Friday, July 24, 2015

Pranadaarthi

courtesy:Sri.GS.Dattatreyan
"ப்ரணதார்த்தின்னு சொல்லாதே! அது ஸ்வாமி பேரு.
அதைக் கெடுக்காதே!

ஒண்ணு.. ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு.
இல்லேன்னா, ஹரன்னு சொல்லு"

"பெரியவாளின் துயரம்"
(பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனம்)

(கட்டுரையில் சில ஸ்வாரஸ்ய பகுதிகள்)

இரண்டு போஸ்டுகள் ஒன்றாக இணைந்து இன்று.

சொன்னவர்-வி.ஸ்வாமிநாத ஆத்ரேயன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(சில பாராக்கள் நெட்டில் காபி செய்தேன்)
.
( சென்னையில்"1964 இல்லாட்டா 1965 ல) ஒரு நாள், காலேல மெட்ராஸ் கதீட்ரல் ரோடுல மியூஸிக் அகாடமி வழியா பெரியவா கூண்டுவண்டிய பிடிச்சிண்டு, அதுக்குப் பின்னால நடந்து வந்துண்டிருந்தா.அவர்களுடன் கூட பி.ஜி.பால் அண்கோ நீலகண்டய்யர்,ஸ்ரீமடம் சிவராமய்யர்,பாணாம்பட்டு கண்ணன்,ஸ்ரீகண்டன்,ராயபுரம் பாலு,மற்றும் நான்)

. கோபாலபுரம் முனைக்கு வந்ததும் என்னை கூப்ட்டு "அதோ! அங்க பின்னால பொட்டிக்கடை வாஸல்ல குடுமி வெச்சுண்டு, வாயால புகை விட்டுண்டிருக்கான்.... பாரு!.... அவன்ட்ட போய் "பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமா?..ன்னு கேட்டுண்டு வா" ன்னார்.

நான் ஓடினேன். அந்த ஆஸாமி கடைவாசல்ல தொங்கிண்டு இருந்த நெருப்பு கயத்துல பீடி பத்த வெச்சுண்டு இருந்தான். அவனை பாக்கவே ரொம்ப அருவருப்பா இருந்தது. மெதுவா அவன் பக்கத்ல போய்,

"ஏன்யா! ஒனக்கு பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமா?"ன்னு கேட்டதும்,

அவன் பத்த வெச்ச பீடியை மடமடன்னு ஒதறிட்டு, அப்டியே பதறி போனான் !

"யார் நீங்க? எதுக்கு கேட்கறேள்?"

"ஆச்சார்ய ஸ்வாமிகள் கேட்டுண்டு வரச்சொன்னா"

"ஆச்சார்ய ஸ்வாமிகள்?.....என்னது? பெரியவாளா!.........எங்கே?"

"அதோ............" என்று காட்டினேன் நான்.

அவ்வளவுதான்! அவன் குதிகால் பிடரில அடிக்க, எதிர்புறமா ஓடியே போய்ட்டான் !

பெரியவாட்ட போய் "கேட்டேன். பதிலே சொல்லாம போய்ட்டான்"ன்னு சொன்னேன்.

பெரியவா ஒண்ணுமே பேசலை.

முகாமுக்கு போனோம். வரிசையா நெறையப்பேர் தர்ஶனத்துக்கு வந்தா.

எல்லாரும் ஒருவழியா தர்சனம் பண்ணியானதும், பெரியவா எழுந்து உள்ளே போக அடி எடுத்து வெச்சா........

அப்போ அவன் வந்தான் !

நெத்தில பட்டை விபூதி, ஒடம்பு முழுக்க அலங்கோலமா விபூதி, இடுப்புல துண்டை வரிஞ்சு கட்டிண்டு, நீள நெடுக நமஸ்காரம் பண்ணினான்.

பெரியவா உட்க்கார்ந்துட்டா. எங்கிட்ட "இவன் யார்?" ன்னு கேட்டா.

"கொஞ்ச நேரம் முன்னாடி, பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமான்னு இவனைத்தான் பெரியவா கேட்டுண்டு வர சொன்னேள் "

"ஆமா....நான் பரவாக்கரை ஸ்ரௌதிகள் பேரன். ப்ரணதார்த்தின்னு பேரு"

அவன் முடிக்கலை, பெரியவா சொன்னா..
..
"ப்ரணதார்த்தின்னு சொல்லாதே! அது ஸ்வாமி பேரு. அதைக் கெடுக்காதே! ஒண்ணு..... ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு. இல்லேன்னா, ஹரன்னு சொல்லு. நமஸ்காரம் பண்றவாளோட பீடையெல்லாம் போக்கிடுவார் ஸ்வாமி. அதுதான் பேர். வெறும்ன ப்ரணதார்த்தின்னா பீடைன்னு அர்த்தம்"

"இப்பிடித்தான் எல்லாரும் கூப்பிடுவா! அதே பழக்கமாயிடுத்து"

"அதுனாலதான் இப்பிடி இருக்கே! நீ அத்யயனம் பண்ணினியோ?"

"தாத்தா எனக்கு ஸாமம் எல்லாம் கத்து குடுத்தா"

"ஒரு ஸாமம் சொல்லு"ன்னு சொல்லி, எல்லாரும் ப்ரஸித்தமா சொல்ற ஸாமத்தை சொன்னா பெரியவா.

ரெண்டு மூணு வாக்யம் சொன்னான். குரல் நன்னா கணீர்..ன்னு இருந்தது.

"மேல மறந்து போச்சு"

"ஒனக்கு அண்ணா, தம்பி யாராவது இருக்காளா?"

"ரெண்டு பேர் அண்ணா! அவா இங்க்லீஷ் படிப்பு படிச்சு எங்கேயோ வேலைல இருக்கா. நான் நன்னா சொல்றேன்னு தாத்தா எனக்கு ஸாம வேதம் சொல்லி குடுத்தா..........எனக்கு அது பிடிக்கலை. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்"

"இப்போ என்ன பண்றே?"

"போலீஸ்காராளுக்கு உதவி பண்ணறேன்"

"போலீஸ்காராளுக்கு நீ உதவி பண்றியா? அது என்ன உதவி?"
"கோர்ட்டுக்கெல்லாம் அழைச்சுண்டு போவா! சாட்சி சொல்லச் சொல்லுவா, அதுக்கு படி குடுப்பா"

"ஒனக்கு இந்த புகை பழக்கம் எப்படி வந்துது?"

"அவாகூட போறப்போ, கட்டுகட்டா பீடி வாங்குவா. ரெண்டு மூணு எனக்கும் குடுப்பா"

"கோர்ட்டுல நீ பாத்ததைத்தானே சொல்லுவே?"

"நான் ஒண்...ணையும் பாத்ததில்லே, அவா இப்டி இப்டி சொல்லுன்னு சொல்லிக் குடுப்பா, அதை அப்படியே சொல்லுவேன்"

"வக்கீல்கள்ளாம் உன்னை தாறுமாறா கேள்வி கேட்பாளே?"

"ஆமாம்....கட்டாயம்! அதுக்குத்தான் போலீஸ்காரா என்னை கொலை நடந்த இடத்துக்கே அழைச்சுண்டு போய்.... இந்த இடத்தில், இப்படிக் கொலை நடந்தது. நீ இங்க நின்னு பாத்துண்டு இருந்தே, கூட்டமா இருந்தது, வேடிக்கை பார்த்தே....கொலைகாரன் கிழக்கு பக்கமா ஓடினான், அவன் கையில அரிவாள் இருந்தது, அதுல ரத்தம் கொட்டித்து...... இப்டில்லாம் சொல்லி கொடுப்பா! பல கேஸ்ல ஸாக்ஷி சொல்லியிருக்கேனா ! நல்ல பழக்கம். வக்கீல் எப்பிடி கேட்டாலும் கெட்டிக்காரத்தனமா பதில் சொல்லிடுவேன். ரெண்டு மூணு தடவை உளறிட்டேன், அதுக்காக போலீஸ்காரா செமையா என்னை அடிச்சுட்டா!"

