Tuesday, April 11, 2017

Excerpts during Sapra yaga in Mahabharata

ஓம்! மனிதர்களில் மேன்மையானவர்களாகிய {புருஷோத்தமர்களாகிய} நாராயணன் மற்றும் நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}

"சௌதி" என்று அழைக்கப்பட்ட லோமஹர்ஷணரின் மகனான உக்ரசிரவன் புராணங்களில் சிறந்த ஞானம் கொண்டவர் ஆவார். அவர், ஒரு நாள், நைமிச வனத்தில் "குலபதி" என்று அழைக்கப்பட்ட சௌனகரின் பன்னிரண்டு வருட {12} வேள்வியில் பங்கெடுத்து கடினமான விரதங்களை மேற்கொண்டு உட்கார்ந்திருந்த, பெரும் முனிவர்களை தன்னடக்கத்துடன் அணுகினார். அந்த ஆன்மீகவாதிகள் சௌதியின் அழகான வர்ணனைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அவரை வரவேற்றனர். சரியான முறையில் அந்த தெய்வீக மனிதர்களால் வரவேற்கப்பட்ட சௌதி, அவர்களை இருகரம் கூப்பி வணங்கினார். பிறகு, அவர்களது ஆன்ம முன்னேற்றம் குறித்து விசாரித்தார் {சௌதி}. 

பிறகு, எல்லோரும் அமர்ந்த பின்னர் லோமஹர்சனரின் மகன் (சௌதி), தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். சௌதியின் பயணக் களைப்பு நீங்கியதும், ஒரு முனிவர் விவாதத்தை துவக்கினார். "ஓ தாமரைக்கண் சௌதியே, நீர் எங்கிருந்து வருகிறீர், எங்கெல்லாம் உங்கள் காலத்தை கழித்தீர்? சொல்வீராக!" என்றார். பேச்சில் வல்லவரான சௌதி அந்த முனிவர்களின் பெரிய கூட்டத்தில் அவர்களின் வாழ்வு தரத்துக்கேற்றபடி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முற்பட்டார்.

        சௌதி, "பரீக்ஷித்தின் மகனான அரசமுனி *ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் (நாகவேள்வியில்) கிருஷ்ண துவைபாயணரால் {வியாசரால்} இயற்றப்பட்ட வித்தியாசமான, புனிதமான, ஆச்சரியமான கதைகள் அடங்கிய மஹாபாரதத்தை வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} உரைத்தார். அதை கேட்டு விட்டு, பல புண்ணிய நதிகளுக்கும், புனித இடங்களுக்கும் பயணித்து, உயர் பிறப்பாளர்களால் மிகவும் மதிக்கப்படும் கௌரவ_பாண்டவ போர் நடைபெற்ற சமந்தபஞ்சகம் {குருசேத்திரம்} சென்று, அதன் பிறகு உங்களைப் பார்க்கும் ஆவலில், இங்கு {நைமிசாரண்யம்} வந்தேன். 

    ஓ பெரும் முனிவர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு பிரம்மாவைப் போன்றவர்கள்; கடவுளின் ஆசி பெற்று உங்களது தியாகங்களினால் சூரியனைப் போல் ஒளி வீசுபவர்கள். பெரும் தவங்களை முடித்தவர்கள். புனித நெருப்புக்கு உணவு அளித்தவர்கள்; ஆனாலும் தன்னடக்கத்துடன் அமர்ந்திருப்பவர்கள். ஓ! பிறப்பால் உயர்ந்தவர்களே! உங்களுக்கு ஆன்ம கடமைகளையும், உலக லாபங்களையும் சொல்லும் புராணங்களை திரும்பச் சொல்லவா? அல்லது மிகுந்த மரியாதைக்குரிய பெரும் முனிவர்கள் மற்றும் மன்னர்களின் செயல்களை விவரிக்கும் கதைகளை சொல்லட்டுமா?" என்று கேட்டார்.{சௌதி}

வியாசர் 
(கிருஷ்ண துவைபாயனர்) 

அதற்கு முனிவர் ஒருவர், "பெரும் முனிவர் துவைபாயணரால் {வியாசரால்} முதலில் இயற்றப்பட்டு, அதன்பிறகு, தேவர்களாலும், பிரம்மமுனிகளாலும் பெரிதும் மதித்து ரசிக்கப்பட்டு, உரைநடைகளிலேயே பெரிதும் துதிக்கப்பட்டு, தனக்கென இடம் பிடித்திருக்கும், வித்தியாசமான, வேதக் கருத்துக்கள் அடங்கிய, புனிதமான படைப்பு அந்த புராணம். அழகான மொழியில் இயற்றப்பட்டு, மற்ற புராணங்களில் உள்ள கருத்துக்களையும் உள்ளடக்கி, மற்ற சாத்திரங்களிலும் தெளிவாக விவரிக்கப்பட்டு, நான்கு வேதங்களின் சாறையும் தன்னகத்தே கொண்டது அது. வைசம்பாயண முனிவர் {வியாசரின் சீடர்}, துவைபாயணரின் {வியாசரின்} கட்டளைக்கிணங்கி அவர் {வியாசர்} முன்னிலையிலேயே, அரசன் ஜனமேஜயனின் நாக வேள்வியில் விவரிக்கப்பட்ட புனித படைப்பான, பாரதம் என்று அழைக்கப்படும் அந்த வரலாற்றை அறிந்து கொள்ள நாங்கள் எல்லோரும் ஆவலாய் இருக்கிறோம்," என்று சொன்னார்.

சௌதி சொன்னார், "பலரும் பூஜிக்கும், பிறப்பும் இறப்பும் அறியா ஈசனை வணங்குகிறேன். தவறறியா, மாற்றமில்லா, இருந்தும் இல்லாத பிரம்மனை வணங்குகிறேன். ஆதியானவர், பழமையானவர், முடிவில்லாதவராகிய விஷ்ணுவை வணங்குகிறேன். பிரபலமாக மதிக்கப்படும் வியாசரின் புனிதமான சிந்தனைகளை நான் இப்பொழுது  இங்கு சொல்லப் போகிறேன். சில புலவர்கள் இந்த வரலாற்றை ஏற்கனவே விவரித்து இருகிறார்கள், சிலர் அதை பலருக்கு பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்கள், மற்றவர்கள் இந்த உலகம் உள்ளளவும் இந்த வரலாற்றை உலகத்தில் பரப்புவார்கள். இந்த வரலாறு ஞானத்தின் ஊற்றுக்கண், மூவுலகங்களிலும் அறியப்பட்டது. இது உயர்பிறப்பாளர்களிடம் விவரமாகவும், சுருக்கமாகவும் இரு வடிவங்களில் உள்ளது. இது பண்டிதர்களால் புலமைக்காகவும், உணர்வுகளுக்காகவும், மனித தெய்வ உரையாடல்களுக்காகவும் அலசி ஆராயப்பட்டது.

இந்த உலகம் ஒளியில்லாமல், இருளால் சூழப்பட்டிருந்த போது, அடிப்படை படைப்பான, ஒரு பெரிய முட்டை உருவானது. அது எல்லா உயிர்களின் வித்தையும் உள்ளடக்கியது. அது மகாதிவ்யமாகும். அது யுகங்களின் ஆரம்பத்தில் உருவானது. அந்த முட்டையில் பிரம்மனின் உண்மைஒளி அடங்கியிருந்தது.. அந்த முட்டையிலிருந்து பிரஜாபதியான (குடியரசன்) பெருந்தகப்பன் பிரம்மா - சூரகுரு {சுக்ராச்சாரியார்} மற்றும் ஸ்தானுவுடன் வெளிப்பட்டார். அதன் பிறகு இருபத்தியொரு{21} பிரஜாபதிகள் தோன்றினார்கள். அதாவது, மனு, வசிஷ்டர் மற்றும் பரமேஷ்டி, பத்து பிரசேதர்கள்{10}, தக்ஷன், தக்ஷனின் ஏழு{7} மகன்கள். அதன் பிறகு, விஸ்வ தேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள், யக்ஷர்கள், சத்யர்கள், பிசாசங்கள், குஹ்யகர்கள், மற்றும் பித்ரிக்கள் தோன்றினார்கள். 

பிரம்மத்திலிருந்து தொடர்ச்சியாக தோன்றியவை...
அதன் பிறகு, புனிதமான ஞானம் கொண்ட பிரம்மமுனிவர்களும், நற்குணம் பல கொண்ட அரசமுனிகளும் தோன்றினார்கள். நீர், சொர்க்கம், பூமி, காற்று, ஆகாயம், சொர்க்கத்தின் திக்குகள், வருடங்கள், காலங்கள், மாதங்கள், பிறைநாட்கள், பட்சங்கள், இரவு-பகல் சேர்ந்த ஒரு நாள் ஆகியன தொடர்ச்சியாக தோன்றின. மனிதனுக்கு தெரிந்த அனைத்தும் இப்படியே உருவாகின.

