Monday, April 3, 2017

Story from Mahabharata

courtesy:https://venmurasu.in/2014/11/20/

"அரசே, பிரஹஸ்பதியின் நீதிசூக்தம் ஒரு கதையைச் சொல்கிறது. அதை இங்கே சொல்ல எனக்கு ஒப்பளிக்கவேண்டும்" என்ற பின் கணிகர் சொல்லலானார். முன்னர் காட்டில் அறநூல்களை கற்றறிந்ததும் அமைதியானது என்று பெயர்பெற்றதும் வேட்டையாடி தன் உணவை ஈட்டும் திறனற்ற கோழையுமாகிய ஒரு நரி வாழ்ந்துவந்தது. அது தன்னுடன் ஒரு விழியிழந்த புலியையும் காலிழந்த செந்நாயையும் கீரிப்பிள்ளையையும் எலியையும் சேர்த்துக்கொண்டது. அவை வேட்டையாடி உண்ணமுடியாதவையாக துயருற்றிருந்தன. நரி ஒரு சூழ்ச்சியைச் செய்தது. அங்குள்ள மான்கூட்டங்களில் கொழுத்து திரண்ட மான் ஒன்று தூங்கிக்கொண்டிருக்கையில் எலியை அனுப்பி அதன் காலை கடித்து புண்ணாக்கும்படி சொன்னது.

கால்புண்ணான மான் விரைந்தோட முடியாமல் நொண்டியபோது செந்நாய் அதை மறித்துத் துரத்தியது. கீரி அதை வழிமறித்து கண்ணற்ற புலியின் அருகே கொண்டுசென்றது. புலி அதை அடித்துக்கொன்றது. 'அனைவரும் நீராடி வாருங்கள். அதன்பின் உணவுண்போம். அதுவரை நான் இதற்குக் காவலிருக்கிறேன். எலி நீராடும் வழக்கமில்லாதது அது எனக்குத் துணையிருக்கட்டும்' என்றது நரி. புலி முதலில் நீராடி வந்து நரியிடம் 'நீ சென்று நீராடி வா, நாம் உண்போம்' என்றது. நரி பெருமூச்சுவிட்டு 'நீங்களில்லாதபோது ஒரு சிறிய விவாதம் எழுந்தது என்றது. இந்த மானைக் கொன்ற முதல்வேட்டையாளன் நானே, எனவே இதன் ஈரல் எனக்குரியது என்று எலி சொல்கிறது. நான் அதை ஏற்கவில்லை. இந்த மானைக்கொன்ற அரசர் நீங்களே என்றேன். எலி அதை ஏற்கமறுக்கிறது' என்றது.

சினம்கொண்ட புலி உறுமியபடி ஒரே அடியில் எலியைக் கொன்று தின்றுவிட்டது. பின்னர் 'ஆம், எலி சொல்வதே சரி. ஒரு சிற்றெலியைத் துணைகொண்டு நான் உணவுண்டால் என் குலத்திற்கு இழுக்கு. என்னால் முடிந்தவேட்டையை ஆடுகிறேன். இல்லையேல் பட்டினி கிடந்து இறக்கிறேன்' என்று சொல்லி அகன்றுசென்றது. அதன்பின் செந்நாய் அங்கே வந்தது. நரி அதனிடம் 'புலி தன் மனைவியை அழைத்துவருவதற்காகச் சென்றிருக்கிறது. இருவருக்கும் இந்த உணவு போதாது. எனவே செந்நாயையும் உண்ணலாம் என்று அது சொன்னதை நான் கேட்டேன்' என்றது. செந்நாய் அஞ்சி அக்கணமே ஓடி மறைந்தது.

இறுதியாக கீரி குளித்துவிட்டு வந்தது. கீரியிடம் நரி 'இப்போது இவ்வுணவுக்கு நாமிருவர் மட்டுமே போட்டியிடுகிறோம். கானக முறைமைப்படி நாம் ஒருவருக்கொருவர் போரிடுவோம். எவர் வெல்கிறார்களோ அவருக்குரியது இவ்வுணவு' என்றது. கீரி திகைத்தபின் 'நரியுடன் கீரி போரிடமுடியுமா என்ன? என் உயிரை காத்துக்கொள்கிறேன்' என்று சொல்லி விரைந்தோடி மறைந்தது. நரி அந்த மானை பலநாட்கள் வைத்திருந்து உண்டது." 

No comments:

Post a Comment