Tuesday, January 16, 2018

Outside appearance -Periyavaa

"அழுக்கு உடையுடன் வந்த வேத பண்டிதர்கள்"

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" -பெரியவா

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம் பயணித்தபிறகு மாலை  நேரத்தில் ஓர் இடத்தில் தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம் போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது மகானைப் பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன்,குளிக்காத தோற்றத்தோடும்,படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களைப் போல் காட்சியளித்த அவர்களைப் பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானைப் பார்க்க வரும்போது குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு வரவேண்டாமோ?

மகானை வணங்கி எழுந்த அவர்களைக் கண்டவுடன் மகான் கேட்டார்.

"அத்யயனம் முடிந்தாகிவிட்டதா!?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

"ரிக்வேதம்....சொல்லுங்கள்!" என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல்  அவர்கள் வேதத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதைக் கேட்டு கொண்டு இருந்தவர்-பிறகு அவராக கையமர்த்திய பின்தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தைச் சொன்னார்கள் இளைஞர்கள்.

"அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?"

"நடந்துதான் வந்தோம்"

"திரும்பிப் போகும்போது?"

"நடந்துதான் போகவேண்டும்"

மகானைப் பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே, கடந்து வந்து இருக்கிறார்கள்.

உடம்பில் அழுக்கு ஏன் சேராது..?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து,உண்ண உணவு கொடுத்து அனுப்பினார்.

அவர்களைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகாபெரியவா.

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படித் தெரியும்?

டாக்டர் மெய்சிலிர்த்தார்

No comments:

Post a Comment