Wednesday, March 1, 2017

Bogar sidhar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  🍁 *போகர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
காலங்கி நாதர் சமாதி முன் நின்று கொண்டிருந்த போகரின் 
காதுகளில் சிரிப்பலைகள் பேரிரைச்சலாய் அறைந்தது.

போகர் நாலாதிசைகளிலும் சுற்றும் முற்றும் பார்த்தார். சிரிப்பலைகள்தான் கேட்டதேயொழிய எங்கும் யாரையும் காணவில்லை. 
 
ஆளரவமே இல்லாதிருக்கும் இவ்விடத்தில் திடீரென கூட்டமாய் சித்தர்கள் நின்று கொண்டிருந்தனர். தன் முன் தெரிந்த அத்தனை சித்தர்களையும் சுற்று சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று போகர் எண்ணினார்.

போகர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இருந்த இடத்தில்  இருந்தபடியே வலம் வந்து அவர்களை வணங்கி... அச்சித்தர்களைப் பார்த்து...உலகை வாழ்விக்கும் சித்த புருஷர்களே, தாங்கள் எங்கே இருந்தீர்கள்?" எனக் கேட்டார் போகர்.

"போகா!, நாங்கள் எப்போதும் இங்கேயேதான் இருந்து கொண்டிருக்கிறோம். எங்களின் குருவான காலங்கி நாதரின் மாணவர்கள் நாங்கள். எங்கள் குருவின் சமாதியை விட்டு சிறு வேளையும் நீங்கிருக்க மாட்டோம் என்று அத்தனை சித்தர்களும் ஒருசேர கூறினார்கள்.

இதுவரை நானொருவன் மட்டுமே, காலங்கி நாதரின் மாணவனென கர்வம் கொண்டிருந்தேன். நீங்கள் எல்லோருமாக காலங்கி நாதரின் மாணவர்கள் என்று சொன்னதும், என் கர்வம் அடியோடு போய் விட்டது. அத்தனை சித்தர்களும் என்னை மன்னிக்கும் பக்குவம் காட்டியருள வேண்டும்  என கூறிவிட்டு, அதுசரி....உங்கள் குருவின் சமாதியினிடத்து எத்தனை காலமாய் நகராது இருக்கிறீர்கள்?" என போகர் அவர்களிடம் மிகுந்த பணிவோடு கேட்டார்.

அதற்கு அச்சித்தர்கள்...அரிச்சந்திரன், ராவணன், ராமர், பாஞ்சாலன், புரூரவஸ், திருதராஷ்டிரன், விராடன், பாண்டவர்கள் அனைவரும் அவர்கள் குருநாதர் சொல்லிக் கொடுத்ததை இங்கே பரிட்சார்த்தமாக சோதனை செய்ய வந்த காலத்தில் இருந்தே தாங்கள் அங்கிருப்பதை சொன்ன அந்த சித்தர்கள் போகரைத் தம் அருகில் வரும்படி அழைத்தார்கள்.

"போகா! அங்கு பார்!... இங்கு பார்!.. இதோ இந்தப்ழக்கம் பார்!.. இங்கு திரும்பு... இப்படிப் பார்...என பல இடங்களையும் அவர்கள் சுட்டிக்காட்ட, அவ்விடங்களை போகர் பார்க்கவும்.....அங்கே செந்தூரம், பஸ்பம், நங்கம், நவரத்தினம் முதலானவை குவியல் குவியலாய்க் கிடந்தன.

இவையாவும் பயன்பாட்டுக்கு இல்லாமல் இப்படிப் பாழாய்க் கிடக்கிறதே! என்றார் போகர்.

அதற்கு அச்சித்தர்கள், போகா!, மக்கள் எல்லோரும் அறியாமை மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். நல்லதைப் பெறுவதில் அக்கறை இல்லாத அவர்களைத் தேடி இவை எல்லாம் அங்கு போக வேண்டுமா?" என்று அமைதியாகக் கேட்டு விட்டு போகரின் கண்களில் இருந்து மறைந்தார்கள். 

