Saturday, January 6, 2024

Mahabharatam in tamil 300

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-300
துரோண பர்வம்
….
துரியோதனனை வீழ்த்திய சாத்யகி
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "யவனர்கள் மற்றும் காம்போஜர்களை வீழ்த்தியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான யுயுதானன் {சாத்யகி}, நேராக உமது துருப்புகளுக்கு மத்தியில் அர்ஜுனனை நோக்கிச் சென்றான். அழகிய பற்களைக் கொண்டவனும், சிறந்த கவசத்தைப் பூண்டிருந்தவனும், அழகிய கொடிமரத்தைக் கொண்டிருந்தவனுமான அந்த மனிதர்களில் புலி (சாத்யகி), மான்களைக் கொல்லும் வேடுவனைப் போலக் கௌரவத் துருப்புகளைக் கொன்று அவர்களை அச்சங்கொள்ளச் செய்தான்.
தன் தேரில் சென்ற அவன் {சாத்யகி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், மிகக் கடினமானதும், தங்க நிலவுகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லைப் பெரும் பலத்துடன் அசைத்தான். தங்க அங்கதங்களைக் கொண்ட தன் கரங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தலைப்பாகையுடனும், தங்கக் கவசம் அணிந்த தன் உடலுடனும், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட தன் கொடிமரம் மற்றும் வில்லுடனும் மேருவின் சிகரத்தைப் போல அவன் ஒளிர்ந்தான். இப்படி ஒளிர்ந்த அவன், தன் கையில் அந்த வட்டமான வில்லுடன் கூதிர் காலத்தில் தோன்றிய மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்தான். காளையின் கண்கள், நடை மற்றும் தோள்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, மாட்டுக் கொட்டகையில் உள்ள ஒரு காளையைப் போல உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தான்.
தன் மந்தையின் மத்தியில் செருக்குடன் நிற்கும் மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனும், அதன் நடையைக் கொண்டவனுமான அவனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனை {தலைமை யானையை} அணுகும் ஒரு புலியைப் போல உமது போர்வீரர்கள் அவனை அணுகினர். உண்மையில், அவன் {சாத்யகி} துரோணரின் படைப்பிரிவையும், கடக்க முடியாத போஜர்களின் படைப்பிரிவையும் கடந்த பிறகு, ஜலசந்தனின் துருப்புகள், காம்போஜர்கள் படை ஆகியவற்றைக் கொண்ட கடலை அவன் {சாத்யகி} கடந்த பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எனும் முதலையிடமிருந்து அவன் தப்பிய பிறகு, பெருங்கடலைப் போன்ற அந்தப் படையை அவன் கடந்த பிறகு, உமது படையின் தேர்வீரர்கள் பலர் கோபத்தால் தூண்டப்பட்டு அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.
சாத்யகி முன்னேறிச் செல்கையில், துரியோதனன், சித்திரசேனன், துச்சாசனன், விவிம்சதி, சகுனி, துஸ்ஸஹன், இளமை நிறைந்த துர்த்தர்ஷணன், கிராதன் மற்றும் ஆயுதங்களை நன்கறிந்தவர்களும், வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான பிற துணிச்சல் மிக்கவர்கள் பலரும் அவனைப் {சாத்யகியைப்} பின்னால் இருந்து தொடர்ந்து சென்றனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஆரவாரமானது, பெருங்காற்றால் சீறும் முழு அலைகளைக் கொண்ட பெருங்கடலைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.
தன்னை நோக்கி விரையும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கண்ட அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "மெதுவாகச் செல்வாயாக. ஓ! சாரதியே, பௌர்ணமியில் உச்சபட்ச உயரத்தை அடைந்து பெருகி வரும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, ஓ! தேரோட்டியே, இந்தப் பெரும்போரில் (சினமும், செருக்கும்) பெருகியதும், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் நிறைந்ததும், தன் தேர்களின் ஆழ்ந்த முழக்கத்தால் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடி என்னை நோக்கி வேகமாக விரைவதும், பூமி, வானம், ஏன் கடல்களையே நடுங்கச் செய்வதுமான இந்தத் துருப்புகளின் கடலை நான் தடுப்பேன். ஓ! தேரோட்டியே, இந்திரனுக்கு இணையான என் ஆற்றலை இந்தப் பெரும்போரில் நீ காண்பாயாக. என் கூரிய கணைகளால் இந்தப் பகைவரின் படையை நான் எரிக்கப் போகிறேன். இந்தக் காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன ஆயிரக்கணக்கில் என்னால் கொல்லப்படுவதையும், சீற்றமிக்க என் கணைகளால் அவர்களது உடல்கள் துளைக்கப்படுவதையும் காண்பாயாக" என்றான் {சாத்யகி}.
இவ்வார்த்தைகளைச் சாத்யகி (தன் தேரோட்டியிடம்) சொன்ன போது, போரிட விரும்பிய அந்தப் போராளிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட அவனுக்கு முன்பாக வேகமாக வந்தனர். அவர்கள், "கொல்வீர், விரைவீர், நிற்பீர், காண்பீர், காண்பீர்" என்று சொல்லிக் கொண்டே பேரொலியை உண்டாக்கினர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களில், சாத்யகி, தன் கூரிய கணைகளின் மூலம் முன்னூறு {300} குதிரைவீரர்களையும், நானூறு {400} யானை வீரர்களையும் கொன்றான். (ஒரு பக்கத்தில்) ஒன்று சேர்ந்திருந்த வில்லாளிகள், (மறு பக்கத்தில்) சாத்யகி ஆகியோருக்கிடையில் இருந்த ஆயுதங்களின் பாதையானது {போரானது}, (பழங்காலதில்) தேவர்களுக்கு அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாக மிகவும் மூர்க்கமானதாக இருந்தது. {அப்போது} ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.
சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்த உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் வரவேற்றான். அந்தப் போரில் தன் கணை மழையால் அனைத்துப் பக்கங்களையும் நிறைந்தவனும், வீரமிக்கவனுமான அந்த வீரன் {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்றவகையில் பெரும் எண்ணிக்கையில் உமது துருப்புகளைக் கொன்றான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் எந்தக் கணையும் {இலக்கை} தவறவில்லை, ஓ! மன்னா, அங்கே நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், காலாட்படை வீரர்கள் என்ற முழு அலைகளால் ஆனதுமான அந்தத் துருப்புகளின் கடலானது, சாத்யகி என்ற அந்தக் கரையைத் தொட்டதும் அசையாமல் நின்றது.
சாத்யகியின் கணைகளால் மீண்டும் மீண்டும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கொல்லப்பட்டதும், பீதியடைந்திருந்த போராளிகள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் படையானது, குளிர்காலத்தின் உறைய வைக்கும் வெடிப்புகளால் பீடிக்கப்பட்டதைப் போல அங்கேயும், இங்கேயும் திரிந்தது. யுயுதானனால் தாக்கப்படாத காலாட்படை வீரர்களையோ, தேர்வீரர்களையோ, யானைகளையோ, குதிரைவீரர்களையோ, குதிரைகளையோ நாங்கள் காணவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்குச் சாத்யகி ஏற்படுத்திய பேரழிவைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்குனன் {அர்ஜுனன்} கூட ஏற்படுத்தவில்லை. பெரும் கரநளினம் கொண்டவனும், மனிதர்களில் காளையும், களங்கமற்றவனுமான அந்தச் சிநியின் பேரன், தன் உச்சபட்ச திறனை வெளிப்படுத்திபடி அர்ஜுனனையே விஞ்சிப் போரிட்டான்.
அப்போது மன்னன் துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} தேரோட்டியையும் {முகுந்தனையும்}, நான்கு கணைகளால் அவனது {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} மூன்று கணைகளாலும், மீண்டும் எட்டு கணைகளாலும் சாத்யகியையும் துளைத்தான். துச்சாசனன், பதினாறு கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையைத் துளைத்தான். சகுனி, இருபத்தைந்து கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும் சாத்யகியைத் துளைத்தனர். துஸ்ஸஹன், பதினைந்து கணைகளால் சாத்யகியின் மார்பைத் துளைத்தான். பிறகு, இப்படி அவர்களின் கணைகளால் தாக்கப்பட்ட அந்த விருஷ்ணிகளில் காளை {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி, அவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் செருக்குடன் துளைத்தான்.
பெரும் சக்தி கொண்ட கணைகளால் தன் எதிரிகள் அனைவரையும் ஆழத் துளைத்தனும், பெரும் சுறுசுறுப்பையும் ஆற்றலையும் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒரு பருந்தின் வேகத்துடன் அந்தக் களத்தில் திரிந்தான். சுபலன் மகனின் {சகுனியின்} வில்லையும், அவனது கையை மறைத்த தோலுறையையும் அவன் வெட்டினான். யுயுதானன் {சாத்யகி}, மூன்று கணைகளால் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். மேலும், அவன் {சாத்யகி} சித்திரசேனனை நூறு கணைகாளலும், துஸ்ஸஹனை பத்தாலும் துளைத்தான். பிறகு அந்தச் சிநி குலத்துக் காளை இருபது கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட உமது மைத்துனன் (சகுனி), எட்டு கணைகளாலும், ஐந்தால் மீண்டுமொரு முறையும் சாத்யகியைத் துளைத்தான். துச்சாசனன் மூன்று கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தான். ஓ! மன்னா, துர்முகன் பனிரெண்டு கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்., எழுபத்துமூன்று கணைகளால் மாதவனை {சாத்யகியைத்} துளைத்த துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அவனது தேரோட்டியை {முகுந்தனைத்} துளைத்தான். அப்போது சாத்யகி, போரில் ஒன்றாக மூர்க்கத்துடன் போரிட்ட அந்தத் துணிச்சல்மிக்க, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.
பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (யுயுதானன் {சாத்யகி}) ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} தேரோட்டியை விரைவாகத் தாக்கினான், அதன் பேரில், பின்னவன் {தேரோட்டி} உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேரோட்டி வீழ்ந்ததும், உமது மகனின் {துரியோதனனின்} தேரானது அதில் பூட்டப்பட்டிருந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகளால் போர்க்களத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், பிற வீரர்களும், மன்னனின் {துரியோதனனின்} தேரில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்து, நூற்றுக்கணக்கில் தப்பி ஓடினர். உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டு, கூர்முனை கொண்ட கணைகளின் மழையால் அந்தப் படையை மறைத்தான்.
எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த உமது போராளிகள் அனைவரையும் முறியடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தேரை நோக்கி முன்னேறிச் சென்றான். உண்மையில், யுயுதானன் {சாத்யகி} கணைகளை ஏவுவதையும், தனது தேரோட்டியைப் பாதுகாப்பதையும், போரில் தானே போரிடுவதையும் கண்ட உமது துருப்புகள் அவனை {சாத்யகியை} வழிபட்டன" {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பெரும்படையைக் கலங்கடித்தபடியே அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்டு, ஓ! சஞ்சயா, உண்மையில் வெட்கங்கெட்டவர்களான என் மகன்கள் என்ன செய்தனர்? சவ்யசச்சினுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனான அந்த யுயுதானன் {சாத்யகி} தங்கள் எதிரில் இருந்த போது, உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த இழிந்தவர்களால் போரில் எப்படித் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய முடிந்தது? போரில் வெல்லப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன செய்தனர்? உலகம் பரந்த புகழைக் கொண்ட சாத்யகியால், உண்மையில், போரில் எப்படி அவர்களைக் கடந்து செல்ல முடிந்தது? ஓ! சஞ்சயா, என் மகன்கள் உயிரோடிருக்கையிலேயே அந்தச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} எப்படிப் போரிட முடிந்தது? இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக. ஓ! ஐயா {சஞ்சயா}, உன்னிடமிருந்து கேட்டவாறே, ஒருவனுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல் மிக அற்புதமானாதாகவே இருக்கிறது.
ஓ! சூதா {சஞ்சயா}, சாத்வத குல வீரனான தனி ஒருவனால் {சாத்யகியால்}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் விதியானது இப்போது என் மகன்களுக்குச் சாதமானதாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஐயோ, ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி} என்ற ஒற்றை வீரனுக்குக்கூட என் படை இணையானதாக இல்லையே. {அப்படியிருக்கையில்} பாண்டவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆயுதங்களில் திறன்மிக்கவரும், போர்க்கலையின் முறைகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணரையே போரில் வென்ற சாத்யகி, சிறு {அற்ப} விலங்குகளைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல என் மகன்களைக் கொன்றுவிடுவான். போரில் மூர்க்கமாகப் போரிட்டும் கிருதவர்மன் முதலிய எண்ணற்ற வீரர்களால் யுயுதானனைக் கொல்ல முடியவில்லையே. பின்னவன் {சாத்யகி} என் மகன்களைக் கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. சிநியின் புகழ்பெற்ற பேரன் போரிட்டது போலப் பல்குனனேகூட {அர்ஜுனனேகூட} போரிடவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலும், துரியோதனனின் செயல்களாலுமே இவை யாவும் வந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பீராக.
உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சம்சப்தகர்கள் அனைவரும் கடுமையாகப் போரிடத் தீர்மானித்து மீண்டும் திரண்டனர். துரியோதனன் தலைமையில் மூவாயிரம் {3000} வில்லாளிகளும், சகர்கள், காம்போஜர்கள், பாஹ்லீகர்கள், யவனர்கள், பாரடர்கள் [1], கலிங்கர்கள், தங்கணர்கள், அம்பஷ்டர்கள், பிசாசர்கள் {பைசாசர்கள்}, பர்ப்பரர்கள், சினத்தால் தூண்டப்பட்டு, கற்களை ஆயுதமாக ஏந்திய மலை நாட்டினர் ஆகியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பை எதிர்க்கும் விட்டிற்பூச்சிகளைப் போல அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர். அதே போல, ஓ! மன்னா, ஐநூறு {500} வீரர்களான பிறரும் சாத்யகியை எதிர்த்து விரைந்தனர். ஆயிரம் {1000} தேர்களையும், பெரும் தேர்வீரர்களான நூறு பேரையும், ஆயிரம் {1000} யானைகளையும், இரண்டாயிரம் {2000} வீரர்களையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொண்ட மற்றொரு பெரிய படையும் சிநியின் பேரனை எதிர்த்து விரைந்தது.
[1] கங்குலியில் இங்கே Paradas என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில் இங்குப் {வேறு} பாரதர்கள் என்று இருக்கிறது. இவர்கள் பரதவம்சத்தவர் அல்ல. இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தப் பாரடர்கள் என்று புரானிக் என்சைக்ளோபீடியா சொல்கிறது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், "அவனை {சாத்யகியைக்} கொல்வீராக" என்று சொல்லி அந்த வீரர்கள் அனைவரையும் தூண்டியபடியே சாத்யகியைச் சூழ்ந்து கொண்டான். அந்த எண்ணிலடங்கா எதிரிகளுடன், தனி ஒருவனாக அச்சமற்றவகையில் போராடிய சிநியின் பேரனுடைய நடத்தை மகத்தானதாகவும், அற்புதமானதாகவும் இருப்பதை நாங்கள் கண்டோம். அவன் {சாத்யகி}, தேர்வீரர்கள் அடங்கிய அந்த மொத்த படையையும், அந்த யானைப் படையையும், அந்தக் குதிரைவீரர்கள் அனைவரையும், கள்வர்களின் அந்தப் படை முழுவதையும் கொன்றான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போல, அந்தப் போர்க்களமானது, உடைந்த தேர்ச்சக்கரங்கள், அவனது {சாத்யகியின்} வலிமைமிக்க ஆயுதங்களால் நொறுக்கப்பட்ட எண்ணற்ற அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, துண்டுகளாகக் குறைக்கப்பட்ட அழகிய தேர் அச்சுக்கள், நசுங்கிய யானைகள், வீழ்ந்த கொடிமரங்கள், சிதறிக் கிடக்கும் கவசங்கள் மற்றும் கேடயங்கள், மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், அனுஷ்கரங்கள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றால் விரவி கிடந்தது [2].
[2] வேறொரு பதிப்பில் இதற்குப் பிறகு இன்னும் அதிகமாக, "மலைகளின் வடிவம் போன்ற வடிவத்தையுடைவையும், மிலேச்சர்களால் ஏறப்பட்டவையும், விள்ளப்பட்ட {கட்டிச் சேர்க்கப்பட்ட} மைக்கட்டி போன்றவையும், கீழே விழுந்திருப்பவையுமான பெரும் யானைகளாலும், பருத்திருக்கும் மலை போன்றவையான விலங்குகளாலும், மந்தரங்களாலும், பத்ரங்களாலும், மிருகமந்தரங்களாலும், மந்தரபத்ரங்களாலும், மந்தரமிருகங்களாலும், மிருகபத்ரங்களாலும், பத்ரமிருகங்களாலும் ஆங்காங்கு யுத்த பூமியானது வியாபிக்கப்பட்டிருந்தது" என்று இருக்கிறது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யானைகளில் முதன்மையானவை பலவும், ஓ! மன்னா, மலைகளைப் போலப் பெரியவையும், அஞ்சனம், வாமனம், மற்றும் பிற இனங்களில் பிறந்த முதன்மையான யானைகள் பலவும், உயிரையிழந்து தரையில் கிடந்தன [3]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாத்யகியால், வனாயு, மலைநாடு, காம்போஜம், பாஹ்லீக இனங்களைச் சேர்ந்த முதன்மையான பல குதிரைகள் கொல்லப்பட்டன. அந்தச் சிநியின் பேரன், பல்வேறு மாநிலங்களில் பிறந்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுமான காலாட்படை வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.
[3] வேறொரு பதிப்பில், "அஞ்சனத்தின் வம்சத்திற் பிறந்தவையும், வாமனத்தினுடைய குலத்தில் தோன்றியவையும், சுப்ரதீகத்தின் குலத்தில் தோன்றியவையும், குமுதத்தினுடைய வம்சத்தில் தோன்றியவையும், ஐராவதத்தின் குலத்தில் பிறந்தவையும், அவ்வாறே மற்றத்திக்கஜங்களுடைய குலங்களில் தோன்றியவையுமான பல சிறந்த யானைகள் அடிக்கப்பட்டு விழுந்தன" என்று இருக்கிறது
அந்தப் படைவீரர்கள் இப்படிக் கொல்லப்பட்டு வருகையில் கள்வர்களிடம் பேசிய துச்சாசனன், "அறநெறியறியா வீரர்களே போரிடுவீராக! ஏன் பின்வாங்குகிறீர்?" என்றான். தன் வார்த்தைகளைக் கேளாமல் ஓடிச் செல்லும் அவர்களைக் கண்டவனும், உமது மகனுமான துச்சாசனன், கற்களைக் கொண்டு போரிடுவதில் திறம்பெற்றவர்களான துணிச்சல் மிக்க அந்த மலைவாசிகளிடம், "கற்களைக் கொண்டு போரிடுவதில் நீங்கள் சாதித்தவர்களாக இருக்கிறீர்கள். எனவே நிற்பீராக. அந்த வீரன் {சாத்யகி} போரிடும் விருப்பத்துடன் இருப்பினும், அவன் {சாத்யகி} உங்கள் போர் முறையை அறியாதவனாவான். கௌரவர்கள் அனைவரும் இந்தப் போர்முறையை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சாத்யகியை நோக்கி விரைவீர். அஞ்சாதீர். சாத்யகியால் உங்களை அணுக இயலாது" என்று சொல்லி அவர்களைத் {மலைவாசிகளைத்} தூண்டினான்.
இப்படித் தூண்டப்பட்டவர்களும், கற்களைக் கொண்டு போரிடும் முறையை அறிந்தவர்களும், மலைவாசிகளுமான அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், மன்னனை நோக்கி விரையும் அமைச்சர்களைப் போலவே அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தனர். பிறகு அந்த மலைவாசிகள், யானைகளின் தலையைப் போன்று பெரிய அளவிலான கற்களைத் தங்கள் கரங்களில் உயர்த்தியபடியே அந்தப் போரில் யுயுதானனுக்கு எதிராக நின்றனர். உமது மகனால் {துச்சாசனனால்} தூண்டப்பட்ட பிறரும், ஏவுகணைகளைத் தரித்துக் கொண்டு அந்தச் சாத்வதனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தில், பின்னவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது சாத்யகி, கற்களைக் கொண்டு போரிடும் விருப்பத்தால் தன்னை நோக்கி விரைந்து வரும் அவ்வீரர்களைக் குறிபார்த்து, அவர்கள் மேல் கூரிய கணைகளை ஏவினான். அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, பாம்புகளைப் போன்று தெரிந்த அந்தக் கணைகளால், அந்த மலைவாசிகள் வீசிய கற்களின் அடர்த்தியான மழையைத் துண்டுகளாக வெட்டினான். சுடர்மிக்க விட்டிற்பூச்சிகளைப் போலத் தெரிந்த அந்தக் கற்களின் துண்டுகள், பல போராளிகளைக் கொன்றன. அதன்பேரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, "ஓ!" என்றும், "ஐயோ" என்றும் அந்தக் களத்தில் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கரங்களில் பெரும் கற்களை உயர்த்திப் பிடித்திருந்த துணிச்சல் மிக்க ஐநூறு {500} போர் வீரர்களின் கரங்களும் வெட்டப்பட்டுக் கீழே தரையில் கிடந்தன. மேலும் முழுமையாக ஆயிரம் {1000} பேரும், அதன் பிறகு ஒரு நூறாயிரம் {1,00,000} பேரும், கற்களைப் பிடித்திருந்த நிலையிலேயே தங்கள் கரங்கள் வெட்டப்பட்டுச் சாத்யகியை அணுகமுடியாமல் கீழே விழுந்தனர். உண்மையில் சாத்யகி, கற்களைக் கொண்டு போரிட்ட அந்த வீரர்களில் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.
பிறகு அவர்களில் பலர் மீண்டும் போரிடத் திரும்பி கற்களின் மாரியைச் சாத்யகியின் மீது பொழிந்தனர். வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த தரதர்கள், தங்கணர்கள், கசர்கள், லம்பகர்கள், புளிந்தர்கள் ஆகியோரில் பலர் அவன் {சாத்யகியின்} மீது தங்கள் ஆயுதங்களை வீசினர். எனினும், ஆயுதப் பயன்பாடுகளை நன்கறிவந்தனான சாத்யகி, அந்தக் கற்களையும், ஆயுதங்களையும் தன் கணைகளால் வெட்டினான். சாத்யகியின் கூரிய கணைகள் துளைத்து, ஆகாயத்தில் உடைக்கப்பட்ட அந்தக் கற்கள் உண்டாக்கிய அந்தக் கடும் ஒலியால் அச்சமடைந்த பல தேர்வீரர்களும், குதிரைகளும், யானைகளும் போரில் இருந்து ஓடின. அந்தக் கற்களின் துண்டுகளால் தாக்கப்பட்ட மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன, குளவிகளால் கடிபட்டதைப் போல உணர்ந்து போரில் நிற்க முடியாதவர்களாக ஆனார்கள். (சாத்யகியைத் தாக்கிய) யானைகளில் எஞ்சியவை சில குருதியால் நனைந்து, தங்கள் தலைகளும், கும்பங்களும் பிளக்கப்பட்டு யுயுதானனுடைய தேரின் அருகில் இருந்து தப்பி ஓடின. அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாதவனால் {சாத்யகியால்} இப்படிக் கலங்கடிக்கப்பட்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் அலைகள் நிரம்பிய பெருங்கடலைப் போல ஆரவாரம் எழுந்தது.
அந்தப் பெரும் ஆரவாரத்தைக் கேட்ட துரோணர், தன் தேரோட்டியிடம், "ஓ! சூதா, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்தப் பெரும் தேர்வீரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு நம் படையைப் பல்வேறு துண்டுகளாகச் சிதறடித்து, அந்தகனைப் போலவே களத்தில் திரிந்து கொண்டிருக்கிறான். இந்தச் சீற்றமிகு ஆரவாரம் வரும் இடத்திற்குத் தேரைச் செலுத்துவாயாக. யுயுதானன், கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளுடன் போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. நமது தேர்வீரர்களும், மூர்க்கமாக ஓடும் குதிரைகளால் சுமந்து செல்லப்படுவது காணப்படுகிறது. ஆயுதங்களற்றவர்களாகவும், கவசமற்றவர்களாகவும் காயமடைந்தவர்களாகவும் இருக்கும் அவர்களில் பலர் கீழே விழுகின்றனர். இந்தக் குதிரைகள் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருப்பதால் தேரோட்டிகள் அவற்றைத் தடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்" என்றார் {துரோணர்}.
பரத்வாஜர் மகனின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரிடம், "ஓ! நீண்ட நாட்களால் {ஆயுளால்} அருளப்பட்டவரே, கௌரவத் துருப்புகள் ஓடுகின்றன. (எதிரியால்) முறியடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் நமது போர்வீரர்களைக் காண்பீராக. மேலும், ஒன்று கூடியிருப்பவர்களான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் உம்மைக் கொல்லும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து வருகின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இப்பணிகளில் {இவ்விரு பணிகளில்}, கவனத்தைக் கோரும் முதன்மையான பணி யாது என்பதை நீர் தீர்மானிப்பீராக. (முன்னேறி வரும்) பாண்டவப் படையைச் சந்திக்க நாம் இங்கே நிற்க வேண்டுமா? அல்லது (சாத்யகியை நோக்கிச்) நாம் செல்ல வேண்டுமா? சாத்யகியைப் பொறுத்தவரை, இப்போது அவன் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிறான்" என்றான் {துரோணரின் தேரோட்டி}.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரோட்டி இப்படிப் பரத்வாஜர் மகனிடம் {துரோணரிடம்} பேசிக் கொண்டிருக்கையில், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களைக் கொன்றபடி சிநியின் பேரன் {சாத்யகி} அங்கே திடீரெனத் தோன்றினான். அந்தப் போரில் உமது துருப்புகள் இப்படி யுயுதானனால் கொல்லப்படுகையில், யுயுதானனுடைய தேரின் அருகே இருந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கி அவை ஓடின. அதேபோலவே, எந்தப் (பிற) தேர்வீரர்களோடு சேர்ந்து துச்சாசனன் சென்றானோ, அவர்கள் அனைவரும், துரோணரின் தேர் காணப்பட்ட அந்த இடத்திற்கே பீதியடைந்து விரைந்து வந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "துச்சாசனனின் தேர் தன்னருகே நிற்பதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், "ஓ! துச்சாசனா, இந்தத் தேர்கள் அனைத்தும் ஏன் {தப்பி} ஓடுகின்றன? மன்னன் {துரியோதனன்} நலமாக இருக்கிறானா? சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} உயிருடன் இருக்கிறானா? நீயோ ஓர் இளவரசன். நீ மன்னனின் தம்பியுமாவாய். மேலும் நீ ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனும் ஆவாய். {அப்படியிருக்க} போரில் இருந்து ஏன் நீ ஓடுகிறாய்? (உன் அண்ணனின் அரியணையைப் பாதுகாத்து) பட்டத்து இளவரசனாவாயாக. {உன் அண்ணனை ராஜனாக்கி, நீ யுவராஜனாவாயாக}.
