Thursday, November 2, 2017

Thiruvendurai temple

சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
                        *130*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

*வெண்டுறைநாதர் கோவில், திருவெண்டுறை.*
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
திருவெண்டுறை (தற்போது திருவண்டுதுறை என்று அழைக்கப்படுகிறது.)

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பண்ணிரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:* வெண்டுறைநாதர், மதுவனேஸ்வரர்.

*இறைவி:* வேல்நெடுங்கண்ணி அம்மை, சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள்.

*தல விருட்சம்:* வில்வம்.

*தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம்.

*திருமேனி:* சுயம்புவானவர்.

*ஆகமம்:* 

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*பதிகம்:* திருஞானசம்பந்தர்.

*இருப்பிடம்:*
மன்னார்குடியில் இருந்து பத்து கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் *வீராக்கி* என்ற இடத்தில் இறங்கி இத்தலத்திற்குச் செல்ல வேண்டும்.

மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள், மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்,
திருவண்டுதுறை,
திருவண்டுதுறை அஞ்சல்,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
PIN - 614 717

*தொடர்புக்கு:*
04367 294640 
கீர்த்திவாச சிவாச்சாரியார்

*ஆலயத் திறப்பு காலம்:*
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*புராண பெயர்கள்:* திருவெண்டுறை, (வண்டு துறை) வண்டுறை.

*தேவாரம்பாடியவர்கள்:*திருஞானசம்பந்தர்.

*வழிபட்டோர்:*வித்யாதரர், பிரமன், துருவன், திருமால் ஆகியோர். 


*கோவில் அமைப்பு:* ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது,
பெரிய கோபுரம் உள்ள கிழக்கு நோக்கிய நுழைவு வாயிலும், கோபுரம் இல்லாத மேற்கு நோக்கிய நுழைவு வாயிலுமாக இரண்டு வாயில்களுடன் ஆலயம் இருக்கக் கண்டோம்.

ஒரு பெரிய மதிற்சுவருடன் கூடிய கிழக்கு கோபுர வாயில் வழியாக சிவ சிவ என ஆலயத்துள் புகுந்தோம்.

முதலாவதாக கொடிமரத்தை வணங்கிக் கொண்டோம்.

 பலிபீடத்தருகே நின்று ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்திருந்த நந்தி மண்டபத்தின் அருகாக நின்று இவரை வணங்கிப் பின்பு உள் புக அனுமதி வேண்டிக் கொண்டோம்.

வெளிப் பிரகாரத்தில் செல்கையில்,  தென்மேற்கு மூலையில் கணபதி சந்நிதி கொண்டிருந்தார்.

விடுவோமா? காதைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது கொண்டோம்.

இதற்கடுத்து, வடமேற்கு மூலையில் முருகப்பெருமானின் சந்நிதிக்குச் சென்று வணங்கிக் கைதொழுதோம்.

கருவறை முன் உள்ள மண்டபத்தில்,  விநாயகர் மற்றும் நந்திபெருமான் இருக்க, இவர்களை வணங்கிக் கொண்டோம்.

சுவாமி சந்நிதிக்கு வந்து ஈசனை மனங்குளிர பார்த்து வணங்கித் தரிசித்தோம். மனமுருகப் பிரார்த்தனை செய்து வணங்கிப் பணிந்து அர்ச்சகரிடம் வெள்ளியவிபூதியைப் பெற்று வெளிவந்தோம்.

வடபுறம் தெற்குப் பார்த்த தனி சந்நிதியில் சோமஸ்கந்தர், நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகளையும் கண்டு, தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.

அடுத்து இறைவி சந்நிதிக்குள் நுழைந்தோம். இங்கு அம்மை வேல்நெடுங்கண்ணி தனி விமானத்துடன் தெற்குப் பார்த்த தனி சந்நிதியில் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். 

ஈசனை வணங்கிப் பணிந்தது போலவே, அம்மையையும் கண்குளிரக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

இறைவன், இறைவி ஆகிய இருவரின் சந்நிதிகளையும் இணைக்கும்படி கருங்கல்லால் கட்டப்பெற்ற வேலைப்பாடு மிக்க தூண்களுடன் கூடிய அழகிய வெளி மண்டபம் அழகாய் இருந்தது. 

மண்டபத் தூண்களில் தேவார மூவர், பிருங்கி முனிவர் ஆகியோரின் திருஉருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

ஒரு தூணில் நான்கு யுகங்களைக் கண்ட ஆஞ்சநேயரும் உள்ளார்.

கருவறை கோஷ்டத்தில் வலஞ்சேய்கையில் கருவறைகோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.

கிழக்கு வெளிப் பிரகாரத்திலுள்ள மண்டபத்தில் பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோர் இருக்க கைதொழுது கொண்டோம்.

