நம்மில் எத்தனை பேர் "செருப்பு தைப்பவர்கள்?"...
அஷ்டவக்ரர் பிறக்கும் போதே, உடலில் எட்டு கோணல்களுடன் பிறந்தார்! வளரும்போதும், வளர்ந்த பின்னரும் கூட, அவர் உடல் முழுக்க கோணலுடன், காலை தேய்த்து, இழுத்து செல்லும் பரிதாபத்தை பார்த்து முகம் கோணாதவரோ, மீறி சிரிக்காதவரோ இல்லை!!!
ஆனால், அத்தனைக்கத்தனை பண்டிதர் அவர்! தெரியாத நூல்கள் இல்லை, புரியாத விஷயம் இல்லை! அத்தனை அறிவாளி, ஞானமே உருவானவர்!
ஒருமுறை ஜனகர் ஒரு பெரிய அறிஞர்களுக்கான பாண்டித்திய போட்டியை அறிவித்தார்! பரிசு தங்கநகைகள் போடப்பட்ட 1000 பசுக்கள்!
போட்டிக்கு வந்த யஜனவால்க்யர் என்னும் பண்டிதரோ, ஐந்து வருடம் போட்டியில் தான் வெற்றி பெற்ற இறுமாப்பில், போட்டி ஆரம்பிக்கும் முன்னரே, "இந்த மாடுகளை என் இருப்பிடம் கூட்டிச்செல்லலாம்!" என்று உத்தரவிட்டார்! ஜனகரால் கூட ஒன்று சொல்ல இயலவில்லை!
போட்டி இறுதி கட்டத்தை எட்டியது! யஜனவால்க்யர் வெற்றி பெரும் நிலை!
அப்போது, அஷ்டவக்ரர் உள்ளே நுழைந்தார்!
சபையில் சலசலப்பு! அஷ்டவக்ரர் சொன்னார், "மன்னா! நான் யஜனவால்க்யருடன் போட்டி போட வந்துள்ளேன்!"...
உடனே சபையினர் எல்லோரும் விழுந்து, விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்! "என்ன, இந்த அஷ்ட கோணலான வேடிக்கையான ஒருவன் எங்கிருந்தோ வந்து, யாராலும் வெல்ல இயலாத யஜனவால்க்யரை போட்டிக்கு அழைப்பதா?!".
சிரித்தனர், சிரித்தனர், அடக்க முடியாது சிரித்தனர். யஜனவால்க்யரும் சிரித்தார்.. எல்லோரும் சிரிப்பதை பார்த்த மன்னனும் சிரித்தான்...!
அப்போது அஷ்டவக்ரர் சொன்னார், "மன்னா! நன்றாக சிரிக்கிறீர்கள், நீங்கள் எல்லோரும் பண்டிதர்களா, அல்லது செருப்பு தைப்பவர்களா?" என்றார்!
மன்னவன் அயர்ந்து, "ஏன்?" என்றான்.
அஷ்டவக்ரர் சொன்னார், "செருப்பு தைப்பவன் மட்டுமே தான் தைக்க உபயோகிக்கும் தோலை நன்கு அறிவான்! ஆனால், நீங்கள் எல்லோரும் என் தோலை பார்த்தல்லவா சிரிக்கிறீர்கள்! அதனால் நீங்கள் எல்லோரும் கூட செருப்பு தைப்பவர்கள் தானா என கேட்கிறேன்!" என்றார்.
ஜனகர் வெட்கி தலை குனிந்தார்! இந்த அஷ்டவக்ரர் எப்பேர்ப்பட்ட உண்மையை சொல்லி இருக்கிறார்!
சொல்லவும் வேண்டுமா, அந்த வருடம் வென்றது அஷ்டவக்ரர்தான் என?! அதுவும் தன் நுழைவிலேயே யஜனவால்க்யரை தோற்கடித்துவிட்டார் அஷ்டவக்ரர்! யஜனவால்க்யர் பெருந்தன்மையுடன் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்!
அதுபோல, நம்மை விட கருத்தவர், பருத்தவர், சிவந்தவர், அழகானவர், அழகற்றவர், இப்படி ஒரு 'தோல் சார்ந்த' அளவுகோல் கொண்டு பிறருடன் பழகும் அனைவரும் உண்மையில் 'செருப்பு தைப்பவர்களே'! (உண்மையில் செருப்பு தைப்பவர்கள் இன்னும் நல்லவர்களாக இருப்பார்கள்).
No comments:
Post a Comment