திருவேங்கடமுடையான் - 41
விஸ்வகர்மாவே!
உம்மால் செய்யப்பட்ட
இந்த நந்தா விளக்கானது
கலியுகம் முடியும்வரை
என்றும் அணையாது!
அணையவும் கூடாது!
அதே போல் இன்னமும் சிலவற்றை நீ ஸ்ரீனிவாசனுக்காகச் செய்யவேண்டும்!!
நான்முகனே!
உத்தரவிடுங்கள்!
உடனே செய்கிறேன்!
இங்கே
பிரம்மோற்சவம் நடத்துவதாய்
முடிவு செய்திருக்கிறேன்!
அவனிடம் அனுமதியும் வாங்கிவிட்டேன்!
இந்த உற்சவத்திற்கான வாகனங்களை
நீ செய்து கொடேன்!!
வரும் புரட்டாசி மாதம்
சுக்லபஷ சுபதினத்தன்று
இந்த உற்சவத்தைத் தொடங்கலாம்!!
உற்சவத்தின் முந்தைய நாள்
விஷ்வக்சேனர்
திருப்பவனி நடக்கும்!!
மறுநாள் கொடியேற்றமும்,
பொன்பல்லக்கிலே
ஸ்ரீனிவாசனின்
திருப்பவனியும் உண்டு!!
இரண்டாம் நாள் காலை
சேஷ வாகனம்!
அன்றைய மாலை
ஹம்ஸ வாகனம்!!
மூன்றாம் நாள் காலை
சிம்ஹ வாகனம்!
அன்றைய மாலை
முத்துப் பல்லக்கு!!
நான்காம் நாள் காலை
கற்பக விருட்சம்!
அன்றைய மாலை
ஸர்வபூபால விமானம்!!
ஐந்தாம் நாள் காலை
ஸ்ரீனிவாசன் மோகினி அலங்காரனாய்
பல்லக்கில் பவனி!
அன்றைய மாலை
கருட சேவை!!
ஆறாம் நாள் காலை
அனுமந்த வாகனம்!
அன்றைய மாலை
தேவியர் இருவருடனும்
வசந்தோற்சவம் கண்டு பல்லக்கில் பவனி!!
ஏழாம் நாள் காலை
சூரிய பிரபை!
அன்றைய மாலை
சந்திர பிரபை!!
எட்டாம் நாள் காலை
ஸ்ரீனிவாசனுக்குத்
திருத்தேர் உற்சவம்!
அன்றைய மாலை
அஸ்வ வாகனம்!!
ஒன்பதாம் நாள் காலை
தீர்த்தவாரி கண்டருளல்!
அன்றைய இரவு பல்லக்கு!
மேலும் துவஜ அவரோஹனம்!
பத்தாம் நாள் காலை
பெருமானுக்கு புஷ்ப யாகம்!!
இப்படியாக நடத்தலாம் என
எண்ணி இருக்கிறேன் விஸ்வகர்மா!!
நீங்கள் சிரத்தையோடு
பெருமானின் வாகனங்களை
அழகாகச் செய்து தருவீர்!!
நான்முகனே!
பெருமானை இத்தனைக் கோலங்களில் சேவிப்பதில் எத்தனை மகிழ்ச்சி!
அனைத்தையும்
செய்து தருகிறேன்!
உற்சவத்திற்கான ஏற்பாடுகளை
இன்றே தொடங்குங்கள்!!
தொண்டைமானே!
வாகனங்களை விஸ்வகர்மா
நல்லவிதமாய் செய்துதருவார்!!
நாம் பிரம்மோற்சவத்திற்கான பத்திரிக்கையை
இன்றே தயார் செய்வோம்!!
அங்க தேசம்
வங்க தேசம்
கலிங்க தேசம்
பெலிகண்ட தேசம்
மாளவ தேசம்
காசி தேசம்
காம்போஜ் தேசம்
கேரள தேசம்
விராட தேசம்
குரு தேசம்
பாண்டிய தேசம் என
அனைத்துத் தேசங்களுக்கும்
பிரம்மோற்சவத்திற்கான
பத்திரிக்கையை அனுப்பி வை!!
நான்முகனே!
வாகனங்களை
நான் செய்கிறேன்!
உற்சவ மூர்த்திகளை
யார் நிர்மாணிக்கப் போகிறார்கள்?
விஸ்வகர்மாவே!
நானே நிர்மாணிக்கிறேன்!
நான்கு வேதங்களுக்குச் சமமாக
நான்கு மூர்த்திகளை
நான் நிர்மாணிக்கிறேன்!!
பிரம்மனே!
மிக அருமை! மிக அருமை!
அம் மூர்த்திகளுக்குத்
தாங்கள் வைக்கப்போகும் திருநாமங்கள்?
உற்சவ மூர்த்தி!
உக்ர ஸ்ரீனிவாச மூர்த்தி!!
ஸர்வாதிப ஸ்ரீனிவாச மூர்த்தி!!!
போக ஸ்ரீனிவாச மூர்த்தி!!!!
நான்கு மூர்த்திகளையும்
நான்முகன்
பிரதிஷ்டை செய்தார்!
பெருமானின்
திருமண வைபவத்தை
மீண்டும் கண்டுகளிப்பதற்காய்
பக்தர்கள் அங்கே குவிந்தனர்!!
ஒரு மங்கல முகூர்த்தத்தில்
திருமலையில் உற்சவம் தொடங்கியது!!
நான்முகன், ஆதிசேஷன்,
கருடன், விஷ்வக்சேனர் ஆகியோர் சேஷாத்திரியின் எல்லையிலே இருந்து
புற்று மண்ணைத்
தோண்டி எடுத்தனர்!!
அதனைப் பொன் தட்டில் எடுத்துக் கொண்டு
யானையின் மீது
ஊர்வலமாக வந்தனர்!!
அந்த மண்ணைக் கொண்டு
வேதாகம விதிப்படி
அங்குரார்ப்பணம் செய்வித்தனர்!!
மறுநாள் காலை
த்வாஜாரோகனம் தொடங்கியது!!
பிரம்மன் குறித்தபடி
பத்து நாட்களும் உற்சவம்
பெருமையுடன் நடந்தது!!
ஸ்ரீனிவாசனே!
உனக்கு இந்தப் பிரம்மோற்சவம்
உண்மையில் பிடித்ததா?
நான்முகனே!
இதற்கு என்ன பதில் சொல்வது?
என்னை விடு!
இந்தப் பத்து நாட்களிலும்
என் அடியவர்களின்
சந்தோஷத்தைக் கவனித்தாயா?
அவர்கள் சந்தோஷம்தானே
எனக்கும் சந்தோஷம்!
பத்மாவதிக்கு பிடித்தது!
என் அம்மாவிற்கு பிடித்தது!
உனக்கு பிடித்தது!
என் வாகனங்களுக்குப் பிடித்தது!
இந்த மலைக்கே இந்த வைபவம் பிடித்தது!
எனக்கு பிடிக்காமலா போகும்?
பிரம்மனே!
கொஞ்சம் தனியாக வாயேன்!!
ஸ்ரீனிவாசா!
என்ன விசேஷம்?
தனியாக அழைக்கிறாய்?
இந்த உற்சவம் எனக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது!
நான் குபேரனிடம் பட்ட கடன்
பத்மாவதிக்கு
இன்னும் தெரியாது!!
எப்படிக் கட்டுவேன் என
ஏங்கியிருந்தேன்!!
கட்டாயம் கட்டிவிடுவேன்!!
இந்த உற்சவத்திற்கு வந்த
என் அடியவர்கள் எல்லாம்
தங்களால் முடிந்தவரை
பொன்னையும், பொருளையும்
காணிக்கையாக எனக்களித்தனர்!!
இந்த வைபவங்கள்
ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தால்
எளிதில் கடனை அடைத்துவிடலாம்!!
சரியான நேரத்தில்தான்
நான் கடன் வாங்கியவன் என்பதை பத்மாவதியிடம் சொல்ல வேண்டும்!!
நீயேதும் உளறி விடாதே!!
ஸ்ரீனிவாசனே!
இந்த உலகத்தின்
உயிர்கள் யாவுமே
உனக்குக் கடன்பட்டது!
உன் கடனை நாங்கள் தீர்ப்பதா?
ஆனந்த நிலையத்தில்
பிரம்மனால் நந்தா விளக்கு
ஏற்றப்பட்டது!!
அவன் ஏற்றிய அந்த தீபம்
இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது!!
இனிவரும் காலங்களிலும்
எரிந்து கொண்டே இருக்கும்!!
#திருவேங்கடமுடையான் (41)
#கோமான்இரகுநாதன்
No comments:
Post a Comment