Thursday, April 13, 2017

Ekadasi - Periyavaa

உபவாஸமும் உழைப்பும்!
" ஏகாதசிக்கு லீவில்லையே! சாப்பிடாமல் எப்படி வேலை பண்ணுவது?"என்றால், இதற்கு இரண்டு விதமாகப் பதில் சொல்கிறேன்.
ஒன்று:எல்லாரும் ஏகாதசி விரதம் இருப்பதென்று வைத்துக்கொண்டு சர்க்காரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விட்டால் அன்றைக்கு லீவே விட்டு விடுவார்கள்.
இரண்டு:இப்படிப் பதினைந்து நாளுக்கு ஒரு நாள் சாப்பிடாததால் வாஸ்தவத்தில் தெம்பு குறையவே குறையாது. 
ஏதோ 'ஸென்டிமென்டலா'கத்தான் 'நாம் சாப்பிடவில்லையே, நமக்கு சக்தி இருக்காது', என்று பயப்பட்டு அந்த பயத்தினாலேயே பலஹீனத்தை வரவழைத்துக் கொள்வதாயிருக்குமே தவிர வாஸ்தவத்தில் அன்றைக்கு நாம் மனஸைக் கொஞ்சம் உடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒதுங்கியிருந்தால், அன்றுதான் கூடுதலாக சக்தி, உத்ஸாஹம் எல்லாம் இருப்பதாகத் தெரியும். மற்ற தினங்களை விடவும் அன்று நறுவிசாக நிறைய வேலை செய்ய முடியும். 
மனமிருந்தால் வழியுண்டு. உடம்புக்குப் பல தோஷங்களிருந்தாலும் அதற்கு ஒரு பெரிய குணமுண்டு. அதாவது நாம் பழக்குகிறபடி கேட்கும். அதனால் ஆபீஸ் கார்யம் பண்ண முடியாதபடி ஏகாதசி உபவாஸம் எவரையும் அசக்தமாக்கி விடாமல் பழக்கிக் கொண்டு விடலாம். ஆனாலும் அன்று முழுக்க பகவத் பரமாகவே செலவழிக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமானாலும் எல்லாரும் சேர்ந்து டிமான்ட் பண்ணி லீவ் விடும்படியாகச் செய்யலாம்.
வருஷத்தில் எல்லா ஏகாதசியிலும் பூர்ண உபவாஸமிருக்க முடியாமல் ஒருவேளை பலஹாரம் பண்ணினாலும் ஒரே ஒரு ஏகாதசியாவது பூர்ண உபவாஸமாக முழுப் பட்டினி இருக்க வேண்டும். பீமனுக்குப் பசியே தாங்காதாம். அதனால் அவன் எல்லா ஏகாதசிகளிலும் சுத்த உபவாஸமிருக்க முடியாமல், வியாஸரைக் கேட்டு, இப்படி ஒரு ஏகாதசியில் பூர்ண உபவாஸம் இருப்பதற்கே பலன் உண்டு என்று வரம் வாங்கிக் கொண்டானாம். ஆனால் அந்த ஏகாதசி வைகுண்ட ஏகாதசி அல்ல.
இந்த தேசத்தில் எது எப்படியானாலும் வ்ரதோபவாஸங்களில் தலைசிறந்ததான ஏகாதசியை அநுஷ்டானத்தில் இருக்கப் பண்ண வேண்டும். ரொம்பவும் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்த இந்த மஹா தர்மம் இரண்டு மூன்று தலைமுறைகளில் கொள்ளை போயிருக்கிறது. இன்றைக்கும் எங்கேயோ இரண்டு மாத்வப் பாட்டிகள் ஏகாதசி சுத்தோபவாஸம் பண்ணுவதால்தான் இந்த மட்டுமாவது மழை கிழை பெய்து கொண்டிருக்கிறது.

-தெய்வத்தின் குரல்

No comments:

Post a Comment