Sunday, June 14, 2015

GajAnanam bhoota.. -Periyavaa

courtesy: Sri.Krishnamoorthi Balasubramanian

அத்வைத ஞான நிலையைப் பற்றிக் குறிப்பது விளாம்பழம். அதனை யாருக்கு அளித்தால் சிறப்பு? ஞானக் கொழுந்தாய் விளங்கும் விநாயகனுக்கு அளித்தால்தானே சிறப்பு?---(ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சீ மஹா பெரியவா)
பழத்தில் " அத்வைத ஞான நிலையைப் பற்றிக் குறிப்பது விளாம்பழம்" 
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
விநாயகச் சதுர்த்தி வரும் போது கூடவே விளாம்பழமும் வந்து விடும் கடைத் தெருவில்! எத்தனையோ பழ வகைகள் இருக்க, என்ன விசேஷம் விளாம்பழத்தில்? அது மனிதன் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
இந்த சுலோகத்தையும் நாம் நிறைய முறை சொல்லியிருக்கிறோம். எனக்கும் பொருள் புரிந்தும் புரியாமலும் தான் சொல்லியிருக்கிறேன். அது ஆங்கிலத்தில் Wood-apple என்று பொருள் போட்டிருந்தது. அது என்ன என்று தெரியவில்லை. விளாம்பழத்தைக் காட்டுகிறார். அடடா, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இந்தப் பழத்தைக் கொண்டு வந்து அப்படியே அவருக்குப் படைத்துவிட்டு நாம் சாப்பிடுவதற்கு முன்னர் மட்டும் சர்க்கரை கலந்து உண்போமே அந்தப் பழம் தான் கபித்த பழமா என்று தோன்றியது.
மற்றபடி இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.
கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்
பூத கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.
உமா சுதம் - உமையின் மகன்.
சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.
விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.
பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!
யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!
இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்!
விளாங்காயாக இருக்கும் போது, ஓடு பச்சையாக இருக்கும். உள்ளே இருக்கும் சதையும் ஓடோடு இறுக ஒட்டிக்கொண்டிருக்கும். அது போல் பக்குவமில்லாத நிலையில் மனிதன் உலக ஆசைகளோடு ஒட்டியிருப்பான். அவனைப் பிரித்தெடுப்பது கடினம்!
விளாங்காய், பழமாக மாறியபின், ஓடு மஞ்சள் கலந்த நிறமாக மாறி விடும். உள்ளே இருக்கும் சதையும் ஓட்டை விட்டுப் பிரிந்து தனியாக வந்து விடும். அது மட்டுமல்ல. பழத்தின் நறுமணமும் கூடிவிடும்.
பக்குவப்பட்ட மனிதன் இறையனுபவத்தை நாட ஆரம்பித்தவுடன் உலக ஆசைகளை விட்டு விலக ஆரம்பித்து விடுவான். காயாய் இருந்த அவன், கனியாய்க் கனிந்து விடுவான். கனிந்த பழத்தை அதன் மணம் காட்டி கொடுத்து விடும். அது போல் ஞானியாகிவிட்ட அல்லது ஞான மார்க்கத்தின்பால் சென்று கொண்டிருப்பவரை அவருடைய ஞானம் காட்டிக் கொடுத்துவிடும். இரண்டுக்கும் விளம்பரம் தேவையில்லை. 
ஞான நிலையைப் பற்றிக் குறிப்பது விளாம்பழம். அதனை யாருக்கு அளித்தால் சிறப்பு? ஞானக் கொழுந்தாய் விளங்கும் விநாயகனுக்கு அளித்தால்தானே சிறப்பு?
நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரை ..... பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
அருளிட வேண்டும் காஞ்சி கலியுக தெய்வமே

No comments:

Post a Comment