Monday, August 21, 2017

Thiurupanthurai temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவர நாயகா போற்றி!!
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁 *பாடல் பெற்ற சிவ தல தொடர். 82.* 🍁
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌷 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.* 🌷
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌺 *திருப்பேணுப் பெருந்துறை.* 🌺
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..............)
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்,* *திருப்பேணுப்பெருந்துறை.*
 (தற்போது திருப்பந்துறை என்று வழங்குகிறது.)

 *இறைவன்:* சிவானந்தேஸ்வரர்.

*உற்சவர்:* பிரணவேஸ்வரர்.

*இறைவி:* மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை.

*தல விருட்சம்.:* வன்னிமரம்.

*தல தீர்த்தம்.:* மங்கள தீர்த்தம்.

*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னததானது.

பாடல் பெற்ற 274 தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்துநான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் ஒரு கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் உள்ளது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு
சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பந்துறை,
நாச்சியார்கோவில் அஞ்சல்,
குமாரமங்கலம் போஸ்ட்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
PIN - 612 602.

*ஆலய வாயில் திறப்பு:*
ஆகம விதிப்படி. தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 5.00  மணி முதல் இரவு 6-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருப்பெருந்துறை தலத்திலிருந்து வேறுபடுத்தவதற்காக இத்தலம் திருப்பேணுப்பெருந்துறை என்றழைக்கப்படுகிறது. மக்கள் வழக்கில் திருப்பந்துறை என்று அழைக்கிறார்கள்.

*தல அருமை:*
பிரணவ மந்திரத்திறகு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். 

பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக் கொண்டது. வயதில் சிறியவனான தான் பெரியவரான பிரம்மாவை நிந்தனை செய்து விட்டோமே!" என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க.....

தனது மாமனான மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார்.

அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனாலும் அவர் கவலை தீரவில்லை. 

மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். 

அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. 

உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். 

அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார். பழைய நிலையை அடைந்து மனக்கவலை முற்றிலும் நீங்கி சர்வ கலைகளிலும் வல்லவரானார்.

எனவே இத்தலம் மனக்கவலையை போக்கும் திருத்தலமாகவும், ஊமையாகிவிட்ட முருகனை பேச வைத்த தலமாகவும் திகழ்ந்து பேசும் சக்தியை அளிக்கும் தலமாகவும், திக்குவாய் குறையை தீக்கும் தலமாகவும், வாக்கு வண்மையை அதிகரிக்கச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது.

இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.

*கோவில் அமைப்பு:* இவ்வாலயத்திற்குச் சென்ற நாம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜ கோபுரத்தை முதலில் காணக் கிடைக்கவே, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து , குனிந்து பணிந்து கோபுரகலச காட்சியாகும் வண்ணம், முதுகை பின்னால் வளைத்து நெஞ்சை  நிமிர்த்தி வணங்கினோம்.

கோபுரத் தரிசனம் செய்தது, மனதிற்கு செம்மையாக இருந்தது.

இடப்புறமாய் திரும்பிப் பார்த்தோம். எதிரில்  தீர்த்தக் குளம் இருந்தது. 

சிரசிற்கு தீர்த்தத் தொழுகை செய்யும் ஆவலில் குளப்படிகளில் இறங்கி, தீர்த்தத்தை அள்ளி கண்களில் ஒற்றி விட்டு சிரசில் தெளிவித்துக் கொண்டோம்.

அருகிலிருந்த அடியாரொருவரிடம் தீர்த்தப் பெயரைக் கேட்டோம்.

*"மங்கள தீர்த்தம்"* என்று அவ்வடியார் கூறினார்.

குளக் கரையில் கோவிலை ஒட்டி இரட்டை விநாயகர் சந்நிதகள் இருக்க, "விடுவோமா?"  இருவிநாயகரையும் அவரை எங்கும் எப்போதும் எப்படி வணங்குவோமோ? -அப்படியே, அவருக்குண்டான வணக்கத்தை அவருக்குச் செலுத்தி வணங்கிக் கொண்டோம்.

அவ்விரு விநாயகர்களில் ஒரு விநாயகர்
குக விநாயகர் என்றும், மற்றொரு விநாயகர் சாட்சி விநாயகர் என்றும் கூறினார்கள்.

விநாயகர்களை வழிபட்டு ஆலயத்தினுள் செல்ல இராஜ கோபுரம் வழியே உள்ளே சென்றோம்.

உள் நுழையவும் கொடிமரம், கண்டு வணங்கிக் கொண்டோம்.

அடுத்திருந்த பலிபீடத்திடன் முன் நமக்கிருந்த ஆணவமலத்தை கொட்டி பலியிட்டுக் கொண்டு வணங்கினோம்.

பின் நந்தியின் முன் நின்று, 'ஆலயப்பிரவேசம் செய்ய வந்திருக்கிறோம்! ஈசனைக் காணும்  அனுமதியைத் தருவாயாக, என் வேண்டுதவுலுடன், அவருக்கும் வணக்கத்தையும் செலுத்தி நகர்ந்தோம்.

இறைவன் சிவாநந்தேஸ்வரர் சந்நிதிக்கு வந்தபோது கருவறையின் முன்பு திரையிட்டிருந்தது.

திரை விலகும்வரை அவ்விடத்திலேயே கண்களை மூடி சிவானேந்தேஸ்வரரை மனதுக்குள் இருபத்தி தியாணித்துக் கொண்டிருந்தோம்.

மணி ஒலித்து திரை விலகவும் விழி திறந்து பார்க்கையில், மனதுக்குள் இருத்தி வைத்திருந்த சிவானேந்தேஸ்வரர் இப்போது கருவறையில் அருள் வெள்ளமாய் காட்சி தந்தார்.

ஒரே பிரகாரமுள்ளது. கருவறை கோஷ்டங்களில் வலம் வருகையில், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் கைதொழுது வணங்கிக் கொண்டோம். 

கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, நவக்கிரக சந்நிதிகளுக்கும் சென்று சிரம்தாழ்ந்து வணங்கி நகர்ந்தோம்.

இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவராம். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருப்பதைக் கண்டோம். 

தலையில் குடுமியும் இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் நாம் காண இயலாது. சின் முத்திரையுடன் தியான நிலையிலுள்ள தண்டபாணியைப் பார்த்துப் பரவசம் அடைந்தோம்.

ஆலயத்திலுள்ள பிட்சாடனர் உருவச்சிலையைப் பார்த்தோம். சிலைத்திருமேனி மிகச் சிறப்பான நேர்த்தியாக தெரிந்தது.

அடுத்து அம்பாள் சந்நிதிக்கு வந்தபோது, அம்பாள் மங்களாம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். மனமுருகப் பிரார்த்தித்து குங்குமப் பிரசாதத்துடன் வெளி வந்தோம்.

இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருப்பதைப் பார்த்தோம்.
மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.

செங்கற்கோயிலாக இருந்த இக்கோயில் கரிகாற்சோழன் காலத்தில் கற்கோயிலாயிற்று என்று இத்தல கல்வெட்டு கூறுகிறது.

இத்தலத்தில் பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. 

இத்தலத்தின் விசேஷ மூர்த்தியான தண்டபாணி சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் பருகி வர, பேச்சுக் குறைபாடுகள் நீங்கும். நல்ல வாக்குவன்மையும், 

படிப்பது நம் மன ஆவலேயாயினும், படிப்பில் கவனமிகுதியை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழயைன்று இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, கணபதி, சுவாமி-அம்பாள் மற்றும் கந்தனை வழிபட தோல் வியாதிகள் யாவும் நீங்கப்பெறும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையோடு செய்து வருகின்றனர்.

 *சிறப்பு:*
விக்னேஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்களாவர்.

ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப் பெருமான், பிரணவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

சிவன் எல்லாம் அறிந்தவராக இருக்க, சிறியவனாகிய தான், தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததை எண்ணி வருத்தம் கொண்டார் முருகன். எனவே, அவர், இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். 

சிவன் அவருக்கு காட்சி தந்து, நீயும் நானும் ஒன்றே எனக்கூறி மைந்தனை தேற்ற, மனம் தெளிவடைந்தார் முருகன். எனவே, பிரண வேஸ்வரர் என்றும் பெயர் பெற்றார்.

திக்குவாய் உள்ளவர்கள் இந்த முருகனை வேண்டிக்கொண்டால் மனஆறுதல் கிடைக்கிறது என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கை. 

எனவே இத்தல முருகனை தந்தை பட்டம் பெற்ற தனயன் என கூறுகின்றனர்.

 *தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*
🍁பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய வந்தளிர் மேனி
யரிவை யோர் பாக மமர்ந்த
பெம்மா னல்கிய தொல்புக ழாளர்
பேணுபெ ருந்துறை யாரே.

🍀திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று ஐயம் இடுகஎன்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர்.

🍁மூவரு மாகி யிருவரு மாகி
முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார்
தீதில்பெ ருந்துறை யாரே.

🍀குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார். 

🍁செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
பில்குபெ ருந்துறை யாரே.

🍀யானையின் கை போன்ற நீண்ட வாழைக் குலையில் பழுத்த பழங்களிலும், காய்த்த குலைகளிலும், கமுக மரங்களின் பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர், கொன்றைப்பூமாலை, கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று, பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர். 

🍁நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி
நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசு மில்லவர் வாழும்
மல்குபெ ருந்துறை யாரே.

🍀நிலம், வானம், நீர், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய், ஐந்து புலங்களை வென்றவராய், பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும் இறைவர், திருவெண்ணீறு அணிந்து நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய், மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும் அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர். 

🍁பணிவா யுள்ள நன்கெழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்க ளுள்ளமி லாத
சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
அரிசிலு ரிஞ்சுக ரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறன்
மல்குபெ ருந்துறை யாரே.

🍀அரிசிலாற்றின் அலைகள் மோதும் கரையில் அமைந்ததும், நீல மணி போலும் நிறம் அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய பேணு பெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர்.

🍁எண்ணார் தங்கள் மும்மதிள் வேவ
ஏவலங் காட்டிய வெந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாட லாட லறாத
பசுபதி யீசனோர் பாகம்
பெண்ணா ணாய வார்சடை யண்ணல்
பேணுபெ ருந்துறை யாரே.

🍀திருப்பேணுபெருந்துறை இறைவர் தம்மை மதியாதவரான, அசுரர்களின் முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில் வன்மை காட்டிய எந்தையாராவர். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர். இசை நலம் கெழுமிய பாடல்களோடு, ஆடி மகிழும் பசுபதியாய ஈசனும் ஆவர். ஒரு பாகம் பெண்ணுமாய், ஒரு பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியுடைய தலைவராவர். 

🍁விழையா ருள்ள நன்கெழு நாவில்
வினை கெடவேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் றாழ்கனி யுந்தித்
தண்ணரி சில்புடை சூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடுபெ ருந்துறையாரே.

🍀தழைத்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின் கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள்கூடி விளங்கும் திருப்பேணுபெருந்துறை இறைவர், விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்கண் தம் வினைகெட, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதிவரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவர். 

🍁பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி யிலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி
மாமுர ணாகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடை யொடாடி
யணவுபெ ருந்துறை யாரே.

🍀ஆண் அன்னம் கன்னிமையுடைய பெண் அன்னத்தோடு ஆடியும், கூடியும் மகிழும் பேணு பெருந்துறை இறைவர், அழகிய கடற்கரைச் சோலைகளும், வெண்மையான கடல் அலைகளும் சூழ்ந்துள்ளதும், நாற்புறங்களிலும் கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை மலையைக் கால் விரலால் ஊன்றி, அவனுடைய சிறந்த வலிமையுடைய, மார்பும், தோள்களும் வலிமை குன்றுமாறு செய்து பின் அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய மூர்த்தியாவார். 

🍁புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானு
முணர்வரி யானுமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின்
முகமலரக் கயல் பாயக்
கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங்
காமர்பெ ருந்துறை யாரே.

🍀முட்களையுடைய தண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங் கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும், நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர். 

🍁குண்டுந் தேருங் கூறைக ளைந்துங்
கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
மல்குபெ ருந்துறை யாரே.

🍀இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும், தேரர்களாகிய புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண்தவம் புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை விரும்புமின். யோக தண்டம், பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார். 

🍁கடையார் மாட நன்கெழு வீதிக்
கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
நல்லபெ ருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி
உலகினின் மன்னுவர் தாமே.

🍀வாயில்களையுடைய மாட வீடுகள் நன்கமைந்த வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும், அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர். 

            திருச்சிற்றம்பலம்.

*தொடர்புக்கு:*
0435- 2448138,
94436 50826.

. *திருவிழாக்கள்:*
தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை.

*நாளைய தலம்....திருநறையூர் வ(ள)ரும்.(சித்தீச்சரம்.)*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment