மகாபெரியவா அனுபவங்கள்-- கவிஞர் சுப்பு ஆறுமுகம்
=======================================
ஒரு முறை மஹா பெரியவாளை தரிசித்தபோது, ஏண்டா! நீ சுருட்டப்பள்ளிக்கு போயிருக்கியோ?" என்று கேட்டார். போனதில்லையென்று நான் பதில் சொன்னாலும், அப்படி ஒரு ஊர் இருக்கிறது என்பது கூட எனக்கு அதுவரை தெரியாது என்பதுதான் நிஜம்.
ஆனால், அன்றைக்கு தரிசனம் முடிந் ததும், சென்னைக்குப் புறப்படாமல், சுருட்டப்பள்ளி என்ற ஊர் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு, மடத்திலிருந்து நேரே அங்கே புறப்பட்டுவிட்டேன். தமிழக ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. அங்கே உள்ள சிவன் கோவில் ரொம்பவும் விசேஷம். 'பள்ளி கொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே சுருட்டப்பள்ளியில் படுத்த கோலத்தில் சிவன் இருப்பதும், அந்த சிவன் பார்வதி மடியில், தலை வைத்து ஆனந்தப் புன்னகையுடன் படுத்திருப்பதும் ரொம்ப விசேஷம். (சிவதாண்டவம் ஆடிய சிவபெருமானின் கோபம் தணிந்து, அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதாக ஸ்தல புராணம் சொல்கிறது).
சுருட்டப்பள்ளிக்குச் சென்று, பள்ளிகொண்ட சிவபெருமானைத் தரிசித்தபோது, அருணாசலக் கவிராயர் எழுதிய ஏன் பள்ளி கொண்டீரையா?" பாடல் என் நினைவுக்கு வந்தது. அப்போது என் மனதில் தோன்றிய சிந்தனைகளை ஒரு ஆசுகவியாகப் பாடினேன்.
ஏன் பள்ளி கொண்டீ ரையா? நமசிவாய
ஏன் பள்ளி கொண்டீரையா
சென்னை-திருப்பதியின்
பாதை நடுவினிலே
அன்னை சிவகாமியின் அழகு
மடியினிலே
(ஏன்)
என்று ஆரம்பித்து, சிவபெருமான், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்க என்ன காரணம் இருக்கும்? என்று எனக்குக் கற்பனையில் தோன்றிய காரணங்களை அடுத்தடுத்த வரிகளில் சொன்னேன்.
திருவிளையாடல் நடத்தியதால் ஏற்பட்ட களைப்போ? தில்லையில் நடனம் ஆடியதால் ஏற்பட்ட களைப்போ? முப்புறமும் எரித்ததால் ஏற்பட்ட களைப்போ? அடியவர்களைத் தேடி அருளியதால் ஏற்பட்ட களைப்போ? என்று பலவிதமான காரணங்களை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்து, கடைசியாக, ஞானவல்லியின் மலர்ந்த முகம் காண விரும்பி, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருக்கிறீரோ! என்று பாடலை முடித்தேன். அதாவது அம்பாள் தரிசனத்துக்கு அரனே பிரியப்பட்டார் என்பது இதன் கருத்து.
சுருட்டப்பள்ளியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மறுபடியும் நேரே காஞ்சிபுரம் வந்து சேர்ந்தேன். மஹா பெரியவாளிடம் சுருட்டப்பள்ளிக்குப் போய் பள்ளிகொண்ட பெருமானைத் தரிசித்ததை மகிழ்ச்சியோடு சொன்னேன். அங்கே எழுதிய பாடலையும் பாடிக் காட்டினேன். தன் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்து, பிரசாதம் அருளினார்.
மஹா பெரியவாள் பிடி அரிசி திட்டம் பற்றி சொன்னபோது, அது ஆன்மிகப் பெருமக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான குடும்பங்கள், தினமும் பிடி அரிசியை எடுத்து, தனியே வைத்து. அந்த மகத்தான கைங்கர்யத்தில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டன. அதனால் பல ஏழை மக்கள் பயன் பெற்றனர். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். கவிஞர் கண்ணதாசன், மஹா பெரியவாளைச் சந்தித்தது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டேன் அல்லவா?. அப்போது, மஹா பெரியவாளுடனான உரையாடலில், கண்ணதாசன் இந்தப் பிடி அரிசி திட்டம் பற்றியும் கேட்டார். அப்போது, மஹா பெரியவாள் ஒரு பிடி அரிசியை வைத்துக்கொண்டிருப்பது போல பாவனை செய்து, ஒரு பிடின்னா, ஒரு பிடி அளவு இல்லே; அந்தக் கையினுடைய அமைப்பை நன்னா பாரு. ஹிருதயம் மாதிரி இருக்கோல்லியோ! அதைத் தான் அங்கே கவனிக்கணும். நாம குடுக்கறது ஒரு பிடியா இருந்தாலும், ஹிருதயபூர்வமா அந்த தானத்தை செய்யணும்" என்று சொன்னார். பிடி அரிசி திட்டத்துக்குப் பின்னால் இப்படி ஒரு அழுத்தமான அம்சம் இருப்பது அனைவருக்கும் புரிந்தது.
இன்றைக்கு உலகமெங்கும் மஹா பெரியவாளுக்கு ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் செய்துகொள்கிற தாழ்மையான விண்ணப்பம் ஒன்று உண்டு. வீட்டில் அவருடைய படத்தை வைத்துக் கொண்டு பக்தியைக் காட்டினால் மட்டும் போதாது. அந்த மஹான் சொன்ன கருத்துக்களில் ஒரு சிலவற்றையாவது நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்; அந்த தெய்வத்தின் அருளுக்கு நம்மைப் பாத்திரர்களாக்கிக் கொள்வோம்.
நன்றி: எஸ்.சந்திரமௌலி.Shared by Shankar Natrajan Ji
No comments:
Post a Comment