05/13. அசோகவனத்தில் ஹனுமான்
**வஸூந் ருத்ராந் ததாதித்யாந் அச்வினௌ மருதோப ச*
நமஸ்க்ருத்வா கமிஷ்யாமி ரக்ஷஸாம் சோக வர்த்தந:**
தேவர்களை வணங்கினால் அவர்கள் அருளினால் நமது எண்ணம் நிறைவேறும் என்று தோன்றியது. உடனே அஷ்ட (8) வசுக்களையும், ஏகாதச (11) ருத்ரர்களையும், த்வாதச (12) ஆதித்யர்களையும், அச்வினி குமாரர்களையும், ஸப்த (7) மருத்துக்களையும் வணங்கி மனதால் தியானித்தான். நான் ராக்ஷஸர்களோடு போரிட்டு ஸீதையை ராமனுக்கு மீட்டுக் கொடுப்பேன் என்று எண்ணியதும் ஒரு யோசனை தோன்றியது.
என்னை எந்த தெய்வம் அனுப்பியதோ அந்த தைவதம்பதிகளை
நினைக்காமல், மற்ற தெய்வங்களை வணங்கிப் புறப்படுவது தவறு என்று ராமனை நினைக்கத் தொடங்கினான்.
**நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய*
தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை*
நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்ய:*
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்ய:**
தனது ப்ரபுவான ராமனை வணங்குகிறான். "நமோஸ்து ராமாய* ஈச்வர சிந்தை வேண்டும். அதைக் காண்பிக்கிறார்.
அதுக்காகத்தான் இவ்வளவு அழுதார். பகவத் சிந்தனை ஸமயங்களில் இல்லாமல் போனால் ப்ரயோஜனமில்லை . சுகமாக இருக்கும்போது பகவானை நினைப்பதில்லை. கஷ்டம் வரும் போது அவனை நினைக் கிறோம். அது என்ன ப்ரயோ ஜனம். ஆகையால் ராமனை வணங்குகிறேன். அவன் தான் ஸீதையைக் காண்பித்துக் கொடுக்க வேண்டும். அவனுடைய ஸங்கல்பத்தினால் ஸீதை தென்படுவாள். நமோஸ்து ராமாய . ராமனை மாத்திரம் வணங்கினால் போதாது . பாகவதாபசாரம் பொல்லாதது. *ஸலக்ஷ்மணாய* பாகவதனான லக்ஷ்மண னையும் வணங்குகிறேன். என் கண்ணால் பார்த்து அனுபவித்த ராமலக்ஷ்மணர் களை ஸேவிக்கிறேன். அடுத்து யாரை தேடுவதற்குப் போகிறேனோ *தேவ்யை ச தஸ்யை ஜனகாத் மஜாயை* ஜனகரின் மகளாகிய ஸீதையைப் வணங்குகிறேன். ஜனகாத்மஜை என்று ஏன் சொல்கிறார்? ஸீதை என்று சொல்லக் கூடாதா? ஜனகாத்மஜாயை - ஜனகரின் பெண் என்று சொல் வானேன். நீ உன்னுடைய திருமேனியை யாக பூமியிலே ஜனக மகாராஜாவுக்கு நீயே காட்டிக்கொடுத்தாற் போலே எனக்கும் நீயே காட்ட வேண்டும். ஜனகர் அவளைத் தேடிப்போகவில்லை. யாக பூமியை உழும்போது தன் திருமேனியை தானே காட்டி னாள். அவ்வாறு லங்கா நகரத்தில் தேவரீரே திருமேனியைக் காட்டவேண்டும். என்னால் ஒன்றும் முடியாது."சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்* நம்முடைய முயற்சியால் அவளைக் கண்டுபிடிக்கலாம் என்றால் அகப்பட மாட்டாள். அதனால் அவன் தான் காட்டிக் கொடுக்க வேண்டும். பகவான் க்ருபையினால் காட்டிக்கொடுக்க வேண்டும். நமது ப்ரயத்னத்தால் ஒன்றும் முடியாது . இத்தனை மைல் தாண்டி வந்தேனே, இத்தனை இடத்தில் தேடினேனே என்ற நினைத்தால் கிடைக்காது . ஆகையால் நீ தான் காட்டிக்கொடுக்க வேண்டும். எந்த தேவ கார்யத்திற்காக வந்தேனோ அந்த தேவதைகளும் இதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும். *நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோ*' திக்பாலகர்கள் அனுகர்ஹிக்க வேண்டும்.
**ஸ தேப்யஸ்து நமஸ்க்ருத்வா ஸுக்ரீவாய ச மாருதி:*
ஸர்வா: ஸமாலோக்ய ஹ்யசோக வநிகாம் ப்ரதி**
ராமனால் முடி சூட்டப்பட்ட என் அரசன் ஸுக்ரீவனையும் வணங்குகிறேன் என்று வணங்கி விட்டு இந்த்ராதிகளையும்
வணங்கினான் . எல்லோரையும் வணங்கி விட்டு கத்திப் பார்த்தானாம்,
**ஸ கத்வா மநஸா பூர்வம் அசோக வநிகாம் சுபாம்*
உத்தரம் சிந்தயாமாச வாநரோ மாருதாத்மஜ:**
அந்த அழகிய அசோகவனத்தில் மனதால் முன்பே அடைந்து விட்டான். பின்னர் தான் செய்ய வேண்டியதை ஆலோசிக்க ஆரம்பித்தான்.
**ப்ரஹ்மா ஸ்வயம்பூ பகவான் தேவதாஸ்சைவ திசந்து மே*
ஸித்திம் அக்னிஸ்ச வாயுஸ்ச புருஹூதஸ்ச வஜ்ரபூத்*
வருண: பாசஹஸ்தஸ்ச ஸோமாதித்யௌ ததைவ ச*
அஸ்வினௌ ச மஹாத்மானௌ மருத: ஸர்வ ஏவ ச*
ஸித்திம் ஸர்வாணி பூதானி பூதானாம் சைவ ய: ப்ரபு:*
தாஸ்யந்தி மம யே சான்யே ஹ்யத்ருஷ்டா: பதி கோசரா:**
பகவான் ப்ரஹ்மா, தேவகணங்கள், தவமுனிவர்கள், அக்னி, வாயு, இந்திரன், வருணன், சந்திரன், சூரியன், அஸ்வினி குமாரர்கள், மருத்துக்கள், ருத்ரர்கள், ஸமஸ்த ஜீவன்களுக்கும் ப்ரபுவான நாராயணன், மற்றும் கண்ணுக்குப் புலப்படாத மற்ற தேவதைகளும் எனக்குத் துணையாக இருந்து நான் எடுத்துக் கொண்ட கார்யத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என ப்ரார்த்தித்தான்.
.
** ததுந்நசம் பாண்டுரதந்தமவ்ரணம்*
ஸுசிஸ்மிதம் பத்மபலாசலோசனம் *
த்ரக்ஷ்யே ததார்யா வதநம் கதான்வஹம்*
ப்ரஸந்ந தாராதிப துல்ய தர்சநம்**
ராமன் சொன்னபடி தாமரை இதழ் போன்ற கண்கள் ,வெண்மையான பற்கள், திருமுகத்தில் மந்தஹாஸம் முதலிய அடையாளங்களுடன் கூடிய ஸீதையைக் காண்பேன்.
** ஸ முஹூர்த்தம் இவ த்யாத்வா மநஸா சாதிகம்ய தாம்*
அவப்லுதோ மஹாதேஜா: ப்ராகாரம் தஸ்ய வேஸ்மந *
சிறிது நேரம் ஸீதையை தியானம் பண்ணிவிட்டு கீழே
இறங்கினானாம். அசோகவனத்தில் ஆஞ்சநேயன் ப்ர்வேசிக் கிறான்.
**புஷ்பிதாக்ராந் வஸந்தாதௌ ததர்ச வவிதாந் த்ருமாந்*
ஸாலாந் அஸோகாந் பவ்யாம்ஸ்ச சம்பகாம்ஸ்ச ஸுபுஷ்பிதாந்*
உத்தாலகாந் நாக வ்ருக்ஷாம்ஸ்ச சூதாந் கபி முகாந் அபி*
அங்கு எல்லா ருதுக்களிலும் பூத்துக்குலுங்கும் விதவிதமான ஆச்சர்யமான மரங்களைப் பார்த்தான். புலகாங்கிதமடைந்தான்.
*ராஜதை: காஞ்சனஸ்சைவ பாதபை: ஸர்வதோ வ்ருதாம்*
வெள்ளி மரங்கள், தங்க மரங்கள் எல்லாம் இருக்கின்றனவாம்.
அப்படிப்பட்டது ராவணனுடைய ஐஸ்வர்யம். தேவலோகத்து மரங்களையெல்லாம் கொண்டு வந்து வைத்திருக்கிறானாம்
அந்த தங்க மரத்திலே போய் ஆஞ்சநேயன் உட்கார்ந்தான்.
தன் உடம்பைப் பார்த்தானாம் . மரத்தினுடைய காந்தியினால்
உடம்பெல்லாம் தங்கமாக ஜ்வலிக்கிறதாம்.
**கோகிலைர் ப்ருங்க ராஜைஸ்ச மத்தைர் நித்ய நிஷேவிதாம்*
குயில்களின் இனிமையான சப்தங்களும், வண்டுகளின் ரீங்காரமும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறதாம்.
*மார்கமாணோ வராரோஹாம் ராஜபுத்ரீம் அநிந்திதாம்*
மரத்தில் உட்கார்ந்து கொண்டு தாவிக் கொண்டே போகிறானாம்.
*ஸுக ப்ரஸுப்தான் விஹகான் போதயாமாச வானர:*
அனுமனின் தாவலால் மரங்கள் ஆடி அசைந்து குலுங்கவே அதிலுள்ள பறவைகளெல்லாம் பறந்து சப்தித்துக் கொண்டிருந்தன. . அழகிய பறவைகளோடும், மான் முதலிய விலங்குகளோடும் அசோகவனம் மிக அழகாக இருக்கிறது.
.
*புஷ்பாவகீர்ண: சுசுபே ஹனுமான் மாருதாத்மஜ:*
*அசோகவனிகா மத்யே யதா புஷ்பமயோ கிரி:*
மரத்திற்கு மரம் தாவித் தாவித் தேடுவதால், கிளைகள் அசையவே புஷ்பங்கள் எல்லாம் அவன் மேல் உதிர்ந்து உடம்பெல்லாம் புஷ்பங்கள் எல்லாம் மேலே அவர் மேல் உதிர்ந்து, ஆஞ்சநேயன் புஷ்பங்களாலான மலை போல் இருந்தானாம் .
*வ்ருக்ஷேப்ய: பதிதை: புஷ்பை: அவகீர்ண ப்ருதக்விதை :*
*ரராஜ வஸுதா தத்ர ப்ரமதேவ விபூஷிதா*
மரத்திற்கு மரம் தாவுதலால் கிளைகளிலிருந்து மலர்கள் பூமியில் நிறைய விழுந்திருப்பதால், பூமி பார்ப்பதற்கு, நன்கு மலர்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிற அழகான பெண் போலக் காட்சி அளித்ததாம் .
*நிர்தூத பத்ர சிகரா: சீர்ணபுஷ்ப பலத்ருமா '*
*நிக்ஷிப்த வஸ்த்ராபர்ணா: தூர்தா இவ பராஜிதா:*
அனுமனின் ஸஞ்சாரத்தினால் மரங்களிலிருந்து மலர்களும் கொடிகளும் இலைகளும் உதிர்ந்து விட்டபடியால் மரங்கள் மொட்டையாக ஆகிவிட்டபடியால் அவை பார்ப்பதற்கு இடுப்பாடை மேலாடை இவைகளை பிடுங்கிக் கொண்டு அடித்து விரட்டப்பட்ட துஷ்டர்கள் போல் காட்சியளித்தனவாம்.
*விதூத கேஸீ யுவதிர் யயா ம்ருதித பர்ணிகா*
*நிஷ்பீத சுபதந்தோஷ்டி நகை: த்ந்தைஸ்ச விக்ஷிதா*
ஆஞ்சநேயன் மரத்தில் உட்கார்ந்ததும் மரத்திலிருந்து புஷ்பம் உதிர்ந்து கொட்டுகிறதாம். அது எப்படி இருக்கிறதென்றால்
அழகாக வாரி முடியப் பட்ட கூந்தல் அவிழ்ந்து தாறுமாறாகவும், நெற்றியிலுள்ள திலகம் கலைந்தும், உதடுகள் பற்ளினால் கடிபட்டக் காயங்களோடும், மென்மையான உடல் நகங்களி னால் காயம் பட்டும், இடுப்பில் கட்டிய பட்டாடைகள் தாறுமாறாக வும் அலங்கோலமாக இருப்பவள் போன்று, அனுமனின் வாலினாலும் கைகளினாலும் கால்களினாலும் அடிபட்டு மரங்கள் கிளைகள் எல்லாம் ஒடிந்தும் இலைகள் உதிர்ந்தும் அலங்கோலமாகக் காட்சி அளித்ததாம் அசோகவனம்.
*ஸ தத்ர மணி பூமிஸ்ச ராஜதிஸ்ச ச மநோ ரமா:*
*யதா காஞ்சந பூமிஸ்ச விசரந் தத்ருசே கபி:*
பூமியைப் பார்க்கிறான். தங்கத்தாலும், வைரத்தாலும், வைடூர்யத்தினாலும் அமைக்கப்பட்டிருக்கிறதாம். மரத்தடியில் வெள்ளியால் பண்ணி இருக்கிறதாம். சிறிய சிறிய விளையாட்டு பர்வதங்களெல்லாம் இருக்கிறதாம் . தாமரை ஓடைகள் இருக்கின்றனவாம். ஆங்காங்கு மேடைகள் இருக்கின்றனவாம்.
*வாபீ: ச விவிதாகாரா: பூர்ணா: பரமவாரிணா*
*மஹார்ஹை:: மணிசோபானை: உபபன்னா: ததஸ்தத:*
உயர்ந்த ரத்தினங்கள் இழைத்துக் கட்டப்பட்ட படிகளோடு கூடிய வாபிகள் நீர் நிறைந்து அழகாகக் காட்சியளித்தன. சிற்றாறுகள் ஓடுகின்றனவாம். பல சிகரங்களைக்கொண்ட மலைகள். அதில்
கற்களால் அமைக்கப்பட்ட வீடுகள். மலையில் நீர்வீழ்ச்சிகள்.
*இயம் ச நலினீ ரம்யா த்விஜ ஸங்க நிஷேவிதா*
*இமாம் ஸா ராஜமஹிஷீ நூநம் ஏஷ்யதி ஜானகீ*
இந்த புஷ்கரிணி தாமரை மலர்களால் நிறைந்திருக்கிறது. இதன் நான்கு பக்கங்களிலும் அமர்ந்துள்ள பறவைகளினால்
இதற்கு மேலும் அழகை சேர்க்கிறது. இந்த இடத்திற்கு ஸீதை
வராமல் இருக்கமாட்டாள்.
** ஸா ராமா ராமமஹிஸீ ராகவஸ்ய ப்ரியா சதீ*
*வந ஸஞ்சாரகுசலா த்ருவம் ஏஷ்யதி ஜானகீ*
ராமனுடைய தர்மபத்னியான ஸீதை காட்டில் ஸம்சாரம் செய்வதை நன்கு உணர்ந்தவள். ராமனையே நினைத்து வருந்தும் ஸீதை இங்குமங்கும் சுற்றித் திரியலாம். அப்பொழுது எதிர்பாராது அவளைப் பார்த்துவிடலாம் என எண்ணினான்.
**ராம சோகாப ஸம்தப்தா ஸா தேவீ வாமலோசனா*
*வநவாஸ ரதா நித்யம் ஏஷ்யதே வநசாரிணீ*
ஸீதை காட்டில் உலாவுவதில் ஆசை உடையவள் . ராமனின் பிரிவுத் துயரினால் ஏற்பட்ட தாபத்தை போக்கிக் கொள்ள நிச்சயமாக இந்தக் குளத்திற்கு வருவாள்.
வனத்தில் ஸஞ்சரிக்கும் விளையாடும் விலங்கினங்களைப் பார்த்து ரசிப்பவள். ஆகையால் இங்கு வரலாம்
*யதி ஜீவதி ஸா தேவீ தாராதிப நிபாநநா*
*ஆகமிஷ்யதி ஸாவஸ்யம் இமாம் சீதஜலாம் நதீம்*
அருகில் துறைகளுடன் ஒரு நதி ஓடுகிறது. அவள் உயிருடன் இருந்தால் ஸ்நானம் செய்துவிட்டு பூஜை செய்வதற்காகவாவது
கண்டிப்பாக இங்கு வருவாள் என்று அவள் வருவை எதிர் பார்த்துக் கொண்டே குரங்கு உருவத்தில் அடர்ந்த இலைகள் உள்ள இடத்தில் தன்னை மறைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தான்.
**தத்ர தத்பத்ர ஸம்சன்ன காத்ர: புத்ரோ நபஸ்வத:*
*ந்யக்ரோத தல ஸம்லீன ஜனார்தன தசாம் ததௌ*
அனுமான் சிம்சுபா மரத்தின் கிளைகளில் உள்ள இலைகளில் தன் உடலை மறைத்துக் கொண்டு ஆல மரத்தின் இலையில் படுத்துக்கொண்டு தன்னை ப்ரளய காலத்தில் மறைத்துக் கொண்டு இருந்த கண்ணனைப் போன்று இருந்தானாம்.
* ஸ வீக்ஷமாணஸ் தத்ரஸ்தோ மார்கமாணஸ்ச மைதிலீம்*
*அவேக்ஷமாணஸ்ச மஹீம் ஸர்வாம் தாம் அந்வவைக்ஷத*
அனுமான் அந்த மரத்தில் அமர்ந்து கொண்டு சீதையைத் தேடுவதற்காக நான்கு பக்கங்களிலும் தன் பார்வையை செலுத்தினான்.
தேவலோகத்து கொடிகள் எல்லாம் கொண்டு வந்து வைத்திருக் கிறானாம். எல்லா விதமான, எல்லா ருதுக்களுடையதான புஷ்பங்களும பரிபூரணமாக இருக்கிறதாம். அங்கு ப்ரஹ்மா ண்டமான ஒரு மரம் இருந்ததாம்.அதன் கீழே ஆச்சர்யமான தங்க மேடை போட்டிருந்ததாம். அந்த மரம் ஆகாயத்தைத் தொடுகிறாப்போல் இருந்ததாம். அங்கு புஷ்பிக்காதன புஷ்பங்கள் கிடையாதாம். கீழே பூமியைப் பார்த்தால் புஷ்பங்களை வாரி இறைத்தாற் போல் இருக்கிறதாம்.
அசோகவனம் தேவலோகத்தில் இருக்கும் நந்தனம் எனும் உத்யானவனம் போலவும், சைத்ரரதம் எனும் குபேரவனம் போலவும் அழகாகவும் நறுமணம் வீசுகின்றதுமான இவ்வனத்தில் மகிழ்ந்திருக்க வேண்டியிருக்க துன்பமே உருவெடுத்தாற் போன்ற ஸீதையைப் பார்த்தானாம்
⚛️⚛️⚛️⚛️⚛️⚛️
No comments:
Post a Comment