யாரும் காண முடியாத சித்தர்களைப் பார்த்தும் அவர்களுடன் பேசிப் பேசியே காலத்தைப் போக்கி விட்டோமே என்று போகர் வருந்தினார்.

தன் கால் போன போக்கில் நடந்தார். சிறிது தூரம் சென்றதும் ஒரு நாகப் புற்றொன்றைக் கண்டார். அந்தப் புற்றின் அருகில் வந்ததும் புற்றிலிருந்து பளீரென ஒரு ஒளிக்கற்றையொன்று உயர்ந்து ஒளிர்ந்தன. ஒளியினை இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ள , இன்னும் புற்றின் மிக அருகாக வந்து புற்றினுள் எட்டிப் பார்த்தார்.


புற்றினுள்ளே போகர் கண்ட காட்சி அவரைத் திகைக்க வைக்க... அப்படியே அதிர்ச்சியாய் நின்றார்..........  ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(9)*
🌻 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌻
-----------------------------------------------------------------------
       🌻 *போகர் சித்தர்* 🌻
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பல எண்ண நிலைவலைகளுடன் நடந்து போன போகரின் கால்கள் ஒரு வழித்தினுடே செல்லுகையில், உயரமாக ஊடுருவி பிரகாசித்த ஒளிக்கற்றைக் கண்டார்.

அவ்வொளிக் கற்றைகளின் பிராந்திரத்தைக் கண்டு சிறு அதிர்வலையுடன் அவரின் கால்கள் அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கிய போதும், அவ்விசித்திரத்தின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் உந்துதலால் புற்றை நோக்கி இன்னும் நெருங்கினார். 

புற்றின் முன் நின்றவர் புற்றுக்கண்ணை எட்டிப் பார்க்கவும், இன்னும் உள்ளாழமாக எட்டிப் பார்க்க முனைந்த போது.................

அவரை ஏதோதொரு சக்தி பின்னிளுத்து நிறுத்தியது. உடனே அப்புற்றைச் சுற்றி வலம் வந்து வணங்கினார். அப்போது போகரின் உணர்வுகளில்,,,
புற்றுனுள் சித்தர் ஒருவர் தவமிருப்பதை உணர்ந்தார்.

உடனே புற்றின் முன் ஆசனமிட்டமர்ந்தார். கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

நெடிய நேரம் கடந்தது. தவமிருக்கும் சித்தர்க்கருகிலேயே மறுவொரு  போகரின் தியானத்தால், புற்றுக்குள்ளிருக்கும் தவசித்தர்க்கு தியானம் தடையேற்பட்டது.

புற்றுக்குள்ளிருக்கும் தவசித்தர்க்கு தவம் கலைந்து உடனே புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார். 

புற்றுக்குள்ளிருந்து வெளி வந்த தவசித்தர் திருமேனியின் ஒளிக்கற்றைகள் போகரின் திருமேனியில் பிராவாகமாகி போகரின் தியானம் கலைந்தது. 

கண்களைத் திறந்த போகர் தம் எதிரே நிற்கும் சித்தரைக் கண்டவுடன் அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

புற்றுக்குள்ளிருந்து வெளிவந்த தவசித்தர் மூன்று காலங்களையும் உணர்ந்தவர். அவர் போகரை பார்த்து  "நீ தான் காலங்கி நாதரின் சீடனா?......உனக்கு என்ன வரம் வேண்டும்?....... ஏன் என் தவத்தைக் கலைத்தாய்?......என்றார்.

"ஆமாம் சுவாமி! நான் போகன். தங்கள் தவம் கலையக் காரணமான என்னை மன்னித்தருள வேண்டும். சித்தர்கள் யாவருமாயின் அவர்களை தரிசிப்பதில் எனக்கு பெரும் ஆர்வம்..தங்களைக் கண்டதில் பெருமகிழ்வு எனக்கு. என் வாழ்வின் பெரும்பயனை அடைந்து விட்டேன். ம்....சரி ..... சுவாமி!... எவ்வளவான காலமாக தவத்திலிருந்தீர்கள்.

*"சிறிதான காலமாகத்தான் உள்ளிருந்தோம்!,* ம்....சரி .... போகா! இது என்ன மாதம்?.

இது கலியுகக் கா....என சொல்ல வந்த போகரை இடைமறித்த சித்தர்...... *என்ன! அதற்குள் கலியுகம் பிறந்து விட்டதா?..... துவாபர யுகத்தின் ஆரம்பத்தில்தான்  தியானம் செய்ய அமர்ந்தேன்.* எனச் சொன்னவர்....காலத்தின் வேகத்தினை எண்ணிச் சிரித்தவர் நாலாபுறமும் சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே அகண்டு பரவி பெருத்த மரமொன்று இருப்பதைக் கண்டார்.

"போகா! அதோ அந்த மரத்தின் கீழே ஒரு பழம் விழுந்திருக்கிறது பார்.. "போகா!
அது உனக்குத்தான். அப்பழத்தை எடுத்துச் சாப்பிடு போகா! என்றார் சித்தர்.

தவசித்தர் சொன்னதும் அப்பழத்தை எடுக்க அந்த மரத்தினருகே சென்றார் போகர்.............
*நனி விளைய தானம் பல விளைவோம்!*
*நமக்கினது இல்லாதினும் கடன் பட்டாவது தொண்டளி!*

போகா!, அதோ அந்த மரத்தின் கீழே விழுந்திருக்கும் பழம் உனக்குத்தான். "போ!, அந்தப் பழத்தை எடுத்துச் சாப்பிடு" என்றார் புற்றுக்குள்ளிருந்து வந்த சித்தர். 

பழத்தை எடுத்து சாப்பிட்டார்.

பழத்தைச் சாப்பிட்டதால் அதன் சுவையில் போகர் தன்னை மறந்த நிலைக்குப் போனார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைப் போகரிடம் கொடுத்து,  இது உனக்குத் தவம் செய்ய உதவுதலாகும் எனக்கூறிக் கொண்டிருந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரே தோன்றவே, 'போகா! இனி உனக்குத் தேவையானவைகளை இந்தப் பதுமையே உனக்குச் சொல்லும்", என்று சொல்லிவிட்டு சித்தர் கண்களை மூடி மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதுமை போகருக்கு, கருவில் உயிர் உண்டாகச் செய்வதிலிருந்து கடைசி காலம் வரை அந்த உயிர் படும் துன்ப நிலைகளை யெல்லாம் தெளிந்து விளக்கிக் கூறி போகரை ஆச்சர்யப்படுத்தி விட்டு வந்தது போலவே சென்று  மறைந்தது.

போகர் அங்கிருந்து தம் பயணத்தைத் தொடங்கி மேரு மலையின் மற்றொரு பகுதிக்குப் போனபோது, "போகா! இதற்கு மேல் போகாதே! நில்.... நில்....." என்ற குரல் ஒன்று அவரைத் தடுத்தது.

போகர் திரும்பிப் பார்த்தார்.

சற்று வந்து சென்ற அதே பதுமை திரும்பி வந்துகொண்டு.........."போகா! "போகா!, போகாதே!!!!! என்று கூறி நிறுத்தியது.

இதற்கு மேல் நடையைத் தொடர வேண்டாமென்று தடுத்த பதுமையைத் திரும்பிப் பார்த்த போகர்.....

"ஏன் ? போகக் கூடாது?-- என போகர் கேட்டார்.

போகா!, மேலும் நீ அடியெடுத்து வைக்கும் பக்கமெல்லாத்திலும் கண்ணுக்குத் தெரியாதபடி இருந்து கொண்டு சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் நீ அவர்கள் மேல் உராய்ந்தாயானால்,அவர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். ஆகையால் மேலும் நடையைத் தொடர வேண்டும். உனக்கு வேண்டியதைக் கேள் நான் தருவித்துத் தருகிறேன்"என்றது பதுமை.

மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகைகள் இருக்கும் இடத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டும்"என்றார் போகர்.

அது மட்டும் முடியாத செயல் போகா! என மறுத்த அந்தப் பதுமை, போகருக்கு வேறு பல மூலிகைகளின் ரகசியங்களையும், அவற்றின் வித்தை வகைகளையும் சொல்லிவிட்டு போகரைத் திருப்பி அனுப்பி விட்டது.

தான் நினைத்தது நடக்காத வருத்தத்தில் போக முனிவர் சித்தர் கொடுத்த புலித்தோலின் மூதமர்ந்து கடுந்தவத்தில் இறங்கினார்.

மேருமலையை தங்கமயமான மலை என்று இதிகாச புராணங்கள் தெரிவிக்கின்றன. காரணம், சித்தர்கள் பலர் அங்கு தங்கள் ரசவாத வித்தையை அடிக்கடி செய்து பார்த்ததின் விளைவாக மேருமலையே தங்கமலையாகி விட்டிருந்தது.

அம்மலையை அடைந்த போகர் அம்மலையில் இருந்து வீசிய ஒளியால் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தார். அங்கு அவரது மூச்சை தெளிவித்த சித்தர் ஒருவர் அடுத்தவருக்கு உதவுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் போகரை வாழ்த்தி ஒரு வஜ்ரகண்டி மாலையை அவரது கழுத்தில் போட்டார்.

நான்கு யுகங்களையும் சேர்ந்த சித்தர்கள் பலர் அங்கு இருப்பதை போகர்க்குக் காட்டிவிட்டு அவர் மறைய, பல உயர்வான சித்தர்கள் போகரை ஒரு குகைக்குள் கூட்டிப் போய் உயிரை அளிக்கும் மூலிகைகளைக் காண்பித்து அவற்றின் விபரங்களைக் கூறினார்கள்.

பல காலமாக அலைந்து திரிந்ததற்குப் பலன் கிடைத்து விட்டது என்று மனம் மகிழ்ச்சியில் திளைத்த போகர் அவர்களை வணங்கி விடைபெற்றுக் கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.

மகிழ்ச்சியில் உடல் துள்ள கிடுகிடுவென மலையிலிருந்து கீழே இறங்கி வந்த போகரின் ட நடையின் வேகத்தில் பூமி அதிர்ந்தன. அதன் விளைவாய் அங்கிருந்த குகை ஒன்றில் தவம் செய்து கொண்டிருந்த சித்தர் ஒருவரின் தவம் கலைந்தொழிந்து போனது. 

தவம் கலைந்த கோபத்தில் அவர், "போகா! அமைதியான இந்த இடத்தின் தன்மையை நீ அடியோடு கெடுத்து விட்டாய். அதற்குக் காரணம் உன் மிதமிஞ்சிய மகிழ்ச்சிதானே. மரணமடைந்தவர்களுக்கு மறுபடியும் உயிரைக் கொடுக்கும் வித்தை மட்டும் உனக்கு பலிக்காமல் போகும் போ!.... என்று கடும் சாபம் கொடுத்ததோடு அங்கிருந்து உடனே போகும்படி கட்டளை இட்டார்.

போகரின் எண்ணத்தில் இடி விழுந்தது. அவரது மனக் கோட்டைகள் மணல் கோட்டைகளாயின. சற்று நேரத்திற்கு முன் மனதில் மண்டிக் கிடந்த மகிழ்ச்சியின் ஆரவாரம் முழுதும் நொடிப் பொழுதில் மின்னலாய் மறைந்து போயின.

இந்த உலகம் தன்னை வெறுத்து ஒதுக்கி விட ்டது போன்ற அவமானத்துடன் தள்ளாடியபடியே நடந்தார். அப்படி யே மயங்கித் தரையில் விழுந்தார்.
போகர் சித்தர் மயங்கித் தரையில் விழுந்து கிடந்தார்.

கண்ட பேரண்டப் பறவை ஒன்று சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து போகரின் மயக்கத்தினைத் தெளிவித்து அவரது வரலாறு முழுவதனையும் கேட்டறிந்தது. 

பின் அவருக்கு சித்தர்கள் சாதனை அடைவதன் மூல ரகசியங்களைக் கூறிவிட்டு, "போகா! இங்கு இருக்காதே. உடனே கீழே போய் விடு. சாதாரண கண்களுக்குத் தெரியாமல் இங்கு கோடிக்கணக்கான சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கும் இங்கும் நடந்து அவர்களின் தவத்தைக் கெடுத்து விடாதே.  இப்படிப் போ...." என்று சொல்லி வழிகாட்டி விட்டுப் பறந்து போய் விட்டது பறவை.

மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார் போகர். வழியில் திருமூலரின் பாட்டனார் சமாதியைக் கண்டு அங்கே தவமிருந்து அவரை தரிசித்து வணங்கினார்.

"போகா! சொன்னதைக் கேள். திருந்த மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் இந்த மக்களிடம் எங்களை அறிமுகப் படுத்தாதே. முடிந்த வரை நீயும் இவர்களிடமிருந்து விலகி இரு. அதுதான் உனக்கு நல்லது. என்று சொன்ன திருமூலரின் பாட்டனார் உடனே மறைந்தார்.

உலகத்தினரின் செயல்களைக் கண்டு மனம் நொந்து போயிருக்கும் சித்தர்களை நினைத்து போகரின் உள்ளம் வேதனையுற்றது.

பொதிகை மலைக்கு ஆகாய மார்க்கமாகச் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கூர்ம நாடி வென்று தவநிலையில் மனதை ஒருமுகப்படுத்தலானார். 

அதன் பின் தியானத்தில் எழுந்தவர்முன் உமாதேவி காட்சி தந்து, "போகா! பழனி மலைக்குச் சென்று முருகனை தியானம் செய் . *முருகன் உனக்கு அருள் புரிவான்"* என வழிகாட்டி மறைந்தார்.

அதன்படி போகர் பழனிமலைக்குச் சென்று கடுந்தவம் செய்தார். அங்கே பழனியாண்டவர் போகருக்கு தண்டாயுதபாணியாகக் காட்சியளித்து உபதேசித்தார்.

"போகரே! நீ என்னை தரிசனம் செய்ததுபோல் அனைவரும் என்னை தரிசனம் செய்ய வேண்டும் அல்லவா? அதற்கு ஏற்பாடு செய்" என்று கூறி, அங்கு தன் வடிவத்தை எந்தெந்த முறையில் விக்கிரமாகச் செய்ய வேண்டும், மூல விக்கிரகத்தை எப்படிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும், வழிபாட்டு முறைகள் இவற்றையெல்லாம் கூறிய முருகப் பெருமான் காயசித்தி உபாயத்தையும் கூறி மறைந்தார்.


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(13)* 
🌻 *சிவமய அருளான சித்தர்கள்.* 🌻
---------------------------------------------------------------------
     🌻 *போகர் சித்தர்.* 🌻
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பழனியாண்டவர் சொன்னபடியே *"நவபாஷாணம்"* என்னும் ஒன்பது விதமான கற்களைக் கூட்டுப் பொருள்களாகக் கொண்டு பழனி ஆண்டவன் விக்கிரகத்தை அழகாகச் செய்து முடித்த போகர் பெருமான் சொன்னபடியே பிரதிஷ்டையும் செய்து முடித்தார். வழிபாட்டு முறைகளை வகுத்தார்.

தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த விபூதியைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார்.

நவபாஷாணத்தைக் கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய பஞ்சாமிர்தமும், விபூதியும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே போன்ற நவபாஷண.மூர்த்தியாக திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரை உருவாக்கியவரும் இவரே என்று சொல்லப்படுகிறது.

இறைவன் சன்னிதானத்துக்கு அருகாமையிலேயே தன்னுடைய தவத்துக்கான இடம் ஒன்றை அமைத்துக் கொண்டு தவத்தில் சந்தேகம் வரும் போதெல்லாம் அதை தண்டாயுதபாணியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டார்.

கோயிலுக்கும் தமது இருப்பிடத்துக்கும் இடையே ஒரு சுரங்கப்பாதையை அமைத்துக் கொண்டு தன் கடைசிக் காலத்தைப் பழனியில் கழித்த போகர் அங்கே தன் அனுபவங்களைப் பலருக்கும் உபதேசித்தார்.

போகர் இரசகுளிகையின் மகத்துவம் அறிந்தவர். இரச குளிகை செய்து பல சித்துக்களைச் செய்து அதன் ஆற்றல் கண்டு அதிசயித்தவர்.

அழிந்து போகக்கூடிய உடலை அழியாத கல்பதேகமாக்கி காலம் கடந்து வாழ்ந்து வந்த சித்தர்களின் அருட் கொடையாக பல எண்ணற்ற வைத்திய வாகடங்களை எழுதியிருக்கிறார்.

தமது லகிமா சித்தியால் ஆகாயத்தில் பறந்து சென்று உலகை வலம் வந்திருக்கிறார். லகிமா சித்தியால் புவி ஈர்ப்பு விசையை மீறி இயங்குவது சாத்தியமே! லகிமா சித்தியுடைய சித்தர்கள் இதன் காரணமாகவே கனமான உடலைப் பஞ்சு போலாக்கிக் கொண்டு நினைத்த மாத்திரத்தில் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிகிறது.

போகர் அடிக்கடி சீன நாட்டிற்கு நினைத்த நேரத்தில் பக்கத்துத் தெருவிற்குப் போவது போல் போய் விட்டு வந்திருக்கிறார்.

ஆகாய வானில் நடப்பதும், படுப்பதும், நிற்பதுமான வித்தைகளையெல்லாம் அடக்கிய ஆகாய கசினப் பயிற்சி வித்தையில் வல்லவர் போகர்.

வெள்ளையர்கள் வாழும் நாடுகளுக்குப் போய் இவர் உபதேசம் செய்ததாகவும் ஒரு நூல் கூறுகிறது.

போகர் பழனியில் இருந்த போது தன் சீடன் புலிப்பாணியிடம் 'நான் மூலிகை சேகரிக்கப் போகிறேன். நீ இங்கே பூஜையை கவனித்துக் கொள்' என்று கூறிவிட்டு ஆகாய மார்க்கமாகச் செல்லும் போது சீன நாட்டில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதைப் பார்த்து விட்டு அங்கே இறங்கினார்.


அங்கிருந்த அழகான பெண்களைக் கண்டு இங்கே கொஞ்ச காலம் தங்கலாம் என்று எண்ணி அங்கேயே அப்பெண்களுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.

பழனியில் இருந்த புலிப்பாணியோ, பல வருடங்கள் ஆகியும் தம் குருநாதர் இன்னும் திரும்பவில்லையே என்று எண்ணி மைசூரில் இருந்து வந்து தொண்டு செய்து கொண்டிருந்த உடையார் என்பவருக்கு உபதேசம் செய்து அவரைப் பழனி முருகனுக்கு பூஜையை செய்யச் சொல்லி விட்டுப் பின்னர் தன் குருநாதரைத் தேடி சீனாவுக்குச் சென்றார்.

அங்கே சீனப் பெண்களுடன் போக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த தன் குருநாதரை புலிப்பாணி மாறு வேடத்தில் சென்று பழனிக்குத் திரும்ப வரும்படி அழைத்தார்.

அங்கே மகாசீனாசாரம் என்னும் வஜ்ரோலி முத்திரையைப் பழகும் போது போகர் தன் சக்தி முழுவதையும் இழந்து விட்டார்.

இவ்விதம் போகர் தன் தவசக்தி முழுவதையும் இழந்து விட்ட பிலையில் புலிப்பாணி அவருக்குத் தவசக்தியைத் திரும்பப் பெற தான் ஏற்பாடு செய்வதாகக் கூறி குருநாதரை தன் முதுகில் சுமந்தபடி பழனிக்கு வந்து விட்டார்.

இழந்த வலிமையைத் திரும்பப் பெறுவதற்குத் தன் சீடரையே தனக்கு உபதேசம் செய்யும்படி போகர் சொல்ல அதற்கு புலிப்பாணியோ இது முறையல்ல என்று மறுத்து விட்டார்.

இதனால் போகர் தண்டத்தை வைத்து, அதற்கு புலிப்பாணியை உபதேசிக்கச் செய்து, பின்பு அத்தண்டத்தில் இருந்து உபதேசம் பெற்றார். பிறகு பல காலம் தவமிருந்து தன் பழைய நிலையைப் பரிபூரணமாகப் பெற்றார்.

போகரின் பெருமை அறிந்த சித்தர்கள் பலர் அவரிடம் வந்து குளிகை பெற்றுப் போயிருக்கிறார்கள்.

போகர் சிங்கம், புலி, பசு முதலியனவைகளுக்கும் உபதேசம் செய்து ஞானம் அளித்திருக்கிறார். சதுரகிரி, சிவகிரி முதலிய இடங்களில் எல்லாம் இவர் இருந்திருக்கிறார்.

கொங்கணர், கருவூரார், சுந்தரானந்தர், மச்சமுனி, நந்தீசர், இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி ஆகியோர் இவரது மாணவர்கள்.  ஆனால் போகரோ அகத்தியரின் மாணவர் (குறிப்பு--அபிதான சிந்தாமணி)

போகர் சீனாவில் வாழ்ந்த காலத்தில் சீனமக்களுக்கு சித்துக்கள் மூலம் பல்வேறு நன்மைகளைச் செய்துள்ளார். கடற்பயணம் செய்ய நீராவிக் கப்பல் ஒன்றையும், பறக்கும் இயந்திரம் ஒன்றையும் உருவாக்கித் தந்திருக்கிறார்.

பழனியில் சில காலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனியாண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூஜித்து வந்த புவனேஸ்வரி அன்னையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும், புவனேஸ்வரி அம்மன் சன்னதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

போகருக்குப் பின் அவரது சீடர் புலிப்பாணியும் அவருக்குப் பின் அவரது மரபில் வந்தோரும் திருமலை நாயக்கர் காலம் வரை பழனி முருகனை பூஜித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

போகர் இயற்றிய நூல்களின் பட்டியல் அகத்தியரின் செளமிய சாகரத்தில் காணப்படுகின்றன.
அவை:::
போகர் 12000,
போகர் சப்த காண்டம் 7000,
போகர் நிகண்டு 1700,
போகர் வைத்தியம் 1000,
போகர் வைத்தியம் 700,
போகர் சரக்கு வைப்பு 800,
போகர் ஐனன சாகரம் 550,
போகர் கற்பகம் 360,
போகர் உபதேசம் 150,
போகர் இரணவாகடம் 100,
போகர் ஞான சாராம்சம் 100,
போகர் கற்ப சூத்திரம் 54,
போகர் வைத்திய சூத்திரம் 77,
போகர் முப்பு சூத்திரம் 51, 
போகர் ஞான சூத்திரம் 37,
போகர் அட்டாங்க யோகம் 24, 
போகர் பூஜா விதி 20.

மேற்கண்ட நூல்களுள் போகர் 12,000 மற்றும் இரண வாகடம் 100 என்னும் இரு நூல்கள் மட்டும் கிடைக்கவில்லை.

*இத்துடன் போகர் சித்தரின் சித்த சித்தங்கள் மகிழ்ந்து நிறைந்தது.*

*நன்மைகள் பல செய்வோம்!*
 *நம்மில்லாததை பிறரிடம் பெற்றாவது அடியார்க்கு அளிப்போம்.*

No comments:

Post a Comment