ॐ श्री गुरुभ्यो नमः। सर्वेभ्यः सुप्रभातं नमस्काराः च। ஓம் ஶ்ரீ குருப்யோ நம:! அனைவர்க்கும் நற்காலையும், வணக்கங்களும்!
Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - துக்க பரிகாரம் [11.05.2021] - ப்லவ ஆண்டு, சித்திரைத் திங்கள் 28, அமாவஸ்யை, பரணி, செவ்வாய்:
* ஒருவனுக்கு ஒரு வியாதி வந்தால் அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுவர். தாது வித்தியாசம் தான் காரணம் என ஆயுர்வேத வைத்தியர்; இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வர். மாறாக வேறு ஒரு "சைகலாஜிக்கல்" காரணத்தை இந்நாளில் பிரபலமாகி வரும் மனோதத்துவ நிபுணர் கூறுவார்.
* மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாறால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர், இன்ன கிரஹம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ, பூர்வ கர்ம பலனாகத் தான் வியாதி ஏற்பட்டுள்ளது என்பார்கள்.
* வியாதிக்கு மட்டுமன்றி நம் வாழ்வின் அனைத்து சுக - துக்கங்களுக்கும் இவ்வாறு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பல காரணங்களில் எது சத்யம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மா தான் என்பது ஸர்வ நிச்சயம்.
* ஸயன்ஸ்படி பார்த்தாலும் விளைவு [Effect] இருந்தால் காரணம் [Cause] இருந்தே ஆகவேண்டும். ஜகத் முழுதும் காரணம் - விளைவு, செயல் - பிரதிசெயல் [Action & Reaction] என்ற துவந்தத்துக்குள் தான் கட்டுண்டிருக்கிறது.
* பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்தி தான். ஒருவனுடைய ஆக்ஞைப்படி தான் உலக இயக்கம் முழுவதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்பந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்பந்தம் இல்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கைப் பார்க்கிறான் ஸர்வேஶ்வரன்.
* ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன், இவையே மனித வாழ்வின் சுக - துக்கங்களுக்கு முழு முதற் காரணம். இதற்கே துணைக் காரணமாக அல்லது அடையாளமாக - க்ரஹசாரம், தெய்வக் குற்றம், ஆரோக்கியக் குறைவு முதலியன அமைகின்றன.
* ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்த்ரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்ட வழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடக்கிற பக்குவம் இருந்தால் அது ஸ்லாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
* பூர்வ கர்ம சமாசாரம் எப்படிப் போயினும் இனிக் கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விட, புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈஶ்வரனைத் துணை கொள்வதே முக்கியம். பூர்வ கர்மாவால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கு உண்மைப் பரிகாரம் ஈஶ்வர த்யானம் தான்; இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈஶ்வர த்யானம் தான்.
प्रदोष शङ्कर। प्रत्यक्ष शङ्कर।।
Pradosha Shankara Pratyaksha Shankara!🙏🙏🙏🙏
No comments:
Post a Comment