Courtesy: Tamil Saivites
கடிதம் எழுதிய கடவுள்!!!
கடிதம் என்றதும் காதலுக்கு தாவி, அப்படியே உமையம்மைக்குத் தாவி, காதல் கடிதம் எழுதிய கடவுள் என்றெல்லாம் புல்லரிக்க வேண்டாம்! பிச்சு பிச்சு!
---------------
அடியாருக்காக ஈசன் செய்யும் திருவிளையாடல்கள் எண்ணிறந்தவை. அவற்றில் ஈசன் மடல் வரைந்த அற்புதங்களும் உண்டு! இரு சந்தர்ப்பங்களில் இப்படிக் கடிதம் எழுதியிருக்கிறான் இறைவன்!
அந்த இரு கடிதங்களில் ஒன்று, 12 சைவத் திருமுறைகளில் ஒன்றான நாற்பது பிரபந்தங்களில் ( பதினோராம் திருமுறை) முதலாவது பாசுரமாக – "திருமுகப்பாசுரமா"க வைக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்த முதல் திருமுகம் (கடிதம்), சுந்தரமூர்த்தி நாயனாரோடு நட்பு பூண்டொழுகிய சேரமான் பெருமானுக்கு ஈசன் அனுப்பியது. பாணபத்திரன் எனும் அடியவரின் வறுமையை நீக்க உதவிகேட்டு அனுப்பப்பட்டது.
"பல சிறப்புகள் வாய்ந்த மதுரைப்பதியில் வாழும் சிவனாகிய நான் எழுதுவது, சேரல மன்னனே காண்பாய். யாழ்மீட்டும் பாணபத்திரன் எனும் என் அன்பன் உன்னை நாடி வருகிறான். அவனுக்கு பொருள் கொடுத்தனுப்புவாய்!"
மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில் பொழில் ஆலவாயில்
மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
ஒரிமையின் உரிமையின் உதவி ஒளி திகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாணபத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வர விடுப்பதுவே.
இன்னொரு மடல், பிற்காலத்தில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரிடம் கொடுக்கப்பட்ட "சீட்டுக் கவி"!
முன்பு பார்த்த திருமுகப் பாசுரத்தை மதுரை வெள்ளியம்பலத்தான் வரைய, இந்தச் சீட்டுக்கவியை எழுதுபவர், தில்லைச் சிற்றம்பலத்தான்!
சந்தான குரவர்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சாரியாரிடம், "பெற்றான் சாம்பான்" எனும் அடியவர்க்கு தீட்சையும் முக்தியும் அளிக்குமாறு இறைவன் சீட்டொன்றில் எழுதி அனுப்பிய கவி தான் சீட்டுக்கவி.
"அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க்கு எழுதிய கைச்சீட்டு – படியின் மிசைப்
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து
முத்தி அளிக்க முறை."
(கொற்றங்குடியார் – கொற்றங்குடியில் வாழ்ந்த உமாபதியார்.)
அச்சீட்டுக்கவி இறைவன் அனுப்பியது என்பதை நம்ப மறுத்த மக்கள், உமாபதியாரால் சாதாரண மானிடனுக்கு முக்தியளிக்க முடியாது என்றும் கேலி செய்தனர்.
அவர்கள் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம், அருகிலிருந்த கள்ளிச் செடிக்கு தீட்சையும் முக்தியும் அளித்து, அதை வானமார்க்கமாக செல்லச் செய்வித்தார் உமாபதியார்! மட்டுமல்லாமல், பெற்றான் சாம்பானுக்கும் பலரும் காண முக்தியளித்தருளினார்!
முதலாவது மடல் எழுதப்பட்டது, பொருள் வேண்டும் என்ற உலகியல் நோக்கத்திற்காக! அதில் மன்னனுக்கே கட்டளையிடும் பெருமிதம் தொனிக்கிறது. இரண்டாவது மடல், பேரின்ப நிலையைக் கோருவதற்கானது, அதில் எளிமை இழையோடுவதை உணர முடியும். "அடியார்க்கு எளியன்" என்று இறைவன் துவங்குவதே அருமையிலும் அருமை!!
என்னே அவன் திருவிளையாடல்! உலகனைத்திற்கும் தலைவனாயிருந்தும், தன் அடியவர்களுக்கு உதவி கோரி, இன்னுமிரு அடியவர்க்கு உத்தரவிடுகிறான் எம்பெருமான்! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையன்றோ ஈசன்!
"அழுதால் உன்னைப் பெறலாமே!!!" __/\__
No comments:
Post a Comment