அழகிய வேலைப்பாடுகளுடன் இங்கிருக்கும் பிட்சாடணர் உருவச்சிலையை அவசியம் பார்த்து வணங்கி ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

அர்த்தநாரீஸ்வரர் திருமேனி விசேஷமானதாக இருந்தன.

 மாதொருபாகனின் வாகனத்தை உற்று நோக்கினால் இறைவன் உருவம் உள்ள பகுதியில் ரிஷப வாகனமாகவும், இறைவியின் உருவம் உள்ள பகுதியில் சிம்ம வாகனமாகவும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. 

ஆலயத்தின் உள்ளே தலமரமான வில்வ விருட்சமான வாழையைத் தீண்டி வணங்கிக் கொண்டோம்.

ஆலய தீர்த்தமான பிரம தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே வடகிழக்கில் இருக்கிறது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது.

சிவபெருமான் யமனை உதைத்தது, திரிபுரம் எரித்தது, இராவணன் கயிலை மலையை எடுத்தது, திருமால் பிரம்மா அடிமுடி காண முடியாமல் அரிதாய் விளங்கியது முதலிய புராண வரலாறுகள் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இறைவனின் பெருமையைக் கூறி ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இறைவன் விரும்பும் இடம் *திருவெண்டுறை* என்று நிறைவு செய்கிறார்.

*தல அருமை:* திருக்கயிலை முனிவர்களில் பெருமை மிக்கவரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத்  தவிர வேறு தெய்வத்தை வணங்குதல் கூடாது என்ற வைராக்கியத்துடன் ஈசனை வணங்கி வாழ்ந்து வந்தவர்.

சிவனை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரின் செயலை அறிந்த சக்தி, அம்முனிவரைத் திருத்துவதற்காக அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள உதிரம், சதை முதலிய கூறுகளை அகலச் செய்தாள். 

அநாநிலையில் கால் தள்ளாடியது.  நிற்க முடியாத அந்நிலையிலும் பிருங்கி முனிவர் சிவனை மட்டும் தொடர்ந்து வழிபட்டு வந்தார். 

இரக்கம் கோண்ட சிவபெருமான், முனிவருக்கு இன்னொரு காலைத் தந்து உதவினார். 

சக்தியும் சிவனை வேண்டி அவரது திருமேனியில் இடது பாகத்தைப் பெற்றார்.

அர்த்தநாரீஸ்வரர் ஆன சிவனும் சக்தியும் பிரித்தற்கரியவர் என்ற உணமையை உணராமல் பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் திருமேனியில் ஒரு பாதியைத் துளைத்துக் கொண்டு சிவபெருமானை மட்டுமே வணங்கினார்.

உமையம்மை சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை - இவ்விரண்டையும் பிரித்துப் பார்த்தல் கூடாது என்ற உண்மையை முனிவருக்கு உணர்த்துவதற்காக வண்டு உருவில் ஒரு சதுர்யுகம் எங்களை இணைத்து வழிபட்டுப் பாவம் நீங்குக என்றருளினாள்.

முனிவரும் உண்மையை உணர்ந்து அவ்வாறே இருவரையும் இவ்வாலயத்தில் வழிபட்டு வணங்கி வர பாவம் நீங்கப் பெற்றார்.

*தல பெருமை:*
பிரம்மனுக்கு படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டபொழுது இங்கு உமையொருபாகனாகிய சிவபெருமானை வழிபட்டார்.

ஆணையும், பெண்ணையும் தடையின்றிப் படைக்கும் ஆற்றல் பெற்றான் என்று கூறப்படுகிறது.

சிவனும் சக்தியும் பிரித்தற்கரியவர் என்ற உண்மையை உணராத மகாவிஷ்ணு மகப்பேறு வேண்டி சிவபெருமானை மட்டும் வழிபட்டார்.

அதனால், அழகிய மன்மதனை மகனாகப் பெற்றார். 

இதனால் கோபம் கொண்ட சக்தி, சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிந்து அழியுமாறு மன்மதனுக்கு சாபமிட்டார். 

தவறை உணர்ந்த மகாவிஷ்ணு இவ்வாலயத்தில் விநாயகர், சோமஸ்கந்தர் ஆகியோரை வழிபட சக்தி சினம் தணிந்து இறக்கும் மன்மதனை மீண்டும் பிழைத்தெழுவான் என்று வரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

*தேவாரம்:*
திருஞாணசம்பந்தர்.

1🍁ஆதிய னாதிரையன் னன லாடிய வாரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த 
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾சிவபெருமான் ஆதிமூர்த்தியானவர் . திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர் . நெருப்பைக் கையிலேந்தித் திருநடனம் புரியும் பேரழகர் . தம் திருமேனியின் ஒரு பாகமாகக் உமாதேவியை ஏற்று மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவர் . கொன்றை முதலிய மலர்களை அணிந்த முடிமேல் , கங்கையையும் பாம்பையும் அணிந்தவராய் , வேதங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமானார் மிக்க அன்புடன் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்பதாகும் .

2.🍁காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய பண்டரங்கன்
மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾மார்க்கண்டேயர் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உயிர்விடும்படி செய்த சிவபெருமான் வாரால் கட்டிய வீரக்கழலையணிந்தவன் . பால் , நெய் , தயிர் முதலியவற்றால் திருமுழுக்காட்டப்பட்டுப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்துப் புரிந்தவன் . மாலை நேர சந்திரனொடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்த விரிந்த சடையுடையவன் . வேல்போன்ற கண்களையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

3.🍁படைநவில் வெண்மழுவான் பல பூதப் படையுடையான்
கடைநவின் மும்மதிலும் மெரி யூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோ லுடை யாடையி னான்கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾சிவபெருமான் தூய மழுப்படை உடையவர் . பலவகையான பூதகணங்களைப் படைவீரர்களாகக் கொண்டுள்ளவர் . பாவங்களைச் செய்து வந்த மூன்று மதில்களையும் எரியுண்ணும்படி செய்த நெற்றிக் கண்ணையுடையவர் . புலித்தோலாடை அணிந்தவர் . விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாக உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

4.🍁பண்ணமர் வீணையினான் பர விப்பணி தொண்டர்கடம்
எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு மறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய பாடலை மீட்டுபவர் . தம்மைப் போற்றி வணங்குகின்ற தொண்டர்களின் சிந்தையில் எழுந்தருளியிருப்பவர் . தேவர்களால் அறிவதற்கு அரியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றவர் . தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

5.🍁பாரிய லும்பலியான் படி யார்க்கு மறிவரியான்
சீரிய லும்மலையா ளொரு பாகமும் சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன் பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾சிவபெருமான் உலகத்தார் செய்யும் பூசைகளைத் தான் ஏற்பவன் . தன் தன்மையை உலக மாந்தர்களின் சிற்றறிவால் அறிவதற்கு அரியவனாய் விளங்குபவன் . புகழ்மிக்க உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . போர் செய்யும் தன்மையுடைய முப்புரங்களுடன் பொன்மயமான மேருமலையே வில்லாகக் கொண்டு தன் வலிமையைக் காட்டிப் போர் செய்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

6.🍁ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு முணர்வரியான்
போழிள வெண்மதியும் புன லும்மணி புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில் வெண்மருப்பின்
வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும் உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும் , ஒருவர்க்கும் உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான் . பிளவுபட்ட வெண்ணிறச் சந்திரனையும் , கங்கையையும் அணிந்த சடையுடையவன் . யாழ் போன்று இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண் தந்தமுடைய யானையின் தோலை உரித்தவன் . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

7.🍁கன்றிய காலனையும் முரு ளக்கனல் வாயலறிப்
பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி யான்புலன்கள்
வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன் . திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன் . தேவர்களெல்லாம் சென்று போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன் . ஞானிகள் புலன்களை வெல்லும்படி செய்பவன் . எம் தலைவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

8.🍁கரமிரு பத்தினாலுங் கடு வன்சின மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைக ளறுப் பானொரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾பத்துத் தலைகளையுடைய அரக்கனான இராவணன் , தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவனது வலிமையை சிவபெருமான் அழித்தான் . அவன் தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவன் . தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

9.🍁கோல மலரயனுங் குளிர் கொண்ட னிறத்தவனும்
சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை வெண்பிறையான்
வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று கருநிறமுடைய திருமாலும் , தனது தன்மையை அறிதற்கு அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல் ஓங்கி நின்றவன் சிவபெருமான் . அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்கி நின்றான் . முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்தவன் . கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

10.🍁நக்குரு வாயவருந் துவ ராடை நயந்துடையாம்
பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென வெம்மிறைவன்
திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.

🙏🏾ஆடையணியா உடம்புடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றி ஏதும் கூறாது , தோன்றி நின்று அழியும் தன்மையுடைய உலகப் பொருள்கள் பற்றிக் கூறும் உரைகளைப் பொருளெனக் கொள்ளற்க . எம் தலைவனான சிவபெருமான் எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன் . தேவர்கட்கெல்லாம் தலைவன் . பொன் போன்று மிக்குயர்ந்த சோதியாய் விளங்குபவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

11.🍁திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர் தந்தலைவன்
எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின பற்றறுமே.

🙏🏾உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி , குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த தலைவனான , பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும் .

        திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, சிவராத்திரி​, பங்குனி உத்திரம், பிரதோஷம்ம் ஆகியன.

*தொடர்புக்கு:*
91- 4367 294 640

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களின் நாளைய தலப்பதிவு *திருக்கொள்ளம்புதூர், வில்வனேசுவரர்*

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment