உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
-----------------------------------------------------------------
*திருவிசைப்பா.*
*ஒன்பதாவது திருமுறை.*
------------------------------------------------------------------
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு ஆகிய திருப்பதிகங்களைப் பாடிய பெருமானார்கள் வாழ்ந்த காலம், முதலாம் ஆதித்த சோழன் முதல், கங்கைகொண்ட சோழன் வரையான காலம் ஆகும்.
தோராயமாக, ஒன்பது முதல் பதினொன்றாம் நூற்றாண்டுகளுடவை.
திருவிசைப்பா பெற்ற திருத்தலங்களான, தில்லைச் சிற்றம்பலம்,
திருவீழிமிழலை,
திருவாவடுதுறை,
திருவிடைக்கழி,
திருக்களந்தை யாதித்தேச்சரம்,
திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம்,
திருமுகத்தை,
திரைலோக்கிய சுந்தரம்,
கங்கை கொண்ட சோழேச்சரம்,
திருப்பூவணம்,
திருச்சாட்டியக்குடி,
தஞ்சை இராசராசேச்சரம்,
திருவிடைமருதூர்,
திருவாரூர் ஆகியவையாகும்.
(திருவிசைப்பாவில் காணப்பெறுகின்ற மழலைச் சிலம்பு, நீறணி பவளக் குன்றம், மொழுப்பு, பேழ்கணித்தல் போன்ற கனிச் சொற்களை வாசிக்கும் போது கனியைவிட இனிக்கிறது.)
பன்னிரு திருமுறைகளில் இன்றும் முதன்மையான திருமுறைகளை மட்டும் வாசிக்கும் பேரர்கள் நிறைய.
ஆனால், கடல் கடந்த நாடான இந்தோனேசியாவில் தொல்குடியைச் சேர்ந்த செல்வர்களின் இல்லங்களில், திருமணத் தேதி முடிவானதும், திருமண நிகழ்வுக் காலம் முழுமைக்கும் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஓதப்பெறும் பழக்கம் இன்றும் உள்ளன.
நாமும் அனைத்து திருமுறைகளையும் வாசிப்போமாக!
திருமாளிகைத் தேவர் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர்.
ஆதிசைவ (சிவப்பிராமண) குலத்தில் தோன்றியவரென்பர்.
இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த மடத்தை *"மாளிகை மடம்"* என்பார்கள்.
இம்மடத்தின் பெயராலே இவர், திரு என்பதை அடைமொழியாகக் கொண்டு *திருமாளிகைத் தேவர்* எனப் பெயர் பெற்றார்.
இவர் துறவறம் பூண்டு, திருவாவடுதுறை சென்றார்.
இங்கிருந்து கொண்டு சில காலமாகமாக தவம் மேற்க் கொண்டார்.
இதன்பின்பு, இவர் திருவாவடுதுறை சிவாலயத்திற்கு அருகாக தென்புறத்தில் ஒரு மடாலயத்தை நிறுவினார். இறைவழிபாட்டில் கவனமெடுத்தார்.
அப்போது, அங்கு சிவயோகத்தில் தியாணத்திலிருந்த சித்தரான போகநாதரை அனுக, போகநாதர் இவருக்கு ஞானோபதேசம் அளித்தார்.
இவர் செய்த தவத்தின் பயனாக, அழகிய ஒளிபொருந்திய உடலை பெற்றிருந்தார்.
பல சித்திகளைச் செய்தார்.
சைவ சமயத்தை நன்கு வளர பெரும் முனைப்பெடுத்தார்.
தில்லைக்குச் சென்று கூத்தப்பெருமானை வழிபட்டு வரலானார்.
திருவிசைப்பா திருப்பதிகங்களை இறைவன் முன் பாடிவரலானார்.
இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
*🌸1🌸*
ஒன்பதாம் திருமுறை.
(ஒன்பதின்மார்கள் அருளி உள்ளடக்கிய திருமுறை.)
திருமாளிகைத் தேவர் அருளியது.
*கோயில்:* சிதம்பரம். (திருச்சிற்றம்பலம்) ஞானாகாசம். பொன்னம்பலம்.
*சுவாமி:* நடராசப் பெருமான்.
*தேவி:* சிவகாமியம்மை.
திருமூலட்டானம்.
*சுவாமி:* திருமூலநாதர்.
*தேவி:*உமையம்மை.
*தல விருட்சம்:* ஆல்.
*தீர்த்தம்:* சிவகங்கை, பரமானந்த கூபம்.
*ஒளிர்வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே!*
*உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!*
*தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!*
*சித்தத்துள் தித்திக்கும் தேனே!*
*அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!*
*அம்பலம் ஆடரங் காக*
*தெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்*
*தொண்டனேன் விளம்புமா விளம்பே!*
*தொண்டனேன் விளம்புமா விளம்பே!!*
*தொண்டனேன்..... விளம்புமா.............விளம்பே!.*
ஒளியே!
ஒளிமிகுந்த விளக்கே!
அழிவில்லா ஒப்பற்ற பொருளே!
சென்று பற்றும் சுட்டறிவும் ஆய்வும் கடந்து நின்று சிவஞானத்தால் அறியச் செய்யும் பேரறிவே!
ஒளி பொருந்திய பளிங்கின் தோற்றத்தை உடைய திரட்சியான மாணிக்க மலையே!
மெய்யன்பர்களது மனத்தின்கண் தித்திக்கும் தேனே!
அன்பு பெருகும் அடியாரது மனத்தின்கண் பேரானந்தத்தை விளைவிக்கும் கனியே!
தில்லையம்பலத்தையே நடனம் புரியும் சபையாகக் கொண்டு அங்குச் சிதாகாசத்தில் ஆடும் ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வீக நடனத்தை விரும்பிச் செய்யும் உன்னை,
அடியவனாகிய யான் புகுந்து உரைக்குமாறு நீ உரைத்து அருள்வாயாக!
திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம்..
திருச்சிற்றம்பலம்...
-------------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment