Wednesday, February 15, 2017

Perur temple part41

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                     *(41)*
☘ *கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.* ☘
-------------------------------------------------------------------
     *விசேட பூஜைப் படலம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*சித்திரை* மாதத்திலே சித்திரை நக்ஷத்திரஞ் சேர்ந்த பூரணை திதியிலே பட்டீசருக்கு எண்ணெய் முதலியன அபிஷேகித்து ஆபரணங்கள் அணிவித்து,  பலவகை அன்ன முதலியவற்றை நிவேதிப்பர்.
தீவினை யனைத்தும் நீங்கிச் சிவபுண்ணியங்களைச் சேர்வர்.

*வைகாசி* மாதத்திலே விசாக நக்ஷத்திரஞ் சேர்ந்த பூரணையிலே, முக்கனியும் அபிஷேகித்துப் பால்மாங்காய் நிவேதிப்பவர் பாவங்கள் நீங்கிப் பரமன் உலகத்திலிருப்பர்.

பின்னும் அம்மாதத்தில், நறிய நீரைச்சூழ நிறைத்து, நாற்கால் மண்டபத்திலே சிவபெருமானை எழுந்தருளச் செய்து வசந்தோற்சவம் நடத்துவோர் நோய்கள் பலவும் ஒழிந்து போகம் அநுபவித்துப் பேரின்பம் பெறுவர்.

*ஆனி* மாதத்திலே கேட்டை நக்ஷத்திஞ் சேர்ந்த பூரணையில் விருத்த வடிவமாக மண்டபம் அமைத்து அதிலே சிவபெருமானை எழுந்நருளப் பண்ணிப் பல வகைப் பழமும் அபிஷேகித்து.நிவேதிப்போர் சிவலோகஞ் சேர்வர்.

*ஆனி* மாதம் உத்திர நக்ஷத்திரத்திலே அபிஷேகித்து,அலங்கரித்து பலவற்றையும் நைவேத்தியம் புரிவோர் சிவகதி அடைவர்.

*ஆடி* மாதம் பூச நக்ஷத்திரத்திலே, உமாதேவியரைப் பூசிப்பவர் இம்மையிலே செல்வம் பெற்று, மறுமையிலே சத்தியுலகஞ் சார்வர்.

*ஆவணி* மாதம் மூல நக்ஷத்திரத்திலே சிவபிரானைப் பூசித்துப் பிட்டு நிவேதிப்பவர் வினைகள் நீங்கி விண்ணுலகம் நண்ணிப் போகம் அநுபவிப்பவர்.

*புரட்டாசி* மாதம் நவராத்திரியிலே உமாதேவியாரைப் பூசிப்பவர் இம்மையிலே செல்வமும், மறுமையிலே இன்பமும் அநுபவிப்பர்.

*ஐப்பசி* மாதம் பெளர்ணமியிலே சிவபிரானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவோர், ஒவ்வொரன்னத்திற்கு ஒவ்வொரு கற்பஞ் சிவலோகத்தில் ஆனந்தம் அநுபவிப்பர்.

*கார்த்திகை* மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்திலே,சிவபிரானை ஆராதித்து தீபம் இடுவோர் சோதியுருவினராய்ச் சுபம் அநுபவிப்பர்.

*மார்கழி* மாதத்திலே தினந்தோறும் வைகறையிலே சிவபிரானைப் பூசிப்பவரும், திருவாதிரையில் நெய் அபிஷேகித்துக் கலவைச் சாந்தணிபவரும் மலங்கள் நீங்கி,அருட்டுறையில் மூழ்குவர்.

*தை* மாதத்திலே, சிவபிரானைக் குதிரை வாகணத்தில் எழுந்தருளிவரத் தரிசிப்போரும், பூச நக்ஷத்திரத்திலே பூசிப்பவரும் நற்கதிஸபெறுவர்.

*மாசி*மாதம் மக நக்ஷத்திரத்திலும், சவநிசியிலுஞ் சிவபிரானைப் பூசிப்பவர் எல்லாப் போகங்களையும் அநுபவிப்பவர்.

*பங்குனி* மாதம் உத்திர நக்ஷத்திரத்திலே, பரமசிவன் கொண்டருளும் மகோற்சவத்தைத் தரிசிப்போர் முத்தி பேறு அடைவர்.

*வருடப்பிறப்பு,*
*மாதப் பிறப்பு,*
*உத்தராயணம்,*
*தக்ஷிணாயனம்,*
*அமாவாசையை,*
*சதுர்த்தி,*
*திரயோதசி,*
*அட்டமி,*
*சோம வாரம்,* இவைகளிலே சிவபிரானைப் பூசிப்பவர் அருளிற் கலப்பர்.

இத் தினங்களில் பூசியாதவரும், பங்குனி உற்சவத்திலே பணிந்து தரிசிப்பாரேயானால் அப் பயனையும் பெறுவர். 

கோமுனிவர் முதலாயினார் நடாத்திய கால முதல் இதுகாறும் பங்குனித் திருவிழாவைச் சேவித்து முக்தியடைந்தவர் அளவில்லாதவர்கள்.

பட்டிநாதர் எழுந்தருளும் இரதத்திற் பூட்டிய வடங்களைத் தேவர்களும்,அவுணர்களும் மக்கள் வடிவு கொண்டு இருபுறமும் இழுப்பாராயின் அவ்வுற்சவ மகிமையை யாவர் உரைப்பவர்.

            திருச்சிற்றம்பலம்.

*கோவை திருக்கோயில் தொடர் நாளையுடன் மகிழ்ந்து நிறைவாகும்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment