Thursday, July 6, 2017

Brahmapureeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍃 *சிவ தல தொடர். 72.*🍃
🌺 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🌺
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍁 *அம்பர் பெருந்திருக்கோயில்.* 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*இறைவன்:* பிரம்மபுரீஸ்வரர், 

*இறைவி:* 
பூங்குழல் அம்மை.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து மூன்று கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. 

பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் ஏழு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. 

அம்பர் மாகாளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேற்கே ஒரு கி.மி. தொலைவில் உள்ளது.

*ஆலய முகவரி:*
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர், திருக்கோயில், அம்பல்,
(வழி) பூந்தோட்டம்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
PIN - 609503.

*பூஜை:*
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற 128 தலங்களுள் இத்தலம் ஐம்பதாவது நான்காவதாகப் போற்றப் படுகிறது.

*கோவில் அமைப்பு:* அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையதை முதலில் காண நேரவும, *சிவ சிவ* என மொழிந்து கோபுரத் தரிசனம் செய்கிறோம்.

யானை ஏறமுடியாதவாறு படிக்கட்டுகள் அமைத்துச் சிறு குன்று போல் கோவில் அமைத்திருக்கிறார்கள் ஆதலால், இக்கோவிலுக்கு பெருந்திருக்கோவில் என்ற பெயர் ஏற்பட்டது.

கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவிலகளில் இதுவும் ஒன்று. கோவில் கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சந்நிதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் தெற்கு நோக்கயவாறு அமைந்துள்ளன.

இராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றோம். விசாலமான முற்றம் உள்ளது. சுதையாலான பெரிய நந்தி இங்குள்ளதைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

இடப்பக்கத்தில் உள்ள கிணறு *"அன்னமாம் பொய்கை"* என்று வழங்குகிறார்கள்.

பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது தலவரலாறு.

படியேறிச் செல்வதற்கு முன்னரே கிழக்கு மதிற்சுவர் மாடத்தில் கிழக்கு நோக்கித் தல விநாயகரான படிக்காசு விநாயகர் எழுந்தருளியிருப்பதைப் பார்த்து,......

விடுவோமா? ...... எப்போதும்போல் தலையில் குட்டி,காதைப் பிடித்துத் திருகி முதல்வனை வணங்கிக் கொண்டோம்.

இவர் சந்நிதிக்கு அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக மூர்த்தங்கள் உள்ளன. அவரைப்போலவே இவரையும் வணங்கிக் கொண்டோம்.

அதே போன்று பிரகாரத்திலுள்ள விநாயகர் சந்நிதியிலும் மூன்று விநாயகர் சிலைகளும் இருக்க வணங்கி நகர்ந்தோம். 

பிரகாரத்தில் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகளுக்கும் சென்று வேண்டிக் கொண்டோம்.

அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நின்ற கோலத் திருமேனி. மனமுருகி பிரார்த்தனை செய்து அவளருளைப் பெற்று வெளி வந்தோம்.

சந்நிதிக்கு வெளியில் இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன.

வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதிக்குச் சென்று, வழக்கமான வேண்டுதல்கள், மனமுருகி மற்றும் பிரார்த்தனையை மும் செலுத்திக் கொண்டோம்.

மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய அழகு மூலத்திருமேனிகளை கண்டு வணங்கியது ஆனந்தமாக இருந்தது.

துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று விநாயகரையும் வணங்கி உள்சென்று சிறிய வாயில் வழியாக உள்ளிருக்கும் மூலவரைத் தரிசிக்க உள் புகுந்தோம்.

இங்கு பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி அழகியருளுடன் காட்சி தந்தார். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் இருக்க வணங்கிக் கொண்டோம்.

வலதுபுறம் நடராச சபை உள்ளது. இவர் ஆடல் கலையைக் கண்டு மயங்காமலா இருப்போம். மயங்கிஇக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர்.

*தல அருமை:*
ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். 

வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர்.

சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி திருவண்ணாமலையில் காட்சி கொடுத்தார். ஆயினும் பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியைக் கண்டதாக பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவை அன்னமாகும்படி சபித்தார். பிரம்மா பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மாவும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார்.

பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது. பிரம்மா உண்டாக்கிய பொய்கை *"அன்னமாம் பொய்கை"* என்று பெயர் பெற்றது.

*அம்பன், அம்பரன்* என்ற் இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூஜை செய்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். 

தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பெருமான் பார்வதியை நோக்க, குறிப்பறிந்த தேவி காளியாக உருமாறினாள்.

காளி கன்னி உருவெடுத்து அவர்கள் முன் வர, வந்த அம்பிகையை இருவரும் சாதாரணப் பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும்.

அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம் இதுவே. 

இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில் பெற வேண்டும் என்று நினைத்தார்.

இந்நிலையில் சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு தினமும் தூதுவளை கீரை கொடுத்து அனுப்பினார்.

இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி சங்கிலி அம்மையாருக்கு கீரை கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும். கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க வந்தார் சுந்தரர்.

அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம் வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.

இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்தது.

நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப் போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன் வந்தாள்.

கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர்.

சோமாசிமாற நாயனார் இறைவன் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில் சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும் காட்சி தந்து, வந்திருப்பது சிவன் என்பதை உணர்த்தினார்.

மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம் கொடுத்து சிறப்பு செய்தார்.

தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

சோமாசிமாறர் யாகம் செய்த இடம் அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில் சாலையோரத்தில் உள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட ஆலயம் இது என்பதை தனது பதிகத்தில் இவர் குறிப்படுகிறார்.

எழுபது மாடக்கோயில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழனின் கடைசித் திருப்பணி எனக் கூறப்படும் கோயில் இத்திருக்கோயில் இதுவாகும்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*
🌼எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில் நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.

🌼மையகண் மலைமகள் பாக மாயிருள் கையதோர் கனலெரி கனல ஆடுவர் ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர் செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.

🌼மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர் பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர் அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர் இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே. 

🌼இரவுமல் கிளமதி சூடி யீடுயர் பரவமல் கருமறை பாடி யாடுவர் அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர் மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே. 

🌼சங்கணி குழையினர் சாமம் பாடுவர் வெங்கனல் கனல்தர வீசி யாடுவர் அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச் செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே. 

🌼கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர் சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர் அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில் நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.

🌼இகலுறு சுடரெரி இலங்க வீசியே பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர் அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ் புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே. 

🌼எரியன மணிமுடி இலங்கைக் கோன்றன கரியன தடக்கைகள் அடர்த்த காலினர் அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.

🌼வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற் பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும் அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர் செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே.

🌼வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர் உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.

🌼அழகரை யடிகளை அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின் தமிழ்கெழு விரகினன் தமிழ்செய்.

*தல பெருமை:*
அம்பன், அம்பாசூரன் அசுரர்களை கொன்றபாவம் தீர காளி வழி பட்டது. தீராத கபம்-நெஞ்சு சளியால் அவதிப்பட்ட சுந்தருருக்கு தினமும் தூதுவளம் பூ, காய், கீரை ஆகியவற்றை அனுப்பி வைத்த சோமாசிறமாற நாயனார்,  தான் செய்யும் மோட்சம் அளிக்கக்கூடிய சோமயாகத்திற்கு சுந்தரர் இறைவனையழைக்க வேண்டியதால் சுந்தரர் தியாகராஜப் பெருமானிடம் மாறனார் விருப்பப்படி யாகத்தில் கலந்துகொள்ள வேண்டினார். 

வெட்டியான் வேடத்தில் நான்கு வேதங்களை நாய்களாகவும், முருகன், விநாயகரை சிறுவர்களாகவும், உமாவை வெட்டிச்சியாகவும் கூட்டிவர எல்லோரும் அபச்சாரம் என நினைத்தபோது,  விநாயகர் குறிப்பால் உணர்த்தினார்.

வைகாசி ஆயில்யம் சிறப்பு. மாறநாயனார் யாகத்திற்கு திருவாரூலிருந்து தியாகராஜப் பெருமான் அவிர்பாகம் பெற மாகாளம் வரும் ஐதீகம் இருப்பதால் அன்று திருவாரூரில் உச்சிக்கால பூஜை நிறுத்தி வைக்கப்படுகிறது​.

             திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்.....அம்பர் மாகாளம்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுங்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment