*Continued from yesterday's posting*
*Source: ஸ்ரீ குருகிருபா விலாஸம்-இரண்டாம் பாகம்*
*இரண்டாம் பாகம்*
*ஞானப் பிரஸூனங்கள்*
*8.எல்லோரிடத்தும் அன்பு*
மஹா: அவருக்கு உம்மிடத்தில் அவ்வளவு விசேஷ நம்பிக்கை இருக்கிறாப்போலிருக்கிறது. அதனால் உம்மையே நம்பியிருக்கிறார் என்று தெரிகிறது. வரமுடியாது என்று சொல்லி அவருக்கு உதவி செய்ய மறுத்து அவர் மனதைப் புண்படுத்துவது தர்மமாகுமா? வேதாந்தப் பிரவசனத்தைக் கேட்பதினால் உமக்கு ஏற்படக்கூடிய ஸுகத்திலுள்ள ஆசையினால், இன்னொருவரை ஸந்தோஷப்படுத்தக் கூடிய ஸந்தர்ப்பத்தையும் கைவிட்டு அவருக்கு அதனால் ஏற்படக்கூடிய கடுமையான வருத்தத்தை உண்டாக்குவது நியாயமாகுமா?
கி: அவர் வியவஹாரம் மிகவும் சிறிய விஷயம். வேறு எந்த வக்கீலும், அனுபவம் சிறிதுமில்லாத வக்கீலும்கூட, அதை நடத்திக் கொள்ளக்கூடும். நானே போய் நடத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.
கி: ஆமாம். இல்லைதான்.
மஹா: உமக்கு எவ்வித சிரமமும் இல்லாமலே அந்த கக்ஷிக்காரருக்கு திருப்தியளிக்க உமக்கு ஸந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. உமக்குப் பணமும் கொடுப்பாரில்லையா?
கி: எல்லாம் வாஸ்தவம். எனினும் நாளையப் பிரவசனத்தை இழக்க எனக்கு மனமில்லை.
மஹா: தனக்கு வரும் ஒரு லாபத்தை அடையக் கருதி, அதனால் இன்னொருவருக்கு துன்பத்தை உண்டாக்குகிறது நியாயமாகுமா?
கி: அதற்கு நான் என்ன செய்யட்டும்?
மஹா: விடியற்காலை வண்டியில் போய், கார்யத்தை முடித்துக்கொண்டு மாலையிலோ மறுநாள் காலையிலோ வந்து விடலாம்.
கி:அவ்விதம் செய்தேனேயானால், பிரவசனத்தை இழப்பதால் என் மனதைப் புண்படுத்திக் கொள்ள வேண்டி வருமே?
மஹா: அது பாதகமில்லை. தனக்கு இன்பம் பிறனுக்கு துன்பம் என்பதைவிட தனக்கு துன்பம் பிறனுக்கு இன்பம் என்பது எவ்வளவோ சிலாக்கியமானது.
இவ்விதம் ஸ்ரீமத் ஆசார்யார் ஆக்ஞை செய்தபிறகு, சிறிதும் இஷ்டமில்லாமலே, அவ்வாக்ஞைப்படி நடப்பதற்கு இசைந்தேன். அவர்களும் தமக்குரிய பேரன்பினால் "இதனால் உமக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்படாது. நாளை ஆரம்பப் பிரவசனத்தில் சொல்வதையெல்லாம் மறு நாளும் சொல்லி விடுகிறேன்" என்று அனுக்ரஹித்தார்கள். இரண்டாம் நாள் பிரவசனம் ஆரம்பிக்கும்போது "நேற்று வராதவர்களின் பொருட்டு நேற்று நடந்த ஆரம்ப பிரவசனத்தின் ஸாராம்சத்தை சுருக்கிச் சொல்கிறேன்" என்று தொடங்கினார்கள். இரண்டு நாட்களிலும் பிரவசனத்தைக் கேட்டவர்கள், முதல் நாள் பிரவசனத்தை விட அதன் சுருக்கமே விஷயங்கள் நிறைந்தும் தெளிவாயும் விளக்கமாயும் மறக்கக் கூடாதவாறும் மனதில் பதியக் கூடியதாகவும் இருந்தது என்று சொன்னார்கள்.
இந்த ஸம்பவத்தின் மூலம், ஒரு மனிதன் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது அத்தொழிலுக்குரிய கடமைகளை சரிவர நடத்துவதே, வேறு எவ்வித உயர்ந்த ஸுகத்தையும் விட, சிலாக்கியமானது என்பதை ஸ்ரீமத் ஆசார்யார் போதித்தார்கள்.
*தொடரும்…*
No comments:
Post a Comment