தம்பிரான் தோழர் - நங்கநல்லூர் J K SIVAN சுந்தரமூர்த்தி நாயனார்
பரவையிடம் தூது
ஒரு மனைவி இறைவன் அருளால் தனக்கு கிடைத்த கணவன் மீது அளவற்ற அன்பும் காதலும் கொண்டவள், வெகுநாளாக யாத்திரை சென்றவன் திரும்பி வருகிறான் என்று அறிந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைவாள்? இதைத் தெரிந்து கொள்ள நாம் இப்போது திருவாரூர் செல்கிறோம். அங்கே பரவை பரிபூர்ண ஆனந்தத்தில் இருப்பதைக் காண்கிறோம். அன்று ரெண்டு சூரியன். ஒன்று வானத்தில், இன்னொன்று பரவை வதனத்தில்.
'' அம்மா, அய்யா ஊருக்கு வந்துகிட்டு இருக்கிறாரு '' என்று பரவையிடம் தோழியர்கள் சொல்லும் போது தான் மேலே சொன்ன ரெண்டு சூரியனைப் பார்த்தோம். அடுத்த கணம் அங்கே ஒரு கிரஹணம் நடந்ததையும் பார்க்க வேண்டி இருக்கிறதே.
'அப்பா, எவ்வளவு நாளாச்சு அவரைப் பார்த்து. உடனே தட புடலா அவரை வரவேற்கணும்.
''ஆனால் அம்மா......''''
''என்னடி .. ஆனால் என்று இழுக்கிறாய்.... என்ன சொல்ல நினைக்கிறாய் சொல். தயக்கமே வேண்டாம்...''
''அம்மா, ஐயா வந்துட்டாரு ... ஆனால், கூடவே ஒரு பொண்ணும் அவரோடு வருது.
''யாரு அது '
''அவரு தாலி கட்டின மனைவியாம். ... சங்கிலின்னு பேராம் '''
''என்ன சொல்கிறாய் நீ? என் சுந்தரர் இன்னொரு பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டாரா..? பறவைக்கு எதிரே உலகம் படபடவென்று வெடித்து சிதறி, சுழன்றது. ஒரு இருள் சூரியனைக் கவ்வியது. எங்கும் வெள்ளம் 'ஓ' வென்ற பேரிரைச்சலுடன் உலகத்தை மூடியது. பரவை, காது கேட்ட இடியில் வாடி கண்ணீரால் நிரம்பினாள். கடலில் மூழ்கி எங்கோ ஆழத்தில் மூச்சு திணறுகிறாள். துக்கம் தொண்டையை அடைத்து பேச்சு வரவில்லை. பரவையைச் சேர்ந்தவர்கள் கோபம் கொண்டு சுந்தரரை பரவையின் வீட்டை நெருங்க விடவில்லை.
சுந்தரர் விஷயம் அறிந்து திகைத்தார். சில பெரியவர்களை அனுப்பி பரவையைச் சமாதானம் செய்ய சொல்லியும் எந்த பயனுமில்லை. முயற்சி தோல்வியில் முடிந்தது.
''தியாகராஜா, எல்லாம் உன் திருவிளையாடல். நான் ஒரு துரும்பு. என்னை ஆட்டுவிப்பது நீ தானே. இந்த கணம் வரை எல்லாம் உன் சித்தப்படி தான் என் வாழ்வில் நடக்கிறது. இனிமேலும் உன் சித்தம் எவ்வாறோ அப்படியே நடக்கட்டும்.'' என நெக்குருகி வேண்டினார். இரவெல்லாம் சிவனை வேண்டி கண்ணீர் வடித்தார் சுந்தரர்.
''சுந்தரா, எல்லாமே உனக்கு நல்லதாக நடக்கும் கவலைப் படாதே. பொறுமையாக இரு'' என்கிறார் சிவன்.
மறுநாள் காலை யாரோ கதவை தட்ட பரவை வீட்டு வாசல் கதவை திறக்கிறாள் . எதிரே ஒரு முதிய பிராமண சிவனடியார் நிற்பதைக் கண்டு உபசரித்தாள். அன்றாடம் எத்தனையோ பேர் வருவார்கள். உணவளிப்பாள் .
தான் ஊரில் விஷயம் கேள்விப்பட்டதை அறிந்து பரவையை சமாதானப் படுத்தி சுந்தரரையும் சங்கிலியையும் ஏற்றுக் கொள்ள பரவையிடம் சிபாரிசு செய்தார். பரவையின் பிடிவாதம் வென்றது. தோல்வி கண்ட முதியவர் சுந்தரரிடம் சென்று நிலைமையை எடுத்துச் சொன்னார்.
''வேறு வழி இல்லையென்றால் நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்'' என்று கலங்கினார் சுந்தரர்.
''மீண்டும் சென்று சொல்லிப் பார்க்கிறேன்'' என்கிறார் முதியவர்.
மீண்டும் வீட்டுக்கு வந்த அந்த பெரியவரை பரவை கோபத்துடன்
''சிவபெருமானை இந்த அல்ப விஷயத்துக்கு இழுத்து அவமதிக்காதீர்கள். அவர் இதற்கெல்லாம் உடன்படுபவர் அல்ல''
''ஓஹோ, அப்படியா. நான் சொல்வதை பரமேஸ்வரன் சொல்வதாக ஏற்றுக் கொள் அம்மா . மறுக்காதே. வேண்டுமானால் அவரையே நீ நேரில் கண்டு கேளம்மா'' என்று முதியவராக தூது வந்த பரமேஸ்வரன் பரவைக்கு காட்சி தந்து அருள்கிறார்.
''ஈஸ்வரா, தாங்களா ப்ராமண முதியவராக வந்து என்னை சோதித் தது. அடியேன் செய்த பெரும் பிழையை மன்னித்தருளவேண்டும். என் குடிசைக்கு வந்து என்னை ஆசிர்வதித்த உங்கள் சொல்லை மறுப்பேனா. என் தவறை புறக்கணித்து என் மீது கருணை காட்டவேண்டும் தியாகராஜ ப்ரபோ''.
என்று காலில் விழுந்து வணங்கினாள் பரவை .
''ஆஹா, என்ன பாக்கியவான் சுந்தரர், உங்களை நள்ளிரவும் பகலும் என்னைத் தேடி அவருக்காக தூது செல்ல வைப்பதற்கு. அவரது பக்திக்கு முன் நான் ஒரு துரும்பு. அவர் திருவடிகளில் வீழ்ந்து என் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ள செய்கிறேன்.''
சிவன் மறைந்து விட்டார்.
பரவை சுந்தரரை நோக்கி ஓடுகிறாள். அதற்குள் முதியவர் சுந்தரரை சந்தித்து ஆறுதல் சொல்கிறார்:
''சுந்தரா, இனி நீ பரவை இல்லத்தை நோக்கி செல்லலாம் . உங்கள் இருவரையும் வரவேற்க காத்திருக்கிறாள். ஒருவாறு அவளைச் சமாதானப் படுத்தி விட்டேன் ''
முதியவரை வணங்கிய சுந்தரர் நிமிர்வதற்குள் பிராமணர் மறைகிறார். சுந்தரர், தனக்கு தூதுவனாக வந்த முதியவர் தியாகராஜரே என அறிந்து நன்றியால் கண்ணீர் வடிக்கிறார். பரவை சுந்தரர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரை வரவேற்று தனது தவறுக்கு வருந்துகிறாள். குடும்பம் ஒன்று சேர்ந்தது.
சுந்தரர் சங்கிலியை வேற்றூரில் மணந்தது, திருவாரூர் திரும்பிய அவரையும் சங்கிலியையும் பரவை வெறுத்தது, இணைய மறுத்தது பிறகு சிவனையே தூது செல்ல வைத்து சுந்தரர் பரவையுடன் மீண்டும் இணைந்த செய்தி காட்டுத்தீ போல் அந்த சிறு திருவாரூர் கிராமத்தில் மட்டுமல்ல அண்டை அசல் ஊர்களிலும் பரவியது.
எல்லோரும் இதெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட இந்த செய்தி ஒருவர் காதில் மட்டும் காய்ச்சிய ஈயம் போல் நுழைந்து அவரை துடிக்க வைத்தது. அவர் ஒரு சிறந்த சிவ பக்தர். சிவனையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு சிவனடியார்.
'என்ன அநியாயம் இது.? ஸாக்ஷாத் சிவபெருமானையே வா அந்த சுந்தரர் இவ்வாறு ஏவி அற்பமாக நடத்தினார்? என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை...'' என்று நெருப்பை, அனலை மூச்சாக வெளி விட்டார். அவ்வளவு கோபத்துடன் அவர் என்ன செய்தார்?
தொடரும்
No comments:
Post a Comment