Friday, December 29, 2017

Thirumangalakudi Temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
__________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:183.*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*


🌼*பிராண நாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி*🌼
_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் முப்பத்து எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*
பிராண நாதேஸ்வரர்.

*இறைவி:* மங்களநாயகி, மங்களாம்பிகை.

*தல விருட்சம்:* இலவு (வெள்ளெருக்கு) கோங்குரா.

*தல தீர்த்தம்:* காவிரி.

*ஆகமம்:* காமீக ஆகமம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் - ஐந்தாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம். ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

*பெயர்க்காரணம்:* பஞ்ச மங்கள ஷேத்திரம் (மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கலக்குடி.)

*இருப்பிடம்:*
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் இரண்டு கி.மி. தொலைவில் திருமங்கலக்குடி தலம் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில்,
திருமங்கலக்குடி,
திருமங்கலக்குடி அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 612 102

*ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.00மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*"பஞ்ச மங்களத் தலம்"* என்று சிறப்பித்துப் போற்றப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம்.

ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை, இக்கோவில் விமானம் மங்கள விமானம்.

இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

*கோவில் அமைப்பு:*
கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளைத் தாங்கியபடி ராஜகோபுரம் காட்சியாய்த் தெரியவும், *சிவ சிவ ,சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோயிலுக்கு வெளியே இருந்த திருக்குளத்திற்குச் சென்று, தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு ஆலயத்துள் புக திரும்பி நடந்தோம்.

கோயில் வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும், முன்மண்டபத்தைக் காணப்பெற்றோம்.

இந்த மண்டபத்தில் நந்தியார் இருக்க, வணங்கிக் கொண்டு, ஈசனைத் தரிசிக்க செல்ல அனுமதியும் இவரிடம் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து பலிபீடமருகாக வந்து நின்று, நம்மிடம் ஆணவமலம் இல்லை. எனினும், பீடத்திடம் இனியேனும் ஆணவமலம் ஏற்படாதிருக்குமாறு பலியிட்டு வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

வெளிச்சுற்றில் செல்கையில், விநாயகர் சந்நிதியைக் காணவும், விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

உள்சுற்றில், பதினோறு சிவலிங்கத்திருமேனிகள் இருக்க, வரிசையாக பதினோரு சிவலிங்கத் திருமேனிகளையும் வணங்கி நகர்ந்தோம்.

மேலும், விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளுக்குச் சென்று ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கி நகர்ந்தோம்.

நடராஜ சபையைக் கண்டோம். சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

இரு நடராஜ மூர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த இரண்டு நடராஜ மூர்த்தங்களில், ஒரு நடராஜ மூர்த்திக்கு ஆனித் திருமஞ்சனம் திருநாளிலும், மற்றொரு நடராஜ மூர்த்திக்கு மார்கழித் திருவாதிரையிலும் (ஆருத்ரா) உலா வருவார்கள் என்று அங்கிருக்கும் குருக்கள் எங்களிடம் எடுத்துரைத்தார்.

ஆடவல்லான் நடராஜப் பெருமான், சிவகாமியம்மையுடன் இருக்கிறார்.

பிரதான நடராஜருக்கு அருகிலிருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் இருக்கிறது.

இந்த நூலகம் சுவாமியின் நடனத்திற்கு ஏற்ப இசைக்கருவியை இசைவித்த வண்ணம் இருக்கிறது.

இந்த நடராஜ சந்நிதியில் மரகத லிங்கம் ஒன்றும் இருக்கிறது.

அனைத்தையும் நன்கு ரசித்துணர்ந்து, பெரும் பேறாக்குக! என வணங்கி நகர்ந்தோம்.

இச்சபையைக் கடந்து, நேரே சென்றோம். மூலவர் சந்நிதி காணக் கிடைத்தது.

ஈசன் சன்னிதி வாயிலின் இருபுறத்தில் ஒரு புறம் மகாலட்சுமியும், மறுபுறத்தில் சரஸ்வதியும் இருந்தார்கள்.

இவர்கள் இருவரும் துவாரபாலகியர்கள் போல காட்சியளித்தார்கள்.

இவ்விருவருமே இருகால்களை சம்மணமிட்டு பத்மாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல, சிறந்த தரிசனத்தை தந்து கொண்டிருந்தார்கள்.

இதில் சரஸ்வதியிடம் வீணை இருக்கப் பெறவில்லை.

ஈசனை, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, தீபாரதனை வணங்கிக் கொள்ள நின்றிருந்தோம்.

மூலவர் நீண்டு உயர்ந்த பாணத்துடன் அருளிக்கொண்டிருந்தார்.

தீபாராதனையை ஒற்றி வணங்கிவிட்டு அர்ச்சகர் கொடுத்த வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

வெளிவந்தபோது, உற்சவ மூர்த்தங்களான சந்திரசேகர், மயில்வாகனர், நால்வர் பெருமக்கள், மற்றும் பிரதோஷ நாயகர்களைக் கண்டு வணங்கி நகர்ந்தோம்.

கோஷ்டத்தில் வலம் செய்கையில், தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு வணங்கிக் கைதொழுது கொண்டோம்.

மேலும் பிரகாரத்தை வலம் செய்கையில், சூரிய தீர்த்தமும் சந்திர தீர்த்தமும் இருந்தது.

இந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதான் ஈசனுக்கு அபிஷேகம் செய்விக்கிறார்கள்.

*தல சிறப்பு:*
இத்தலத்தின் இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்குகிறது. மாங்கல்ய பலம் நீடிக்கிறது. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டுகிறது என்பது பக்தர்களின் அனுபவ உண்மை.

கார்த்திகை மாத முதல் ஞாயிறுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் நிறைய உண்டாம். இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷடமச்சனி, ஏழரை ஆண்டுச்சனி, தசாபுக்தி தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும்.

மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

மங்காளம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீரக்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிகிறாள் என்று அவ்வூரிலுள்ளோர் கூறக் கேட்டோம்.

மேலும் இத்திருக்கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் இருந்தால் நிவர்த்தியாகிறதாம்.

சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

திருநாவுக்கரசர் தான் பாடிய இத்தலத்திற்கான பதிகத்தில் மூன்றாவது பாடலில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

*🔔மங்கலக்குடி ஈசனை மாகாளி வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும் நேர் சங்குசக்கரதாரி சதுர்முகன் அங்கு அகத்தியனும் அர்ச்சித்தார் அன்றே.*

🙏🏾மங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு, சக்கரதாரியாகிய திருமாலும், பிரமனும், அகத்தியனும் அர்ச்சித்தார்கள். 

*தல அருமை:*
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார்.

இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார்.

இறக்கும்போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள்.

ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது.

அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, *"பிராணனைக் கொடுத்த பிராண நாதா"*என்று போற்றி வழி பட்டார்.

அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகையென்றும் போற்றப்படுகின்றனர்.

அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர்.

அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி இன்றும் விளங்குகிறது.

*தல பெருமை:*
நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது.

நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

காலவ முனிவர் எனபவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார்.

நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.

முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழுநோய் தாக்காதிருக்க வரமும் அளித்தனர்.

நவகிரங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார்.

நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரகங்களுக்கு தொழுநோய் எற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டு விட்டார்.

பின்பு நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் *(இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று வழங்குகிறது)*

கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின் திங்களன்று காவிரியில் நீராடி பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டன.

நவக்கிரக கோவில்களுக்குத் தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து பிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி! இதையே வணங்க வருவோர் கடைபிடிக்க வேண்டும்.

இத்தலத்திற்கு அருகில் நவக்கிரக தலங்களில் சூரியன் தலமான சூரியனார்கோவிலும், சுக்கிரன் தலமான கஞ்சனூர் தலமும் உள்ளன.

*மேலும் ஒரு தல பெருமை:*
முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார்.

இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும்  சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார்.

ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார்.

வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார்.

ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார்.

(மன்னன், குதிரை வாங்க கொடுத்த பணத்தைக் கொண்டு மணிவாசகப் பெருமான், கோயில் கட்டியது போல......)

கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது.

அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று மன்னன் செவிகளுக்கு சேரவும், கோபம் கொண்டான்.

மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள்.

தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள்.

மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார்.

தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் *'பிராண நாதேஸ்வரர்'* என அழைக்கப்படுகிறார்.

அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி *'மங்கள நாயகி'* ஆனாள்.

*அப்பர் தேவாரம்:*
1.🔔தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.

🙏🏾மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன் , தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன் .

2.🔔காவி ரியின் வடகரைத் காண்தகு 
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித் 
தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத் 
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.

🙏🏾காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் , திருமாலாகிய தேவும் , பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன் .

3.🔔மங்க லக்குடி யீசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே.

🙏🏾மங்கலக்குடி இறைவனை மாகாளியும் , சூரியனும் , விண்ணும் மண்ணும் நிகராய சங்கு , சக்கரதாரியாகிய திருமாலும் , பிரமனும் , அகத்தியனும் அருச்சித்தார்கள் .

4.🔔மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே.

🙏🏾நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய ( பெருவீரனாகிய ) பெருமான் , ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு , பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான் .

5.🔔செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே.

🙏🏾செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில் , அருட் செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும் .

6.🔔மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரு முரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.

🙏🏾நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும் , சொல்லும் வல்லமை உடையாரும் , நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர் .

7.🔔மாத ரார்மரு வும்மங் கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

🙏🏾பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன் , தேவர்கள் தலைவன் ; வேதநாயகன் ; வேதியர்நாயகன் ; பூதநாயகன் ; புண்ணியமூர்த்தி ஆவன் .

8.🔔வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

🙏🏾வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான் , மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன் .

9.🔔கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேச மேது மிலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே.

🙏🏾மங்கலக்குடி இறைவன் , தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும் , குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , அன்பு சிறிதும் இல்லாதவர்களும் , கீழானவர்களும் , குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க , உய்ந்தேன் .

10.🔔மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே.

🙏🏾மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும் , தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான் .

          திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
பங்குனி மாதத்தில் ருத்ர பாதம் தீர்த்தம் கொடுத்தல்.

பங்குனி உத்திரம் பத்து நாட்கள் பிரமோற்சவம்.

ஏழாம் நாள் இரவில் திருக்கல்யாணம். அன்று மாலை ஆறு மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு.

சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவமும், ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது.

இரவு ஒன்பது மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், இதன் பின் திருமண விருந்தும் சிறப்பாக நடைபெறுகிறது.

*தொடர்புக்கு:*
டி.எஸ்.ஜெகதீச குருக்கள்.
0435- 2470480

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *செஞ்சடையப்பர் திருக்கோயில், திருப்பனந்தாள்.*

____________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment