Tuesday, August 30, 2022

the defect in narasimha avatara

#ந்ருசிம்மாவதாரத்துலேயே 
#பெருமாளுக்கு_பெரிய 
#குறை_இருந்ததாம்
#மாலே! #மணிவண்ணா! என்றாரம்பிக்கும் இந்தப் பாசுரத்தை சேவிக்கும் போதெல்லாம் ந்ருஸிம்ஹனோட ஏக்கம் தான் முன்னாடி வந்து நிக்கும். 
ராமாவதாரத்துலே வனவாசம் போகாதே ராமா என்றுரைத்த கோசலையின் சொல் கேளாது வனவாசம் வந்த பெருமாளுக்கு அம்மாவின் பேச்சைக் கேளாத குறை இருந்தது. க்ருஷ்ணாவதாரத்தின் போது தேவகி மத்த எல்லா கையையும் மறைச்சுக்கோ. ரெண்டு கையோட சாதாரண குழந்தை போல் மாறுன்னதும் அவள் பேச்சைக் கேட்டு நடந்துண்டு ராமாவதாரத்தின் பொழுது உண்டான குறையை போக்கிண்டான். குறையொன்றுமில்லாத கிருஷ்ணாவதாரத்தின் பொழுது யசோதைக்கு மட்டும் ஒரு குறை இருந்தது. அதை பின்னொரு பிரகரணத்தில் போக்கினார் பெருமாள். ஆனால் ராமாவதாரத்துக்கு முன்னால் ந்ருசிம்மாவதாரத்துலேயே பெருமாளுக்கு பெரிய குறை இருந்ததாம். அதென்ன குறை?
ந்ருஸிம்ஹனாய் தான் அவதரிச்ச பொழுது, மாலே மணிவண்ணா அப்படி இப்படின்னு தன்னை கொஞ்சத் தாய் ஒருத்தி இல்லாமப் போயிட்டாளேன்னு ந்ருஸிம்ஹனுக்கு வருத்தமாம். ஒரு க்ஷணப் பொழுதில் உண்டான அவதாரமாச்சே ந்ருஸிம்ஹாவதாரம். இவா தான் தாய் தந்தையர்னு முடிவு பண்ணக் கூட பெருமாளுக்கு அவகாசம் இல்லயாம். எவ்ளோ ரசனை. மிகச் சின்ன அவதாரம் ந்ருஸிம்ஹாவதாரம். ஆனா ரசிக்கறதுக்கு கோடி விஷயங்கள் இருக்கு அதுலே. அப்படி சில விஷயங்களை இன்னிக்கு சேவிப்போம். 
நரசிம்மமாய் அந்த ஸ்ரீமன் நாராயணன் அவதாரம் பண்ணிய பொழுது, அவனது கோபம் முழுவதும் ஒரே ஒருவன் மீது தான் இருந்ததாம். யாரவன்? பிரம்மன். ஏன் என்று பார்ப்போம். மற்றவர் கண்களுக்கு எல்லாம் ஒரு விசித்திரமான உருவமாக காட்சி அளித்தான் நரசிம்மன். அவனுக்கே தனது கோலத்தினைக் கண்டவுடன் அப்படித்தான் தோன்றியதாம். என்னது இது? முழுவதுமாக நரமும் இல்லாமல் சிங்கமும் இல்லாமல் இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் கோலம் என்று. அவனது பாடு மிகவும் திண்டாட்டமானதாக இருந்ததாம். தன் சினத்தினை அவன் பிரம்மன் மீது காண்பிக்கும் முன்னர் "இந்தத் தூணில் இருக்கின்றானா உன் ஹரி?" என்று ஹிரண்யனது குரல் கேட்டு விட்டதாம். அந்தத் தூணிலிருந்து வந்தான். ஹிரண்யுடன் வதம் செய்தான். அண்டசராசரங்களும் நடுநடுங்க கர்ஜித்தானாம். அப்பிடி அவன் நரமும் சிங்கமும் கலந்த ரூபத்தில் தூணை விட்டு வெளி வந்த பொழுது உண்டான ஒளியை இந்தப் பிரபஞ்சத்தில் யாராலும் கண் கொண்டு பார்க்க முடியவில்லயாம். இந்தப் பிரபஞ்சனம கிடுகிடு என்று ஆட்டம் கண்டதாம் - (ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன).
அப்பொழுது உண்டான ஆட்டத்தில், பிரம்ம லோகத்தில் அமைதியே திரு உருவமாக அமர்ந்து கொண்டு தனது படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மன் திடீரென்று தனது சிம்மாசனத்திலிருந்து கீழே விழுந்தானாம். கீழே விழுந்த தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று அவன் சுற்றும் முற்றும் பார்க்க, அதிர்ச்சியடைந்தானாம். வருணன் விழல்ல. இந்திரன் விழல்ல. மற்ற எந்த தேவர்களும் விழல்ல. நாம் மட்டும் ஏன் கீழே விழுந்தோம் என்று யோசித்தானாம். 
நரசிம்மனுக்கு அவ்வளவு கோபமாம் பிரம்மன் மீது. இப்படி தப்புத் தப்பாக ஒரு வரத்தை ஒரு அசுரனுக்கு கொடுத்து என்னை மாட்டி விட்டு விட்டாயே என்று. அமைதியே உருவாக தனது பட்ட மகிஷியாம் பிராட்டியுடன் திருப்பாற்கடலில் மோன நிலையில் இருந்த தன்னை துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஓடி வரச் செய்தது பிரம்மன் ஹிரண்ய கசிபுவிற்கு அளித்த அந்த வரத்தினால் தானே என்ற கோபமாம் ந்ருஸிம்ஹனுக்கு. இந்த அவசரத்துல இன்னார் தான் தனது தாய் இன்னார் தனது தந்தை என்று நிர்ணயம் பண்ண அவகாசம் இல்லாம போய்டுத்தாம். 
இதை மிகுந்த ரசனையாக ஆசார்யன் தேசிகன் தன்னோட தசாவதார ஸ்லோகத்துலே சாதிச்சிருக்கார். 
ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : |
யத் ப்ராதுர்பவநாத் அவந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ ஸ்தூணா பிதாமஹ்யபூத் ||
"அவந்த்ய ஜடரா" - இந்தப் பதம் ந்ருஸிம்ஹன் இருந்த தூணினை "மலட்டுத் தன்மை இல்லாத வயிறு" என்று கூறுகிறது. எம்பெருமான், ந்ருஸிம்ஹாவதாரத்தின் போது அண்ட சராசரங்களிலும், ஒரு அணுவினை லட்சம் கூறுகளாகப் பிளந்தால் வரும் சிறு கூறுகளினுள் எல்லாம் ஒளிந்து கொண்டிருந்தானாம். ஆனால் அவன் ஆவிர்பவித்ததென்னவோ அந்த ஒரே ஒரு தூணிலிருந்து மட்டும் தான். அதனால் அவந்த்ய ஜடரா -- மலட்டுத் தன்மை இல்லாத வயிற்றினைக் கொண்டது அந்தத் தூண் என்று ஸாதித்தருள்கிறார் ஆசார்யன் தேசிகன். 
அந்தத் தூணானது அப்படி மலட்டுத் தன்மையில்லாத வயிற்றினைக் கொண்டிருந்ததனால் தான் திடீரென்று உண்டான போதும் இன்ன ரூபம் தரிப்பது என்றறியாது , நினைத்துப் பார்க்கவும் முடியாத வேகத்தில் ந்ருஸிம்ஹனை சடாரென்று ஈன்றதாம். எவ்வளவு ஒசந்த ரஸனை. இது. இந்த ச்லோகத்தில் இருக்கும் இன்னொரு அழகான வார்த்தைப் பிரயோகத்தை பாக்கலாம். .
 "வேதஸாம் பிதாமஹ்யபூத் "- ந்ருஸிம்ஹன் வெளிவந்த அந்தத் தூணானது அனைத்தையும் படைப்பவர்களாகிய ப்ரம்ஹாக்களுக்கே தகப்பனைப் பெற்ற பாட்டி முறை ஆயிற்று" என்கிறார் ஆசார்யன் ஸ்வாமி ஸ்ரீ தேசிகன். படைப்பினைத் தொழிலாகக் கொண்ட ப்ரஹ்மனைப் படைத்தது ஸ்ரீமந்நாராயணன். அந்த ஸ்ரீமந்நாராயணனையே ஈன்றெடுத்ததாம் அந்தத் தூண். அதனால் அந்தத் தூண் ப்ரஹ்மனுக்குப் பாட்டி முறையாயிற்றாம். எவ்வளவு ரஸமான ஒப்புமை!  
இவ்வளவு அழகு நிறைந்த ந்ருஸிம்ஹாவதாரத்துலே, தான் பேரழகனா சிம்ம முகமும் மனித உடலும் கொண்டிருந்தாலும், தன்னைக் தூக்கிக் கொஞ்சுவதற்கு அம்மா இல்லயேங்கற ஏக்கம் ந்ருஸிம்ஹனுக்கு. மாலே மணிவண்ணா பாசுரத்தை சேவிக்கும் போதெல்லாம் மனசுலே தோன்றும். இந்த ஏக்கத்துனால தான் ராமாவதாரத்தில் மூணு அம்மாக்கள், க்ருஷ்ணாவதாரத்துலே ரெண்டு அம்மாக்கள் அப்படின்னு அடுத்து வந்த அவதாரங்களில் அம்மா பாசத்தில் முழுசுமா நனைஞ்சுட்டார் பெருமாள். எவ்ளோ அழகான விஷயம்.

ந்ருஸிம்ஹா ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து....
படித்ததில் ஆழ்ந்து ரசித்தது
பட்டு சாஸ்திரிகள்
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்திரி அவர்கள்

No comments:

Post a Comment