யுகமுடிவில் யுகமழிந்து
யுகம் தொடங்கும்

இந்த அண்டத்தில் படைக்கப்பட்ட அனைத்தும், அசைவன அசையாதன ஆகிய அனைத்தும் இந்த உலகத்தின் அந்தியில், யுகங்களின் முடிவில் மீண்டும் அழியும். அதன்பிறகு அடுத்த யுகச் சக்கரத்தில் அனைத்தும் மீண்டும் படைக்கப்படும். எப்படி பல கனிகள், அதனதன் காலத்தில் கனிந்து விழுந்து மறுபடி காய் காய்கின்றனவோ அப்படி இந்த யுகச்சக்கரம் சுழலும்.

தேவர்கள் மொத்தம் முப்பத்தி மூவாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று{33333}. திவ்-ன் மகன்கள்: பிரகத்பானு, சக்சுஸ், ஆத்மவிபாவசு, சவிதா, ரிசிகா, அர்கா, பானு, ஆஸ்வா மற்றும் ரவி. இந்த பழைய காலத்து விசுவசுவான்களில் மஹ்யா இளையவன், அவனது மகன், தேவவிரதன், அவனது மகன் சுவவிரதன், அவனுக்கு மூன்று மகன்கள், தசஜோதி, சதஜோதி, சஹஸ்ரஜோதி, ஒவ்வொருவரும் நிறைய மக்களை பெற்றனர். புகழ்வாய்ந்த தசஜோதிக்கு பத்தாயிரம்{10,000} மக்களும், சதஜோதிக்கு அதைவிட பத்து மடங்கும்{1,00,000}, சஹஸ்ரஜோதிக்கு அதைவிட பத்துமடங்கும்{10,00,000} மக்கள் இருந்தனர். இவர்களிலிருந்து கௌரவர்கள், யதுக்கள், பரதர்கள், யயாதி, இக்ஷவாகு ஆகியோர் வந்தனர். அரசமுனிகளும் இந்த வரிசையில்தான் வந்தனர். இவர்களின் சந்ததியினர் பல்கி பெருகி எண்ணற்றவர்களாகி அவர்களது இருப்பிடங்களும் எண்ணற்றதாகிவிட்டன.

புரிந்து கொள்ள கடினமான மூன்று அடுக்கு - வேதம், யோகம், விஞ்ஞானம் - தர்மம், அர்த்தம், காமம் (அறம், பொருள், இன்பம்). அறம், பொருள், மற்றும் இன்பத்தை விளக்கும் பல புத்தகங்கள் இருக்கின்றன. மனிதனின் ஒழுக்க நீதிகள், வரலாறுகள், சுருதிகளுக்கு விளக்கங்கள் என பல இருக்கின்றன. இவை அனைத்தும் வியாச முனிவரின் இந்த புராணத்தில் அடங்கி விடும்.

வியாச முனிவர் இந்த ஞானத்தை, விவரமாகவும் சுருக்கமாகவும் இரு வடிவங்களில் அளித்தார். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது பண்டிதர்களின் விருப்பத்தைப் பொருத்தது. சிலர் பாரதத்தை அதிலிருக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களுக்காக படிக்கின்றனர். சிலர் கதைக்காக படிக்கின்றனர். சிலர் கருத்துக்களுக்காக படிக்கின்றனர். சில அந்தணர்கள் முழுவதுமாக படிக்கின்றனர். சிலர் பாரதத்தை விவரிப்பதில் திறமைவாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சிலர் அதை ஞாபகம் வைத்துக் கொள்வதில் சிறந்து விளங்குகின்றனர்.

சத்தியவதி குமாரன் (வியாசர்), விரதங்களாலும் தவத்தாலும் வேதங்களை அலசிப்பார்த்து அதன்பிறகு இந்த புனித வரலாற்றை ஒருங்கிணைத்தார். பராசரர் குமாரனான ஞானம் வாய்ந்த பிரம்மமுனி துவைபாயண வியாசர் இந்த பெரும் வர்ணனையை முடித்த பிறகு, அதை எப்படித் தன் சீடர்களுக்குக் கற்பிப்பது என்று சிந்தித்தார். பிரம்மா, வியாசரின் விருப்பத்தை அறிந்து, அவரது இருப்பிடத்திற்குச் சென்று முனிவரை மனங்குளிர்வித்தார். முனிவர்கள் சூழ இருந்த வியாசர் பிரம்மாவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து, கைகூப்பி வணங்கி அவர் அமர ஆசனம் அளித்தார்.

ஹிரண்யகர்பர் (பிரம்மா) என்று அழைக்கப்பட்டவரை, வியாசர் வலம் வந்து அருகில் நின்றார். பிரம்மா அவரைத் தனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் முழுபாசத்தோடும் மகிழ்ச்சியான புன்னகையுடனும் அமரச் செய்தார். அதன்பிறகு வியாசர், பிரம்மாவிடம் "ஓ தெய்வீக பிரம்மாவே! என்னால் ஒரு பாடல் (சுலோகம்) இயற்றப்பட்டுள்ளது, அது மதிக்கப்பட்டுள்ளது. இதில் வேதங்களின் சூட்சுமங்களை விவரித்திருக்கிறேன், உபநிஷதங்களில் வரும் சடங்குகள், அங்கங்கள், புராணங்கள், வரலாறு அனைத்தையும் இதில் ஒருங்கிணைத்திருக்கிறேன். ஆன்மீகம், ஆன்மீக மாணவனின் கடமைகள், சூரிய சந்திரனின் பரிமாணங்கள், காலங்கள், அழிவு, பயம், நோய், இருப்பு, இல்லாமை, வாழ்வியல் வகைகள், நான்கு வர்ணங்களுக்கான விதிகள், புராணங்கள், கிரகங்கள், கிரகணங்கள், நட்சத்திரங்கள், யுகங்கள், ரிக், சாம, யஜூர் வேதங்கள், ஆதியாத்மா, நியாய சாத்திரம், உச்சரிப்பு சாத்திரம், மருத்துவ சாத்திரம், தர்ம சாத்திரம், பாசுபத தர்மம், வானவர், மனிதர் பிறப்பு, புண்ணிய நதிகள், புனிதமான இடங்கள், மலைகள், காடுகள், சமுத்திரம், வானவர் நகரங்கள், கல்பங்கள், போர்க்கலை, பல விதமான நாடுகள், மொழிகள், மனிதர்களின் நாகரிகங்கள், எல்லாவற்றையும் பிரதிபலித்திருக்கிறேன். ஆனால், அதை எழுத ஒரு எழுத்தரை இந்த உலகத்தில் நான் காண வில்லை," என்றார்.

பிரம்மா சொன்னார் "தத்தமது தெய்வீகத் தன்மைகளால் மதிக்கப்படும் இந்த பெரும் முனிவர்களின் முன்னிலையில் உமக்குக் கிட்டியுள்ள தெய்வீக ஞானத்தை பாராட்டுகிறேன். தெய்வீக வார்த்தைகள் உச்சரிக்கப்படும் முன்னரே, அவற்றை உண்மை நிறைந்த மொழிகளால் நீர் வெளிக்கொணர்வீர், என்பது எமக்குத் தெரியும். உமது படைப்பு பாக்களால் (சுலோகங்களால்) ஆனது என்று நீர் சொன்னீர். ஆகவே, அவை பாக்கள் (சுலோகங்கள்) என்றே அழைக்கப்படட்டும். உமக்கு நிகரான புலவர்கள் மூவலகங்களில் இருக்க மாட்டார்கள். ஓ முனி {வியாசரே}! அவற்றை எழுதுவதற்கு கணேசரை தியானிப்பீராக," என்றார் {பிரம்மா}.

கணேசரும் வியாசரும்

சௌதி சொன்னார், "இப்படிச் சொல்லிவிட்டு பிரம்மா தனது இருப்பிடம் திரும்பினார். வியாசர் கணேசரைத் தியானித்தார். தடைகளை அகற்றி, பக்தர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் கணேசர், வியாசரின் முன் உடனே தோன்றினார். வியாசர் அவரை வணங்கி, ஆசனம் கொடுத்து "ஓ கனங்களின் வழிகாட்டியே! எனது எண்ணத்தில் இருக்கும் பாரதத்தை, நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும்," என்றார் {வியாசர்}.

இதைக்கேட்ட கணேசர் "எனது எழுத்தாணி ஒருக் கணமும் நிற்காமல், நீர் வேகமாக சொல்வதாக இருந்தால், நான் உமது படைப்புக்கு எழுத்தராக இருக்கிறேன்," என்றார்.

வியாசர் அந்தக் கடவுளிடம் {விநாயகரிடம்} "ஏதாவது ஒரு வார்த்தையையோ பதத்தையோ புரிந்து கொள்ள கடினமாக இருந்து, நீர் எழுதுவதை நிறுத்தினாலொழிய, உமது எழுத்தாணி நிற்காது என்று உறுதியளிக்கிறேன்,'' என்றார். தனது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டதும் கணேசர் "ஓம்!" என்று சொல்லிவிட்டு எழுதத் தயாரானார். வியாசரும் சொல்லத் துவங்கினார். இடையிடையே புரிந்து கொள்வதற்கு கடினமான சொற்களையும், கடினமான கருத்துக்களையும் சேர்த்து, அந்த வரலாற்றை தனது ஒப்பந்தத்திற்கு ஏற்ப சொன்னார்.

சௌதி, "எனக்கு எட்டாயிரத்து எண்ணூறு(8800) பாக்கள் தெரியும், சுகருக்கும் {வியாசரின் மகன்}, சஞ்சயருக்கும் அதே அளவு தெரியும். சில கடினமான செய்யுட்களை இன்னும் கூட பலரால் புரிந்து கொள்ள முடியாது. யோசிப்பதற்கு கணேசர் ஒரு கனம் எடுத்தால், அந்த நேரத்திற்குள் பல  செய்யுட்களை படைத்து விடுவார் வியாசர்.

ஒளியிழந்து அறியாமை இருளில் தவிக்கும் குருடர்களின் கண்களை திறந்திருக்கிறது இப்படைப்பு. சூரியன் எப்படி இருளை அகற்றுவானோ, அப்படி அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளில் பாரதம் காட்டும் வழி, மக்களின் அறியாமையை அகற்றும். முழு நிலவு உதிக்கும் போது எப்படி அல்லி மலர் தனது இதழ்களை விரிக்குமோ அப்படி இந்த புராணம் மனிதனின் அறிவை மலரச் செய்யும். வரலாறு எனும் விளக்கு, அறியாமை எனும் இருளை அகற்றி, இயற்கையை, உலகத்தைக் காண்பிக்கும்.

இந்த படைப்பு, ஒரு மரத்தைப் போன்றது, அதன் அதிகாரங்கள் விதைகளைப் போன்றன; பௌலோம பர்வம், ஆஸ்தீகப் பர்வம் ஆகியன வேர் போன்றன, சம்பவ பர்வம் நடுப்பகுதியைப் போன்றது; சபா பர்வமும், ஆரண்ய பர்வமும் கிளைகளைப் போன்றன, ஆரண்ய பர்வம் மர்ம முடிச்சுகள் உடையது. விராட பர்வமும், உத்யோக பர்வமும் மரத்தின் பட்டையைப் போன்றன, பீஷ்ம பர்வம் முக்கிய கிளை; துரோண பர்வம் இலைகள்; கர்ண பர்வம் மலர்கள்; சல்ய பர்வம் நறுமணம்; ஸ்திரீ பர்வம் மற்றும் அய்ஷிக பர்வம் ஆகியன மரத்தின் நிழல்; சாந்தி பர்வம் பெரிய பழம்; அஸ்வமேத பர்வம் அழியாத உள் நரம்புகள்; ஆசிரமவாசிக பர்வம் அந்த மரத்தின் வளர்ச்சி; மௌஸல பர்வம் வேதங்களின் துதி, இது சிறந்த அந்தணர்களால் மதிக்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த பாரத மரம், மனிதனுக்கு வாழ்வதற்கு எவ்வாறு மேகங்கள் உதவுகின்றனவோ அப்படி உதவும்," என்றார்.

சௌதி தொடர்ந்தார் "நான் இப்போது அந்த மரத்தின் சுவை மிகுந்த பகுதிகளை சுருக்கமாக சொல்கிறேன். முன்பு ஒரு காலத்தில் கிருஷ்ண துவாபாயணர்{வியாசர்}, கங்கை மைந்தன் பீஷ்மரின் தூண்டுதலாலும், தனது தாயின் {சத்தியவதி} தூண்டுதலாலும், விசித்திரவீரியனின் இரு மனைவிகளிடமும் {அம்பிகா,அம்பாலிகா} நெருப்பைப் போன்ற மூன்று குமாரர்களை பெற்றார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்பது அந்த குமாரர்களின் பெயர்களாகும். பிறகு அவரது இருப்பிடம் சென்றார்.

அந்த மூன்று பேரும் பிறந்து, வளர்ந்து, பெரும்பயணத்தில் பிரிந்த பிறகு, பெருமுனிவர் வியாசர் இந்த பாரதத்தை இந்த மானுட உலகிற்கு படைத்தார்; *ஜனமேஜயனும், ஆயிரமாயிரம் அந்தணர்களும் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் பேரில், {வியாசர்} தனது அருகில் உட்கார்ந்திருந்த தனது சீடனான வைசம்பாயணரை பாரதம் உரைக்கும்படி பணித்தார். இந்த உரைகள், பாம்பு வேள்வியின் (நாகயாகத்தின்) இடைவெளிகளில் உரைத்தனவாகும்".

No comments:

Post a Comment