Thursday, September 21, 2017

Golu for small child - Periyavaa

​"ஏன் கொலு வைக்கவில்லை?"-பெரியவாளைப் 
  பார்த்து, மூன்று வயதுக் குழந்தை

("கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள்  சித்தம்...."பெரியவா)

(நவராத்திரி ஸ்பெஷல் போஸ்ட்-21-09-2017 ஆரம்பம்)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது.

பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று.

பெரியவாள் எதிரில் தட்டுத் தட்டாகப் பழங்கள், கற்கண்டு,திராட்சை.

பெரியவாள்,அருகிலிருந்த தொண்டர்  பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து, ஒரு ஆப்பிள் எடுத்து,குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள்-குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று.

குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை.

பெரியவாளைப் பார்த்து,,

"ஏன் கொலு வைக்கவில்லை?" என்று கேட்டது.

குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.

கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா.

ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் சேர்ந்து விட்டன, அதற்குள் படிக்கட்டு தயார்.

தினந்தோறும் இரவில் சுண்டல் நைவேத்யம்; விநியோகம்.சுமங்கலிகளுக்கு தாம்பூலம்-குங்குமம்.

நவராத்திரி முடிந்ததும், பொம்மைகளைக் காகிதத்தில் சுற்றி,அட்டைப்பெட்டியில் வைத்து, பாதுகாப்பாக வைப்பதற்கு பிரும்மசாரி ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

"கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே.அம்பாள் கிருபை. நவராத்திரி முடிஞ்சுபோச்சு. வருகிற பக்தர்களிடம் ஒவ்வொரு பொம்மையா கொடுத்துடு. அடுத்த வருஷத்துக்காக ப்ரிஸர்வ்  பண்ணாதே. அடுத்த வருஷ நவராத்திரி..... அம்பாள் சித்தம்...."

#பெரியாவாளுடைய மனம் #நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால், ஒட்டிக்கொள்ளாது

No comments:

Post a Comment