திரௌபதியிடம் நீ முன்னர், "பகடையில் எங்களால் வெல்லப்பட்ட நீ எங்களின் அடிமையாவாய். உன் கணவர்களுக்குக் கட்டுப்பட்டிராமல் கற்பை நீ ஒதுக்கித் தள்ளுவாயாக. என் அண்ணனான மன்னனின் {துரியோதனனின்} ஆடைகளைச் சுமப்பவளாக இருப்பாயாக. உன் கணவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் எள்ளுப்பதர்களைப் போலப் பயனற்றவர்களேயாவர்" என்று சொன்னாய். துச்சாசனா, இவ்வார்த்தைகளைச் சொன்ன நீ, இப்போது போரில் இருந்து ஏன் ஓடுகிறாய்? பாஞ்சாலர்களுடனும், பாண்டவர்களுடனும் கடும் பகைமையை நீயே தூண்டிவிட்டு, தனி ஒருவனான சாத்யகியின் முன்னால் போரிட ஏன் அஞ்சுகிறாய்? சூதாட்ட நிகழ்வில் பகடையை எடுத்த போது, உன்னால் கையாளப்பட்ட பகடையானது விரைவில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கடுங்கணைகளாக மாறும் என்பதை நீ உணரவில்லையா? தூற்றும் அடைமொழிகள் பலவற்றை முன்னர்ப் பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியவன் நீயே. திரௌபதியின் துயரங்கள் உன்னையே வேராகக் {வேர்} கொண்டிருக்கின்றன {திரௌபதியின் துயரங்களுக்குக் காரணமானவன் நீயே}.
உனது செருக்கும், திமிரும், தற்பெருமையும் இப்போது எங்கே? கடும் நஞ்சுமிக்கப் பயங்கரப் பாம்புகளான அந்தப் பாண்டவர்களைச் சினமூட்டிவிட்டு ஏன் நீ ஓடுகிறாய்? சுயோதனனின் {துரியோதனனின்} துணிச்சல்மிக்கத் தம்பியான நீ ஓடுவதில் தீவிரமாய் இருக்கிறாய் என்பதில் ஐயமேயில்லை. ஓ! வீரா {துச்சாசனா}, முறியடிக்கப்பட்டுப் பீதியடைந்திருக்கும் இந்தக் கௌரவப் படையை உன் சொந்தக் கரங்களின் சக்தியை நம்பி நீயே இன்று பாதுகாக்க வேண்டும் [1]. எனினும், இதைச் செய்யாமல் அச்சத்தால் போரைக் கைவிட்டு உன் எதிரிகளின் இன்பத்தையே நீ அதிகரிக்கிறாய். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் படைக்குத் தலைவனான நீயே இப்படி ஓடும்போது, வேறு யார்தான் போரில் நிலைப்பார்கள்? புகலிடமாக இருக்க வேண்டிய நீயே அஞ்சினால், யார்தான் அஞ்சாமலிருப்பார்கள்?
[1] வேறொரு பதிப்பில், "கடுங்குணம் கொண்டவனும், ஓடுவதில் நோக்கம் கொண்டவனுமான உன்னுடைய சகோதரனான அந்தத் துரியோதனனும், ராஜ்யமும் இந்தப் பாரதச் சேனையும் காக்கப்படத்தக்கன. வீரனே, பிளக்கப்படுவதும், பயத்தால் பீடிக்கப்பட்டதுமான சேனையானது உன் கைவன்மையைக் கொண்டு உன்னால் பாதுகாக்கப்படத்தக்கதல்லவா?" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பாரதர்களின் இந்தப் படை மற்றும் மன்னன் சுயோதனன் ஆகிய இருவரும் பரிதாபத்துக்குரியவர்களே. ஓடிக்கொண்டிருக்கும் உன்னைப் பின்னவன் {துரியோதனன்} தன் துணிச்சல்மிக்கத் தம்பியாகக் கொண்டிருக்கிறான். உண்மையில், ஓ வீரா, சிதறடிக்கப்பட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படை உன்னாலும், உன் ஆயுதபலத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது.
சாத்வத குலத்தின் தனியொரு போர்வீரனுடன் {சாத்யகியிடம்} போரிட்ட பிறகு, போரில் இருந்து ஓடுவதற்கே உன் இதயம் விரும்புகிறது. எனினும், ஓ! கௌரவா {துச்சாசனா}, போரில் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, அல்லது பீமசேனனை, அல்லது இரட்டையர்களை (நகுலன் மற்றும் சகாதேவனை) நீ காண நேர்ந்தால் என்ன செய்வாய்? எதற்கு அஞ்சி நீ ஓடுவதில் பாதுகாப்பைத் தேடுகிறாயோ, அந்தச் சாத்யகியின் கணைகள், சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான காந்தி கொண்ட பல்குனனுடையவைக்கு {அர்ஜுனனின் கணைகளுக்கு} போரில் ஒருபோதும் ஈடானவையல்ல. ஓடுவதில் உன் இதயம் உறுதியாக இருக்கிறது என்றால், சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இந்தப் பூமியின் அரசுரிமை கொடுக்கப்படட்டும்.
தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளுக்கு ஒப்பான பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் உன் உடலுக்குள் நுழையும் முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. உயர் ஆன்ம பார்த்தர்கள், போரில் உன் நூறு சகோதரர்களைக் கொன்று பலவந்தமாகப் பூமியைப் பறிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சாமாதானத்தை அடைவாயாக. மன்னன் யுதிஷ்டிரனும், போரில் மகிழ்பவனான கிருஷ்ணனும் கோபமடைவதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன் இந்தப் பரந்த படைக்குள் ஊடுருவி, உன் சகோதரர்களைப் பிடிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக.
