Tuesday, November 30, 2021

Valmiki Ramayana part 23 in Tamil

🌹ஆதிகாவியம் இராமாயணம் 🌹
🌹 வால்மீகி ராமாயணம் 🌹- சோ- பாகம்-23.
🔥 பின்னர் தன் மகன் ஒருவனிடம் ராஜ்ய பாரத்தை ஒப்படைத்து விட்டு, இமயமலைச் சாரலுக்குச் சென்று சிவ பெருமானை நோக்கி அவர் தவம் புரிய, அவருடைய தவத்தை மெச்சிய பரம சிவன் அவருக்குக் காட்சி அளித்து, உன்னுடைய கோரிக்கை என்னவோ அதைச் சொல்" என்று கூறினார்.
🔥 விச்வாமித்திரர், மகாதேவனே! தனுர் வேதம் முழுமையாக எனக்கு அளிக்கப் படவேண்டும். தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரிடமெல்லாம் உள்ள அனைத்து அஸ்திரங்களும் எனக்குத் தரப் படவேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய பரம சிவன், அப்படியே ஆகுக"என்று விச்வாமித்திரருக்கு வரமளித்துச் சென்றார்.
🔥 எவரிடமும் இல்லாத அளவுக்கு பயங்கரமான அஸ்திரங்களைப் பெற்று விட்டதால், இனி வசிஷ்டர் இறந்தவரே என்று எண்ணி விச்வாமித்திரர் பெரும் கர்வத்தை அடைந்து வசிஷ்டரின் ஆச்ரமத்திற்குச் சென்று , தான் பெற்ற அஸ்திரங்களைப் பிரயோகித்தார். வசிஷ்டரின் தபோவனம் பொசுங்கியது.
🌹 அங்கிருந்த ரிஷிகளும் பல திசைகளிலும் ஓடி விட்டார்கள். ஊழித் தீ" என வசிஷ்டர் கோபம் கொண்டு, தன் கையில் உள்ள கோலாகிய ப்ரம்ம தண்டத்தைத் தூக்கிப் பிடித்து, விச்வாமித்திரர் எதிரில் நின்று, காதியின் மகனே! உன்னுடைய கர்வத்தையும், உன் அஸ்திரங்களின் வன்மையையும், இப்போது அழிக்கிறேன். தவம் செய்யும் ப்ரம்ம ரிஷியாகிய நான் பெற்ற சக்தி எங்கே? க்ஷத்ரிய மன்னனாக இருந்து ஆயுத பலம் பெற்ற உன் சக்தி எங்கே? என்று கூறி, விச்வாமித்திரரின் அஸ்திரங்களை பயனற்றதாகச் செய்தார். இறுதியில் விச்வாமித்திரர் ப்ரம்மாஸ் திரத்தை ஏவ, அதை வசிஷ்டரின் ப்ரம்ம தண்டம் என்கிற கோல் பயனற்றதாகச் செய்தது. பிரளய காலத் தீ என அந்தக் கோல் ஜொலித்தது. வசிஷ்டரும் மூவுலகத்தையும் வியக்கச் செய்யும் வகையில் ஒளி வீசி நின்றார்.
🔥 முழுமையாகத் தோல்வியுற்று, கர்வ பங்கமடைந்த விச்வாமித்திரர், க்ஷத்ரிய பலம் முடிவுடையது. ப்ரம்ம ரிஷியின் பலமோ அளவிட முடியாதது. அந்த பலத்தை அடைய என்ன தவம் செய்ய வேண்டி இருந்தாலும் சரி, அதை இனி செய்வேன்" என்று தீர்மானித்து, கடும் தவம் புரியத் தொடங்கினார்.
🔥 அவருடைய தவத்தால் மகிழ்வுற்ற ப்ரம்ம தேவன், அவரை " ராஜ ரிஷி" என்று அங்கீகரித்தார். விச்வாமித்திரர் திருப்தியுற வில்லை. ப்ரம்ம ரிஷி ஸ்தானத்தை அடைவது என்ற வைராக்கியத்திலிருந்து நழுவாதவராக, மேலும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் மூவுலகமும் நடுங்கியது.
🔥 அந்தக் காலக் கட்டத்தில் த்ரிசங்கு என்று ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குத் தன் உடலுடனேயே தேவர்களின் உலகத்தை அடைய வேண்டும் என்ற ஆவல் உண்டாகி விட்டது. அதை ஈடேற்ற ஒரு யாகம் நடத்தித் தருமாறு அவன் வசிஷ்டரை வேண்டிக் கொள்ள, அவர் " அது செய்யக் கூடாத காரியம்" என்று கூறி மறுத்து விட்டார். த்ரிசங்கு மன்னன், பெரும் தபஸ்விகளாக தென் நாட்டில் இருந்த வசிஷ்டரின் புத்திரர்களை அணுகி, யாகம் நடத்தித் தருமாறு கேட்க, அவர்களும் மறுத்தார்கள். தங்களுடைய தந்தையை மீறி, தாங்கள் செயல் படவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தங்களை த்ரிசங்கு அணுகியதால், அந்த மன்னனை வசிஷ்ட புத்திரர்கள் சபித்தார்கள். அவன் விகார உருவம் எய்தினான். ஆனாலும் தேவலோகம் செல்லும் ஆசை அவனை விடவில்லை.
🔥 தான் பெற்றுவிட்ட விகார உருவத்துடனேயே, விச்வாமித்திரரை அணுகி, நடந்ததைக் கூறினான். அவர் மனம் இளகியது. இஷ்வாகு வம்சத்தில் உதித்தவனே! நான் இருக்கிறேன். நீ பயப்பட த்தேவையில்லை. பெரும் புண்ணிய சீலர்களான மஹரிஷிகளை யெல்லாம் வரவழைத்து, உனக்காக ஒரு யாகத்தை நடத்துகிறேன். வசிஷ்டரின் மகன்களினால் இந்த விகார உருவத்தை அடைந்து விட்ட நீ, அந்த உருவத்துடனேயே,தேவலோகம் செல்வாய், இந்த கௌசிகனை சரணமென்று அடைந்து விட்டாய். உன் காரியம் நிறைவேறியது என்று வைத்துக் கொள்" என்று அவர் த்ரிசங்குவிடம் கூறிவிட்டு, யாகம் நடத்துவதற்காக மஹரிஷிகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்து சீடர்களை அனுப்பினார்.
 🤝 அழைக்கப் பட்டவர்கள் அனைவரும் விச்வாமித்திரருக்கு அஞ்சி அழைப்பை ஏற்றனர். ஆனால் மகோதயர் என்ற ரிஷியும், வசிஷ்டரின் மகன்களும் " நடத்தக் கூடாத யாகத்தை, நடத்தக் கூடாதவர் நடத்துகிறார்"என்று கூறி அழைப்பை ஏற்க மறுத்தனர். இதையறிந்த விச்வாமித்திரர், பெரும் கோபமுற்று எல்லா உலகங்களிலும் நிந்திக்கப் படுகிற ஒரு வேடனாக அந்த மகோதயன் மாறக் கடவான்! நாயின் மாமிசத்தையே உணவாக உட் கொண்டு, விகார உருவமடைந்தவர்களாக வசிஷ்டரின் மகன்கள் மாறக் கடவர்" என்று சபித்தார். அவருடைய சாபம் அந்த நேரமே நிறைவேறியது.
🔥 பின்னர் விச்வாமித்திரர். த்ரிசங்குவிற்காக யாகத்தை தொடங்கச் செய்தார். யாகத்தில் அழைக்கப் பட்ட தேவர்கள் அங்கே வர மறுத்தனர். விச்வாமித்திரர் தாங்க முடியாத சினம் கொண்டு, த்ரிசங்குவைப் பார்த்து, அரசனே! என்னுடைய மேன்மையை இப்போது பார்! உன்னை இப்போதே இந்த உடலுடனேயே சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன்! கடும் தவம் செய்து , நான் அடைந்த வன்மை என்னிடம் கொஞ்ச மேனும் மீதி உள்ளது என்றால், அரசனே! அந்தத் தவ மகிமையால் நீ ஸ்வர்க்கத் திற்குப்போ! என்று ஆவேசத்துடன் பேசினார்.
🔥 எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே த்ரிசங்கு ராஜன், தன் உடலுடன் மேலேறி ஸ்வர்க்கத்தை அடைந்தான்.
ஆனால் தேவேந்திரன், அவனைப் பார்த்து, நீ ஸ்வர்க்கத்தில் இடமுடையவன் அல்ல. திரும்பிக் கீழே போ. தலை கீழாய் பூமியில் விழுவாயாக! என்று கட்டளையிட்டான்.
🔥 இப்படி தேவேந்திரனால் தள்ளப்பட்ட த்ரிசங்கு, விச்வாமித்திர முனிவரே என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கதறியபடியே பூமியை நோக்கி விழுந்தான்.
🔥 அவனுடைய கதறலைக்கேட்ட விச்வாமித்திரர், நில்! அப்படியே நில்! என்று கீழிருந்து கட்டளையிட்டார்.
 த்ரிசங்கு அப்படியே நின்றான்.
 கோபத்தினால் தன்னையே மறந்த விச்வாமித்திரர், த்ரிசங்கு தலை கீழாக நின்ற இடத்திலேயே, தன்னுடைய சக்தியினால் சப்த ரிஷி மண்டலத்தைத்தோற்றுவித்தார். அப்படியே நக்ஷத்திரங்களையும் படைத்தார். அதோடு நில்லாமல் "த்ரிசங்குவைச் சுற்றி தேவர்களை உண்டாக்குகிறேன். மற்றுமோர் தேவேந்திரனையும் நான் படைக்கிறேன்" என்று அவர் கூற, தேவர்களும் , ரிஷிகளும் , சித்தர்களும், பெரும் கவலை கொண்டவர்களாக அவரைப் பணிவுடன் அணுகினார்கள். அவருடைய கோபத்தை அவர் அடக்கிக் கொள்ள வேண்டுமென்றும், உடலுடன் ஸ்வர்க்கலோகத்தை அடையக் கூடியவனல்லாத த்ரிசங்குவிற்காக, வேறு ஒரு தேவேந்திரனை அவர் படைக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். விச்வாமித்திரர் மனமிளகினார். த்ரிசங்கு நின்ற இடமே மற்றொரு ஸ்வர்க்க லோகமாக நிரந்தரமாக இருக்கட்டும்! என்று அவர் கூற, தேவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.
🔥 த்ரிசங்குவின் விவகாரத்தினால் தன்னுடைய தவம் கெட்டுப்போனதை விச்வாமித்திரர் உணர்ந்து, விசாலி நதிக்கரையில் மீண்டும் தவம் புரியத் தொடங்கினார். அங்கு தவம் புரிகையில் அம்பரீஷ மன்னனுக்கும், சுனச்சேபன் என்ற பெயர் கொண்ட ரிஷிகுமாரனுக்கும், விச்வாமித்திரரின் அருளால் நன்மை கிட்டியது. ஆனால் அவர் தவம் செய்கையில் அங்கே வந்த மேனகையைக் கண்டு அவர் மனதைப் பறி கொடுக்கவே, தவம் மீண்டும் கலைந்தது.
🔥 ப்ரம்ம ரிஷியாகி விடுவது என்ற வைராக்கியத்தை மட்டும் விடாத விச்வாமித்திரர் மீண்டும் கடும் தவம் புரிய, ப்ரம்ம தேவன் அவர் முன் தோன்றி, நீர் மஹரிஷியாகி விட்டீர்" என்று அங்கீகரித்தார். ஆனால் விச்வாமித்திரர் தான் விரும்பிய ப்ரம்ம ரிஷி" நிலையை எய்தாததால் அதை நாடி மேலும் தவம் செய்யத் தொடங்கினார்.
🔥 கோடை காலத்தில் நான்கு புறங்களிலும் தீயினால் சூழப் பட்ட வராகவும், குளிர் காலத்தில் நீரினுள்ளே நின்றவராகவும், இரவு பகலாக காற்று ஒன்றையே ஆகாரமாகக் கொண்டு, நீண்ட நெடிய தவத்தை விச்வாமித்திரர் புரிந்தார். அதன் உக்ரத்தைத் தாங்க முடியாத தேவர்கள் இந்திரனை வேண்டிக் கொள்ள அவன் விச்வாமித்திரரின் தவத்தைத் தடுக்க ரம்பையை அனுப்பினான். தனது தவத்தைக் கெடுக்க வந்த அவளை விச்வாமித்திரர் கோபம் கொண்டு சபித்தார்.
🔥 இப்படித் தவ வலிமையை மீண்டும் இழந்த அவர், அப்போது செய்யத் தொடங்கிய தவத்தின் காரணமாக அவருடைய தலையிலிருந்தே ஆவி பறந்தது.தேவர்களும், ரிஷிகளும் கலங்கினார்கள். கடல்கள் கொந்தளித்தன. மலைகள் வெடித்தன. பூமி நடுங்கியது. சுழற்காற்று வீசியது. சூரியன் ஒளி மங்கினான். மூவுலகமும் பொசுக்கப் பட்டு விடுமோ என்ற நிலை தோன்றியது.
🔥 தேவர்கள் எல்லாம் ப்ரம்மனை வேண்டிக் கொள்ள அவர் விச்வாமித்திரர் முன்தோன்றி , 
" நீர் ப்ரம்ம ரிஷியானீர்" என்று தேவர்களோடு கூடி நின்று சொன்னார்.
🔥 அப்போதும் கூட விச்வாமித்திரர் முழு திருப்தி அடையாமல், வேதங்களையெல்லாம் முழுமையாக அறிந்தவர்களுள் சிறந்தவரும், ப்ரம்ம வேரின் மகனுமாகிய வசிஷ்டர் என்னை ப்ரம்ம ரிஷி என்று ஏற்க வேண்டும். அது வரை என் தவம் முற்றுப் பெறாது" என்று கூறிவிட்டார்.
 🔥 தேவர்கள் வசிஷ்டரை அணுக, அவர் விச்வாமித்திரரிடம் வந்து " நீங்கள் பரம்ம ரிஷிதான். அதில் சந்தேகமில்லை. இனி உங்களுக்குக் கிட்டாதது என்பது எது ஒன்றும் கிடையாது" என்று கூறினார். இப்படி ப்ரம்ம ரிஷியாகிய விச்வாமித்திரர் அதன் பின்னரும் தவங்களைச் செய்து கொண்டு பூமி முழுவதும் உலவிக் கொண்டு வருகிறார். இவர் ரிஷிகளில் சிறந்தவர். வீர்யத்தின் இருப்பிடம், தவமே உருவெடுத்தவர்.
 இவ்வாறு சொல்லி விச்வாமித்திரரின் வரலாற்றை சதானந்தர் ராம- லக்ஷ்மணர்களுக்கு விவரித்து முடித்தார்.
    🍅 ராம ராம ராம ராம ராம ராம ராம 🍅
தொடரும்…
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலிலிருந்து எடுத்தது.

No comments:

Post a Comment