல் இறைவனைக் குறிப்பது. தேவாசுர நமஸ்க்ருதம் என்னும் அடைமொழியும் இதை வலியுறுத்துகிறது.
ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் என்பது பகவான் தேஜோமயமாக தேவர்களைக் காக்க எழுந்தருளுவதாகக் கொள்ளலாம்.' தமேவ பாந்தம் அனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா சர்வம் இதம் விபாதி,' என்ற உபநிஷத் வாக்கியப்படி, ஒளியை கொடுக்கும் தேவ வடிவங்கள் அவனுடைய் ஒளியினால் பிரகாசிக்கின்றன.
கீதையில்' ந தத் பாஸயதே சூர்யா: ந சசாங்கோ ந பாவக:,' என்று பரமபதத்தில் சூரியனோ சந்திரனோ அக்னியோ பிரகாசிப்பதில்லை என்று கூறுகிறான் கண்ணன் . அப்படி என்றால் பரமபதம் என்பது இருளாக உள்ளதா? இல்லை அங்கு பரமனின் பிரகாசத்தின் எதிரே எந்த பிரகாசமும் எடுபடாது என்று அர்த்தம்,
அதனால் தான் சஞ்சயன் விஸ்வரூபத்தை வர்ணிக்கையில் ஆயிரம் சூரியன் உதிப்பது போல் இருந்தது என்கிறான்.
அடுத்து சூரியனின் நாமங்கள் வருகின்றன. அவைகள் எவ்வாறு நாராயணனாகிய பரம்பொருளையே கூறுவதாக் அமைந்துள்ளன என்பதை காண்போம்.
ஆதித்ய ஹ்ருதயம் -2
ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ; தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
ஏஷ: - இவர்
ஸர்வதேவாத்மகோ-எல்லா தேவர்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் அல்லது ஸ்வரூபமாக இருப்பவர். அந்தராத்மாவான பரமாத்மா. விஸ்வரூப ததரிசனத்தில் எல்லாதேவர்களும் அவருக்குள் அடங்கியதாக காண்பித்தார்.
தேவ என்ற சொல் இந்த்ரியங்களையும் குறிக்கும் ஆதலால் இந்த்ரியங்களை இயக்குபவன், ஹ்ர்ஷீகேசன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
தேஜஸ்வீ- தேஜஸுடையவர். விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பகவானை மஹாதேஜா: என்று கூறுகிறது. எல்லாவிதமான தேஜஸுக்கும் காரணமாக உள்ளவர்.பின்னர் இந்த ஸ்தோத்திரத்திலேயே தேஜஸாம் அபி தேஜஸ்வீ என்ற நாமத்தைக் காண்கிறோம்.
ரச்மிபாவன:-கிரணங்களை எங்கும் பரப்புபவர். பகவானின் கருணை என்கிற கிரணங்கள் எங்கும் பரவுகின்றன.கிரணங்களால் எல்லாவற்றையும் பிரகாசப்படுத்துபவர் என்ற சொல் பரமாத்மாவிற்கு ப்ரபஞ்சத்தை தோற்றுவிப்பவர் என்ற பொருளில் பொருந்தும்.
ஏஷ –இவர்
தேவாஸுரகணான்-தேவர்கள் அசுரர்கள்
லோகான்- உலகத்தில் உள்ள மற்ற உயிர்கள்
பாதி – எல்லாவற்றையும் காக்கிறார்.
கபஸ்திபி:- அவருடைய கிரணங்களால்.
சூரியன் உயிர் வாழ்வதற்கு மிக அவசியம். ஆனால் அந்த சக்தி பரமாத்மாவிடம் இருந்து வருகிறது. கிரணங்கள் சூரியனுடைய கரங்கள் என்று கருதலாம் பகவானைப் பொருத்த மட்டில் அவருடைய கரங்கள் , 'சஹஸ்ரபாஹோ' என்று அர்ஜுனனால் விச்வரூபத்தின் போது அழைக்கப் பட்ட மாதிரி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து எல்லோரையும் காக்கிறது.
அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பரமனின் விபூதி யோகத்தை சொல்வதாகக் கொள்ளலாம்.
ஏஷ பிரம்ம ச விஷ்ணு; ச சிவ: ஸ்கந்த: பிரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம் பதி:
பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினோ மருதோ மனு:
வாயுர்வஹ்னி: பிரஜா பிராண; ருதுகர்தா பிரபாகர:
ஏஷ- இவரே
பிரம்மா ச விஷ்ணு: ச – பிரம்மா, விஷ்ணு
சிவா: ஸ்கந்த: பிரஜாபதி:-சிவன், ஸ்கந்தன், சிருஷ்டிகர்த்தா
மஹேந்த்ரோ – தேவேந்திரன், தனத: - குபேரன், கால: - காலம் , யம: - யமன், ஸோம: - சந்திரன், அபாம் பதி: - வருணன்
பிதர: -பித்ருக்கள் , வசவ: வசுக்கள் , ஸாத்யா: சாத்யர்கள் எனப்படும் தேவர்கள், அச்வின: - அஸ்வினி தேவர்கள், மருத: மருத் தேவர்கள், மனு: மனுக்கள் , வாயு: - வாயு, வஹ்னி: - அக்னி, பிரஜாப்ராண; - எல்லாஉயிர்களின் பிராணன், ருதுகர்தா , ருதுக்களை உண்டாக்குபவர், பிரபாகர: - ஒளி தருபவர்.
கீதையின் விபூதி யோகம் அத்தியாயத்தில் பகவான் எல்லாமே என்னுடைய வெளிப்பாடு என்று கூறுகிறார். ஏனென்றால் அவருடைய சக்தியே மேற் கூறிய எல்லாவற்றிற்கும் காரணம்.
ஆதித்ய ஹ்ருதயம் -3
ஆதித்யஸ்ஸவிதா சூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:
1.ஆதித்ய: - அதிதியின் புத்திரனாகையால் சூரியனுக்கு ஆதித்யன் என்று பெயர். இது அதிதியிடம் தோன்றிய வாமனரையும் குறிக்கும். தேவகி முந்தைய பிறவியில் அதிதியாக இருந்தாள் என்றதால் கிருஷ்ணரையும் குறிக்கும்'
மேலும், அகாரம் விஷ்ணுவைக் குறிக்கும் ஆதலால் ஆத் +இத்ய: =ஆதித்ய: என்றால் அகாரமான விஷ்ணுவிடம் இருந்து கிடைப்பது, அதாவது மோக்ஷம்.
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் ஆதித்ய: என்ற நாமம் காணப்படுகிறது. ஆ வர்ணாத் ப்ராப்ய: என்று அதற்குப பொருள் கூறுகிறார்கள். ஆ என்ற அசை (syllable) மூலம் அடையக்கூடியவன் , ஆ என்பது நாராயணனின் வ்யூஹரூபங்களுள் ஒன்றான சங்கர்ஷணனின் பீஜ மந்த்ரம்.
ஆதத்தே, ரஸான் புவ: ரச்மிபி: இதி ஆதித்ய: என்று பொருள் கொண்டால்,
ரஸான்- உயிர்ஸத்தை, புவ: உலகத்திற்கு, ரச்மிபி: தன் கிரணங்களால் ஆதத்தே –கொடுக்கிறான். அல்லது, பாஸம்- ஒளியை , ஜ்யோதிஷாம் – சூரியன் முதலிய ஒளி தரும் சிருஷ்டிகளுக்கு ஆதத்தே – கொடுக்கிறான்.
இது சஹஸ்ரநாம்த்தில் உள்ள ஆதித்ய: என்ற சொல்லுக்கு தரப்பட்ட விளக்கங்கள். இதன் மூலம் உயிர் மற்றும் ஒளி பெறக்காரணமாக உள்ள நாராயணன் என்கிற பரம்பொருள் சொல்ல்ப்பட்டதாக ஆகிறது.
2.ஸவிதா- ஸுவதி இதி ஸவிதா –இயக்கம் உள்ளவன்
( சூரியன்) அல்லது இயக்கத்திற்கு காரணமாக உள்ளவன். பரமாத்மா .ஸவிதா என்ற சொல் ஸஹ்ஸரநாமத்தில் இருக்கிறது. ( இயங்கும் எதிலும் இயக்கம் நானே ) இன்னொரு பொருள் சூதே சர்வம் இதி ஸவிதா . எல்லாவற்றையும் பிறப்பித்தவன். அதாவது உலகத்தை ஸ்ருஷ்டித்தவன்.
3.சூர்ய: - ஸரதி இதி சூர்ய: . சூரியன் எப்போதும் பயணித்துக்கொண்டே இருப்பது போல காணப்படுவதால் இது சூரியனின் பெயர்களில் ஒன்று.சஹஸ்ர நாமத்தில் உள்ள இந்த சொல் (வாயு:) ஸரதி அஸ்மாத் இதி சூர்ய: என்று பொருள் கூறப்படுகிறது. கீதையில் பவன: பவதாம் அஸ்மி, சலனம் உடையவற்றில் நான் வாயு என்று கூறுகிறார்.
சூதே சர்வம் எல்லாவற்றையும் தோற்றுவிக்கிறான் என்ற பொருளிலும் சூர்ய: என்ற சொல் விளக்கப்படுகிறது.
4.கக: - க(KHA) என்றால் ஆகாயம் , க( GA) என்றால் சஞ்சரித்தல். ஆகாயத்தில் சஞ்சரிப்பதனால் சூரியனின் பெயர்களுக்குள் ஒன்றாகும். பறவைக்கும் இந்தப் பெயர் உண்டு
.,
சஹஸ்ரநாமத்தில் ஸர்வக: என்று ஒரு நாமம் இருக்கிறது. அதாவது எங்கும் செல்பவன், சர்வவ்யாபி என்று பொருள். ஆகாயத்தை அளந்த திருவிக்ரமனுக்கும் கக: என்ற பெயர் பொருத்தமே.
க(KHA) க(GA) என்பது பறவையைக் குறிக்கும் சொல்லானபோதிலும் அது விசேஷமாக கருடனைக் கூறும் சொல்லாகவும் காணப்படுகிறது. கருடன் வேதாத்மா என்று கூறப்படுவதால் கருடனுக்கும் பகவானுக்கும் வேறுபாடில்லை
. தேசிகர் கருடபஞ்சாசத் என்ற ஸ்தோத்திரத்தில் கூறுகிறார்,
ஸ்வார்த்தாபிரூட: பஹி: அபஹி: அபிவ்யக்திம் அப்யேதி, வேதாத்மாவான் கருடன் தன் உள்ளும், வெளியிலும் நாராயணஸ்வரூபமாகவே இருக்கிறான்.
ககேன கச்சதி இதி கக:என்று பார்த்தால் ககன – கருடனை வாகனமாகக் கொண்டு கச்சதி செல்கிறார் என்பது நாராயணனையே குறிக்கும்.
5. பூஷா-புஷ்ணாதி இதி பூஷா. உயிர்களை போஷிப்பவன். சூரிய ஒளி வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்ற பொருளில் இது சூரியனைக்குறிக்கும் சொல். ஆனால் சூரிய ஒளியே இல்லாத , ஆறு மாதம் இரவு என்ற தேசங்களிலும் வாழ்க்கை நடக்கிறது அல்லவா? ஆதலால் எல்லா உயிர்களையும் போஷித்து ரட்சிக்கும் பகவானையே குறிப்பதாகக் கொள்ளலாம்.
6கபஸ்திமான் – கிரணங்களை உடையவன் . கிரணங்கள் சூரியனுடைய கரங்கள் என்று கருதலாம் பகவானைப் பொருத்த மட்டில் அவருடைய கரங்கள். எங்கும் வியாபித்து எல்லோரையும் காப்பவை.
7. ஸுவர்ண ஸத்ருச: - பொன்னைப்போன்றவர், ஆரம்பத்தில் கூறியபடி சூரியமண்டலத்தினுள் ஒரு பொன்மயமான புருஷன் காணப்படுகிறான் அவன்தான் பரமாத்மா என்ற உபனிஷத் வாக்கியத்தை நினைவு கூற வேண்டும்.
'சாந்தோக்ய உபநிஷத்- ,' ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே ஹிரண்யச்மச்ரு, ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வம் ஏவ ஸுவர்ண:,' இதன் பொருள், ஆதித்ய மண்டலத்தில் ஒரு பொன் மயமான புருஷன் காணப்படுகிறான். பொன் மயமான தாடி, பொன்மயமான கேசம் , நகநுனி வரை எல்லாம் தங்க மயம்.
8.பானு: -பாதி இதி பானு: - பிரகாசிப்பவன் என்று பொருள்.'தஸ்ய பாஸா ஸர்வம் இதம் விபாதி' என்ற உபநிஷத் வாக்கியத்தின்படி ஒளி தருபவை எல்லாமே பகவானின் ஒளியின் மூலம்தான்.பானு: என்ற பெயர் சஹ்ஸ்ரநாமத்திலும் காணலாம்.
9.ஹிரண்ய ரேதா –பொன் மயமான கிரணங்கள் உடையவன் என்று சூரியனுக்கு இந்த நாமம். ஹிரண்யம் என்பது பதம் பிரித்தால்,ஹிதம் ரமணீயம் வா,நன்மை தரக்கூடியதும் அழகானதும் என்று பொருள் வருகிறது. நாராயணனை விட நன்மை பயப்பவனும் அழகானவனும் யார் உளர்?
10. திவாகர: - பகலை உணடாக்குகிறவன் என்பதால் சூரியனுக்கு இந்தப்பெயர். உண்மையில் இருள் என்பது அக்ஞானம். பகவத் ஸ்மரணம் வருவதே காலை எனப்படும்.
கீதையில் தேஷாம் ஆதித்யவத் ஞானம் பிரகாசயதி தத்பரம், பகவத் ஸ்மரணம் வருபவர்க்கு சூரியனைப்போல் ஞானம் பிரகாசிக்கிறது என்கிறார். இறைவன் அருள் இருந்தாலே இது ஏற்படும்.
ஆகையால் இரவைப் போக்கி பகலை ஏற்படுத்துவது அவன் அருள். அதனால் திவாகர: என்பது அந்தப் பரம்பொருளையே குறிக்கும்.
No comments:
Post a Comment