"கோர்ட்டுக்கு போறப்போ சட்டையெல்லாம் போட்டுண்டு போவியோ?"

"இல்ல, இல்ல! போலீஸ்காரா விடமாட்டா ! பட்டை பட்டையா விபூதி போடணும். பூணூலை நன்னா ஸோப்பு போட்டு வெளுத்துக்கணும். இடுப்புல துண்டை கட்டிண்டு வரணும்னு நிர்பந்தப்படுத்துவா"

"இந்த மாதிரியெல்லாம் சாட்சி சொல்றது பாவமில்லயா?"

"பாவந்தான், நன்னா தெரியறது. எனக்கு வேற வழியில்லையே!"

"அப்டியா? நா....ஒரு வழி காட்டறேன், செய்வியா?"
[அதமனுக்கும் வழி காட்டும் ஜகத்குரு]

"சொல்லுங்கோ"

"மைலாப்பூர்ல கபாலீஸ்வரன் கோவில் இருக்கு. தெனோமும் ஸாயரக்ஷை அங்க போய், மேல கோபுர வாஸலை நன்னா பெருக்கி, ஜலம் தெளிச்சுட்டு வா! ஒனக்கு தெனொமும் பத்து ரூவா பணம் தரச் சொல்றேன். மத்யான்னம் சாப்பாடும் போடச் சொல்றேன்"

[1965ல் பத்துரூபாய் எவ்வளவு பெரிய தொகை!!]

"கோவில் உண்டைக்கட்டில்லாம் எனக்கு ஒத்து வராது"

"கோவில் ப்ரஸாதம் வேண்டாம். வாரத்ல ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் ஆத்துல சாப்பாடு போட சொல்றேன். ராத்ரி, அந்த பத்து ரூவால சாப்டுக்கோ!"

"அதெல்லாம் சரியா வராது"

"அவசரப்படாதே! ரெண்டு நாளைக்கு மடத்துல இரு.

சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை பாரு. பூஜை ஆனாவிட்டு, உடனேயே உனக்கு சாப்பாடு போட சொல்றேன். யோசிச்சு பதில் சொல்லு"

"இன்னிக்கு அது முடியாது. எழும்பூர் கோர்ட்ல பெரிய கேஸ் ஒண்ணு இருக்கு! சாட்சி சொல்ல போகாட்டா, முதுகெலும்பை முறிச்சுடுவா! நான் போறேன்" ன்னு போயே போய்விட்டான் !

பெரியவா அவன் காம்பவுண்ட் தாண்டி போறவரைக்கும், அவனையே பாத்துண்டு இருந்தார்.

நானும் நீலகண்டய்யரும் பெரியவாளோட உள்ள போனோம்
.
ஐயர்வாள் சொன்னார்....

"பெரியவா இவ்ளோவ் சொல்லியும், அவன் கேக்கலியே!..."

"அவன் இருக்கட்டும். போலீஸ்காரா பொய் சாட்சின்னு... ஒரு தொழிலையே ஜனங்களுக்கு கத்துக் குடுத்துட்டாளே !..."

"போலீஸ்காரா என்ன பண்ணுவா? பட்டப்பகல்ல பல பேர் பாக்க, கொலை நடந்திருக்கு! இன்னார்தான் பண்ணினான்னு நன்னாத் தெரியறது. ஆனா, கோர்ட்ல சாட்சி சொல்றதுக்கு யார் போவா? அவா அவாளுக்கு அவா அவா ஜோலி! சாட்சி சொல்றேன்னு போனாக்க, வக்கீல்கள் தாறுமாறா கேள்வி கேட்டு அவாளை அலைக்கழிக்க விட்டுடுவா. அப்றம் அதுலேர்ந்து தப்பிக்கவும் முடியாது. அதுனால நேர்ல பாத்தவா சாட்சி சொல்ல மாட்டா! கோர்ட்ல குத்தவாளியே குத்தத்தை ஒப்புத்துண்டாக்கூட, சாட்சி இல்லாட்டா, கேஸ் நிரூபணம் ஆகலேன்னு கேஸை தள்ளுபடி பண்ணிடுவா. போலீஸ்காரா சரியா கேஸை நடத்தலேன்னு வேற புகார் கெளம்பும். அதுனால வேற வழி இல்லாம, சாட்சியை ஜோடிக்க வேண்டியிருக்கு...."

பெரியவா;

"கொலை...ஒரு அந்யாயம்; கொலையைப் பாத்தவா சாட்சி சொல்லாதது, அடுத்த அநியாயம்; பாக்காதவா, பொய் சாட்சி சொல்றது மூணாவது அநியாயம்....இத்தனை அநியாயத்தையும் நியாயப்படுத்தறாப்போல நீ வாதம் பண்ற!..."

"பெரியவா க்ஷமிக்கணும்....லோகத்ல நடக்கறதை சொன்னேன்.."

"இதுல இன்னொரு வேதனை.... இத்தனை அக்ரமமும் ப்ராஹ்மண ரூபத்ல! ப்ராஹ்மணன் பொய் சாட்சி சொன்னாக்கூட, அதை ஸத்யம்னு கோர்ட்ல நம்புவான்னு போலீஸ்க்கு நம்பிக்கை இருக்கே. அதெல்லாம் போட்டும்....இந்த ஸ்ரௌதிகள் பேரன் இப்பிடி இருக்கானே!"

"பெரியவா சொல்றதை காதுலேயே வாங்க மாட்டேங்கறானே?.."

"அவன் என்ன செய்வான்? கோர்டுக்கு போகாட்டா...போலீஸ்காரா அடிப்பாங்கறானே ?"

"பெரியவா ரொம்ப க்லேஸப் படறாப்போல இருக்கு....நாங்கள்ளாம் என்ன செய்ய முடியும்?.."

"ஸந்யாஸி ஸுகதுக்கங்களுக்கு மனஸ்ல எடம் கொடுக்கப்படாதுன்னு சாஸ்த்ரம் இருக்கு. தெரியுமோ?"ன்னு கேட்டுண்டே ஸ்நானம் பண்ண போனார்.

மத்யானம் மூணு மணி இருக்கும். நான் பூஜைக்கட்டு பக்கத்ல இருந்த வராண்டால படுத்துண்டிருந்தேன்.

"ராமா!..."

பூஜைக்கட்டுல ஸகல கைங்கர்யமும் பண்ணிண்டிருந்த மேலூர் ராமசந்த்ரய்யர் கூப்ட்டார். ரொம்ப ஆசாரம் ஜாஸ்தி. ஒரு சின்னத் தப்புகூட நேர்ந்துடாதபடி, அப்டி கவனிச்சு கவனிச்சு கைங்கர்யம் பண்ணுவார். அவரைக் கண்டா அங்க இருக்கற எல்லாருக்கும் ஸிம்ஹ ஸொப்பனம்!

"இன்னிக் காலம்பற பெரியவா சவாரியிலே நீ கூட வந்தாயோ?..."

"வந்தேனே!.."

"அப்போ என்ன நடந்தது?.."

"ஒண்ணுமில்லியே "

"ஏதோ நடந்திருக்கு! பெரியவா இன்னிக்கி பூஜையே பண்ணலே..."

"அப்டியா! ஒருவேளை...அது வந்து".....ன்னு மெதுவா பரவாக்கரை ஸ்ரௌதிகள் பேரனோட கதையை சொன்னேன்.

நான் அவர் தலைல அடிச்சுண்டு நகர்ந்து போய்ட்டார்!

கொஞ்ச நேரத்தில் பெரியவா கொட்டாய் பக்கம் போனா..
..நமஸ்காரம் பண்ணினேன்.

"மேலூர் மாமா என்ன சொன்னார்? அவர் இன்னிக்கி சாப்பிடலையாமே? விஜாரிச்சியோ?..."

"பெரியவா பூஜை பண்ணாததால, பிக்ஷையும் பண்ணல; பெரியவா பிக்ஷை பண்ணாம, மேலூர் மாமா சாப்ட மாட்டாரே"

என்னோட கண்ணுலேர்ந்து ஜலம் வந்துது.....

"என்னவோ சொல்லணும்னு நெனைக்கறே! சொல்லிடேன்...."

"பெரியவாட்ட என்ன சொல்ல முடியும்? ஸ்ரீதர ஐயர்வாள் ஸ்லோகம் ஒண்ணு நெனவுக்கு வருது"

"ஐயாவாள் சுலோகமா? பக்திரஸம் கொட்டுமே!
சொல்லு பார்க்கலாம்."

" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :

"இன்னொரு தடவை சொல்லு!..."

" த்வந் நாமதேய ரஸிகா; தருணேந்து மௌலே
...துக்கம் ந யாந்தி கிமபீதி ஹி வாதமாத்ரம்.
...தேSமீகில ஸ்வவிபதீவ வஹந்தி துக்கம்
...த்ருக்கோசரீபவதி துக்கிநி ஜந்துமாத்ரே :

"எங்கே அர்த்தம் சொல்லு பார்க்கலாம்"

"இளம்பிறைச் சந்திரனைத் தலையில் சூடிக்கொண்ட
பெருமானே! உலகில் எல்லாரும் சொல்வார்கள்.-
சிவசிவ என்கிற மதுரமான நாமத்தை ரஸித்துச்
சொல்பவர்கள் துயரப்படமாட்டார்கள் என்று.
அது வெறும் பேச்சுதான். உண்மையிலே-
மனுஷனாகட்டும்,பசு-பூச்சியாகட்டும், எந்த ஜீவனாவது
கஷ்டப்படுவது அவர்களுடைய கண்களில் பட்டு விட்டால்,
அந்தக் கஷ்டம் தனக்கே வந்து விட்டது போல
உருகி விடுவார்கள்"

"நன்னாச் சொன்னே! அதிலே ஒரு ஸ்வாரஸ்யம்
கூட இருக்கு. கவனித்தாயா!"

"என்ன? நான் கவனிக்கவில்லையே!"

'தருணேந்து மௌலே - என்கிறார்.
நம்ம சந்த்ரமௌளீச்வரரைப் பார்த்துதான். இப்படி சொல்கிறார்.
அவருடைய குருநாதர் போதேந்த்ர ஸரஸ்வதி பூஜை பண்ணின
மூர்த்திதானே சந்த்ரமௌளீச்வரர்.அவரிடம்தான் இப்படிச்
சொல்லியிருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார்கள்.

.......................................................................................................................................

கட்டுரையாளர்;-சொல்கிறார்.

இவன் உதட்டிலே ஒன்று சொல்ல வேண்டுமென்று
ஒரு துடிப்பு வந்தது.சொல்லியிருந்தால் அபசாரமாகுமோ,என்னவோ?

நமக்குள்ளே பரிமாறிக்கலாமே!

முன்னூற்றைம்பது வருஷங்கள் முன்னால் இருந்த ஸ்ரீதர ஐயாவாள்,பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனமுடைய ஒரு பெரியவாள்அவதாரம் பண்ணப்போகிறார் என்று,அந்த சந்த்ரமௌலீசுவரரிடம்விண்ணப்பித்திருக்கிறாரே.!


No comments:

Post a Comment