Friday, February 17, 2017

Secrets of Thyagarjar, Tiruvarur temple

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்.* 🍁

தியாகேசபெருமானோடு தொடர்புடைய பொருள்கள் யாவும் தனிசிறப்பும் பெருமையும் மகிமையும் உடையவை.பிற தலங்களிலிருந்து வேறுப்பட்ட நடைமுறைகளை கொண்டு விளங்குபவை.

தியாகராசபெருமான் எழுந்தருளி இருக்கும் பொன்னாலான கருவறையை அமைத்தவன் மாமன்னன் ராசேந்திர சோழன்.

                     "  சிம்மாசனம்"

      முத்து விதானத்தின் கீழே நான்கு சிம்மங்கள் தாங்கும் கலைநயமிக்க  ஆசனத்தில் பெருமான் அமர்ந்துள்ளார்.இதற்கு மந்திர சிம்மாசனம் என்றும் பெயர்.இவை   சந்தன மரத்தால் செய்து தங்கத்தால் வேய்ந்துள்ளனர்.

        "  பூமாலை-புஷ்பாஞ்சலி"

ஆருர் பெருமான் விண்ணுலக தொடர்பு பெரிதும் உடையவர் என்பதால் சிறப்பு பூசைகளின் போது அர்த்தமண்டபம் தொடங்கி மகாமண்டபம் வரை மலர்பந்தல் அமைப்பர் பூக்களை சொரிந்து அர்ச்சிப்பர்.இன்றும் பெருமான் பவனி வரும்போது பன்னீர் தெளித்தும் மலர்கள் தூவியும் வணங்குவார்கள்.இந்த புஷ்பாஞ்சலியை முன்னாளில் உருத்திர கணிகையர் செய்வர்.

       "  வெண்கவரிகள்(சாமரம்)"
     
    கவரிமான் முடியால் செய்யபட்ட வெண்சாமரங்கள் தியாகேசபெருமானுக்கு மாலைநேரபூசையின் போதும் உலாவரும் போது பயன்படுத்துகின்றனர்.

         " கட்கம்-வாள்"

பெருமானின் இருபுறமும் இரண்டு கத்திகள் சாய்வாக இருக்கும்.ஒன்று வீரகட்கம்.மற்றது ஞானகட்கம் என்று பெயர்.வீரகட்கம் பெருமானின் வீரத்தின் அடையாளம்.ஞானகட்கம் அடியார்களின் மும்மலங்களை அறுத்து முக்தியை அளிக்கவல்லது.இது அம்மையின் பக்கமாய் இருக்கும்.சரசுவதிபூசையன்று இந்த வாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வர்.

      "  தியாகப் பரிவட்டம்"

தியாகேசருக்கு அணிவிக்கபெறும் நீண்ட துணியே தியாகபரிவட்டம் என்று பெயர்.21பரிவட்டங்களை கொண்டு பெருமானுக்கு உள் அலங்காரம் நடைபெறும்.அதன் மீது பட்டு துணிகளும் அதன்மீது நகைகளும் அணிவிப்பர்.திங்கள் கிழமை தோறும் புதிய பரிவட்டங்களை அணிவிப்பர்.அதன்முன் ரகசிய அபிஷேகம் செய்வர்.இந்த பரிவட்டம் காவி அல்லதுகருநீலம் உடையது ஐந்து கோடுகள் வரையப்பட்ருக்கும்.
  
      "  பெருமானின் வடிவம்"

சிம்மாசனத்தின் நடுவே பெருமானும் இடப்பக்கம் கொண்டியும் நடுவே முருகனுமாய் அமையபெற்றது.

 " குசுமப்பட்டும் மான்தோழும்"

தொடக்கத்தில் செம்பட்டாலான ஆடைகள் அணிவிக்கபட்டு வந்தன.இதை குசுமப்பட்டு என்பர்.குளிர் காலத்தில் மான்தோல் ஆடைகளும் அணிவிக்கபட்டு வந்தன.தற்போது நடைமுறையில் இல்லை.

   "  கிருஷ்ணகாந்தம்"

மாலையில் பெருமான் அணியும் கருஞ்சாந்தே கிருஷ்ணகாந்தம்.இது பதினெட்டு மூலிகைகள் ,சந்தனகட்டை,நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கபடுவது.இதை பெருமானின் செவ்வந்தி தோடுகளில் பூசி அணிவிப்பர்.திருவந்தி காப்பின் முடிவில்அன்பர்களுக்கு வழங்கபடும்.திருநீற்றில் கலந்தும் தருவர்.இதை தியாக விநோதம் என்பர்.

