Thursday, June 1, 2017

The story of HH.Raghavendra Swamigal

Courtesy:Sri.GS.Dattatreayan

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் வரலாறு 
******************************************************
விஷ்ணுவே உயர்ந்த கடவுள் என்னும் வைஷ்ணவக் கருத்தைப் பறைசாற்றி, மத்வாச்சார்யாரின் கொள்கையான த்வைத தத்துவத்தைப் பின்பற்றி நிலை நாட்டிய பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மஹா குரு ஸ்ரீ ராகவேந்திரர். [1595-1671]1671-ல் இன்று மந்திராலயம் என ஆந்திர மாநிலத்தில் அழைக்கப்படும் ஓரிடத்தில் அவர் தமது பிருந்தாவனத்தை அமைத்துக் கொண்டார்.

தமது ஸ்தூல உருவிலோ அல்லது தெய்வீக வடிவிலோ அஃவர் இன்றும் அங்கு இருந்து அருள் பாலிப்பதாக நம்பும் அவரது பக்தர்களால் இந்த மந்திராலயம் இன்றும் ஒரு புனிதத் தலமாக இந்தியாவில் விளங்குகிறது.
"மஹா குரு ஸ்ரீ ராகவேந்திரர் பிறப்பு"

தமிழகத்தில் சிதம்பரம் அருகே இருக்கும் புவனகிரி என்னும் சிற்றூரில், மிருகசீரிஷ நக்ஷத்திர, சுக்ல ஸப்தமி கூடிய பங்குனி மாத வியாழக்கிழமை நன்னாளில் 1595-ம் ஆண்டில், திம்மண்ண தத்தா, கோபிகாம்பா என்னும் பெற்றோருக்குப் புதல்வனாக வெங்கண்ண பட்டர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். திம்மண்ண பட்டர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மிகச் சிறந்த வீணை வித்வானாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பட்டர் என்பவரின் பேரனாகவும், கனகாசல பட்டர் என்பவரின் மகனாகவும் பிறந்தவர். ஸ்ரீ திம்மண்ண பட்டருக்கும், கோபிகாம்பாவுக்கும் ஏற்கெனவே குருராஜாசார்யா என்னும் மகனும், வெங்கடாம்பா என்னும் மகளும் இருந்தனர்.ஸ்ரீ வெங்கடண்ண பட்டர் திருப்பதி வெங்கடேச்வரர் அருளால் பிறந்ததன் நினைவாக பெருமாளைப் பெருமைப்படுத்தும் விதத்தில், வேங்கடநாதர் எனவும், வேங்கடாசார்யா எனவும் அழைக்கப்பட்டார்.

"ஸ்ரீ ராகவேந்திரர் கல்வி"
************************************
வேங்கடநாதர் கல்வியில் சிறந்து விளங்கினார். சிறுவனாக இருந்தபோதே இவரது பெருமை வெளிப்பட்டது. மிகச் சிறிய சொல்லான 'ஓம்' என்பது எவ்விதம் ஒரு அளவிட இயலாக் கடவுளின் பெருமையை உள்ளடக்கியதாகும் எனத் தன் தந்தையிடம் கேட்டாராம். ஆனால் இவரது பெருமையை அறிந்துகொள்ள இயலாது, இவரது சிறுவயதிலேயே வேங்கடநாதரின் தந்தை இறந்து விட்டார். வேங்கடநாதரின் மூத்த சகோதரனே மற்ற குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார். மதுரையில் வசித்த தனது சகோதரியின் கணவர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹாச்சார்யா என்பவரின் இல்லத்தில் இவரது கல்வி தொடர்ந்தது.

"ஸ்ரீ ராகவேந்திரர் படிக்கும்போதே திருமணம்"
*******************************************************************
மதுரையிலிருந்து திரும்பியதுமே, ஸரஸ்வதி என்னும் நற்குலப் பெண்மணியுடன் இவரது திருமணம் நிகழ்ந்தது. புலன்களை அடக்கிய ஒருவரது கல்வி, திருமண வாழ்க்கையால் தடைப்படுவதில்லை என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஸரஸ்வதி தேவியின் அருளால், வேங்கடநதரின் கல்வி திருமணத்திற்குப் பின்னும் மேலும் சிறந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய கும்பகோணத்துக்குச் சென்றார். வேதாந்தம், இலக்கணம், சாஸ்திரங்கள் முதலானவற்றை ஸுதீந்திர தீர்த்தர் என்பவரிடம் கற்றார். தான் கற்றவற்றிற்கான விளக்கங்களை இரவு முழுவதும் கண் விழித்து எழுதினார். கற்றறிந்த பலருடனும் தர்க்கம் செய்து அவர்களைத் தோற்கடித்தார். தஞ்சை அரசவையின் மிகச் சிறந்த விற்பன்னரான வெங்கடேச்வர தீக்ஷிதர் என்பவர் அவர்களில் ஒருவர். இவரது இலக்கண அறிவு, வாதிடும் திறன் முதலானவற்றைக் கண்டு வியந்த ஸுதீந்திர தீர்த்தர், வேங்கடநாதருக்கு 'மஹாபாஷ்ய வேங்கடநாதாச்சார்யா' எனும் பட்டத்தை வழங்கினார். 'தப்தமுத்ர தாரணா' என்பதன் சிறப்பைப் பல ஸ்ம்ருதிகளின் மூலம் உதாரணம் காட்டி, எவராலும் எதிர்க்க முடியாத அளவில் வாதம் புரிந்து தம்மை எதிர்த்தவர்களை வென்றார்.

'பூர்வாச்ரமத்தில் நிகழ்த்திய அற்புதங்கள்'
******************************************************************
கும்பகோணம் வழியே யாத்திரை செல்லும்போது, ஸ்ரீ வேங்கடநாதரையும், அவரது மனைவியையும் ஒருவர் தன் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு அழைத்தார். இவரது பெருமையை அறியாத அந்த வீட்டுக்காரர்கள், ஏதாவது வேலை வாங்கியெ இவர்களுக்கு உணவளிக்க வேண்டுமென நினைத்து, வந்தவர்களுக்கு சந்தனம் அரைத்துத் தருமாறு பணித்தனர். தமது வழக்கப்படி, வேங்கடநாதர் மந்திரங்களைச் சொல்லியவாறே சந்தனம் அரைத்தார். அதை இட்டுக் கொண்டவர்களெல்லாம், உடலெங்கும் வெந்துபோவதுபோன்ற ஒரு எரிச்சலை உணர்ந்து அலறினர். இதற்கான விளக்கத்தை அவரிடம் கேட்டபோது, அக்னி ஸுக்தம் சொல்லிக்கொண்டே இதை அரைத்ததாகவும், அவற்றின் சக்தியாலேயே இப்படி எரிச்சல் ஏற்பட்டது எனவும் பதிலுரைத்தார். தகுதி வாய்ந்த ஒருவர் பக்தியுடனும், சிரத்தையுடனும் இப்படிச் செய்யும்போது, வேத மந்திரங்கள் அவருக்குக் கட்டுப்படுகின்றன என்பதை உணர்ந்த அனைவரும் ஸ்ரீ வேங்கடநாதரைப் ப‌ணிந்து வணங்கி, அவரது பெருமையை உணர்ந்து மன்னிப்புக் கோரினர்.

'வித்யா லக்ஷ்மி வேண்டியவண்ணம் துறவறம் பூணுதல்'
*************************************************************************************
இப்படியாக இறை வழிபாட்டிலும், சமூக சேவையிலும் ஸ்ரீ வேங்கடநாதர் ஈடுபட்டிருக்கையில், அவரது ஆன்மீக குருவான ஸுதீந்திர தீர்த்தர் தமக்கு ஒரு வாரிசைத் தேடிக் கொண்டிருந்தார். ஸ்ரீ வேங்கடநாதரே இதற்கு முற்றிலும் தகுதியானவர் என ஸுதீந்திரருக்குக் கனவில் இறைவன் உணர்த்தினார். தனது இளம் மனைவி, சிறு வயது பாலகன் இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு இருப்பதால், முதலில் ஸ்ரீ வேங்கடநாதர் மறுத்தார். அப்போது கல்விக்கு அதிபதியான வித்யாலக்ஷ்மி அவரது கனவில் தோன்றி, இவ்வுலகம் உய்ய அவரைச் சந்யாசம் மேற்கொள்ளுமாறு கூறியருளினார். இதை ஒரு நல்ல சகுனமாகக் கருதிய வேங்கடநாதர் தனது மனதை மாற்றிக்கொண்டு 1621-ல் பங்குனி மாதம், சுக்ல த்விதீயை கூடிய நன்னாளில் துறவறம் பூண்டார்.

'பேயுருக் கொண்ட மனைவி, மோக்ஷம் அடைதல்'
****************************************************************************
ஸ்ரீ வேங்கடநாதர் சந்யாசம் பூண்ட தினத்தன்று, தனது கணவரின் முகத்தை ஒருமுறை பார்த்திட வேண்டுமென ஆவல்கொண்டு, வெறி பிடித்தவள்போல மடத்தை நோக்கி ஓடினாள். அப்போது அச‌ம்பாவிதமாக வழியிலிருந்த ஒரு பாழடைந்த கிணற்றுள் கால் தவறி விழுந்து மூழ்கி இறந்தாள். இந்து சமய சாஸ்திரங்க‌ளின்படி, அகால மரணமடைந்தவர் பேயாக மாறி, பூமிக்கும், சுவர்க்கத்துக்கும் இடையே அல்லாடுவர் என்பதற்கொப்ப, பேயாக மாறிய ஸரஸ்வதி, அந்த உருவிலேயே மடத்தை நோக்கி ஓடினாள். ஆனால், அதற்குள் அவளது கணவர் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகத் துறவறம் கொண்டுவிட்டார். தனது மஹிமையால் பேயுருவில் தமது பூர்வாச்ரம மனைவி வந்திருப்பதை உணர்ந்து, அவளது கடைசி ஆசையைப் பூர்த்தி செய்வதற்காகத் தன் கமண்டலத்திலிருந்து சில துளி நீரைத் தெளிக்கவே, பிறப்பு, இறப்புகளைக் கடந்து மோக்ஷம் அடைந்தாள். தன்னலமற்ற அவளது சேவைக்குக் கிடைத்த பரிசாக‌ இது அமைந்தது.

'கும்பகோணத்தில் பஞ்சம்'
*****************************************
கும்பகோணத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் இருந்தபோது, தஞ்சை மாநிலம் முழுவதும் 12 ஆண்டுகளாகக் கடும் பஞ்சத்தில் வாடியது. அப்போது தஞ்சை மன்னர் ஸ்வாமிகளைப் பணிந்து , பஞ்சம் தீர ஏதேனும் யாகங்கள் வளர்க்க வேண்டினார். அவ்வாறே ஸ்வாமிகள் செய்த உடனேயே, மழை பொழிந்து, வளம் பொங்கியது. விலையுயர்ந்த ரத்தினங்கள் பொறித்த ஒரு அழகிய மாலையை தனது நன்றியறிதலாக மன்னர் மடத்துக்கு வழங்கினார். தாம் செய்துகொண்டிருந்த ஒரு யாகத்தில் அந்த மணிமாலையை ஸ்வாமிகள் அர்ப்பணித்தார். தமக்கு இழைக்கப்பட்ட அவமானமாக மன்னர் கருதிக் கோபமுற்றதைக் கண்ட ஸ்வாமிகள், தமது திருக்கரங்களை ஹோம குண்டத்துள் விட்டு, சற்றுக்கூட மாற்றுக் குறையாத வடிவில் அதே மாலையைத் திரும்பவும் எடுத்து, அதை மன்னருக்கு அளித்தார். ஸ்வாமிகளின் கரங்களிலோ, அந்த மாலையிலோ தீயின் சுவடு சற்றுக்கூட இல்லை. மஹானின் பெருமையை உணர்ந்த மன்னர் அன்று முதல் ஸ்வாமிகளின் தீவிர பக்தரானார்.

'புனித யாத்திரைகள்'
*******************************
தென்னிந்தியா முழுவதும் துவைத தத்துவத்தைப் பரப்பவெனத் தீர்த்த யாத்திரை செல்ல முடிவுசெய்து கிளம்பிய ஸ்வாமிகள், இராமேச்வரம்,ஸ்ரீரங்கம் முதலான தலங்களுக்குச் சென்றார். இராமேச்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் லிங்கம்,ஸ்ரீராமன் இராவணனுடன் போரிட, இலங்கைக்குச் செல்லும்முன் வ‌ழிபட்ட லிங்கமே எனப் பிரகடப்படுத்தினார். இது தொடர்பாக, அந்தணர் ஒருவருக்கும், ராக்ஷஸி ஒருவருக்கும் பிறந்த அரக்கனே இரவணன் என்றும் விளக்கினார். ஒருசில அறிஞர்கள் சொல்லுவதுபோல, பரம்பொருளான ஸ்ரீராமர், இராவணனைக் கொன்றதால் ஏற்பட்டதாக‌த் தவறாகக் கூறப்படும் பிரம்மஹத்தி முதலான எவ்வித தோஷங்களுக்கும் ஆட்பட்டவர் அல்லர் என்றும் மறுத்துரைத்தார்.

அங்கிருந்து கன்யாகுமரி, திருவனந்தபுரம் முதலான திருத்தலங்களுக்குச் சென்ற பின்னர், தனது பூர்வாச்ரமத்தில், இளவயதைக் கழித்த மதுரைக்கு வந்து, அங்கு வசித்த தனது [பூர்வாச்ரம] தமக்கையின் கணவரையும் சந்தித்தார். பின்னர், விஷ்ணு மங்களா, குக்கே ஸுப்ரமண்யா, உடுப்பி முதலிய தலங்களுக்கும் சென்று, தமது துவைதக் கருத்துகளின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். அப்போது அவர் எழுதிய பாஷ்யங்கள் ஒரு யானையின் மீது வைக்கப்பட்டு அவரைப் பின்தொடர, செல்லுமிடமெங்கும் பெருமளவில் பக்தர் கூட்டத்தைப் பெற்றார்.

'மாண்டவரை உயிர்ப்பித்த மஹிமை'
******************************************************
தமது புனித யாத்திரையின்போது ஒருநாள் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் [ஹூப்ளி அருகே] ஸ்வாமிகள் வெயிலின் கொடுமையினால் நிழல் தரும் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது ஒரு இஸ்லாமிய நவாப் இவரை நோக்கி வருத்தத்துடன் வருவதைக் கண்டு, என்ன விஷயமென விசாரிக்கையில், பாம்பின் விஷக்கடியால் மாண்டுபோன தனது மகனைப் புதைத்துவிட்டு வருவதாக நவாப் கூறினார். இதைக் கேட்டதும், சற்று நேரம் அமைதியாக தியானித்த ஸ்வாமிகள், அந்தக் குழந்தையை சமாதியிலிருந்து வெளியெடுக்குமாறு சொல்ல, குழம்பிய மனத்துடன் நவாப் அவ்வாறே செய்தார். தமது கமண்டலத்திலிருந்து சில துளி நீரை அந்த உடலின் மீது தெளித்துவிட்டு, தனது இஷ்ட தெய்வத்தை எண்ணி ஸ்வாமிகள் மனதுள் பிரார்த்தனை செய்தார். என்ன ஆச்சரியம்! அந்தக் குழந்தை அப்போதுதான் கண் விழித்ததுபோல் எழுந்தான். நவாபின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை!

'அதோனி நவாபும், மந்திராலயமும்'
**********************************************
இது நிகழ்ந்து பல நாட்களுக்குப் பின், அதோனி ராஜ்ஜியத்தின் நவாபை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு நிகழ்ந்தது. ஸ்வாமிகளிடம் மரியாதை காட்டுவதற்குப் பதிலாக, அவரது அபூர்வ சக்தியைச் சோதிக்க எண்ணிய நவாப், ஒரு தட்டில் மாமிசத் துண்டுகளை வைத்து, அவற்றை ஒரு பட்டுத் துணியால் மூடி, ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தான். மஹான்களை சந்திக்கும்போது இதுபோல சன்மானம் செய்வது இந்து வழக்கம். தனது கமண்டலத்திலிருந்து புனித நீரை அந்தத் துணியின் மீது தெளித்துவிட்டு ஸ்வாமிகள் அதை நீக்கியபோது, அங்கே பழங்கள் நிறைந்திருந்தன. தனது தவற்றை உணர்ந்து வருந்திய நவாப், மஹானின் பெருமையை உணர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கோரி, அவரைப் பணிந்து வணங்கி அவரது தீவிர பக்தனானான். பிராயச்சித்தமாக, ஸ்வாமிகள் வேண்டுமளவுக்கு நிலத்தையும், செலல்வத்தையும் அளிப்பதாக வேண்டினான். தமக்கென எதுவும் வேண்டா ஸ்வாமிகள், 'மாஞ்சாலே' என்னும் பகுதியில் இருக்கும் நிலத்தைத் தமது மடத்துக்குத் தருமாறு கூறினார். வறண்ட இந்த நிலத்தை விடவும், செழிப்பான வேறிடத்தில் நிலமளிப்பதாக நவாப் கூறியபோதும், துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்த இந்த நிலமே போதும் என ஸ்வாமிகள் தீர்மானமாகக் கூறிவிட்டார். அங்கே தற்போது "மந்திராலயம்" என அழைக்கப்படும் ஸ்வாமிகளின் மடம் ஸ்தாபிக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள், ஒரு பக்தரிடம், இந்த இடத்தில்தான் துவாபர யுகத்தில் பிரஹலாதன் என்னும் அரசன் ஸ்ரீராமரை வேண்டி யாகங்கள் செய்தான் என்பதால் இது ஒரு புனிதத்தலம் என ஸ்வாமிகள் அருளினார். இந்த மந்திராலயம் என்னும் புனித க்ஷேத்திரத்தில் ஸ்வாமிகள் பல காலம் தங்கி, தமது ஆன்மீகப் பயணத்தைத் தொடர்ந்தார். வருபவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் என்னும் ஸ்வாமிகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கு இன்றும் இந்தப் புனிதமான அன்னதானம் பல பக்தர்களின் நன்கொடையால் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
'
ஸ்ரீ ராகவேந்திரரின் இறுதியுரை'
***********************************************
1671-ம் வருஷம், ஷ்ரவண கிருஷ்ண பக்ஷ த்விதீய திதியன்று, மந்திராலயத்தில் தமது ஜீவ ஸமாதியைக் காணக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே ஸ்வாமிகள் உள்ளமுருக்கும் அருளுரை ஒன்றை நிகழ்த்தினார். அதில் அவர் அருளிய முக்கியச் செய்திகள் பின்வருமாறு:

1. நேர்மையான முறையில் வாழாது, நேரிய சிந்தனை வர இயலாது.

2. நலிந்தவர்க்குச் செய்யும் சமூக சேவை, நாராயணனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்படும். மானவ சேவையே மாதவ சேவை.

3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு எப்போதும் விலகியே நில்லுங்கள்.

4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.

5. இறைவன் மீது பக்தி செலுத்துங்கள். ஆனால், இந்த பக்தி மூட பக்தியாக இருக்கக் கூடாது.

மேற்கூறிய அந்தப் புனித தினத்தில் ஸ்வாமிகள் ஜீவ ஸமாதி எய்தினார். அந்த இடம் பிருந்தாவனம் என அழைக்கப் படுகிறது. ஆண்டுதோறும் இந்த நன்னாளில் பிருந்தாவனத்திலும், உல‌கெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் பிற பிருந்தாவனங்களிலும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மந்திராலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமிகளின் அருளை இன்றும் பெறுகின்றனர்.

No comments:

Post a Comment