முன்னர்ப் பீஷ்மர் உன் அண்ணனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, "பாண்டவர்கள் போரில் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஓ! இனியவனே, அவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக" என்றார் [2]. எனினும், தீயவனான உன் அண்ணன் சுயோதனன் அதைச் செய்யவில்லை [3]. எனவே, உன் இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து பாண்டவர்களுடன் கடுமையாகப் போரிடுவாயாக. சாத்யகி இருக்கும் இடத்திற்கு உன் தேரில் விரைந்து செல்வாயாக. ஓ! பாரதா {துச்சாசனா}, நீ இல்லாமல் இந்தப் படை ஓடிவிடும். போரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியுடன் உனக்காக {உன் நலனுக்காகப்} போரிடுவாயாக" என்றார் {துரோணர்}.
[2] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "சமாதானத்தில் நோக்கமுள்ள என்னாலும் {துரோணராலும்}, "ஏ! துரியோதனா! மிகுந்திருப்பதைக் காப்பாற்று; பார்த்தர்களுடன் நீ சமாதானஞ்செய்து கொள். வீர! எல்லா அரசர்களையும் காப்பாற்று" என்று சொல்லப்பட்டிருக்கிறான்" என்று இருக்கிறது.
[3] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக, "நீயாவது போரில் தைரியமடைந்து முயற்சியுள்ளவனாகிப் பாண்டவர்களுடன் யுத்தஞ்செய். உன்னுடைய ரத்தத்தையும் பீமசேனன் குடிக்கப் போகிறான் என்று கேட்டிருக்கிறேன். அவனுடைய அந்த வசனமும் பொய்யன்று. அஃது அவ்வாறே ஆகும். அதிமூடனே, யுத்தத்தில் ஓடுந்தன்மையுள்ள நீ யாது காரணத்தால் வைரத்தைத் தொடங்கினாய்? நீ பீமனுடைய பேராண்மையை அறியவில்லையா?" என்று இருக்கிறது.
(துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} மறுமொழியாக ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. துச்சாசனன், (பரத்வாஜர் மகனின் {துரோணரின்}) வார்த்தைகளைக் கேட்காதது போலப் போலியாகக் காட்டிக் கொண்டு, சாத்யகி இருக்கும் இடத்திற்குச் சென்றான். புறமுதுகிடாத மிலேச்சர்களின் பெரும்படையுடன் போரில் சாத்யகியிடம் வந்த துச்சாசனன், அவ்வீரனுடன் கடுமையாகப் போரிட்டான்.
தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் எதிர்த்து மிதமான வேகத்துடன் விரைந்தார். அந்தப் போரில் பாண்டவப்படையின் மத்தியில் ஊடுருவிய துரோணர், அவர்களது போர்வீரர்களை, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நசுக்கினார். அந்தப் போரில் துரோணர், தன் பெயரை அறிவித்துக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யர்களுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தினார்.
பாஞ்சாலர்களின் ஆட்சியாளனுடைய {துருபதனின்} மகனான சிறப்புமிக்க வீரகேது, பாண்டவப் படையணிகளை வெல்வதில் ஈடுபட்டிருந்த பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். துரோணரை ஐந்து கணைகளால் துளைத்த அவ்விளவரசன் {வீரகேது}, ஒரு கணையால் துரோணரின் கொடிமரத்தையும், ஏழால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். துரோணர் மிகக் கடுமையாக முயன்றாலும், பாஞ்சாலர்களின் இளவரசனை {வீரகேதுவை} அணுக முடியாதபடிக்கு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போரில் நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. பிறகு, ஓ! ஐயா, பாஞ்சாலர்கள், போரில் துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்டு, மன்னன் யுதிஷ்டிரனின் வெற்றியை விரும்பி, அவரை {துரோணரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா, நெருப்பு போன்ற கணைகள், பலமான வேல்கள் மற்றும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களின் மழையால் அந்தப் போர்வீரர்கள் துரோணரை மறைத்தனர். ஆகாயத்தில் மேகத்திரள்களை விரட்டும் காற்றைப் போன்ற தன் எண்ணற்ற கணைகளால் அந்த அடர்த்தியான ஆயுத மழையைக் கலங்கடித்த துரோணர் மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.
பிறகு பகைவீரர்களைக் கொல்பவரான அவர் (பரத்வாஜரின் மகன்), சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட கடுங்கணை ஒன்றை வீரகேதுவின் தேரை நோக்கிக் குறிவைத்தார். அந்தக் கணையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசனை {வீரகேதுவைத்} துளைத்துச் சென்று, குருதியில் குளித்து, நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு வேகமாகப் பூமிக்குள் நுழைந்தது. பாஞ்சாலர்களின் இளவரசன் {வீரகேது}, காற்றால் வேரோடு முறிந்து மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் சண்பக மரத்தைப் போலத் தனது தேரில் இருந்து கீழே வேகமாக விழுந்தான். பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவனுமான அந்த இளவரசனின் {வீரகேதுவின்} வீழ்ச்சியை அடுத்து, துரோணரை அனைத்துப் பக்கங்களிலும் பாஞ்சாலர்கள் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.
சித்திரகேது, சூதன்வான், சித்திரவர்மன், சித்திரரதன் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கொல்லப்பட்ட) தங்கள் சகோதரனின் {வீரகேதுவின்} நிமித்தமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, கோடையின் முடிவில் (பொழியும்) மேகங்களைப் போல (அவரை நோக்கி) கணைகளை ஏவியபடி, அந்தப் பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} போரிடும் விருப்பத்தால் ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர். அரச பரம்பரையைச் சேர்ந்த வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தன் சக்தி மற்றும் கோபம் அனைத்தையும், அவர்களின் அழிவுக்காக ஒன்றாகத் திரட்டினார். பிறகு துரோணர் அவர்கள் மீது கணைகளின் மாரியை ஏவினார். முற்றாக வளைந்திருந்த துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவரது கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசர்கள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, குழம்பிப் போய் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தார்கள்.
ஓ! பாரதரே, கோபக்காரத் துரோணர், அந்த இளவரசர்கள் மலைத்துப் போயிருப்பதைக் கண்டு, புன்னகைத்துக் கொண்டே அந்தப் போரில் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், தேர்கள் ஆகியவற்றை அவர்களை இழக்கச் செய்தார். பிறகு பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, தமது கூரிய கணைகளாலும், பல்லங்களாலும், மரத்தில் இருந்து கொய்யப்படும் மலர்களைப் போல அவர்களது தலைகளைக் கொய்தார். உயிரை இழந்த அந்த இளவரசர்கள், ஓ! பெருங்காந்தி கொண்ட மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் கொல்லப்பட்டு விழுந்த தைத்தியர்களையும், தானவர்களையும் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் அந்த வீரமகன் {துரோணர்} போரில் அவர்களைக் கொன்ற பிறகு வெல்லப்பட முடியாததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதுமான தமது வில்லை அசைத்தார்.
பாஞ்சாலர்களில் தேவர்களுக்கே ஒப்பானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்கள் {சகோதரர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னன் சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் கண்ணீரைச் சிந்தினான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்} அம்மோதலில் துரோணரின் தேரை எதிர்த்து விரைந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாஞ்சால இளவரசனின் கணைகளால் மறைக்கப்பட்ட துரோணரைக் கண்டு அங்கே திடீரெனத் துன்பக் கதறல்கள் எழுந்தன. உயரான்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} முற்றாக மறைக்கப்பட்டாலும், துரோணர் எந்த வலியையும் உணரவில்லை. மறுபுறம் சிரித்துக் கொண்டே போரிடுவதையே அவர் தொடர்ந்தார். பிறகு சினத்தால் சீறிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நேரான கணைகள் பலவற்றால் துரோணரின் மார்பைத் தாக்கினான்.
அந்த வலிமைமிக்க வீரனால் {திருஷ்டத்யும்னனால்} ஆழத் துளைக்கப்பட்ட பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கத்தில் வீழ்ந்தார். அவரை {துரோணரை} அந்நிலையில் கண்டவனும், பெரும் ஆற்றலையும், சக்தியையும் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன் தன் வில்லை வைத்துவிட்டு, விரைவாக ஒரு வாளை எடுத்துக் கொண்டான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து, கோபத்தில் கண்கள் சிவந்து, துரோணரின் தலையை அவரது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} தேரில் ஏறினான். அதேவேளையில் தன் புலனுணர்வு மீண்டு, தமது வில்லை எடுத்துக் கொண்ட வீரத் துரோணர், கொல்லும் விருப்பத்தால் தமக்கு வெகு அருகில் வந்துவிட்ட திருஷ்டத்யும்னனைக் கண்டு, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கத்தில் உள்ளோரிடம் போரிடத் தகுந்தவையுமான கணைகளால் {வைதஸ்திகம் என்ற கணைகளால்} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைத் துளைக்கத் தொடங்கினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கமான போருக்குத் தகுந்தவையுமான அந்தக் கணைகளைத் துரோணர் அறிந்திருந்தார். அவற்றைக் கொண்டு திருஷ்டத்யும்னனை பலவீனமடையச் செய்வதிலும் வென்றார்.
வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுத் துரோணரின் தேரில் இருந்து கீழே விரைவாகக் குதித்தான். பிறகு தன் வேகம் கலங்கடிக்கப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரில் ஏறிக்கொண்டு மீண்டும் தன் பெரிய வில்லை எடுத்துக் கொண்டான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மீண்டும் அந்தப் போரில் துரோணரைத் துளைக்கத் தொடங்கினான். துரோணரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தமது கணைகளால் பிருஷதன் மகனைத் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைத்} துளைக்கத் தொடங்கினார்.
போர் வழிமுறைகளை அறிந்த அந்த இருவரும், தங்கள் தேர்களில் பல்வேறு அசைவுகளை வெளிக்காட்டியபடியும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்தபடியும் களத்தில் திரிந்தனர். போர்வீரர்களின் மனங்களை மலைக்கச் செய்த துரோணரும், பிருஷதன் மகனும் மழைக்காலத்தில் (மழைத்தாரைகளைப் பொழியும்) வலிமைமிக்க இரு மேகங்களைப் போலத் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். மேலும் அந்தச் சிறப்புமிக்க வீரர்கள் தங்கள் கணைகளால் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகளையும், பூமியையும் நிறைத்தனர். அனைத்து உயிரினங்களும், க்ஷத்திரியர்களும், அங்கே இருந்த பிற போராளிகள் அனைவரும், ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரை உயர்வாகப் பாராட்டினர்.
ஓ! மன்னா, பாஞ்சாலர்கள், "துரோணர் போரில் திருஷ்டத்யும்னனுடன் மோதி நமக்கு அடிபணியப் போகிறார் என்பதில் ஐயமில்லை" என்று உரக்கப் பேசினர். அப்போது துரோணர், கனிந்த கனியொன்றை மரத்தில் இருந்து கொய்யும் ஒரு மனிதனைப் போல அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் தேரோட்டியின் தலையை வேகமாகக் கொய்தார். பிறகு, ஓ! மன்னா, உயர் ஆன்ம திருஷ்டத்யும்னனின் குதிரைகள் {களத்தைவிட்டு} ஓடிச் சென்றன. அந்தக் குதிரைகள் திருஷ்டத்யும்னனைக் களத்தைவிட்டு சுமந்து சென்றதும், பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணர், அந்தப் போரில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் முறியடிக்கத் தொடங்கினார். பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் வென்றவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும், எதிரிகளைத் தண்டிப்பவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} மீண்டும் வியூகத்தின் மத்தியில் தன் நிலையையே ஏற்று நின்றார். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் போரில் அவரை {துரோணரை} வெல்லத் துணியவில்லை" {என்றான் சஞ்சயன்
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதேவேளையில் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத்தைப் போல ஆயிரக்கணக்கான கணைகளை இறைத்தபடி சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான். அறுபது கணைகளாலும், பிறகு பதினாறு கணைகளாலும் சாத்யகியைத் துளைத்த அவன் {துச்சாசனன்}, போரில் மைநாக மலையைப் போல அசையாமல் நின்ற அந்த வீரனை {சாத்யகியை} நடுங்கச் செய்வதில் தவறினான். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெரும் தேர்க்கூட்டங்களின் துணையுடன் சென்ற அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானவன் {துச்சாசனன்}, எண்ணற்ற கணைகளை ஏவியபடி மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்தான்.
போரிட வரும் அந்தக் கௌரவனை {துச்சாசனனைக்} கண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகி, அவனை {துச்சாசனனை} நோக்கி விரைந்து, தன் கணைகளால் அவனை மறைத்தான். துச்சாசனனுக்கு முன்னணியில் இருந்தோர் அனைவரும் இப்படி அந்தக் கணை மழையால் மறைக்கப்பட்டு உமது மகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர். அவர்கள் ஓடிய பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துச்சாசனன், போரில் அச்சமற்று நீடித்தபடியே கணைகளால் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான். அந்தப் போரில் துச்சாசனன், நான்கு கணைகளால் சாத்யகியின் நான்கு குதிரைகளையும், மூன்றால் அவனது தேரோட்டியையும், ஒரு நூறு கணைகளால் சாத்யகியையும் துளைத்து முழக்கம் செய்தான்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட மாதவன் {சாத்யகி}, தன் நேரான கணைகளின் மூலமாகத் துச்சாசனனின் தேரையும், சாரதியையும், கொடிமரத்தையும், துச்சாசனனையும் விரைவாகக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தான். உண்மையில் சாத்யகி, துணிச்சல்மிக்கத் துச்சாசனனை கணைகளாலேயே மறைத்துவிட்டான். ஒரு சிலந்தியானது தன் இழைகளின் மூலம் ஒரு கொசுவைத், தான் அடையும் தொலைவிற்குள் சிக்கச் செய்வதைப் போலவே அந்த எதிரிகளை வெல்பவனும் {சாத்யகியும்} தன் கணைகளால் துச்சாசனனை வேகமாக மறைத்தான்.
அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்ட துச்சாசனனைக் கண்டு, யுயுதானனின் {சாத்யகியின்} தேரை நோக்கித் திரிகர்த்தர்களின் படை ஒன்றைத் தூண்டினான். கடுஞ்செயல் புரிபவர்களும், போரில் சாதித்தவர்களும், எண்ணிக்கையில் மூவாயிரமாக இருந்தவர்களுமான அந்தத் திரிகர்த்த தேர்வீரர்கள் யுயுதானனை நோக்கிச் சென்றனர். போரிட உறுதியாகத் தீர்மானித்தவர்களும், புறமுதுகிடுவதில்லை என்று உறுதியேற்றவர்களுமான அவர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களுடன் யுயுதானனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், யுயுதானன், தன்னை நோக்கிப் போரிட வந்த அந்தப் படையின் முன்னணியில் இருந்தவர்களும், தன் மீது கணைமாரிகளை ஏவியவர்களுமான ஐநூறு முதன்மையான வீரர்களைத் தாக்கி வீழ்த்தினான். சிநிக்களில் முதன்மையானவனின் {சாத்யகியின்} கணைகளால் விரைவாகக் கொல்லப்பட்ட அவர்கள் {திரிகர்த்தர்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டு மலையுச்சியில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.
ஓ! ஏகாதிபதி, சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகளாலும், வீழ்ந்த கொடிமரங்களாலும், கிழிக்கப்பட்டு, குதறப்பட்டு, குருதியில் புரண்டு கொண்டிருந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளாலும் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகங்களால் {பலாச மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு சமவெளியைப் போல அழகாகத் தெரிந்தது. இப்படி யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், சேற்றில் {புதைகுழியில்} மூழ்கும் யானைகளைப் போல ஒரு பாதுகாவலனை அறியத் தவறின. பிறகு அவர்களில் அனைவரும், பறவைகளின் இளவரசன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் பொந்துகளை நோக்கித் திரும்பும் பெரும்பாம்புகளைப் போலத் துரோணரின் தேர் இருந்த இடத்தை நோக்கித் திரும்பினர். கடும் விஷமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் அந்த ஐநூறு {500} துணிச்சல்மிக்க வீரர்களைக் கொன்ற பிறகு, அந்த வீரன் {சாத்யகி}, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தை நோக்கி மெதுவாகச் சென்றான்.
அந்த மனிதர்களில் முதன்மையானவன் {சாத்யகி} இப்படிச் சென்ற போது, உமது மகன் துச்சாசனன் ஒன்பது நேரான கணைகளால் அவனை {சாத்யகியை} வேகமாகத் துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்க வில்லாளி (யுயுதானன்) கழுகின் இறகையும், தங்கச் சிறகுகளையும், கொண்ட ஐந்து நேரான கூரிய கணைகளால் துச்சாசனனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் சிரித்துக் கொண்டே மூன்று கணைகளாலும், மீண்டும் ஐந்து கணைகளாலும் சாத்யகியைத் துளைத்தான். ஐந்து கணைகளால் உமது மகனைத் {துச்சாசனனைத்} தாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அவனது வில்லையும் வெட்டிவிட்டு அர்ஜுனனை நோக்கிச் சிரித்துக் கொண்டே சென்றான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், அப்படிச் சென்று கொண்டிருந்த அந்த விருஷ்ணி வீரனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான ஓர் ஈட்டியை அவன் மீது வீசினான். எனினும் சாத்யகி, கங்க இறகுகளைக் கொண்ட தன் கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்} அந்தக் கடும் ஈட்டியை வெட்டினான்.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பிறகு மற்றொரு வில்லை எடுத்த உமது மகன் {துச்சாசனன்}, சில கணைகளால் சாத்யகியைத் துளைத்து விட்டு உரத்த முழக்கம் செய்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் உமது மகனை மலைக்கச்செய்து, நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான சில கணைகளால் அவனது {துச்சாசனனின்} நடு மார்பைத் துளைத்தான். மேலும் முழுக்க இரும்பாலானவையும், கூர்முனை கொண்டவையுமான எட்டு கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான். எனினும் துச்சாசனன், பதிலுக்கு இருபது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.
அப்போது, உயர்ந்த அருளைக் கொண்ட சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூன்று நேரான கணைகளால் துச்சானனின் நடுமார்பை {மீண்டும்} துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் சில நேரான கணைகளால் துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான்; கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சாத்யகி} மேலும் சில நேரான கணைகால் பின்னவனின் {துச்சாசனனின்} தேரோட்டியையும் கொன்றான். பிறகு அவன் {சாத்யகி} ஒரு பல்லத்தைக் கொண்டு உமது மகனின் வில்லை வெட்டி, ஐந்து கணைகளைக் கொண்டு தோலாலான அவனது {துச்சாசனனின்} கையுறைகளையும் அறுத்தான். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான சாத்யகி, இரு பல்லங்களைக் கொண்டு துச்சாசனனின் கொடிமரத்தையும், அவனது தேரில் உள்ள மரத்தாலான சுழல்தண்டுகளையும் {ரதசக்திகளையும்} வெட்டினான். பிறகு அவன் எண்ணற்ற கூரிய கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்}பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான்.
அப்போது, வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதிகளற்று இருந்த பின்னவன் {துச்சாசனன்}, திரிகர்த்தப் போர்வீரர்களின் தலைவனால் அவனது தேரில் ஏற்றிக் கொள்ளப்பட்டான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒருக்கணம் அவனைப் {துச்சாசனனைப்} பின்தொடர்ந்து சென்று, பின்னர்ப் பீமசேனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவனைக் {துச்சாசனனைக்} கொல்லாமல் நின்றான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் உமது மகன்கள் அனைவரையும் அழிப்பதாகச் சபைக்கு மத்தியில் பீமசேனன் உறுதியேற்றிருந்தான். பிறகு, ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இப்படித் துச்சாசனனை வென்ற சாத்யகி, ஓ! மன்னா, தனக்கு முன்பே தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற பாதையின் வழியே விரைவாகச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment