Thursday, December 7, 2017

Complaining about wife - Periyavaa

ஸ்ரீ மஹா பெரியவாவின் சரித்ரம்" Part 165 - HAPPY FRIDAY MORNING OCTOBER 6, 2017.
பெரியவாளிடம் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றார் ஒரு நடுத்தர வயது பக்தர் !
"பெரியவாகிட்ட ஒண்ணு சொல்லணும்…"
"சொல்லு….."

இவர் என்ன சொல்லப் போகிறார் என்பது பெரியவாளுக்கு தெரியாதா என்ன? ஆனாலும், அவரையே சொல்ல விட்டு, அதன் மூலம் நம் அத்தனை பேருக்கும் உபதேஸிக்கத்தான்…இந்த acting….!

தன் மனைவியைப் பற்றிய complaint லிஸ்டை ஒப்பித்தார் அந்த பக்தர்.
" என் பொண்டாட்டிக்கு எப்போப்பாத்தாலும் ஒடம்புல அது ஸெரியில்ல, இது ஸெரியில்ல… ஸதா….தலைவலி, தலைவலின்னு சொல்லிண்டு நேரங்காலம் இல்லாம படுத்துண்டே இருக்கா… ஸமையல் கூட ஸெரியா பண்ணறதில்ல… கொழந்தேளைக் கூட ஸெரியா பாத்துக்கறதில்ல …."
அடுக்கிக்கொண்டே போனார்.
" சொல்லி முடிச்சியா? கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ!" என்பது போல், பெரியவா அவரைப் பார்த்தார்.
இதோ! நம் அத்தனை பேருக்குமான திருவாக்கு….
"இப்போ எங்கிட்ட ஓம்பொண்டாட்டியப் பத்தி சொன்ன complaint-டை, ஒன்னோட ஸ்நேஹிதாள் கிட்ட சொல்லிப் பாரு! ….. 'ஒடனே ஒன் ஸம்ஸாரத்தை டைவர்ஸ் பண்ணு"..ன்னு உபதேஸம் பண்ணுவா.!
அதையே, ஒன்னோட பந்துக்கள்கிட்ட சொன்னா…… "அவ கெடக்கா கழிஶடை! பொறந்தாத்துக்கு அனுப்பிச்சுட்டு, வேற நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோ! பாவம், ஒனக்கு அவளால, ஒரு ஸந்தோஷமும் இல்ல"..ன்னு சொல்லுவா!
ஜோஸ்யர்கிட்ட கேட்டியானா, "ராஹு தெஸை, கேது தெஸை…பரிஹாரம் பண்ணு"..ம்பார் !
டாக்டர்-ட்ட போனா, எக்ஸ்-ரே, blood test, ECG, EEG டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நெறைய மருந்து மாத்ரை எழுதிக் குடுப்பார்! அப்டியே ஒன்னோட பர்ஸையும் காலி பண்ணிடுவார்!"
ஸொந்தக்காரப் பாட்டியை கேளு! "ஒனக்கு த்ருஷ்டி தோஷம்… செய்வினை…ஆபீசாரம் இருக்கு.. மந்த்ரவாதிகிட்ட போயி மந்திரிச்சுக்கோ"..ம்பா!…..
…..ஸெரி! எங்கிட்ட வந்தே! வந்ததுதான் வந்தே…." பெரியவா… என் ஸம்ஸாரத்துக்கு ஒடம்பு குணமாகணும்"ன்னு என்னை கேக்கலை… அவளுக்கு ஒடம்பு ஸெரியில்ல… அதுனால அடிச்சு வெரட்ட தயாராய்ட்டேன்"..ன்னு information சொல்ல வந்திருக்க! அப்டித்தான?.."
குரலில் கடுமை இல்லாவிட்டாலும், பெரியவா சொன்ன "ஸத்யம்", எக்ஸ்-ரே மாதிரி, மனஸில் ஓடும் எண்ணங்களை அப்படியே பட்டவர்த்தனமாக கண்ணாடி போல் காட்டியதால், பக்தருடைய உள்ளத்துக்கு, அது மிகவும் கடுமையாக இருந்தது.
பக்தர் மென்று விழுங்கினார்.
"அப்படில்லாம் இல்ல… பெரியவா" என்று ஒப்புக்கு சொன்னால், அந்த ஸத்யப் பொருளின் முன்னால் தன்னுடைய 'பொய்' அப்படியே பஸ்மம் ஆகிவிடாதா?
*"இதோ பாரு! ஸம்ஸாரம்…ங்கறவ வாழ்க்கைத் துணை! அவளுக்கு ஒடம்புக்கு வந்துட்டா… அவளை கவனிக்கறது ஒன்னோட கடமை! இத்தனை வர்ஷமா, ஒனக்கு சோறு வடிச்சுப் போட்டிருக்காளே! ஒன்னோட ஸுக துக்கங்கள்ள பங்கு எடுத்துண்டிருக்காளே! அவளும் ஒரு ஜீவன்தானே? ஒனக்கு கொஞ்சங்கூட பஸ்சாதாபமே இல்லியே!…எத்தன கல் நெஞ்சு ஒனக்கு!* நீ இனிமே தர்ஶனத்துக்கு வர வேணாம்….."
பக்தர் தலையை குனிந்து கொண்டார். பெரியவாளின் வார்த்தைகள் அவருக்குள் ஏதோ ரஸவாதம் நிகழ்த்தியது.
"என்னை மன்னிச்சுக்கணும் பெரியவா… எனக்கு இவ்வளவு கடுமையான தண்டனை குடுக்காதீங்கோ! என் பொண்டாட்டியை நல்லபடியா கவனிச்சுக்கறேன்… தர்ஸனத்துக்கு தடை போடாதீங்கோ!.."
அழுதார்.
உடனே பனியாய் குளிர்ந்தார் பெரியவா.
"ஒன்னோட ஸம்ஸாரத்தை, கோட்டக்கல் ஆயுர்வேத வைத்யர்கிட்ட அழைச்சுண்டு போயி ட்ரீட்மென்ட் குடு! chronic head ache-ங்கறதால, ரெண்டு மூணு மாஸம், வைத்யம் பண்ண வேண்டியிருக்கும்… *க்ஷேமமா இருங்கோ!.."*
ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.
இது புருஷன், பெண்டாட்டிக்கு மட்டும் இல்லை! மனிதர்களாக பிறந்த நாம், மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், உதவி தேவைப்படும் மற்ற ஜீவன்களுக்கும் நம் அன்பை, பாதுகாப்பை அளித்தால், அது கூட நாம் பெரியவாளுக்குச் செய்யும் ஆராதனைதான்!

No comments:

Post a Comment