        " நறுந்திலகம்"

சாயரட்சை என்ற திருவந்திகாப்பின் முன் பச்சை கற்பூரம் குங்குமப்பூ கலந்த திரவியத்தை திலகமாக அணிவிக்கின்றனர்

            "தலைசீரா"

இது பெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் ஒருவகை அணியாகும்.மாணிக்கம் வைரம் முத்துக்கள் கொண்டு உருவாக்கப்பட்டவை.இதன்பெயர் சூளாமணி.ஆரூர் பதிகத்தில் "சூளாமணி சேர் முடியான் தன்னை "என்று அப்பர் பாடியுள்ளார்.

        "செவ்வந்தி தோடு"

பெருமானின் சிரசில் இரண்டு பிறைகள் உள்ளன.இந்த பிறைகளின் இருபுறமும் பூக்களால் தொடுத்த இரண்டு வட்டங்கள் உள்ளன.இவை செவ்வந்தி பூக்கள் அல்லதுசெண்பகம் மற்றும் பன்னீர் இலைகளால் செய்து அணிவிப்பர்.இதனால் பெருமானுக்கு செவ்வந்தி தோடழகர் என்ற நாமம் உண்டானது.

        "சிரமாலை"

பெருமானின் திருமார்பில் சிரமாலை ஒன்று திகழும்.இது பிரம்மாவின் தலையை கொய்து  பெருமான் மாலையில் அணிந்து கொள்வார்.இப்படி எண்ணிலடங்கா மாண்ட பிரம்மாக்களின் தலைகளை  பெருமானுக்கு மாலையாக மாறியுள்ளது.

 "ஆழிவளை கையான்"

தியாகேசர் கரங்களில் அணிந்துள்ள மோதிரம் மற்றும் காப்புக்கும் ஆழிவளை என்று பெயர்.இதனை அப்பர் பெருமான் "ஆழிவளை கையானும் ஆருர் அமர்ந்த அம்மானே" என்று பாடியுள்ளார்.

           "அர்ச்சனை"

தியாகேசர்க்கு திருமாலால் செய்யபட்ட ஆயிரம் நாமங்களை கொண்டது முகுந்தார்ச்சனை.இந்திரன் செய்து மகிழ்ந்தது இந்திராச்சனை.முசுகுந்தன் செய்து வழிப்பட்டது  முசுகுந்தார்ச்சனை இவை மூன்றும் பெருமானுக்கு பெருமை சேர்க்கும் பூசைகள்.

           'செங்கழுநீர் மலர்"

பெருமான் உகந்து சூடும்  மலர்களில் இதுவும் ஒன்று.தற்போது ஆருரில் மட்டுமே இம்மலர் பூசைக்கு பயன்படுத்த படுகின்றது.இது தேவருலக அமராவதி நகரிலிருந்து பெருமனோடு பூலோகம் வந்த மலர்.கோயிலுக்கு கிழக்கே நந்தவனம் அமைத்து இம்மலரை பயிரிட்டு பூசைக்கு பயன் படுத்துகின்றனர்.இம்முறை வேறு எங்கும் இல்லை.

       "திருவந்திகாப்பு"

திருவாருர் பெருமானுக்கே உரிய தனிபெரும் சிறப்புடைய மாலை நேரபூசை.இது திருவந்தி காப்பு எனப்படும்.அமரருலகம் விடுத்து திருவாருரில் எழுந்தருளிய பெருமானை  திருமாலோடு முனிவரும் தேவரும்  வந்து மாலை நேரபூசையில் பூசிப்பதாக ஐதிகம். இப்பூசையினை காண ஆயிரம் கண்கள் வேண்டும்.அவேளையில் அத்தனை பேரழகாக இருப்பார் தியாகேசர் . இந்நேரத்தில் அலங்காரமும் உபசாரங்களும்  சிறப்பாக இருக்கும். இதனால் சுவாமிக்கு அந்திகாப்பழகர் எனும் நாமம் உண்டாயிற்று.

           "திருமந்திரம்"

அந்திகாப்பு முடிந்து தியாகராஜர் சன்னதியில் வழங்கபடும் திருநீற்றை திருமந்திரம் என்பர்.இதில் திருசாந்தை கலந்து அளிப்பார்கள்.

             "வசந்தவிழா"

திருமாலின் தவத்திற்கு மகிழ்ந்து சிவனார் அளித்த மகனே வசந்தன் எனும் மன்மதன்.அவன் தியாகராசரை போற்றி வழிபட்டதே வசந்த விழாவாகும்.இது பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் வெகுசிறப்பாக நடைபெறும்.அப்போது பூங்கோயிலின் எட்டு திக்குகளிலும் கொடியேற்றி திருவிழா நடக்கும்.

             "அபிஷேகம்"

ஓராண்டில் ஆறுநாட்கள் அபிஷேகம் நடக்கும்.மற்றபடி தினம் அபிஷேகம் விடங்கர் எனப்படும் மரகத லிங்கதிற்கே.இவர் இரகசிய மூர்த்தி என்பதால் அபிஷேக காலங்களில் துணியால் முருகன் பெருமான் தியாகேசர் கொண்டி ஆகியோரின் திருமேனி மறைக்கபடுகின்றன.திருமுகம் மட்டுமே காணமுடியும். அபிஷேகத்தின் போது பெருமானின் தலையில் மகுடம் தெரியாத வண்ணம் பன்னீர் இலைகளால் தொடுக்கப்பட்ட "இண்டை"அணிவிக்கபடும்.அதன் மீதே அபிஷேகம் நடைபெறும்.

        "இரகசிய அபிஷேகம்"

அளப்பரிய பெருமை தாங்கிய தியாகராசருக்கு சோமவார அலங்காரத்துக்கு முன் "உரிமையில் தொழுதெழுவார்"எனப்படும் நயனார்கள் அபிஷேகம் செய்வர்.ரகசிய மூர்த்தி என்பதால் அந்நேரத்தில் சன்னதி கதவுகளை அடைத்து விடுவார்கள்.
     

             "பாத தரிசனம்"

மார்கழி திருவாதிரை நாளில் பெருமானின் இடது பாத தரிசனமும் பங்குனி உத்திரத்தில் வலது பாத தரிசனமும் கிடைக்கும்.பெருமானின் முன்னழகை விட பின்னழகு  பேரழகு என்பர்.இதை "முன்னிலும் மும்மடங்கு பின்னழகர்" என்ற சொல் உண்டாயிற்று.

         "கிணி கிணி"

பெருமான் காலில் அணியும் அணிகலனுக்கு கிணிகிணி என்றுபெயர்

           "மாணிக்கதண்ட"

பெருமான் அமர்ந்து இருக்கும் சிம்மாசனத்தை  இதன் மீது தான் வைத்து கட்டுவார்கள் பவனி மற்றும் தேரில் ஏற்றும் போதும் நடனத்தின் போதும்.

              "விடங்கர்"

தியாகேச பெருமான் சன்னதியிவ் மரகத்தால் ஆன சிவலிங்கம் வெள்ளி பேழையுள் அமையபட்டுருக்கும்.இந்த மூர்த்தியின் நாமமே விடங்கர்.இவர் தான் தினமும் அபிஷேகம் பெற கூடியவர்

          "நந்தியம்பெருமான்"

வேறு எங்கும் இல்லாத வகையிவ் இங்கு நந்தியம் பெருமான் நின்ற நிலையில் இருப்பார்.இதற்கு காரணம் ஆருர் பெருமான் சுந்தரரின் தோழமையை கருத்தில் கொண்டு பரவையின் இல்லத்திற்கு பொற்பாதம் தோய ஆருர் வீதியில் நடந்தார் அல்லவா இப்படி மீண்டும் ஒரு தவறு நடக்ககூடாது என்பதற்காக விழிப்போடு   நந்தியம்பெருமான்  எழுந்த நிலையில் உள்ளார்.

          "தியாகேசரின் பணியாளர்கள்"

தியாகேசனை தீண்டி பூசிக்கும் வழிவழி உரிமையுடையவர்கள்
"உரிமையில் தொழுதெழுவார் " எனும் நயனார்கள் ஆவர் இவர்கள் துர்வாசரின் நெற்றி கண்ணில் இருந்து தோன்றியதால் நயனார்கள் என்று அழைக்கபட்டனர்.

  இவர்களை அடுத்து விழுப்பரமர்கள் எனப்படும் வம்சத்தை  சேர்ந்தவர்கள் தான் தியாகேசர் அஜபா நடனம் புரியும் போது பெருமானை தாங்கும் பெரும்பேறு பெற்றவர்கள் ஆவர்.

                       "இசைகள்"

பண்டு தியாகேசபெருமான் சன்னதியில் பதினெட்டு வகையான இசைகருவிகள் வாசிக்கபட்டதாம். தற்போது நடைமுறையில் இல்லை என்பது வருத்தம் அளிக்கின்றது.

      "எல்லாம் தியாகேசன் திருவருட்செயல் "

                      "ஆரூரா தியாகேசா"

             திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment