Sunday, December 31, 2017

Kooshmanda homam

கூஷ்மாண்ட ஹோமம் - ஏன்? எதற்கு? எப்படி?

இது ஒரு சிரேஷ்டமான வைதிக கர்மா. மேன்மேலும் துக்கங்களை அளிக்கும் பாபங்கள் இந்த ஹோமத்தினால் விலகுகின்றன. 

கூஷ்மாண்ட ஹோம விவரங்கள் யஜுர் வேதத்தில் பொக்கிஷமாக அமைந்துள்ளது. தைத்தீரிய ஆரண்யக பாகத்தில், 2வது ப்ரஸ்னத்தில் கூஷ்மாண்ட விதிமுறைகள் உள்ளன.

பல பாபங்கள் தொலைய வேண்டி பல மந்த்ரங்கள் இந்த ஹோமத்தில் காணக் கிடைக்கின்றன. என்னவெல்லாம் பாபங்கள் போகும் என நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவை இதோ:

* தெய்வத்திற்கு கோபம் வரக்கூடிய தப்புக்கள்
* பிழைப்புக்காக (குடும்பம் நடத்துவதற்காக) வாக்கினால் சொல்லிய பொய்கள்.
* தாயின் கர்பத்தில் நாம் வாசம் செய்த சமயத்தில் நம்மை அறியாமலேயே நாம் தாய்க்கு ஏற்படுத்திய இன்னல்களுக்கும், இந்த ஹோமத்தில் ப்ராயஸ்சித்தம் கிடைக்கின்றது.
* பல ரோகங்களை அளிக்கும் பாபங்கள்.
* கெட்ட நடை முதலிய செயல்களால் ஏற்பட்ட பாபங்கள்.
* அலக்ஷ்மி (ஏழ்மை) ஏற்படுவதற்காக உள்ள பாபங்கள்

இப்படி ஏகப்பட்ட பாபங்கள் விலக வேண்டுமென இந்த ஹோமத்தில் வேத மந்திரங்கள் மூலம் வேண்டப்படுகின்றது.

ஒருவன் கடன் வாங்கிக் கொண்டு கொடுக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்பட்டால், இந்த ஜன்மத்திலேயே நிறைய பொருள்களை அடைந்து அந்த கடனை கொடுக்கும்படியான நிலைமை அவனுக்கு ஏற்படுவதற்கு இந்த ஹோமம் வகை செய்யும்.

கடல் கடந்து சென்ற வந்தவர்களும், அந்த தோஷம் நீங்க, சுத்தியாக இப்போது கூஷ்மாண்டத்தை அனுஷ்டித்து வருகிறார்கள். இதுவும் ஏற்புடையதே.

எப்படி செய்வது?
பலன்களை அதிகம் தரவல்ல ஹோமமாக இருந்தாலும் இதைச் செய்வது மிகவும் சுலபம். அதிக எண்ணிக்கையில் ருத்விக்குகளோ, அதிக பணமோ இல்லாமலும் செய்யலாம். குறைந்தபட்சமாக ஆசார்யனைத் தவிர, ஓரிருவர் இருந்தால் போதும். ஹோம த்ரவ்யங்களின் பட்டியலும் மிக நீளமாக இல்லாமலிருக்கலாம். (வசதியுள்ளவர்கள் விஸ்தாரமாகச் செய்ய வேண்டும். தானங்கள் உண்டு. அவை அவரவர்களின் சக்தியைப் பொறுத்தது).

கவனிக்க வேண்டிய விஷயம் மேலும் ஒன்று. கூஷ்மாண்ட ஹோமத்தில் பிரதான ஆஹுதிகளை தவிர, ஹோம அங்கமாக பல கிரியைகள் அம்சங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக (1) தீக்ஷ£ நியமம், (2) முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் காயத்ரி ஜபம், (3) ப்ராத ஸ்நானம், (4) நாந்தீ சிராத்தம் ஆகியவைகளில் சிரத்தை அதிகம் காண்பித்தல் அவசியம். (குறிப்பு: வருஷா வருஷம் செய்யும் ச்ராத்தத்திற்கு முன்பு கூஷ்மாண்டம் செய்வதாக இருந்தால் நாந்தீ சிராத்தம் தேவையில்லை).

மற்றுமொரு விசேஷம்
பொதுவாக எல்லா ஹோமங்களிலும் ஸங்கல்பம் ஆனதும் வாத்யார் கர்த்தாவிடமிருந்து "ஆசார்ய வர்ணம்" (Power of Attorney), பெற்றுக் கொண்டு வந்திருக்கும் மற்ற சாஸ்திரிகளின் உதவியோடு கர்த்தாவின் சார்பில் அவரே ஹோமங்களை நடத்தித் தருவார். நாம் இதை அறிந்திருப்போம். ஆனால் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தில் வாத்யார் சொல்ல சொல்ல கர்த்தாவே நேரிடையாக ஒளபாஸன அக்னியில் தானே செய்ய வேண்டும்.

மொத்தத்தில் இது ஒரு சிரேஷ்டமான வைதிக கர்மா. மேன்மேலும் துக்கங்களை அளிக்கும் பாபங்கள் இந்த கூஷ்மாண்ட ஹோமத்தினால் விலகுகின்றன. சகல மங்களங்களும் உண்டாகும். மன சாந்தி உறுதி.

குறிப்பு:
"வேதமும் பண்பாடும்" புஸ்தகத்தில் இந்த ஹோமத்தை பற்றி விவரங்களை காணலாம். மேலும் நமது ஆச்சார அனுஷ்டான விஷயங்கள், வேதம் ஆகிய தலைப்புகள் நிறைய இடம் பெற்றுள்ளன.

- சர்மா சாஸ்திரிகள்

No comments:

Post a Comment