Thursday, August 13, 2015

கட்டேல போறவன்!!! -Periyavaa

courtesy:Sri.hariharan

கட்டேல போறவன்!!!

ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.

"எங்கே அவன்? எங்கே அவன்?" என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).

உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளீக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.

"கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!"

"எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்" என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது------ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!!!

பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். " பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு என்ன விபரீதம்?' க'—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?"
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: " பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!"

நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளீ எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் 'ஸவாரி" கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.

விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் "கிறீச், கிறீச்" கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் 'கிரீச்' எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ' மதுர ஸ்வர'ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் 'ரிபீட்' ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.

பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.

' பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்' என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளீ வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து---ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்---உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை 'கப்சிப்' என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.

பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.

போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!

கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத 'க—போகிற' திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!

விஷயமறிந்த பாட்டியம்மை விலவிலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?

மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ர்ஸன்ன முகராக ஸ்ரீசரணர்," நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?" என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

ஸ்ரீ ரா. கணபதி அண்ணா எழுதிய "கருணைக் கடலில் சில அலைகள்" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment