Monday, November 29, 2021

Glory of Rudram

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்

சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.

நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே——–) வருகிறது.

ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர்

உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட "டெசிமல்" முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.

( இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

*ஸ்ரீருத்ரத்தின் மகிமை* சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும் போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.
அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்து விடுகிறது தந்துவிடுகிறது *ஸ்ரீ ருத்ரம்.*

எல்லா உலகமும் ஆகி
*("#ஜகதாம்_பதயே")* இருப்பவன். எங்கு தான் இல்லை?
இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்...

அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின்இருதயங்களிலும் இருக்கிறான். *("#தேவானாம்_ஹ்ரிதயேப்ய")*

அப்படி இருந்துகொண்டு வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான் *("#விசின்வத்கேப்யஹா")*

மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை *("சேனாப்ய_சேனா_நிப்யச்ச:")* என்கிறது *ஸ்ரீ ருத்ரம்.*

அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் *("#க்ஷத்ருப்ய:")*, தச்சர் வடிவிலும் *("#தக்ஷப்ய:")*, குயவர் வடிவிலும் *("#குலாலேப்ய:")*, கருமார் வேடத்திலும் *("#கர்மாறேப்ய:")*, பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் *("#புஞ்சிஷ்டேப்ய:")*, மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும் *("#நிஷாதேப்ய:")* இருக்கிறான்....

சிவ ச்வரூபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் *("#நீலக்ரீவாய")*
அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது *("#சிதிகன்டாய")* .

ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி *("#கபர்தினே")* இருக்கிறது.
மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட *("#வ்யுப்தகேசாய")* தலை.

ஆயிரக்கணக்கான கண்கள் *("#சகஸ்ராக்ஷாய")*,
குறுகிய வாமன வடிவுடைய *("#ஹ்ரச்வாய்ச_வாமனாய்ச")*
அவனே, பெரிய வடிவத்துடனும் *("#ப்ருஹதே")* தோன்றுகிறான்.
பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் *("#ச்துத்யாய")*, வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் *("#அவசான்யாய")* விளங்குகிறான்.

ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, *("பப்லுசாய")* என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது.

சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால *("பவச்ய_ஹேத்யை")* எனப்படுகிறான்.

பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று *("தாவதே")* என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா, அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம்,
*("தூதாய_ச_ப்ரஹி_தாய_ச")* என்று காட்டுகிறது.

தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, *("ஸஹமானாய")* என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் (தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு
'அபராதக்ஷமாபநேச்வரர்' (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.

*("நமஸ்_ஸோமாய_ச")* என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும்,
*"வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே "* என்று பாடினார்.

*இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகி சிவமே அடைகிறான் என்பதில் ஐயமில்லை.*

 *திருச்சிற்றம்பலம்*

No comments:

Post a Comment